Friday, June 30, 2023

878. கபால நாட்டின் அச்சுறுத்தல்

"அரசே! கபால நாட்டுப் படைகள் மீண்டும் நம் எல்லை தாண்டி வந்து நம் வீரர்களைத் தாக்கி இருக்கிறார்கள். இதற்கு நாம் உடனே பதிலடி கொடுக்க வேண்டும்" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! கபால நாடு நம்மைவிடப் பெரிய நாடு. அவர்கள் படைபலம் நம் படைபலத்தை விட மிகவும் அதிகம். அவர்களை எதிர்த்துப் போரிடும் வலிமை நமக்கில்லை. எனவே அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை" என்றார் அரசர்.

"தாங்கள் கூறுவது சரிதான். நாம் கபால நாட்டுக்கு ஒரு தூதரை உடனே அனுப்பி சமாதானம் பேச வேண்டும்."

"மிகச் சரியாகச் சொன்னீர்கள் அமைச்சரே! அவர்களுடன் சமாதானம் பேசி அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து வர ஒரு சிறந்த தூதரை நாம் அனுப்ப வேண்டும். இந்தப் பணியை நீங்களே மேற்கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்" என்றார் அரசர்.

"தங்கள் விருப்பம் அரசே!" என்றார் அமைச்சர்.

"என்ன அமைச்சரே! உங்கள் தூதுப் பயணம் எவ்வாறு அமைந்தது?" என்றார் அரசர்.

"மகிழ்ச்சிகரமாக இல்லை அரசே! சமாதானத்துக்கு அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளை சுயமரியாதை உள்ள எந்த ஒரு நாட்டாலும் ஏற்றுக் கொள்ள முடியாது."

"நல்லது. நாம் அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம்!" என்றார் அரசர் சிரித்தபடி.

"அப்படியானால்..." என்றார் அமைச்சர் குழப்பத்துடன்.

"அமைச்சரே! நீங்கள் கபால நாட்டுக்குச் சென்றபோது இங்கே சில விஷயங்கள் நடந்தன. நம் நான்கு அண்டை நாடுகளுக்கும் இரண்டு இளவரசர்களையும் அனுப்பினேன். ஒவ்வொருவரும் இரண்டு நாடுகளுக்குச் சென்றனர் - என் ஓலையுடன். சிறிய நாடுகளான நாம் ஐவரும் இணைந்து செயல்படத் தீர்மானித்தால் நம் ஒன்றுபட்ட படைகளின் வலிமையால் கபால நாடு என்ற ஒரு பெரிய நாட்டை எதிர்த்து நிற்கலாம் என்று நான் யோசனை தெரிவித்தேன். அவர்களுக்கும் கபால நாடு ஒரு அச்சுறுத்தலாக இருப்பதால் நான்கு நாடுகளுமே என் யோசனையை ஏற்றுக் கொண்டு விட்டனர். இனி கபால நாடு நம்மைத் தாக்கத் துணியாது. ஐந்து நாடுகளின் படைகளும் ஒன்றாகச் செயல்படப் போகின்றன என்ற செய்தியை நம் ஒற்றர்கள் மூலம் கபால நாட்டில் பரப்பி விட்டேன். இனி நம் எல்லையில் நமக்குத் தொல்லை கொடுக்கும் வேலையில் கபால நாடு ஈடுபடாது!" என்றார் அரசர் பெருமிதத்துடன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 878:
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

பொருள்: 
செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்கு தானாகவே அழியும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

877. உதவி கேட்ட எதிரி!

நிர்வாக இயக்குனர் சபாபதியின் அறையிலிருந்து அவருடைய நண்பர் பரமசிவம் வெளியேறியதும், நிறுவனத்தின் மேலாளர் முரளி நிர்வாக அதிகாரியின் அறைக்குச் சென்றார்.

"எப்படி இருக்கு நிலைமை?" என்றார் சபாபதி.

"நாம கொடுத்திருக்கிற செக்குளை கிளியர் பண்ண இன்னும் அஞ்சு லட்சம் ரூபா தேவைப்படும். நாம செக் கொடுத்தவங்ககிட்ட சொல்லி செக்குகளை ரெண்டு நாள் கழிச்சு பாங்க்ல போடச் சொல்லி இருக்கேன். அதுக்குள்ள ஏதாவது ஏற்பாடு செய்யணும்!" என்றார் முரளி.

"என்ன செய்யறதுன்னு தெரியல. நான் ரொம்ப டென்ஸா இருக்கேன். இந்தச் சமயம் பாத்து இந்தப் பரமசிவம் வேற வந்துட்டாரு. என் நிலைமை தெரியாம அவர் பாட்டுக்குப் பேசிக்கிட்டிருந்தாரு. அவரை அனுப்பி வைக்கறதுக்குள்ள பெரும்பாடா ஆயிடுச்சு!"

"நமக்கு பிரச்னை இருக்குன்னு சொல்லி அவரை அப்புறம் வரச் சொல்லி இருக்கலாமே சார்!"

"என்னோட கஷ்டங்களை என் நண்பர்கள்கிட்ட சொல்றதை நான் எப்பவுமே விரும்பறதில்லை. அவங்களாத் தெரிஞ்சுக்கிட்டா அது வேற விஷயம். சரி. நான் போய் யார்கிட்டேயாவது பண உதவி கிடைக்குமான்னு பாக்கறேன்!" என்று கூறியபடி எழுந்தார் சபாபதி.

"சார்! இன்னொரு விஷயம். சந்திரா இண்டஸ்டிரீஸ்லேந்து ஃபோன் பண்ணினாங்க. அவங்களுக்கு அர்ஜன்ட்டா ஒரு ஆர்டர் வந்திருக்காம். அவங்ககிட்ட சரக்கு இல்லையாம். நம்மகிட்ட கேக்கறாங்க" என்றார் முரளி தயங்கியபடி.

"தொழில்ல போட்டி போடறவங்களுக்கு உதவி செய்யலாம். ஆனா அவங்க நம்மை விரோதிகளா நினைச்சுப் பல காரியங்க செஞ்சிருக்காங்க. நம்மைப் பத்தி கமர்ஷியல் டாக்ஸ் டிபார்ட்மென்ட்டுக்குத் தப்பான தகவல் கொடுத்து அதனால அவங்க இங்கே ரெயிட் பண்ணினாங்க. நாம கணக்கெல்லாம் சரியா வச்சிருக்கறதால, அவங்களுக்கு எதுவும் கிடைக்கல. ஆனா ரெய்டுன்னாலே மார்க்கெட்ல நம்மைப் பத்தித் தப்பான ஒரு அபிப்பிராயம் உருவாயிடுதே! அப்புறம் நம்ம சீனியர் டெக்னீஷியன் ஒத்தரை அதிக சம்பளம் கொடுத்து நம்மகிட்டேந்து எடுத்துக்கிட்டாங்க. இன்னும் பல விஷயங்கள் நடந்திருக்கு. அதனால அவங்களோட எந்த சமரசமும் செஞ்சுக்கறதில்லேன்னு நாம முடிவு செஞ்சிருக்கோமே!" என்றார் சபாபதி.

"அதில்ல சார். இப்ப நமக்கு இருக்கற பொருளாதாரப் பிரச்னையில, நாம சரக்கு கொடுத்தா ஒரு லட்ச ரூபா பணம் வரும். பணத்தை நாம முன்னாலேயே வாங்கிக்கிட்டு அப்புறம் சரக்கை அனுப்பலாம். இப்ப நமக்கு அது ரொம்ப உதவியா இருக்குமே சார்!"

"ஒத்தர் நமக்கு எதிரின்னு முடிவு செஞ்சப்பறம், அவங்ககிட்ட எந்தவிதமான மென்மையான அணுகுமுறையும் வச்சுக்கக் கூடாது - அதனால நமக்குப் பயன் கிடைச்சாக் கூட- என்பதுதான் என்னோட நிலை!" என்று கூறி விட்டு வெளியேறினார் சபாபதி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 877:
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

பொருள்: 
நம் துன்பத்தைப் பற்றி அதை அறியாத நண்பர்களுக்குச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை காட்டக் கூடாது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

876. விரோதியா, இல்லையா?

"இத்தனை வருஷமா இந்த அலுவலகத்தில வேலை செய்யற. குமார் உனக்கு எதிரா வேலை செய்யறாங்கறதை இன்னுமா நீ புரிஞ்சுக்கல?" என்றான் ரகுவின் சக ஊழியன் சந்திரன்.

"தெரியல. இந்த வருஷம் எனக்குப் பதவி உயர்வு கிடைக்காம போனபோது அவன்தான் அதுக்குக் காரணமா இருப்பானோன்னு நினைச்சேன். ஜி. எம்முக்கு பி ஏவா இருக்கறதால என்னைப் பத்தி அவர்கிட்ட தப்பா ஏதாவது சொல்லி இருப்பானோன்னு எனக்கு ஒரு  சந்தேகம் இருந்தது" என்றான் ரகு.

"அதில என்ன சந்தேகம்? அவன்தான் அப்படி செஞ்சிருப்பான். உனக்குப் பதவி உயர்வு கிடைக்காதது எங்க எல்லாருக்குமே அதிர்ச்சியாத்தான் இருந்தது."

"ஆனா அவனுக்கு என் மேல விரோதம் இருக்க எந்தக் காரணமும் இல்லையேன்னு நினைச்சு நான் அந்த சந்தேகத்தைப் பெரிசா நினைக்கல."

"இனிமேயாவது எச்சரிக்கையா இருந்துக்க!"

"குமார்கிட்ட எச்சரிக்கையா இருன்னு சொன்னேனே! அப்படியும் அவன்கிட்ட நெருங்கிப் பழகற போல இருக்கே!" என்றான் சந்திரன்.

"ஹோட்டலுக்குப் போறேன், வரியான்னு கூப்பிட்டான். போயிட்டு வந்தேன்" என்றான் ரகு.

"அவன்கிட்ட நெருக்கமா இருக்கலாம்னு முயற்சி செய்யறியா? கவுத்துடுவான்!"

"நெருக்கமா இருக்க முயற்சி செய்யல. ஆனா விலகி இருக்கவும் விரும்பல!"

"அப்படீன்னா? அவன் உனக்கு எதிரா செயல்படறாங்கறதை நீ நம்பலையா?"

"அது எனக்குத் தெரியாது. இப்ப நம்ம கம்பெனி நிலைமை ரொம்ப மோசமா இருக்கறது உனக்குத் தெரியும். சில பேரை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க. அடுத்தாப்பல யாரைத் தூக்கப் போறாங்களோன்னு எல்லாருமே பயந்துக்கிட்டிருக்கோம். இந்தச் சூழ்நிலையில குமார் எனக்கு எதிரா இருக்கானா இல்லையான்னு ஆராய்ச்சி பண்றதில எந்தப் பயனும் இல்லை. அதே சமயம் அவனை விட்டு விலகி இருக்கவும் நான் விரும்பல. இவன் ஏன் தங்கிட்டேந்து விலகிப் போறான்னு அவன் நினைக்கக் கூடாது, இல்ல? அதனால ஒரு மாதிரி பாலன்ஸ் பண்ணிக்கிட்டிருக்கேன்!" என்றான் ரகு.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 876:
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

பொருள்: 
ஒருவனது பகையை முன்பே அறிந்திருந்தாலும், அறியாமல் இருந்தாலும், ஒரு  நெருக்கடி வரும்போது, அவனை அறிந்து கொள்ள முயற்சி செய்யாமலும், அவனை விலக்காமலும் அப்படியே விட்டு விட வேண்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Thursday, June 29, 2023

875. துருவங்கள் இணைந்தால்...

கோபி இண்டஸ்டிரீஸ் அதிபர் ஜெயகோபி தன் அலுவலகத்துக்கு வந்த கோபால் என்டர்பிரைஸ் அதிபர் ராஜகோபாலையும் அந்த நிறுவனத்தின் நிர்வாகி அசோக்கையும் வரவேற்றார்.

"நீங்க என்னை சந்திக்கணும்னு சொன்னதும் எனக்கு வியப்பா இருந்தது. சொல்லுங்க என்ன விஷயம்?" என்றார் ஜெயகோபி.

