Tuesday, March 31, 2020

402. நட்சத்திரப் பேச்சாளர்!

தொலைக்காட்சிகளில் வரும் பேச்சு நிகழ்ச்சிகளை அதிகம் பார்ப்பவர்களுக்கு முருகேஷ் என்ற பெயர் நன்கு பரிச்சயமாகி இருக்கும்.

பட்டிமன்றங்கள் உட்படப் பல பேச்சு நிகழ்ச்சிகளில் முருகேஷ் ஒரு நட்சத்திரப் பேச்சாளர் என்று கூறலாம்.

முருகேஷ் பேசுவதற்காக ஒலிபெருக்கியின் முன் வந்து நின்ற உடனேயே கைதட்டல் அரங்கைப் பிளக்கும். அவர் பேசும்போது ஒவ்வொரு வரிக்கும் ஒரு பெரிய சிரிப்பொலி அல்லது கைதட்டல் கிடைக்கும்.

சில சமயம் அவர் கைதட்டலை எதிர்பார்த்துச் சில வினாடிகள் மௌனம் காப்பார். பார்வையாளர்கள் சமிக்ஞையைப் புரிந்து கொண்டு கை தட்டுவார்கள்.

முருகேஷ் படித்தவர் இல்லை. சிறிய அளவில் ஒரு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். எப்படியோ தொலைக்காட்சி சானல்களின் பேச்சு நிகழ்ச்சிகளில் இடம் பிடித்து, பட்டிமன்றப் பேச்சாளராக வளர்ந்து, ஒரு  நட்சத்திரப் பேச்சாளர் என்ற அளவுக்கு உயர்ந்து விட்டார்.

அவரது தொலைக்காட்சிப் புகழின் விளைவாக அவர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் பேச அழைக்கப்பட்டார்.

'சிடி சிடிசன்ஸ் கிளப்' ஆண்டு விழாவுக்கு சிறப்புப் பேச்சாளராக முருகேஷை அழைப்பது என்று அந்த கிளப்பின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. செயற்குழுவின் ஒன்பது உறுப்பினர்களில் மூன்று பேர் மட்டும் இந்த யோசனையை எதிர்த்தார்கள்.

"நம் கிளப் உறுப்பினர்களில் பெரும்பாலோர் நன்கு படித்தவர்கள். பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் முருகேஷின் பேச்சை ரசிப்பார்களா?" என்றார் ஒரு மூத்த உறுப்பினர்.

"தொலைக்காட்சி பார்ப்பவர்களில் படித்தவர்கள் இல்லையா? அவர்களெல்லாம் அவர் பேச்சை ரசிக்கிறார்களே! முருகேஷ் பேசப் போவது ஒரு பொதுவான தலைப்பில்தான். அதை எல்லோரும் ரசிப்பார்கள்" என்றார் செயலாளர்.

முருகேஷுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு 'விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்.'

"நீங்க வழக்கமா பேசற மாதிரி இயல்பாப் பேசுங்க!" என்றார் செயலாளர்.

முருகேஷ் அறிமுகப்படுத்தப்பட்டதும், பார்வையாளர்கள் அவரை மெலிதான கைத்தட்டலுடன் வரவேற்றனர்.

"எனக்கு விஞ்ஞானமும் தெரியாது, மெய்ஞ்ஞானமும் தெரியாது. அப்படீன்னா, நான் எப்படி இந்தத் தலைப்பைப் பத்திப் பேசப் போறேன்னு பாக்கறீங்களா?" என்று துவங்கிய முருகேஷ் சில வினாடிகள் மௌனமாக இருந்தார்.

பார்வையாளர்கள் கிணற்றில் கல் போட்டதுபோல் அமைதியாக இருந்தனர். இதுவே தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்திருந்தால், பார்வையாளர்கள் பெரிதாகச் சிரித்துத் தங்கள் எதிர்பார்ப்பை வெளிக்காட்டி இருப்பார்கள்!

"ஆனால் எங்கிட்ட வேற ஒரு ஞானம் இருக்கு. அந்த ஞானத்தைப் பயன்படுத்தித்தான் நான் பேசப் போறேன். அது என்ன ஞானம் தெரியுமா?"

மீண்டும் ஒரு இடைவெளி விட்டார் முருகேஷ். பார்வையாளர்களிடம் எந்தச் சலனமும் இல்லை.