"நாம ரெண்டு பேரும் தொழில்ல போட்டியாளர்கள். கடந்த ரெண்டு மூணு வருஷமா நாம கடுமையா மோதிக்கிட்டிருக்கோம். நமக்குள்ள கிட்டத்தட்ட ஒரு விரோத பாவமே வளர்ந்துடுச்சு. அப்படி இருக்கக் கூடாது, அதை மாத்தணும்னு நினைச்சுத்தான் உங்களை சந்திக்க விரும்பினேன். நீங்களும் ஒத்துக்கிட்டீங்க. அதுக்கு நன்றி!" என்றார் ராஜகோபால். 

ஜெயகோபி மௌனமாக இருந்தார்.

"நான் யோசிச்சுப் பார்த்தேன். உலகத்தில போட்டிங்கறது இயல்பானது. போட்டியாளரை நாம ஏன் விரோதியா நினைக்கணும்?" என்று தொடர்ந்தார் ராஜகோபால்.

"நண்பரா நினைச்சு விட்டுக் கொடுத்துடலாமா? நீங்க விட்டுக் கொடுக்கப் போறீங்களா, இல்லை நான் விட்டுக் கொடுக்கணும்னு கேக்கறதுக்காக வந்திருக்கீங்களா?" என்றார் ஜெயகோபி. கேலிச் சிரிப்புடன்.

"விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனா ஒரு உடன்பாட்டுக்கு வரலாமே?"

"என்ன உடன்பாடு?"

"உங்களுக்குன்னு சில முக்கிய வாடிக்கையாளர்கள் இருப்பாங்க. அவங்களை நாங்க அணுக மாட்டோம். அது மாதிரி எங்களோட முக்கிய வாடிக்கையாளர்களையும் நீங்க அணுகாம இருக்கணும். மற்ற வாடிக்கையாளர்ளைப் பொருத்தவரை நாம ரெண்டு பேருமே போட்டி போடலாம்."

"இது அவ்வளவு எளிமையா இருக்கும்னு நினைக்கிறீங்களா?" என்றார் ஜெயகோபி.

"அப்படி நினைக்கலை. பேசித் தீர்க்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கு. நானும் என்னோட மானேஜர் அசோக்கும் சேர்ந்து பேசி ஒரு மெமோ தயாரிச்சிருக்கோம். அதில நாம எந்த விதங்கள்ள ஒத்துழைக்கலாம், எந்த வகையில போட்டி போடலாம், நாம சேர்ந்து செயல்பட்டா நம்ம சப்ளையர்கள்கிட்டேந்து என்னென்ன சலுகைகளை வாங்க முடியும், ஒத்தருக்கொத்தர் தகவல் பரிமாற்றத்தால என்னென்ன நன்மைகள் கிடைக்கும்னெல்லாம் பட்டியல் போட்டிருக்கோம், பாருங்க!" என்று ஜெயகோபியிடம் ஒரு கோப்பைக் கொடுத்தார் ராஜகோபால்.

கோப்பைப் பிரித்துப் பார்த்த ஜெயகோபி சில விநாடிகள் அதைப் புரட்டிப் பார்த்து விட்டு, "இன்டரஸ்டிங். செயல்படுத்தக் கூடிய விஷயங்களாத்தான் தோணுது. நான் இதைப் படிச்சுப் பாக்கறேன். அப்புறம் நாம மறுபடி சந்திச்சுப் பேசலாம்" என்றார் புன்னகையுடன். 

முதல்முறையாக ஜெயகோபியின் முகத்தில் நட்பின் சாயல் தெரிந்ததை ராஜகோபால் கவனித்தார்.

"அப்ப ரெண்டு நாள் கழிச்சு நான் உங்ளை வந்து பாக்கட்டுமா?" என்றார் ராஜகோபால்.

"எதுக்கு? இப்ப நீங்க என் அலுவலகத்துக்கு வந்திருக்கீங்க. அடுத்த முறை நான் உங்க அலுவலகத்துக்கு வரதுதானே மரியாதையா இருக்கும்?  நமக்குள்ள ஏற்படப் போற உடன்பாடு உங்க அலுவலகத்திலேயே இறுதியானதா இருக்கட்டுமே!" என்றபடி புன்னகையுடன் கைநீட்டினார் ஜெயகோபி.

நம்ப முடியாத மகிழ்ச்சியுடன் ஜெயகோபியின் கையைப் பற்றிக் குலுக்கி விட்டு விடைபெற்றார் ராஜகோபால்.

ருவரும் காரில் வரும்போது, "எதிர் துருவமா இருந்த கோபி இண்டஸ்ட்ரீஸோட இணைஞ்சு செயல்படலாம்னு திடீர்னு எப்படி சார்  உங்களுக்குத் தோணிச்சு?" என்றார் அசோக்.

"நாம ரெண்டு எதிரிகளோட போராட வேண்டி இருந்தது. கோபி இண்டஸ்ட்ரீஸ் ஒரு எதிரின்னா, லக்ஷ்மி என்டர்பிரைசஸ் மற்றொரு எதிரி. ரெண்டு எதிரிகளைச் சமாளிக்கறது கஷ்டமா இருந்ததால ஒரு எதிரியோட சமரசம் பண்ணிக்கலாம்னு நினைச்சு கோபி இண்டஸ்ட்ரீஸை அணுகினேன். அவர் நம்ம சமரசத்தை ஒத்துப்பாரு போலத்தான் இருக்கு."

"ஆனா நீங்க ரெண்டு பேரும் லக்ஷ்மி என்டர்பிரைசஸைப் பத்திப் பேசவே இல்லையே!"

"பேசலை. ஆனா நம்மோட சேர்ந்து செயல்பட்டா  அவங்களுக்கும் லக்ஷ்மி என்டர்பிரைசஸ் மட்டும்தான் எதிரியா இருப்பாங்க, ரெண்டு எதிரிகளோட மோத வேண்டி இருக்காதுன்னு ஜெயகோபி புரிஞ்சுக்கிட்டிருப்பாரே!" என்றார் ராஜகோபால். 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 875:
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

பொருள்: 
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையோ இரண்டு, தானோ ஒருவன் இந்நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனிய துணையாகக் கொள்ள வேண்டும்
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

874. பகைவர் ஜாக்கிரதை!

சொந்த ஊருக்குக் கிளம்பும்போது அப்பா சொன்னார்.

"ஊருக்கு உன்னைத் தனியா அனுப்பறதுக்கு எனக்கு மனசே இல்லை. கோவிலுக்கு நம்ம வேண்டுதலை நிறைவேற்றியே ஆகணும். என்னால பயணம் செய்ய முடியாது. அதனாலதான் உங்க ரெண்டு பேரையும் தனியா அனுப்ப வேண்டி இருக்கு" என்றார் என்னையும் என் மனைவியையும் பார்த்து.

"தனியாப் போனா என்னப்பா? நாங்க என்ன சின்னக் குழந்தைங்களா?" என்றேன் நான்.

"உனக்குத் தெரியாது. அருணாசலத்துக்கும் நமக்கும் வெட்டு, குத்து அளவுக்குப் பகை. என்னை அவன் வெட்டி இருக்கான். அவனை நான் வெட்டி இருக்கேன். நீதான் என் உடம்பில தழும்பெல்லாம் பாத்திருக்கியே! நம்ம நிலத்தில கொஞ்சத்தை இப்பவும் அவன் ஆக்கிரமிச்சிருக்கான். போதும் போதாததுக்கு அவன் கோவில் டிரஸ்டி வேற!"

"அப்பா அவரு சிவன் கோவில் டிரஸ்டி. நாங்க வேண்டுதலை நிறைவேற்றப் போறது பெருமாள் கோவில்ல. அதனால ஒண்ணும் பிரச்னை வராது."

"அவன் வம்படி பிடிச்சவன். பெருமாள் கோவில்ல கூட வந்து தகராறு பண்ணுவான். ஜாக்கிரதையா இருந்துக்க!" என்று எச்சரித்தார் அப்பா.

நாங்கள் பெருமாள் கோவிலுக்குச் சென்றபோது அங்கே அருணாசலம் நின்றிருந்தார். அப்பா சொன்னபடியே தகராறு செய்ய வந்து விட்டார் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

அவர் என்னைப் பார்த்துச் சிரித்தது போல் இருந்தது. ஆனால் நான் அவர் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன்.

பூஜை முடிந்ததும் தீபாராதனைத் தட்டுடன் வெளியே வந்த அர்ச்சகர் தயக்கத்துடன் அருணாசலம் பக்கம் சென்றார். 'பூஜைக்கு ஏற்பாடு செய்திருப்பது நான், முதல் மரியாதை அருணாசலத்துக்கா?' என்று நான் அர்ச்சகரைக் கேட்க நினைத்தேன். அதற்குள் அருணாசலம் என்னைக் கைகாட்ட, அர்ச்சகர் என்னிடம் வந்தார்.

பூஜை முடிந்து நாங்கள் கிளம்பிய சமயம் அருணாசலம் என்னிடம் வந்து, "தம்பி! நாளைக்குத்தானே ஊருக்குப் போறீங்க? நாளைக்கு சிவன் கோவில்ல பூஜை ஏற்பாடு செஞ்சிருக்கேன். நீங்க நிச்சயம் கலந்துக்கணும். பூஜை முடிஞ்சதும் என் வீட்டில விருந்து. அதிலேயும் நீங்க கலந்துக்கணும்!" என்றார்.

"எதுக்குங்க? வேண்டாம்!" என்றான் நான் சங்கடத்துடன்.

"நம்ம குடும்பத்துக்குள்ள இருக்கற பகை வேற. அது இன்னும் அப்படியேதான் இருக்கு. உங்க நிலத்தை நான் அபகரிச்சதா உங்க அப்பா சொல்லுவாரு. ஆனா என்னோட நிலம் இன்னும் நிறைய உங்ககிட்ட இருக்குன்னு நான் சொல்லுவேன். இது என் அப்பா, உன் தாத்தா அவங்க காலத்திலேந்தே இருக்கற பிரச்னை. ஆனா நீ இப்ப நம்ம ஊருக்கு ஒரு விருந்தாளியா வந்திருக்க. ஊருக்கு வர விருந்தாளிகளை உபசரிக்கிறது எங்க குடும்ப்ப் பழக்கம். நீங்க வரப் போறீங்கன்னு தெரிஞ்சுதான் சைவச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். வழக்கமா அசைவச் சாப்பாடுதான் இருக்கும். இந்த வருஷம் அசைவச் சாப்பாடு  கிடைக்காதேன்னு ஊர்ல பல பேரு வருத்தப்படறாங்க! அதனால கண்டிப்பா வந்துடுங்க!" என்ற அருணாசலம், என் மனைவியைப் பார்த்து, "நாளைக்குப் பூஜைக்கும் விருந்துக்கும் உன் புருஷனை அழைச்சுக்கிட்டு வர வேண்டியது உன் பொறுப்பும்மா!" என்றார் சிரித்தபடியே.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 874:
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

பொருள்: 
பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பண்புள்ளவனின் பெருந்தன்மையில் இந்த உலகம் அடங்கும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

873. ஜாமீனில் எடுக்க ஒரு ஆள்

"மாதவா! நம்மகிட்ட காசு பணம் கிடையாது. நமக்கு ஆதரவாகவும் யாரும் கிடையாது. நம்ம குடும்பத்தில நீயும் நானும் மட்டும்தான். அதனால நம்ம சொந்தக்காரங்ககிட்ட விரோதம் பாராட்டாம கொஞ்சம் நெருக்கமா இருக்கப் பழகிக்க. நாளைக்கு நமக்கு ஏதாவது பிரச்னை வந்தா உதவி செய்யறதுக்கு யாராவது இருக்கணும் இல்லை?" என்றாள் பார்வதி தன் மகனிடம்.

"நம்ம சொந்தக்காரங்க எல்லாரும் அயோக்கியப் பசங்க. உன் வழியிலேயும் சரி, அப்பா வழியிலேயும் சரி ஒத்தர் கூட நல்லவங்க இல்லை. நம்மகிட்ட எதையாவது பிடுங்கலாமான்னுதான் பாப்பாங்க. அவங்களைப் பக்கத்திலேயே வர விடக் கூடாதுன்னுதான் அவங்களோட சண்டை போட்டு விலக்கி வச்சிருக்கேன்!" என்றான் மாதவன்.

'பிடுங்கறதுக்கு நம்மகிட்ட என்ன இருக்கு?' என்று நினைத்துக் கொண்டாள் பார்வதி.

மாதவனுக்குத் திருமணம் ஆனதும், மருமகள் சாந்தியின் பெற்றோர், பிற உறவினர்களிடமாவது மாதவன் நெருக்கமாக இருப்பான் என்று பார்வதிக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால் மாதவன் அவர்களிடமும் சண்டை போட்டு விரோதத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டான். அதன் விளைவாக, சாந்தி தன் பெற்றோர் வீட்டுக்குப் போவதுமில்லை, அவர்கள் அவளைப் பார்க்க வருவதுமில்லை.

'என்ன இவன் இப்படி இருக்கான்? உலகத்தையே தனக்கு விரோதியா ஆக்கிப்பான் போலருக்கே!' என்று நினைத்து வருந்தினாள் பார்வதி.

"அத்தை அவரைக் கைது செஞ்சுட்டாங்களாம்!" என்றாள் சாந்தி அழுது கொண்டே.

"எதுக்கு?" என்றாள் பார்வதி திடுக்கிட்டு.

"இவர் கம்பெனியில ஏதோ மோசடி நடந்திருக்கு. யாரோ இவரை மாட்டி விட்டிருக்காங்க. கம்பெனியில இவர் மேல புகார் கொடுத்து போலீஸ்ல இவரைக் கைது செஞ்சிருக்காங்க! இப்பதான் ஸ்டேஷன்லேந்து ஃபோன் வந்தது."

"அடக் கடவுளே! இவனை ஜாமீன்ல எடுக்கக் கூட ஆள் இல்லையே! எல்லாரோடயும் சண்டை போட்டுக்கிட்டிருக்கான். யாரு இவனுக்கு உதவ வருவாங்க? இப்படியா ஒத்தன் பைத்தியக்காரனா இருப்பான்?" என்று புலம்பினாள் பார்வதி.

"பைத்தியத்துக்குக் கூடத் தனக்கு எது நல்லதுன்னு தெரியும் அத்தை!" என்ற சாந்தி, "நான் எங்கப்பா வீட்டுக்குப் போய் கேட்டுப் பாக்கறேன். அவர் இரக்கப்பட்டு உதவினாதான் உண்டு"  என்று சொல்லி விட்டுத் தன் பெற்றோர் வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமானாள்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 873:
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

பொருள்: 
தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாக்கிக் கொள்பவன்  பித்தரிலும் அறிவற்றவன்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

872. அக்கவுன்டன்ட்

"என் தொழில்ல எத்தனையோ விரோதிகளை சந்திச்சிருக்கேன். அவங்களை வெற்றி கொள்றது எனக்கு அவ்வளவு கஷ்டமா இல்லை. ஆனா..."

மனோகர் ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கொண்டார்.

"சொல்லுங்கப்பா!" என்றான் கார்த்திகேயன்.

"எங்கிட்ட ஒரு அக்கவுன்டன்ட் இருந்தாரு. அவரு நல்லாதான் வேலை செஞ்சுக்கிட்டிருந்தாரு. ஆனா ஒரு தடவை ஒரு சின்ன தப்பு பண்ணிட்டார்ங்கறதுக்காக அவரை ரொம்ப கோவிச்சுக்கிட்டேன். கோவத்தில 'வெளியில போ'ன்னு கூட சொல்லிட்டேன்!"

"அப்புறம்?"

"அவரு போயிட்டாரு. திரும்ப வரவே இல்லை. அந்த மாச சம்பளத்தைக் கூட வாங்கிக்கலை. ஆனா அவர் போய் சில நாட்கள்ள எனக்கு நிறைய பிரச்னைகள் வர ஆரம்பிச்சது. சேல்ஸ் டாக்ஸ்காரங்க திடீர்னு இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்தாங்க. பில் போடாம நடந்த சில விற்பனைளக் கண்டுபிடிச்சு அபராதம் போட்டாங்க. வருமான வரித்துறையில எப்பவும் நான் கொடுக்கற கணக்கை ஏத்துக்கறவங்க அந்த வருஷம் திடீர்னு நிறைய கேள்வி கேக்க ஆரம்பிச்சாங்க. நான் பில் போடாம செஞ்ச விற்பனைகள், அதிகமாக் காட்டின சில செலவுகள் எல்லாத்தையும் கண்டுபிடிச்சு ஒரு பெரிய தொகையை அபராதமா விதிச்சாங்க!"

"இதுக்கெல்லாம் காரணம் அந்த அக்கவுன்டன்ட்தானே? அவர் கொடுத்த தகவல்களாலதான இதெல்லாம் நடந்தது?" என்றான் கார்த்திகேசன் கோபத்துடன்.

"ஆமாம்" என்றார் மனோகர்.

"அவர் வேற இடத்துக்கு வேலைக்குப் போயிருப்பாரு இல்ல, அங்கே சொல்லி அவர் வேலைக்கு உலை வச்சிருக்கலாமே?"

"அவரு எங்கேயும் வேலை செஞ்சதாத் தெரியல. தனியா சுயதொழில் மாதிரி ஏதோ பண்ணிக்கிட்டிருந்தாரு போலத்தான் தெரிஞ்சுது."

"என்ன செஞ்சக்கிட்டிருந்தா என்ன? அவரை நீங்க சும்மாவா விட்டீங்க?"

"இரு. இன்னும் நான் சொல்லி முடிக்கல. அதுக்கப்பறம் என்னோட பெரிய வாடிக்கையாளர்கள் சில பேர் என்னை விட்டுட்டு நம்ம போட்டியாளர்கள்கிட்ட போயிட்டாங்க!"

"ஏன் அப்படி?"

"பொருட்களைத் தயாரிக்கறதில சில ரகசியங்கள் இருக்கு."

"ஆமாம். இப்பவும் அப்படித்தானே?"

"ஆனா அந்த ரகசியங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிஞ்சா அவங்க நம்ம பொருளை வாங்க மாட்டாங்க. நாம பயன்படுத்தற வழிமுறைகள் பொருளோட தரத்தைக் குறைச்சுடும்னு அவங்க நினைப்பாங்க. அது உண்மையில்லை. ஆனா அதை அவங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது."

"அப்படீன்னா அந்த ரகசியங்கள் தெரிஞ்சுதான் அவங்க நம்மை விட்டுப் போனாங்களா? அப்ப அந்த ரகசியங்களை அவங்ககிட்ட சொன்னது அந்த அக்கவுன்டன்ட்தானா?"

"இருக்கலாம். என்னால நிச்சயமாச் சொல்ல முடியாது."

"அவரு அக்கவுன்டன்ட்தானே? பொருள் தயாரிப்பு பற்றின விவரங்கள் அவருக்கு எப்படித் தெரியும்?"

"ஏன்னா, அவர் புத்திசாலி. அக்கவுன்டன்டா இருந்தாலும் கம்பெனிக்குள்ள என்ன நடக்குதுங்கறதெல்லாம் அவர் கூர்ந்து கவனிச்சிருப்பாரு!"

"சரி. அப்புறம் என்னாச்சு?"

"ரெண்டு மூணு வருஷத்துக்கப்புறம் எல்லாம் சரியாயிடுச்சு. கம்பெனியை உங்கிட்ட ஒப்படைக்கச்சே எல்லாமே  நல்லா இருக்கற மாதிரிதானே ஒப்படைச்சேன்?"

"ஆமாம். நானும் கம்பெனியை நல்லாத்தான் பாத்துக்கிட்டிருக்கேன். ஆமாம், இப்ப எதுக்கு இந்தக் கதையையெல்லாம் எங்கிட்ட சொல்றீங்க?"

"பணபலம், ஆள்பலம், அரசியல் பலம் இதெல்லாம் உள்ளவங்களைக் கூடப் பகைச்சுக்கலாம், ஆனா படிச்சவங்க, அறிவுள்ளவங்க, புத்திசாலிங்க இவங்களைப் பகைச்சுக்காதேன்னு உனக்கு சொல்லத்தான்!" என்றார் மனோகர் சிரித்தபடி.

"நீங்க சொல்றது சரிதான். ஆனா நீங்க அந்த அக்கவுன்டன்ட்டை சும்மா விட்டிருக்கக் கூடாது. நல்லவேளை, இப்ப நம்மகிட்ட அக்கவுன்டன்ட்டா இருக்கறவரு ரொம்பத் தங்கமானவரு. இவரு அப்படியெல்லாம் செய்ய மாட்டாரு. நான் அவரை வேலையை விட்டு அனுப்பவும் மாட்டேன். வயசானாலும் உங்களால முடியற வரைக்கும் வேலை பாருங்கன்னு சொல்லி இருக்கேன்!" என்றான் கார்த்திகேயன் பெருமையுடன்.

'தங்கமானவர்தான். அதனாலதானே நான் அவர்கிட்ட மன்னிப்புக் கேட்டப்பறம் திரும்ப எங்கிட்ட வேலைக்குச் சேர்ந்தாரு!' என்று நினைத்துக் கொண்டார் மனோகர்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 872:
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.

பொருள்: 
வில்லை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட அறிஞரோடு பகை கொள்ள வேண்டா.
குறள் 872 (விரைவில்)
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

871. பந்தயத்தில் துவங்கிய போட்டி

ஒரு விளையாட்டான பந்தயத்தில்தான் நவீனுக்கும், குமாருக்கும் இடையிலான போட்டி ஆம்பித்தது.

இருவரும் அந்த நிறுவனத்தில் ஒரே நேரத்தில்தான் விற்பனைப் பிதிநிதிகளாகச் சேர்ந்தனர்.

வேலைக்கான பயிற்சி முடிந்ததும், "இன்னும் இரண்டு வாரத்தில் உங்கள் பயிற்சி நிறைவு பெற்றதற்கான விழா நடைபெறப் போகிறது. அதற்குள் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு விற்பனையையாவது கொண்டு வர வேண்டும். இதற்கு முதல் சவால் என்று பெயர். முதல் சவாலில் யார் அதிக விற்பனையைக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்குச் சிறப்புப் பரிசு உண்டு!" என்று அறிவித்தார் பயிற்சியாளர்.

பயிற்சியின்போது நெருங்கிய நண்பர்களாக இருந்த நவீனும், குமாரும் முதல் சவாலில் தங்கள் இருவருக்குள் யார் அதிக விற்பனையைக் கொண்டு வருவோம் என்பது பற்றித் தங்களுக்குள் விளையாட்டாக ஒரு பந்தயம் வைத்துக் கொண்டனர்.

பந்தயத்தில் நவீன் வெற்றி பெற்று விட்டான். குமார் வெளிப்படையாக நவீனைப் பாராட்டினாலும், பந்தயத்தில் நவீனிடம் தோற்றது அவனுக்கு நவீன் மீது பொறாமையையும் கசப்பு உணர்வையும் ஏற்படுத்தி இருந்தது.

"முதல் சவால்ல நீ ஜெயிச்சுட்ட. ஆனா முதல் மாச விற்பனையில உன்னை அடிச்சுக் காட்டறேன் பாரு!" என்றான் குமார். இதைச் சொல்லும்போது அவன் குரலில் ஒரு ஆக்ரோஷம் இருந்தது.

"ஏதோ விளையாட்டா ஒரு பந்தயம் வச்சுக்கிட்டீங்க. அதோட விடுங்க. நாம இவ்வளவு பேர் இருக்கோம். ஒவ்வொரு மாசமும் ஒவ்வொத்தர் அதிக விற்பனையைக் கொண்டு வரலாம். இதில போட்டி எதுக்கு? நாம எல்லாரும் ஒரே நிறுவனத்துக்காகத்தானே வேலை செய்யறோம்?" என்றான் இருவருக்கும் நண்பனான குணசீலன்.

"இருக்கட்டும். குமார் சவால் விட்டிருக்கான். அதை நான் ஏத்துக்கறேன். முதல் மாசத்தில மட்டும் இல்ல, ஒவ்வொரு மாசமும் உன்னை அடிச்சுக் காட்டறேன்!" என்றான் நவீன், குமாரைப் பார்த்து.

"பாக்கலாம்டா! ஒரு தடவை ஃப்ளூக்கில ஜெயிச்சதுக்கே இப்படி ஆட்டம் போடறியா?" என்றான் குமார் ஆத்திரத்துடன்.

"யாருடா ஃப்ளூக்ல ஜெயிச்சது?" என்று நவீன் கையை ஓங்க, குணசீலன் அவன் கையை இறக்கி, "ரெண்டு பேரும் எங்கேயாவது தள்ளிப் போய் நில்லுங்கடா!" என்றான் இருவரையும் பார்த்து.