"அதுதான் அஞ்ஞானம்!" என்றார் முருகேஷ் அகலமாகப் புன்னகை செய்தபடி.

'வழக்கமாக இந்த இடத்தில் பலத்த சிரிப்பும், பெரிய கைதட்டலும் எழுந்திருக்க வேண்டும். இவர்கள் என்ன இப்படி இருக்கிறார்கள் கல்லுளி மங்கன்களாக!' என்று மனதுக்குள் நொந்து கொண்டார் முருகேஷ்.  .

தொடர்ந்து அவர் பேசிய அரை மணி நேரமும் இப்படித்தான் கழிந்தது. விஞ்ஞானம் பற்றியும் தெரியாமல்,மெய்ஞ்ஞானம் பற்றியும் அறியாமல், ஏதோ ஒரு வகையில் பேசிப் பார்வையாளர்களைக் கவர்ந்து விடலாம் என்று நினைத்த முருகேஷுக்குப் பெரும் ஏமாற்றம்தான் கிடைத்தது.

சில நிமிடங்களில் அவர் தன்னம்பிக்கை தேய்ந்து, பதற்றம் ஏற்படத் தொடங்கியது. தட்டுத் தடுமாறியபடி ஒரு வழியாகப் பேசி முடித்தார்.

ஒரு மணி நேரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தும், அரை மணி நேரம் பேசுவதே அவருக்குப் பெரும் பாடாக இருந்தது. ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு, அரை மணி நேரம் ஆனதும் பேச்சை முடித்துக் கொண்டார்.

அவர் பேச்சை முடித்ததும் மரியாதை நிமித்தமான கைதட்டல் மட்டும் ஒப்புக்கு எழுந்தது.

'இனிமே ஆடியன்ஸ் வகை தெரியாம இப்படி வந்து மாட்டிக்கக் கூடாது!" என்று மனதுக்குள் தீர்மானம் செய்து கொண்டார் முருகேஷ்.

'செயற்குழு உறுப்பினர்களின் காட்டமான விமர்சனத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?' என்று கவலைப்பட்டபடியே நன்றி சொல்ல எழுந்தார் கிளப்பின்  செயலாளர்.

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 402:
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

பொருள்:
கற்றவர் அரங்கில் கல்லாதவர் பேச விரும்புவது மார்பகங்கள் வளராத பெண் காதலில் ஈடுபட விரும்புவது போன்றது.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்









Sunday, March 22, 2020

401. நல்லமுத்துவின் சங்கடம்

பொது நிகழ்ச்சிக்காக அந்த ஊருக்கு வரும் எவருமே நல்லமுத்துவின் வீட்டில்தான் தங்க வேண்டும் என்பது அந்த ஊரில் பின்பற்றப்படும் எழுதப்படாத விதி.

நல்லமுத்து அதிகம் படிக்காதவர் என்றாலும், ஊரிலேயே பெரிய செல்வந்தர், அதிக செல்வாக்கு நிறைந்தவர் என்பதுடன், எல்லோரிடமும் நன்கு பேசி அவர்களின் நன்மதிப்பைப் பெறும் திறமை பெற்றவர் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்.

எனவே அந்த ஊர்க் கோவிலில் ஆன்மிகச் சொற்பொழிவாற்ற வந்த புலவர் அருள்நம்பியும் நல்லமுத்துவின் வீட்டில்தான் தங்கினார். 

பத்து நாள் சொற்பொழிவு. பத்து நாளும் நல்லமுத்துவின் வீட்டில்தான் தங்கினார் அருள்நம்பி. நல்லமுத்துவின் வீட்டில் வாயிலுக்கருகே இருந்த ஒரு தனி அறையில்தான் அருள்நம்பி தங்கி இருந்தார். அவர் வீட்டிலேயே சாப்பாடு.

பொதுவாக எந்த விருந்தினர் தன் வீட்டில் தங்கினாலும் அவர்கள் ஓய்வெடுக்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார் நல்லமுத்து. 

பல சமயம் தன் வீட்டு வாசலில் நாற்காலிகளைப் போட்டுக் கொண்டு நல்லமுத்துவும் அவர் வீட்டில் தங்கும் விருந்தினரும் பேசிக் கொண்டிருப்பார்கள். இருவரும் மகிழ்ச்சியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைத் தெருவில் செல்பவர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டு செல்வார்கள்.    