"இந்த மாசம் விற்பனையில நீ ரெண்டாவது இடத்தில இருக்க. முருகன்தான் முதலிடம்" என்றான் குணசீலன் குமாரிடம்.

"பரவாயில்ல. இந்த மாசம் நவீன் கீழே போயிட்டான் இல்ல, எனக்கு அது போதும்!" என்றான் குமார்.

"டேய்! நாம வேலைக்குச் சேர்ந்து ரெண்டு வருஷம் ஆச்சு. ஆனா இன்னும் நீயும், நவீனும் விரோதிகள் மாதிரி நடந்துக்கறீங்க. வேற யாரு உனக்கு முன்னால வந்தாலும் பரவாயில்ல, நவீன் உனக்குப் பின்னால இருந்தா போதும், இல்ல? என்ன மனப்பான்மைடா இது?" என்றான் குணசீலன்.

"அது அப்படித்தான். ஏன்னா நவீன் எனக்கு விரோதிதான்!" என்றான் குமார் குரோதத்துடன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 871:
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

பொருள்: 
பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக் கூட ஒருவன் கொள்ளக் கூடாது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Wednesday, June 28, 2023

730. கம்பன் ஏமாந்தான்!

தலைமை ஆசிரியர் அழைக்கிறார் என்றதும் அவர் அறைக்குச் சென்றார் தமிழாசிரியர் கண்ணப்பன்.

"உக்காருங்க கண்ணப்பன்! உங்களை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு!" என்றார் தலைமையாசிரியர் வைத்திலிங்கம்.

"எதனால சார்?"என்றார் கண்ணப்பன், புரியாமல்.

"என் அனுபவத்தில நான் எத்தனையோ தமிழாசிரியர்ளைப் பாத்திருக்கேன். ஆனா உங்களை மாதிரி இலக்கிய ஆர்வம், புலமை, பொருள் விளக்கற அழகு இதெல்லாம் சேர்ந்த ஒத்தரை நான் பார்த்ததில்லை!"

"எப்படி சார் சொல்றீங்க?" என்றார் கண்ணப்பன் நெளிந்தபடி.

"போன வாரம் பத்தாம் வகுப்புக்கு நீங்க கம்ப ராமாயணப் பாடம் எடுக்கறப்ப அந்தப் பக்கம் வந்துக்கிட்டு இருந்த என் காதில அது விழுந்தது. சுவாரசியமா இருக்கேன்னு கொஞ்ச நேரம் கேக்கலாம்னு நின்னேன். உங்க வகுப்பு முடிநற வரையில என்னால அங்கேந்து நகர முடியல!"

"தெரியாது சார்! நீங்க வெளியில நின்னு கேட்டுக்கிட்டிருங்கீன்னு தெரிஞ்சிருந்தா என்னால பாடமே எடுத்திருக்க முடியாது." 

கண்ணப்பன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாதது போல் வைத்திலிங்கம் தொடர்ந்தார்.

"மாணவர்களுக்குப் பரீட்சைக்கு மார்க் வாங்கற அளவுக்கு சொல்லிக் கொடுத்தா போதும்னு நினைக்காம அவ்வளவு ஈடுபாட்டோட சொல்லிக் கொடுத்தது உங்களோட இலக்கிய ஆர்வத்தையும், புலமையையும் காட்டுது."

"நன்றி சார்! இதைச் சொல்லத்தான் கூப்பிட்டீங்களா?" என்று எழுந்து செல்ல யத்தனித்தார் கண்ணப்பன்.

"இல்லை, உக்காருங்க. நம் ஊரில அடுத்த மாசம் கம்பன் விழா நடத்தறாங்க இல்ல?"

"ஆமாம். அறிவிப்பைப் பார்த்தேன்."

"அதில உங்களை ஒரு பேச்சாளரா சேர்க்கச் சொல்லி விழா நடத்தறவங்ககிட்ட கேட்டேன். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க!" என்றார் வைத்திலிங்கம் பெருமிதத்துடன்.

"சார்!" என்றார் கண்ணப்பன் திகைப்புடன்.

"உங்க வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தெரிஞ்சிருக்கிற உங்க பெருமை  இப்ப இந்த ஊருக்குத் தெரியும். அப்புறம் காலப்போக்கில இந்த உலகத்துக்கே தெரியும். எவ்வளவு சீக்கிரமே நீங்க பாபுலர் ஆகப் போறீங்க, பாருங்க!"

"சார், வேண்டாம் சார்."

"என்ன வேண்டாம். புகழ் வேண்டாமா?"

"இல்லை சார். என்னால பொது மேடையில எல்லாம் பேச முடியாது. நாலு பேர் முன்னால பேசவே கூச்சப்படறவன் நான்."

"கவலைப்படாதீங்க. பேச ஆரம்பிச்சீங்கன்னா கூச்சம் எல்லாம் பறந்துடும். வகுப்பில மாணவர்கள் முன்னால பேசலையா?"

"அது வேற சார். அவங்க எனக்குக் கட்டுப்படறவங்க. நான் அதட்டினா பயப்படறவங்க. அவங்க முன்னால பேசறது வேற. ஒரு சபை முன்னால பேசறது வேற. நம்ம பள்ளிக்கூடத்திலேயே எல்லா மாணவர்களையும் கூட்டி வச்சு என்னைப் பேசச் சொன்னீங்கன்னா அது கூட என்னால முடியாது!"

கண்ணப்பன் பேச்சில் தெரிந்த பரிதாபமும், கெஞ்சலும் வைத்திலிங்கத்துக்கு அதிர்ச்சியாக இருந்தன.

"என்ன சார் இது? அன்னிக்கு அவ்வளவு அருமையா உணர்ச்சிகளோட பேசி நடிக்கற மாதிரி வகுப்பு எடுத்தீங்க? இப்படிச் சொல்றீங்களே! நான் வேற விழாக் குழுவினர்கிட்ட சொல்லி உங்க பேரை சேத்துட்டேனே!"

"உங்களை ஏமாற்றமடையச் செஞ்சதுக்கு என்னை மன்னிச்சுடுங்க சார். நீங்க அவங்ககிட்ட சொல்லி என் பெயரை எடுத்துடச் சொல்லுங்க!" என்றபடியே எழுந்தார் கண்ணப்பன்.

"ஏமாற்றமடைஞ்சது நான் மட்டும் இல்ல, கம்பனும்தான்! நீங்க மட்டும் அன்னிக்கு வகுப்பில பேசின மாதிரி பொதுமேடையில பேசியிருந்தா அது கம்பனுக்கு எவ்வளவு பெருமை சேத்திருக்கும்!" என்றார் வைத்திலிங்கம் பெருமூச்சுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 73 
அவையஞ்சாமை

குறள் 730:
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

பொருள்:
அவைக்கு அஞ்சித் தாம் கற்றவைற்றைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.

குறள் 729
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Tuesday, June 27, 2023

729. புத்தக வெளியீட்டு விழா

பேராசிரியர் சுந்தரத்தின் நூல் வெளியீட்டு விழா நாவலர் பத்மராஜன் தலைமையில் நடந்தது. 'நாவலர்' என்பது அவருடைய பேச்சுத் திறமாக்காக அவருக்கு வழங்கப்பட்ட பட்டம்.

விழாவுக்கு வந்திருந்த பத்திரிகை நிருபர் கணேசன் தன் அருகில் அமர்ந்திருந்த தன் நண்பன் மனோவிடம், "பேராசிரியர் சுந்தரம் பெரிய அறிஞர், ஆராய்ச்சியாளர். அவரோட நூலை வெளியிடறதுக்கு இந்த ஞானசூனியத்தைக் கூப்பிட்டிருக்காங்க பாரு!" என்றான்.

"என்னப்பா இது? பத்மராஜன் எவ்வளவு புகழ் பெற்ற பேச்சாளர்! அவரைப் போய் ஞானசூனியம்னு சொல்லிட்ட?" என்றான் மனோ சிரித்துக் கொண்டே.

"மேடையில பேசிப் பெயர் வாங்கிட்டா பெரிய அறிவாளி ஆகிட முடியுமா? விஷயமே இல்லாம எதையாவது பேசி, பார்வையாளர்களைச் சிரிக்க வச்சே புகழ் பெற்ற பேச்சாளர் ஆயிட்டார் பத்மராஜன். சுந்தரம் பக்கத்தில உக்காரக் கூட அவருக்கு அருகதை கிடையாது. அவரை வச்சு சுந்தரத்தோட புத்தகத்தை வெளியிட வச்சிருக்காங்களே இந்தப் புத்தக வெளியீட்டாளர்கள், அவங்களைச் சொல்லணும்!"

விழா துவங்கியது.

புத்தகத்தை வெளியிட்டு நாவலர் பத்மராஜன் பேசினார். அவர் பேச்சை ரசித்து அவையில் அவ்வப்போது சிரிப்பலைகளும், கைதட்டல்களும் எழுந்தன.

பத்மராஜன் பேசி முடித்ததம், "சுந்தரத்தோட புத்தகத்தைப் புரட்டிக் கூடப் பாத்திருக்க மாட்டாரு. ஆனா ஏதோ பேசி ஒப்பேத்திட்டாரு!" என்றான் கணேசன்.

"அவர் பேச்சுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருந்தது, கவனிச்ச இல்ல?" என்றான் மனோ.

"இப்போது நூலாசிரியர் சுந்தரம் அவர்கள் தன் புத்தகத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசுவார்!" என்று கூட்டத் தலைவர் அறிவித்தார்.

ஒலிபெருக்கியின் முன் வந்து நின்ற சுந்தரம் என்ன பேசுவதென்று தெரியாமல் சில விநாடிகள் மௌனமாக இருந்து விட்டுப் பிறகு, "முதலில் அனைவருக்கும் நன்றி" என்றார். பிறகு ஒரு இடத்தில் நிற்க முடியாதவர் போல் கால்களை மாற்றி மாற்றி அசைத்து விட்டு, "இந்த நூலை நான் எழுதக் காரணம்..." என்று ஆரம்பித்தார்.

அதற்குள் பார்வையாளர்களில் பலர் அவர் பேச்சில் கவனம் இழந்து தங்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். சுந்தரம் உடலை அசைத்துக் கொண்டே பேசிய வார்த்தைகள் அவையில் பலருக்கும் எட்டவில்லை.

"என்ன சொல்றார்னே புரியலியே!" என்றான் கணேசன் மனோவிடம்.

ஓரிரு நிமிடங்களில் தன் பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார் சுந்தரம்.

"சுந்தரம், பத்மராஜன் இவர்களில் யார் அறிவாளின்னு இந்த அவையில கேட்டா, அநேகமா எல்லாருமே பத்மராஜன்தான் அறிவாளின்னு சொல்லுவாங்க. ஆனா, அதுக்காக அவங்களைக் குற்றம் சொல்ல முடியாது!" என்றான் கணேசன் வருத்தத்துடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 73 
அவையஞ்சாமை

குறள் 729:
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.

பொருள்:
நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்றே கருதப்படுவர்.

குறள் 728
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

728. புதிய முயற்சிக்கு நிதி உதவி

புதிய தொழில் முயற்சிகளுக்கு நிதி உதவி செய்வதற்கான நேர்காணலில் நிதி உதவி செய்பவர்கள் சார்பாக ஐந்து பேர் மேடையில் அமர்ந்திருந்தனர். வெளிப்படைத்தன்மையைக் காட்டுவதற்காக அந்த நேர்காணல் ஒரு அரங்கில் பொதுமக்களைக் கொண்ட பார்வையாளர்கள் முன் நடைபெற்றது.

தாங்கள் சேர்ந்து உருவாக்கிய ஒரு புதுமையான பொருளைத் தயாரிக்கும் தொழிலைத் தொடங்க நிதி உதவி கேட்டு திலீப்பும், வருணும் அங்கே வந்திருந்தார்கள். 

விண்ணப்பதாரர்கள் தங்கள் தயாரிப்பு பற்றி ஆங்கிலத்தில்தான் விளக்க வேண்டும். திலீப்புக்கு நன்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் அவர்கள் உருவாக்கிய தயாரிப்பு பற்றி திலீப் விளக்குவான் என்று முடிவு செய்யப்பட்டது.

தீலீப் மற்றவர்கள் முன் பேசத் தயங்குபவன் என்பதால் தைரியமாகப் பேசும்படி வருண் அவனிடம் பலமுறை கூறி இருந்தான்.

வரிசைப்படி அவர்கள் முறை எட்டாவதாக இருந்தது.

முதல் ஐந்தாறு பேர் பேசியதைக் கேட்ட பிறகு வருண் உற்சாகமாக, "டேய் திலீப்! நம்ம தயாரிப்பு அளவுக்கு சிறப்பா வேற எதுவுமே இல்லடா. அதனால நம்ம பிரசன்டேஷனுக்கப்புறம், நம்மைத்தான் தேர்ந்தெடுப்பாங்க. நீ மட்டும் தைரியமா பேசினா போதும்!" என்றான்.

தன் எப்படிப் பேசப் போகிறோம் என்ற பயத்திலேயே இருந்த திலீப் பதில் பேசவில்லை.

அவர்கள் முறை வந்தபோது திலீப் பேச ஆரம்பித்தான். எவ்வளவோ தயார் செய்திருந்தும் கோர்வையாகப் பேசாமல், தட்டுத் தடுமாறித் தெளிவின்றிப் பேசினான். வருண் குறுக்கிட்டு ஓரிரு விஷயங்களை விளக்க முயன்றபோது, ஒருவர்தான் பேச வேண்டும் என்று சொல்லி அவனை அடக்கி விட்டார்கள்.

திலீப் பேசி முடித்ததும், "என்னடா இப்படி சொதப்பிட்ட?" என்றான் வருண்.

"நான் என்ன செய்யறது? என்னால கோர்வையாப் பேச முடியல. ஒரு பாயின்ட் சொல்றப்பதான், இதுக்கு முன்னால அந்த இன்னொரு பாயின்ட்டைச் சொல்லி இருக்கணுமேன்னு தோணுது. அதை இப்ப எப்படி கொண்டு வதுன்னு தெரியல!" என்றான் திலீப்.

"ஏன் சரியாப் பேச முடியலேன்னு எங்கிட்ட நல்லா விளக்கிப் பேசற! நம்மகிட்ட நல்ல ஒரு தயாரிப்பு இருந்தும் அதைப் பத்தி சரியா விளக்க முடியாததால நாம இந்த வாய்ப்பை இழக்கப் போறோம்!" என்றான் திலீப் ஆற்றாமையுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 73 
அவையஞ்சாமை

குறள் 728:
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.

பொருள்:
அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாதவர், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயனற்றவரே.

குறள் 729 (விரைவில்)
குறள் 727
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Monday, June 26, 2023

727. "கத்துக்குட்டி"


தமிழில் பல இலக்கியங்களைப் படித்து, பத்திரிகைகளில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி, சில ஆய்வு நூல்களையும் எழுதி வெளியிட்டிருந்த தமிழ் அறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஒரு பட்டிமன்றதில் பேச வாய்ப்பு வந்தபோது, முதலில் அவர் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்.

அவருடைய நண்பர் நமச்சிவாயம்தான் அவரை வற்புறுத்தி அந்த வாய்ப்பை ஏற்கச் செய்தார்.

"அந்தப் பட்டிமன்றத்தில பேசறவங்களிலேயே, பட்டிமன்றத் தலைவர் உட்பட, எல்லாரையும் விட பெரிய அறிஞர் நீங்கதான். மத்தவங்களுக்கு உங்க அளவுக்கு நூலறிவோ, புலமையோ இல்லை. நீங்க இவ்வளவு படிச்சுட்டுக் குடத்தில இட்ட விளக்கு மாதிரி இருக்கீங்க. உங்க பெருமையை உணர்ந்த யாரோ உங்களுக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்காங்க. இதைப் பயன்படுத்திக்கங்க!" என்றார் நமச்சிவாயம்.

பட்டிமன்றத்தில் தன் அணியின் மூன்றாவது பேச்சாளராகக் களம் இறங்கினார் வாஞ்சிநாதன்.

ஒலிபெருக்கி முன் போய் நின்று அவையைப் பார்த்ததுமே வாஞ்சிநாதனுக்குப் பதட்டம் ஏற்பட்டு விட்டது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. முந்தைய பேச்சாளர்கள் பேசியபோது அவர்களுக்கு எப்படி பதிலளிப்பது என்றெல்லாம் மனதில் உருவாக்கி வைத்திருந்த சிந்தனைகள் திடீரென்று நினைவிலிருந்து மறைந்து விட்டன.

பேச வேண்டுமே என்பதற்காக ஏதோ சொன்னார். சொற்கள் கோர்வையாக வரவில்லை. ஓரிரு வாக்கியங்கள் பேசியதும் தன் நேரம் முடிந்திருக்குமோ என்ற நம்பிக்கையில் நடுவரைப் பார்த்தார். 'பேசுங்கள்' என்று சைகை காட்டுவது போல் தலையசைத்தார் நடுவர்.

என்ன பேசினோம் என்பதைப் பற்றித் தனக்கே ஒரு தெளிவில்லாமல் ஏதோ பேசித் தன் நேரம் முடியும் முன்பே பேச்சை முடித்துக் கொண்டார் வாஞ்சிநாதன்.

தன் இருக்கையில் போய் அமர்ந்ததும் தன் அணித்தலைவரையும் மற்ற இரு பேச்சாளரர்களையும் பார்த்தார். வாஞ்சிநாதன் அவர்கள் முகம் கடுகடுவென்று இருந்தது. எதிரணிப் பேச்சாளர்களைப் பார்த்தார். அவர்கள் அவரைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தது போல் இருந்தது.

நிகழ்ச்சி முடிந்ததும் அவருடைய அணிதலைவரோ, மற்ற பேச்சாளர்களோ அவரிடம் எதுவும் பேசவில்லை. நடுவர் மட்டும் அவரிடம் ஏதோ சொல்ல வந்து விட்டுப் பிறகு சொல்லாமலே இருந்து விட்டார்.

அரங்கை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது, 'எல்லாரும் நல்ல பேச்சாளர்கள்தான், ஆனா ஒரு ஆளு மட்டும் கத்துக்குட்டி போல இருக்கு!" என்று யாரோ கேலியாகப் பேசிக் கொண்டது வாஞ்சிநாதனின் காதில் விழுந்தது.

தான் இத்தனை நூல்களைப் படித்தது, இவ்வளவு ஆராய்ச்சிகள் செய்தது எல்லாம் இப்படி ஒரு பட்டத்தை வாங்கத்தானா என்று நினைத்தபோது அந்த நிலையிலும் அவருக்குச் சிரிப்பு வந்தது.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 73 
அவையஞ்சாமை

குறள் 727:
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.

பொருள்:
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவையாகி விடும்.

குறள் 726
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

726. படிக்கப்பட்ட கட்டுரை

"விஞ்ஞானி ராஜன் அவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரை 'லெகஸி ஆஃப் நியூட்டன்' என்ற சர்வதேச விஞ்ஞானப் பத்திரிகையில வெளியாகி இருப்பது உங்களுக்குத் தெரியும். தன் ஆராய்ச்சி பற்றி அவர் இப்போது நம்மிடையே பேசுவார்" என்று அறிவித்தார் கூட்டத்துக்குத் தலைமை வகித்த டாக்டர் நம்பி.

மேடையில் அமர்ந்திருந்த ராஜன் நம்பியின் காதில் ஏதோ சொன்னார்.

அதற்குப் பிறகு மீண்டும் ஒலிபெருக்கிக்கு வந்த நம்பி, "நிகழ்ச்சியில் ஒரு சிறிய மாற்றம். ராஜன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருடை ஆராய்ச்சிக் கட்டுரையை அவருடைய உதவி விஞ்ஞானி செல்லப்பா வாசிப்பார்" என்று அறிவித்தார்.

அவையில் அமர்ந்திருந்த செல்லப்பா எழுந்து மேடைக்கு வர, ராஜன் தன் கையிலிருந்த கட்டுரைத் தாட்களை அவரிடம் கொடுத்து விட்டு மேடையிலிருந்து கீழே இறங்கப் போனார்.

"நீங்க ஏன் கீழே போறீங்க? நீங்க மேடையிலேயே இருங்க!" என்று அவரைத் தடுக்க முயன்றார் நம்பி.

'பவாயில்லை' என்பது போல் கையசைத்து விட்டுக் கீழே போய் உட்கார்ந்து கொண்டார் ராஜன்.

"உங்க உதவிக்கு ரொம்ப நன்றி செல்லப்பா. கட்டுரையை நல்லா படிச்சீங்க!" என்றார் ராஜன், தன் அறையில் அமர்ந்தபடி

"இவ்வளவு அருமையா ஒரு ஆராய்ச்சி பண்ணி அதைச் சிறப்பா எழுதி இருக்கீங்க. நீங்களே படிச்சிருந்தீங்கன்ன நல்லா இருந்திருக்குமே!" என்றார் செல்லப்பா.

"என்னோட பலவீனம் உங்களுக்குத் தெரியுமே செல்லப்பா! என்னால ஒரு சபை முன்னால நின்னு பேச முடியாது. ஒண்ணு ரெண்டு தடவை முயற்சி செஞ்சு சரியா வரலேங்கறதால இனிமே அந்த முயற்சியே வேண்டாம்னு விட்டுட்டேன். என்னோட பலவீனத்தை உங்ககிட்ட மட்டும்தான் சொல்லி இருக்கேன். அதை ரகசியமா வச்சுக்கறதுக்கு நன்றி!" என்றார் ராஜன்.

"மேடையிலேயாவது உக்காந்திருக்கலாமே சார்? ஏன் கீழே இறங்கிப் போயிட்டீங்க?"

"அவையில பல பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் உக்காந்திருக்காங்க. அவங்க  யாராவது என் கட்டுரையில ஏதாவது குற்றம் கண்டுபிடிச்சு என் முகத்தைப் பாத்தா, மேடையில உக்காந்துக்கிட்டு அவங்க பார்வையை என்னால எப்படித் தாங்கிக்க முடியும்?" என்றார் ராஜன்.

'அறிஞர்கள் முகத்தைப் பார்த்துப் பேச இவர் இவ்வளவு பயப்படுகிறாரே! இவர் இவ்வளவு படித்திருந்து என்ன பயன்?' என்று நினைத்தபோது, நிறையப் படித்தவர், அறிவாளி, ஆராய்ச்சியாளர் என்றெல்லாம் ராஜனை எப்போதுமே பெரும் மதிப்புடன் பார்த்து வந்திருக்கும் செல்லப்பாவுக்கு முதல்முறையாக அவ் மீது ஒரு பரிதாபம் ஏற்பட்டது.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 73 
அவையஞ்சாமை

குறள் 726:
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

பொருள்:
நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவை கண்டு பயப்படுபவர்க்கு அவர்களுடைய நூலறிவால் என்ன பயன்?

குறள் 725
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

725. முதியவர் கூறிய யோசனை

"அப்பாடா! ஒரு வழியாக இந்தக் கருத்தரங்கு முடிந்ததே!' என்று நினைத்து கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான் சற்குரு.

மேடையிலிருந்து இறங்கியதும் சிலர் அவன் கையைப் பிடித்து, "நல்லா இருந்தது!" என்றனர். ஆனால் அவை ஒப்புக்குக் கூறப்பட்ட வார்த்தைகள் என்று அவனுக்குத் தோன்றின.

கூட்டம் சிறிது கலைந்ததும் அவன் நண்பன் குலசேகரன் அவன் அருகில் வந்து. "உன் பிரசன்டேஷன் நல்லாத்தான் இருந்தது. ஆனா சில பேர் கண்டபடி கேள்வி கேட்டு உன்னைக் குழப்பிட்டாங்க!" என்றான்.

"ரொம்ப கஷ்டப்பட்டு என் பேச்சைத் தயாரிச்சுக்கிட்டு வந்தேன். ஒரு சின்னத் தப்புக் கூட வரக் கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்தேன். ஆனா சில பேரு பொருத்தமில்லாத கேள்விகள் எல்லாம் கேட்டாங்க. சில கேள்விகளுக்கெல்லாம் எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல. கடைசியில பாத்தா, என் பிரசன்டேஷன் முழுமையாக இல்லாத மாதிரி ஒரு இம்ப்ரஷன் ஏற்பட்டுடுச்சு. அதான் எனக்கு வருத்தமா இருக்கு" என்றான் சற்குரு சற்று வருத்தத்துடன்.

சற்றுத் தொலைவிலிருந்து அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு முதியவர் சற்குருவின் அருகில் வந்து, "உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா நான் ஒண்ணு சொல்லலாமா?" என்றார்.

"நிச்சயமா சார்!" என்றான் சற்குரு.

"வாங்க, இங்கேயே ஒரு ஓரமா உக்காந்து பேசலாம்!" என்றார் அவர்.

மூவரும் அமர்ந்ததும், "நான் ஒரு சாதாண மனுஷன்தான். நிறைய கூட்டங்களுக்கும், கருத்தரங்கங்களுக்கும் போறவன் என்கிற முறையில நான் கவனிச்ச விஷயங்கள் அடிப்படையில சில கருத்துக்களைச் சொல்றேன். இன்னிக்கு உங்களோட பிரசன்டேஷன் ரொம்ப அற்புதமா இருந்தது. பொதுவா இது மாதிரி கருத்தரங்களுக்கெல்லாம் பேச்சாளரைக் கேள்வி கேட்டு மடக்கறதுக்குன்னே சில பேர் வருவாங்க. அப்படிப்பட்ட சில பேர்தான் இன்னிக்கு உங்களைக் கேள்விகள் கேட்டுக் குழப்பப் பாத்தாங்க. பல கேள்விகளுக்கு நீங்க சரியாத்தான் பதில் சொன்னீங்க. ஆனா அவங்க தர்க்கரீதியா சில கேள்விகள் கேட்டு உங்களை மடக்கினாங்க. நீங்க அதுக்கெல்லாம் தர்க்கரீதியா பதில் சொல்லாம, நீங்க எப்பவும் விளக்கற மாதிரி  பதில் சொன்னீங்க. அதனால நீங்க அவங்களோட கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லலைங்கற மாதிரி ஒரு இம்ப்ரஷன் உண்டாயிடுச்சு. ஏன், உங்களுக்கே நீங்க சொன்ன பதில்கள் திருப்தியா இருந்திருக்காதே" என்றார் அவர்.

"ஆமாம்."

"மதக் கோட்பாடுகள் பற்றின விவாதங்கள்ள சங்கரர், ராமானுஜர் மாதிரி சில மதத் தலைவர்கள் மாற்று மதத் தலைவர்களைத் தோற்கடிச்சதாப் படிச்சிருக்கோம். தங்களோட மதக் கோட்பாடுகளை விளக்கறதோட, தர்க்கத்தையும் பயன்ப டுத்தித்தான் அவங்க விவாதங்கள்ள ஜெயிச்சிருக்காங்க. அதனால இது போன்ற கருத்தரங்கள்ள வெற்றிகரமாச் செயல்படணும்னா,  நீங்க பேசற விஷயத்தைப் பத்தின நுணுக்கமான அறிவைத் தவிர, தர்க்கரீதியான அணுகுமுறையையும் நீங்க தெரிஞ்சுக்கணும். அனுபவமுள்ள பேச்சாளர்கள் பங்கு பெறுகிற கருத்தரங்கள்ள அவங்க எப்படி தர்க்க அறிவைப் பயன்படுத்திக் கேள்வி கேக்கறவங்களோட வாயை அடைக்கறாங்கங்கறதைப் பாத்துக் கத்துக்கிட்டீங்கன்னா அந்தத் திறமை உங்களுக்கும் வந்துடும். உங்ககிட்ட நிறைய விஷயம் இருக்கு. வாழ்த்துக்கள்!"

சற்குருவின் கையைப் பிடித்துக் குலுக்கு விட்டு விடைபெற்றார் அவர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 73 
அவையஞ்சாமை

குறள் 725:
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

பொருள்:
அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.

குறள் 724
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, June 25, 2023

724. சொன்னபடி ஏன் செய்யவில்லை?

பேராசிரியர் மருதமுத்துவைத் தன் அறைக்கு அழைத்தார் கல்லூரியில் அவன் பணி செய்யும் துறையின் தலைவரான கருணாகரன்.

"மருதமுத்து! இந்தச் சின்ன வயசில இப்படி ஒரு நேஷனல் செமினார்ல பேச உங்களுக்கு வாய்ப்புக் கிடைச்சிருக்கறது பெரிய விஷயம். இதுக்குக் காரணம் உங்களோட பிரேக்த்ரூ ரிஸர்ச்தான். செமினார் நம்ம கல்லூரியில நடந்தாலும் பல பெரிய கல்லூரிகளிலேந்து பேராசிரியர்கள் வருவாங்க. சில பேரு தங்களோட அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்தி கண்டபடி கேள்விகள் கேட்டு செமினார்ல பேசறவங்களைக் குழப்பி மட்டம் தட்டறதுக்காகவே வருவாங்க. கேள்விகளைக் கடைசியில வச்சுக்க சொல்லி நான் முன்னாலேயே அறிவிச்சுடறேன். ஆனாலும் சில பேர் நீங்க பேசும்போது குறுக்கிட்டுக் கேள்வி கேட்கத்தான் செய்வாங்க. நீங்க பேசும்போது அப்படி யாராவது கேள்வி கேட்டா, கேள்விகளுக்குக் கடைசியில பதில் சொல்றதா சொல்லிடுங்க. கடைசியில நேரம் இல்லேன்னு சொல்லி நான் செமினாரை முடிச்சுடறேன். சரியா?" என்றார் கருணாகரன்.

மருதமுத்து தலையாட்டினார்.

"நான் அவ்வளவு தூரம் சொல்லியும் நீங்க ஏன் கேள்விகளை அனுமதிச்சீங்க? அதைத் தவிர சில பேராசிரியர்களை மேடைக்கு அழைச்சு அவங்க சொல்ல வந்த விஷயத்தை விளக்க வேறு சொன்னீங்க!" என்றார் கருணாகரன் சற்றுக் கோபத்துடன்.

"சார்! அவங்க கேள்வி கேட்டதால சில விஷயங்களை என்னால இன்னும் தெளிவா விளக்க முடிஞ்சது. நிறையப் படிச்ச அனுபவம் உள்ளவங்க மேடையேறிப் பேசி தாங்க சொல்ல வந்த விஷயங்களை விளக்கினதால என்னால புதுசா பல விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சுது!" என்றான் கருணாகரன்.

"நான் சொன்ன முறையைப் பின்பற்றலையேங்கறதுக்காகத்தான் கேட்டேன். ஆனா நீங்க சொல்ற காரணங்கள் சரியாத்தான் இருக்கு. செமினார் முடிஞ்சதும் எல்லாருமே திருப்தியா இருந்த மாதிரிதான் இருந்தது. நீங்களும் உங்களைப் பத்தின ஒரு நல்ல மதிப்பை எல்லார் மனசிலேயும் உருவாக்கிட்டீங்க. பாராட்டுக்கள்" என்றார் கருணாகரன் புன்னகையுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 73 
அவையஞ்சாமை

குறள் 724:
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

பொருள்:
கற்றவரின் முன் தான் கற்றவற்றை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் கற்க வேண்டும்.

குறள் 723
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Saturday, June 24, 2023

723. பாதியில் முடிந்த பேச்சு!

"இன்று நம் சங்கத்தின் ஆண்டுவிழாக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருப்பவரைப் பற்றி நான் எந்த ஒரு அறிமுகமும் செய்யத் தேவையில்லை. நீங்கள் அனைவரையும் அவரை நன்கு அறிவீர்கள்!" என்று கூறி அமர்ந்தார் மன்றத்தின் செயலாளர்.

பேச்சாளர் எழுந்து ஒலிபெருக்கியின் முன் வந்து நின்றார். முகத்தில் ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

ஒரு சில விநாடிகளிலேயே அவருடைய பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். 

மறுபடியும் ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தார் அவர். அடுத்த சில விநாடிகளில் மீண்டும் அவருடைய பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது.

இரண்டு நிமிடங்களில் தன் பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்தார் அவர்.

"மேஜர் சண்முகம் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் நம்மிடையே விரிவாகப் பேசுவார்!" என்று அறிவித்தார் செயலாளர்.

அவையில் அமர்ந்திருந்த தனராஜ் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் நண்பன் பாபுவிடம், "செகரட்டரி சமாளிக்கறாரு. மைக் முன்னே வந்து நின்னதும் மேஜர் நர்வஸ் ஆயிட்டாரு. சமாளிச்சுப் பாத்தாரு முடியல, பாவம்!" என்றான்.

"என்னப்பா இது? கார்கில் போரில ரொம்ப வீரமா போராடித் தன் உயிரைப் பத்திக் கவலைப்படாம பல தீரச் செயல்களைச் செஞ்சவரு. அரசாங்கத்தில அவருக்கு நிறைய விருதுகள் எல்லாம் கொடுத்திருக்காங்க. அப்படிப்பட்ட வீரர் நமக்கு முன்னால பேச பயப்படறாருன்னா ஆச்சரியமா இருக்கே!" என்றான் பாபு.

"என்ன செய்யறது. பத்து பேருக்கு முன்னால மேடையில நின்னு பேசற தைரியம் சில பேருக்குத்தான் வரும்!" என்றான் தனராஜ்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 73 
அவையஞ்சாமை

குறள் 723:
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

பொருள்:
பகைவர் உள்ள போர்க்களத்தில் மரணத்துக்கு அஞ்சாமல் சென்று போரிடத் துணிந்தவர் உலகத்தில் பலர் உண்டு, கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

குறள் 722
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

722. கற்றவர் அவையில்...

"அந்த கோச்சிங் இன்ஸ்டிட்யூட்ல வேலைக்காக இன்டர்வியூவுக்குப் போயிட்டு வந்தியே, என்ன ஆச்சு?" என்றான் மணவாளன், தன் நண்பன் யோகியிடம்.

"அங்கே வகுப்பு நடத்தற சீனியர்கள் மாணவர்கள் மாதிரி வகுப்பில உக்காந்திருப்பாங்களாம். அவங்களுக்கு நான் கிளாஸ் எடுக்கணுமாம்?" என்றான் யோகி எரிச்சலுடன்.

"எடுக்க வேண்டியதுதானே?"

"சரி, எடுக்கலாம்னுதான் முயற்சி செஞ்சேன். ஆனா அந்தப் பெரிசுங்கள்ளாம் வகுப்பில உக்காந்துக்கிட்டு, அவங்க ஏதோ மாணவர்கள் மாதிரி சந்தேகம் கேக்கறது, விளக்கினா, 'புரியல. மறுபடி விளக்க முடியுமா?' ன்னு கேக்கறது இப்படியெல்லாம் பண்ணி என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணினாங்க. போங்கடா, நீங்களும், உங்க வேலையும்னுட்டு வந்துட்டேன்!"

"அப்படியா?" என்றான் மணவாளன் யோசித்தபடி

"நீ யோசிக்கறதைப் பாத்தா, நீயும் போய் முயற்சி பண்ணலாமான்னு யோசிக்கற மாதிரி இருக்கே?" என்றான் யோகி.

"ஆமாம். முயற்சி பண்ணிப் பாக்கலாம்னு நினைக்கறேன்" என்றான் மணவாளன்.

"'யாம் பெற்ற துன்பம் பெற வேண்டாம் இந்த வையகம்'னுதான் நான் நினைக்கறேன். நீயே போய் மாட்டிக்க விரும்பினா நான் என்ன பண்றது?"

"கங்கிராசுலேஷன்ஸ் மிஸ்டர் மணவாளன். எங்க தேர்வாளர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்காங்க!" என்றார் கோச்சிங் நிறுவனத்தின் இயக்குனர்.

"நன்றி சார்!" என்றார் மணவாளன்.

"இங்கே ஆசிரியர்களா இருக்கறவங்க சிறந்த கல்வி அறிவு உள்ளவங்களா இருக்கணும்னு நாங்க நினைக்கறோம். அதனாலதான் இங்கே வேலைக்குச் சேர விரும்பறவங்களை எங்க சீனியர் ஃபெகல்டி உறுப்பினர்களுக்கு வகுப்பு எடுக்கணும்னு சொல்றோம். 

"வகுப்பில உக்காந்திருக்கற சீனியர் ஆசிரியர்கள் அதிகக் கல்வி அறிவு உள்ளவங்கங்கறதால சில கூர்மையான கேள்விகளைக் கேப்பாங்க. அதோட வகுப்பு நடத்தறவர் சொல்றது சராசரிக்குக் கீழான மாணவர்களுக்கும் புரியுமான்னு பாப்பாங்க. அது மாதிரி மாணவர்களுக்கு எந்த விதமான சந்தேகங்கள் வரும்னு  அவங்க நிலையிலே இருந்து யோசிச்சுக் கேள்வி கேப்பாங்க. 

"இந்தச் சவால்களையெல்லாம் வெற்றிகரமா சமாளிச்சு வகுப்பு எடுக்கறவங்களைத்தான் நாங்க தேர்ந்தெடுப்போம். அது மாதிரி வெற்றி பெறுகிறவங்க ரொம்பக் கொஞ்சம்தான். அதில நீங்க ஒத்தரா இருக்கீங்க. கல்வி கற்றவர்கள் பல பேர் இருக்காங்க. ஆனா அவங்ளுக்குள்ள சிறந்தவர்கள்ள நீங்களும் ஒத்தர்னு நீங்க பெருமைப்படலாம்!" 

இயக்குனர் கூறியதைக் கேட்டபோது மணவாளனுக்குப் பெருமையாக இருந்தது.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 73 
அவையஞ்சாமை

குறள் 722:
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வா

பொருள்:
கற்றவர் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர்களுக்குள் நன்கு கற்றவர் என்று மதித்துச் சொல்லப்படுவார்.

குறள் 721
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Friday, June 23, 2023

721. தேதியை மாற்றியது ஏன்?

ஒரு பொது நிகழ்ச்சியில் ராம்குமார் செல்வரத்தினத்தைச் சந்தித்தான்.

செல்வரத்தினம் 'அசோசியேஷன் ஆஃப் ஃபினான்ஷியல் புரொஃபஷனல்ஸ்' என்ற பெயர் கொண்ட நிதித்துறை வல்லுனர்களுக்கான ஒரு கூட்டமைப்பின் செயலர்.

ஒரு பெரிய நிறுவனத்தின் நிதித்துறையில் ஒரு மூத்த அதிகாரியாக இருந்த ராம்குமார் நிதித்துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை சில பொருளாதாரப் பத்திரிகைகளில் எழுதி இருக்கிறான் என்பதை அறிந்ததும் செல்வரத்தினம், "அப்படீன்னா, எங்க அசோசியேஷன்ல நீங்க வந்து ஏதாவது ஒரு தலைப்பில பேசலாமே!" என்றார்.

"உங்க அசோசியேஷன் உறுப்பினர்கள் எல்லாரும் இந்தத் துறையில நிறைய அனுபவம் உள்ளவங்களா இருப்பாங்க. அவங்ககிட்ட நான் எதைப் பத்திப் பேச முடியும்?" என்றான் ராம்குமார்.

"உங்களுக்கு பிராக்டிகல் நாலட்ஜ் இருக்கு. அகாடமிக்காகவும் ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் எழுதி இருக்கீங்க. நிச்சயமா உங்களால பல பயனுள்ள விஷயங்களைப் பகிர்ந்துக்க முடியும்!" என்று செல்வரத்தினம் உறுதியாகக் கூறியதும், ராம்குமார் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டான்.

"அடுத்த வாரத்தில ஒரு தேதியை நிர்ணயிச்சு ரெண்டு நாள்ள உங்களுக்கு ஃபோன் பண்றேன். தயாரா இருங்க!" என்றார் செல்வரத்தினம்.

"என்ன தலைப்பில பேசணும்?"

ஒரு நிமிஷம் யோசித்த செல்வரத்தினம், "இப்ப நிதி நிறுவனங்கள் தொடர்பா நிறைய மாறுதல்கள் செஞ்சு புதுசா ஒரு சட்டம் கொண்டு வந்திருக்காங்களே அதைப் பத்திப் பேசுங்களேன்."

"சரி" என்று தலையாட்டிய ராம்குமார், "உங்க உறுப்பினர்கள் பற்றி ஒரு புரொஃபைலை எனக்கு அனுப்ப முடியுமா? அவங்க பின்னணி பத்தித் தெரிஞ்சா அதுக்கு ஏத்தாப்பல என் பேச்சைத் தயார் செஞ்சுப்பேன்" என்றான்.

"வேற ஒரு நோக்கத்துக்காக அப்படிப்பட்ட ஒரு புரொஃபைல் தயார் பண்ணினேன். அதை உங்களுக்கு மின்னஞ்சல்ல அனுப்பிடறேன்" என்றார் செல்வரத்தினம்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு செல்வரத்தினம் ராம்குமரைத் தொலைபேசியில் அழைத்து, அவன் பேச வேண்டிய தேதியைத் தெரிவித்தார்.

"சார், தேதியை ஒரு வாரம் தள்ளிப்போட முடியுமா?" என்றான் ராம்குமார்.

"ஏன்?"

"என் ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு. அடுத்த வாரம் முழுக்க எனக்கு நிறைய வேலை இருக்கும்."

"சரி. நான் இன்னும் உறுப்பினர்களுக்கு கூட்டத்தோட தேதியை அறிவிக்கல. 14-ஆம் தேதிக்கு பதிலா 21-ஆம் தேதி வச்சுக்கலாமா?" என்றார் செல்வரத்தினம்.

"சரி சார்!" என்றான் ராம்குமார்.

"ராம்குமார்! உங்க பேச்சு ரொம்பப் பிரமாதமா அமைஞ்சு போச்சு. எல்லாரும் ரொம்பப் பாராட்டினாங்க" என்றார் செல்வரத்தினம் தொலைபேசியில்.

"நன்றி சார். நான் பேசி முடிச்சப்புறம் அரங்கத்திலேயே பல பேர் எங்கிட்ட வந்து தங்களோட பாராட்டுகளைத் தெரிவிச்சங்க. இந்த வாய்ப்புக்கு நான் உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்."

"ஆமாம். ஏன் தேதியை ஒரு வாரம் தள்ளிப் போடச் சொன்னீங்க?" என்றார் செல்வரத்தினம் திடீரென்று.

"அதான் சொன்னேனே சார்..."

"ஆஃபீஸ்ல திடீர்னு வேலை வந்துடுச்சுன்னு சொன்னீங்க. அது காரணமா இருக்காதுன்னு நான் தினைக்கிறேன். போன வாரம் தற்செயலா உங்க ஆஃபீஸ் பக்கம் போனப்ப உங்களைப் பாக்கலாம்னு உங்க ஆஃபீசுக்குப் போனேன். நீங்க லீவுன்னு சொன்னாங்க. ஆஃபீஸ்ல முக்கியமான வேலை இருக்கச்சே எப்படி லீவு போட முடியும்? சொல்லுங்க!"

"நீங்க அனுப்பின உங்க அசோசியேஷன் உறுப்பினர்களோட புரொஃபைலைப் பார்த்தேன். உங்க உறுப்பினர்கள்ள சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ், காஸ்ட் அக்கவுன்டன்ட்ஸ் எல்லாம் இருக்காங்க. அவங்கள்ள பல பேருக்கு நிதி நிறுவனங்கள் பற்றின சட்டத்தில அறிவிக்கப்பட்டிருக்கிற மாறுதல்கள் பற்றி நல்லாவே தெரிஞ்சிருக்கும். அதனால  நான் அந்த சட்டத்தைப் பத்தி சொல்ற விஷயங்கள்ள ஒரு சின்ன தப்பு இருந்தா கூட அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க. அதனாலதான் ஒரு சின்னப் பிழை கூட இல்லாம பேசணும், அதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கிட்டு என் பேச்சைத் தயாரிக்கணும்னு நினைச்சேன்!" என்றான் ராம்குமார்.சற்று சங்கடத்துடன்.

"ஏதோ, எனக்குத் தெரிஞ்ச அளவில பேசிட்டுப் போகலாம்னு நினைக்காம, ஒரு சின்ன தப்பு கூட வரக் கூடாதுங்கறதுக்காக நேரம் எடுத்துக்கிட்டு விரிவா உங்க பேச்சை தயார் பண்ணி இருக்கீங்க. நீங்க ஆஃபீசுக்கு லீவு போட்டது கூட இந்தப் பேச்சைத் தயாரிக்கறதுக்காகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். உங்களோட சின்சியரிடி, கமிட்மென்ட் இதையெல்லாம் நான் ரொம்பப் பாராட்டறேன்" என்றார் செல்வரத்தினம் உண்மையான உணர்வுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 73 
அவையஞ்சாமை

குறள் 721:
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

பொருள்:
சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.

குறள் 720
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Thursday, June 22, 2023

720. மனமகிழ் மன்றம்!

ஒரு பேச்சாளர் என்ற முறையில் சிற்றம்பலத்துக்குப் பல அமைப்புகளிலிருந்தும் அழைப்பு வரும். அதுபோல்தான் அந்த மனமகிழ் மன்றத்திலிருந்தும் வந்தது.

மனமகிழ் மன்றம்  என்ற பெயர் இருந்ததால் நகைச்சுவைத் தலைப்பில் பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து 'புகழ் என்னும் போதை' என்ற தலைப்பில் நகைச்சுவையுடன் கூறிய ஒரு உரையைத் தயார் செய்து கொண்டு போனார் சிற்றம்பலம்.

சொற்பொழிவு முடிந்து திருச்சிற்றம்பலம் வீட்டுக்குள் நுழைந்ததும், அவர் மனைவி வானதி, "ஏன் ரொம்ப சோர்வா இருக்கீங்க? உடம்பு சரியில்லையா?" என்றாள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை" என்று கூறிக் கொண்டே சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டார் திருச்சிற்றம்பலம். 

"ஜுரம் இருக்கா என்ன?" என்றபடியே அவர் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள் வானதி.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஏதோ பேசக் கூப்பிட்டாங்களேன்னு போனேன். இவ்வளவு மட்டமான ஒரு கூட்டத்தை நான் பாத்ததில்ல!" என்றார் திருச்சிற்றம்பலம்.

"ஏன்? என்ன ஆச்சு?"

"அது உறுப்பினர்கள் வந்து குடிச்சிட்டு, அரட்டை அடிச்சுட்டு, சீட்டாடிட்டுப் போற கிளப். அந்த செகரெட்டரி ஏதோ நல்ல எண்ணத்தில ஒரு சொற்பொழிவை ஏற்பாடு பண்ணிட்டாரு. கூட்டம் முடிஞ்சப்பறம்தான் மது சப்ளைன்னு சொல்லிட்டாரு போலருக்கு. கூட்டத்துக்கு வந்த அத்தனை பேரும் கூட்டம் ஆரம்பிச்ச உடனேயே கைக்கடிகாரத்தைப் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. 

"நான் பாட்டுக்கு மேடையில பேசிக்கிட்டிருக்கேன். அவங்க தங்களுக்குள்ள பேசிக்கறாங்க. செகரட்டரி எவ்வளவோ தடவை சொல்லியும் அவங்க கேக்கல. நான் நகைச்சுவையாப் பேசிக்கிட்டிருக்கேன். ஏதோ இங்கே ஒரு மூலையில, அங்கே ஒரு மூலையிலன்னு சில பேர்தான் என் பேச்சைக் கேட்டாங்க. 

"நான் வேற 'புகழ் என்னும் போதை'ன்னு தலைப்பு வச்சிட்டேனா, ஒத்தர் எழுந்து கேக்கறாரு, 'ஏன் சார், புகழ் போதையிலேயும் விஸ்கி போதை அளவுக்கு கிக் இருக்குமா?'ன்னு! ஒரு மணி நேரம் பேசத் தயார் பண்ணிக்கிட்டுப் போனவன் அரை மணி நேரத்தில முடிச்சுட்டேன். 

"நான் கிளம்பறப்ப செகரட்டரி எங்கிட்ட வருத்தப்பட்டாரு. முதல் தடவையா எங்க மன்றத்தில ஒரு பேச்சு ஏற்பாடு செஞ்சோம், அது இப்படி ஆயிடுச்சு'ன்னு. 'இதுவே முதலும், கடைசியுமா இருக்கட்டும். இனிமே யாரையும் கூப்பிட்டுப் பேசச் சொல்லாதீங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன். நல்ல விருந்து தயார் பண்ணிக்கிட்டுப் போய் அழுக்கான முற்றத்தில கொட்டிட்டு வந்த மாதிரி இருக்கு!'

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 72 
அவையறிதல்

குறள் 720:
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.

பொருள்:
தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தின் முன் ஒரு பொருளைப் பற்றிப் பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

குறள் 719
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Wednesday, June 21, 2023

719. இளம் பேச்சாளருக்கு ஒரு அறிவுரை!

இலக்கிய விழாவில் சிறப்பாகப் பேசிய அந்த இளம் பேச்சாளரைப் பாராட்டிப் பலரும் பேசினர்.

இறுதியாகப் பேசிய புலவர் செந்தில்நாதன், "பேச்சாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும். ஆனா எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. கற்றவர்கள் அல்லது பேச்சாளர் சொல்வதைக் கேட்க ஆர்வமுள்ளவர்கள் ஆகியோர் உள்ள அவையில் மட்டுமே பேச வேண்டும். அறிவற்ற, சிறுமதி படைத்தவர்கள் நிறைந்த அவைகளில் பேச வாய்ப்புக் கிடைத்தால் அந்த வாய்ப்பை உடனே நிராகரிக்க வேண்டும். இந்த இளம் பேச்சாளருக்கு நான் கூற விரும்பும் அறிவுரை இதுதான்!" என்றார்.

நிகழ்ச்சி முடிந்ததும், "என்ன செந்தில் இப்படி ஒரு அறிவுரையைச் சொல்லி இருக்கீங்க? எந்த வாய்ப்பு வந்தலும் அதைப் பயன்படுத்திக்கிட்டாத்தானே ஒரு இளம் பேச்சாளருக்குப் பெயரும் புகழும் கிடைக்கும்?" என்றார் செந்தில்நாதனின் நீண்டநாள் நண்பரான கோகுல்.

"என் இளம் வயசில நானும் அப்படி நினைச்சுத்தான் எல்லா வாய்ப்புகளையும் ஏத்துக்கிட்டேன், கோகுல்! ஆனா ஆர்வம் இல்லாதவங்க மத்தியில பேசினா மனச்சோர்வுதான் வரும்னு புரிஞ்சுக்கிட்டேன். அப்புறம்தான் அது மாதிரி கூட்டங்கள்ள பேசறதைத் தவிர்க்க ஆரம்பிச்சேன்!"

"பேச்சாளருக்கு மனச்சோர்வு ஏற்படும்படி என்ன நடக்கும்?"

"நல்ல ஆடியன்ஸா இருந்தா பேசறதை ஆர்வத்தோட கேட்பாங்க. நான் பேசற விஷயம் சில பேருக்கு சுவாரசியமா இல்லேன்னாலும், அவங்க கூட ஒரு மரியாதைக்காக மௌனமா கேட்டுக்கிட்டிருப்பாங்க. மோசமான ஆடியன்ஸ்னா, தங்களுக்கு ஆர்வம் இல்லைங்கறதை வெளிப்படடையாக் காட்டிப்பாங்க. சோம்பல் முறிப்பாங்க. இருப்புக் கொள்ளாத மாதிரி உடம்பை அசைச்சுக்கிட்டே இருப்பாங்க. பக்கத்தில இருக்கறவங்ககிட்ட பேசுவாங்க. சில சமயம் பேச்சாளரைக் கேலி செஞ்சு பேசற மாதிரி பேச்சாளர் முத்தைப் பாத்துக்கிட்டே பக்கத்தில இருக்கறவங்ககிட்ட சிரிச்சுகிட்டே ஏதாவது சொல்லுவாங்க. எல்லாத்துக்கும் மேல ஆர்வமாக் கேக்கறவங்களையும் கேக்க விடாம ஏதாவது கவனத் திருப்பல்களை செஞ்சுக்கிட்டிருப்பாங்க இப்ப செல்ஃபோன் வேற இருக்கு. கேக்கணுமா?"

"உங்களை மாதிரி சிறந்த பேச்சாளருக்குக் கூட இப்படிப்பட்ட அனுபவங்கள் நேர்ந்திருக்கா?" என்றார் கோகுல் வியப்புடன்.

"நான் சொன்னது எல்லாமே என் கூட்டங்கள்ள நடந்த விஷயங்களைத்தான்!" என்றார் செந்தில்நாதன் சிரித்தபடி.

"ஆச்சரியமா இருக்கே!? நானே உங்களைப் பல கூட்டங்களுக்குப் பேச அழைச்சிருக்கேன். சில சமயம் நேரம் இல்லை, உடல்நிலை சரியில்லைன்னு சொல்லி சில அழைப்புகளை நீங்க ஏத்துக்கலை. அதுக்கெல்லம் இதுதான் காரணமா?" என்றார் கோகுல்.

"கோகுல், நீங்க என் நண்பர்!" என்று சொல்லிச் சிரித்தார் செந்தில்நாதன். 'நீங்க ஏற்பாடு செய்த பல கூட்டங்களில்தான் எனக்கு அப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறதுங்கறதை என் நண்பரான உங்ககிட்ட எப்படிச் சொல்ல முடியும்?' என்று மனதில் நினைத்துக் கொண்டே.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 72 
அவையறிதல்

குறள் 719:
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.

பொருள்:
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற சிறியோர் உள்ள அவையில் மறந்தும் பேச வேண்டாம்.

குறள் 720 (விரைவில்)
குறள் 718
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

718. மாலை நேர வகுப்புகள்

ஆறுமுகம் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும்போது மாலை மணி 7 ஆகி விட்டது.

"ஏங்க இவ்வளவு நேரமாயிடுச்சு?" என்றாள் அவர் மனைவி மேகலா.

"படிப்பில பின் தங்கி இருக்கற மாணவங்களுக்காக ஸ்பெஷல் கிளாஸ் ஆரம்பிச்சிருக்காங்க. இனிமே தினமும் இந்த நேரத்துக்குத்தான் வீட்டுக்கு வர முடியும். சரி. கொஞ்சம் காப்பி இருந்தா கொடு. மரத்தடியில எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க"

காப்பியுடன் வந்த மேகலா, "ஏங்க தினமும் லேட்டாகும்னு சொல்றீங்க. இந்த மாலை நேர வகுப்புகளை நிறுத்திக்கலாமே!" என்றாள்.

"நான் திரும்பி வந்தப்பறம் இதைப் பத்திப் பேசலாம்" என்றபடியே காப்பியை அவசரமாகக் குடித்து விட்டுக் கிளம்பினார் ஆறுமுகம்.

ரவு 8 மணிக்கு மேல் வீடு திரும்பியதும் இரவு உணவை முடித்துக் கொண்டு கூடத்தில் வந்து அமர்ந்தார் ஆறுமுகம்.

"காலையிலேந்து சாயந்திரம் வரைக்கும் பள்ளிக்கூடத்தில வகுப்புகள் எடுக்கறீங்க. அப்புறம் சாயந்திரம் ஒரு மணி நேரம் ஆத்தங்கரை மரத்தடியில உக்காந்துக்கிட்டு சின்னவங்க, பெரியவங்கன்னு வயசு வித்தியாசம் பாக்காம ஊர்ல நிறைய பேரைக் கூப்பிட்டு வச்சுக்கிட்டு வகுப்பு எடுக்கறீங்க. இப்ப பள்ளிக்கூடத்தில ஒரு மணி நேரம் கூடுதலா வகுப்பு நடத்த வேண்டி இருக்கு. இந்த உபதேச வகுப்புகளை நிறுத்திக்கலாமே!" என்றாள் மேகலா அவர் அருகில் வந்து அமர்ந்தபடியே.

"மேகலா! நான் பண்றது உபதேசம் இல்லை. வாழ்க்கையைப் பத்தின பல உண்மைகள், இயற்கையோட இசைந்து வாழறது, நல்ல பண்புகளைக் கடைப்பிடிக்கிறதுன்னு எனக்குத் தெரிஞ்ச பல விஷயங்களை எடுத்துச் சொல்றேன். சின்னவங்க, பெரியவங்கன்னு பல பேரும் வந்து அதை ஆர்வமாக் கேட்டுக்கறாங்க. இந்த விஷயங்களை நான் பள்ளிக்கூடத்தில சொல்ல முயற்சி செஞ்சப்ப, அங்கே இருந்த மாணவர்கள் எல்லாம், 'இதெல்லாம் வேண்டாம் சார்! பரீட்சைக்குத் தேவையானதை மட்டும் சொல்லிக் கொடுங்க'ன்னு சொல்லிட்டாங்க.ஆனா படிச்சவங்க, படிக்காதவங்க, பெரியவங்க, சின்னவங்கன்னு ஊர்ல பல பேரு நான் சொல்ற விஷயங்களோட முக்கியத்துவத்தைப் புரிஞ்சுக்கிட்டு, அதையெல்லாம் ஆர்வமாக் கேட்டு அதையெல்லாம் வாழ்க்கையில கடைப்பிடிக்க ஆர்வமா இருக்காங்க. அதனாலதான் அவங்ககிட்ட பேசறதை நான் விரும்பறேன். செடி வளருவதைப் பாத்தா நாம இன்னும் ஆர்வமா அதுக்குத் தண்ணி ஊத்துவோம் இல்ல அது மாதிரிதான். எனக்குக் கிடைக்கிற  நேரம் குறைஞ்சுட்டாலும் இந்த மாலை நேர வகுப்புகளை நான் நிறுத்த விரும்பல!" என்றார் ஆறுமுகம்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 72 
அவையறிதல்

குறள் 718:
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

பொருள்:
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக் கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.

அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

717. இரண்டாம் சுற்று!

முதல் சுற்று நேர்முகத் தேர்வு முடிந்து, நான்கு பேர் இரண்டாம் சுற்று நேர்முகத் தேர்வுக்குத் தெரிவு செய்யப்பட்டனர். நால்வரில் ஒருவர் பணியமர்த்தப்படுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

தேர்வுக்குழுவின் நான்கு உறுப்பினர்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

"நாம நாலு பேர் இருக்கோம். ஷார்ட்லிஸ்ட் ஆனவங்களும் நாலு பேர் இருக்காங்க. நாம நாலு பேரும் ஆளுக்கு ஒத்தரைத் தேர்ந்தெடுத்தா எப்படி இருக்கும்?" என்றார் தேர்வுக்குழுவின் தலைவர் பத்மநாபன் வேடிக்கையாக.

"அப்படி நடந்தா தலைவரான உங்க தேர்வை நாங்க மூணு பேரும் ஏத்துக்க வேண்டியதுதான்!" என்றார் செல்வகுமார் என்ற உறுப்பினர்.

"நோ, நோ! என்னோட தேர்வை எல்லாரும் ஏத்துகணுங்கறதை நான் ஏத்துக்க மாட்டேன்!" என்றார் பத்மநாபன்.

"சும்மா சொன்னேன் சார்!" என்றார் செல்வகுமார்.

"ஒரு தடவை எல்லாரையும் இன்டர்வியூ பண்ணியாச்சு. மறுபடி ஒவ்வொத்தர்கிட்டேயும் புதுசா எதைக் கேக்க முடியும்" என்றார் சூர்யகாந்த் என்ற உறுப்பினர்.

"எனக்கு ஒரு யோசனை தோணுது. நாலு பேரோட கல்வி அறிவு, திறமைகள், மென்ட்டல் ஆட்டிட்யூட் எல்லாத்தையும் நாம அசெஸ் பண்ணிட்டோம். நாலு பேரும் கிட்டத்தட்ட சமமான நிலையிலதான் இருக்காங்க. கற்ற கல்வியைப் பயன்படுத்தறது இந்த வேலைக்கு ரொம்ப முக்கியம். அதனால ஒவ்வொத்தரும் தான் கத்துக்கிட்டதை எப்படி அப்ளை பண்ணப் போறாருங்கறதைத்தான் நாம முக்கியமாப் பார்க்கணும். அதனால அவங்க கற்ற கல்வி தொடர்பா ஒரு தலைப்பைக் கொடுத்து அந்தத் தலைப்பைப் பற்றி ஒவ்வொத்தரையும் அஞ்சு நிமிஷம் விளக்கச் சொல்லுவோம். யார் சிறப்பா விளக்கறாங்களோ அவங்களைத் தேர்ந்தெடுப்போம். ஏன்னா ஒத்தர் தான் கத்துக்கிட்ட விஷயத்தை எந்த அளவுக்கு சரியன வார்த்தைகளைப் பயன்படுத்தி, தெளிவா விளக்கறாரோ, அந்த அளவுக்கு அவரோட கல்வி சிறப்பானதுன்னுதானே பொருள்?" என்றார் சேகர் என்ற நான்காவது உறுப்பினர்.

"எக்ஸலன்ட் சஜஷன்!" என்றார் பத்மநாபன்.

செல்வகுமாரும், சூர்யகாந்த்தும் அதை ஆமோதிக்கும் விதமாகத் தலையசைத்தனர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 72
அவையறிதல்

குறள் 717:
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.

பொருள்:
ஒருவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை அவர் பிழையற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசுவதில் வெளிப்படும்.

குறள் 716
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...