அருள்நம்பி வந்த முதல் நாள் நல்லமுத்து அடிக்கடி அவர் அறைக்குச் செல்வதும், மாலையில் வாசலில் அவருடன் அமர்ந்து பேசுவதுமாக இருந்தார்.

ஆனால் இரண்டாம் நாள் நல்லமுத்து அருள்நம்பியிடம் அதிகம் பேச முனையவில்லை. வாசலில் அமர்ந்து பேசவும் இல்லை. அத்துடன் அதிக நேரம் வீட்டில் தங்காமல் எங்காவது வெளியே போய் வந்தபடி இருந்தார்.

அதற்குப் பின் வந்த நாட்களிலும் அப்படித்தான்.

சில நாட்களுக்குப் பின் தன் நண்பர் கஜேந்திரன் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசிக் கொண்டிருந்தார் நல்லமுத்து.

"ஏம்ப்பா! உன் வீட்டில யாராவது தங்கினா நீ எப்பவும் அவங்களோடதான் பேசிக்கிட்டிருப்ப. இப்ப வந்திருக்கிற அருள்நம்பியோட அதிகம் பேசற மாதிரி தெரியலியே! வாசல்ல நீங்க உக்காந்து பேசறதைக் கூட நான் பாக்கல!" என்றார் கஜேந்திரன்.

நல்லமுத்து சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு அப்புறம் சொன்னார். 

"இத்தனை நாளா என் வீட்டில வந்து தங்கினவங்ககிட்ட எல்லாம் நிறையப் பேசி இருக்கேன். ஆனா இவர் கிட்ட என்னால எதுவுமே பேச முடியல!" 

"ஏன்? அவர் அதிகம் பேச மாட்டாரா?"

"அப்படி இல்ல. அவர் பேசற விஷயங்கள் எனக்குப் பிடிபடல. நான் பொதுவா கோவில், சாமி, பக்தின்னு பேசினாக் கூட அவர் எனக்குப் புரியாம ஏதாவது சொல்றாரு. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல. நிறையப் படிச்சிருக்காருல்ல? இத்தனை நாளா நடந்ததை வச்சு என்னால எல்லார்கிட்டயும் பேசிச் சமாளிக்க முடியும்னு நினைச்சேன். ஆனா இவர் கிட்ட என்னால பேச முடியல. இவரை மாதிரி படிச்ச ஆளுங்ககிட்டல்லாம் பேசணும்னா நான் இனிமே போய்ப் படிச்சுட்டுத்தான் வரணும் போலருக்கு!" என்றார் நல்லமுத்து. 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 401:
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

பொருள்:
நூல்களைப் படித்து நிறைவான அறிவைப் பெறாமல் ஒருவர் கற்றவரிடம் சென்று பேசுவது கட்டங்கள் இல்லாமல் தாயம் உருட்டி விளையாடுவது போல் ஆகும்.
              அறத்துப்பால்                                                                        காமத்துப்பால்

Sunday, March 15, 2020

400. சொந்தத் தொழில்

"25 வருஷம் வேலை செஞ்சாச்சு. சொந்தமா வீடு இருக்கு. ஓரளவுக்கு சேமிப்பு இருக்கு. வேலையை விட்டா, பி எஃப் பணம் கொஞ்சம் வரும். இப்ப ரிஸ்க் எடுக்காட்டா அப்புறம் எப்ப ரிஸ்க் எடுக்கறது?" என்றார் தனபால், மனைவியிடம். 

"ஏங்க, நல்லா படிச்சிருக்கீங்க. தொல்லை இல்லாத வேலை. கை நிறைய சம்பளம். வருஷா வருஷம் இன்க்ரிமென்ட். இன்னும் எட்டு வருஷம் சர்வீஸ் இருக்கு, அதுக்கப்பறம் கூட உங்களை உங்க கம்பெனியில வேலையில தொடரச் சொன்னாலும் தொடருவாங்க. இப்ப எதுக்கு வேலையை விட்டுட்டு சொந்தமாத் தொழில் ஆரம்பிக்கறேங்கறீங்க?" என்றாள் அவர் மனைவி அம்பிகா.

"சொந்தத் தொழில் செய்யணும்கறது என்னோட கனவு. நான் ஒண்ணும் சின்ன வயசிலேயே ரிஸ்க் எடுத்து சொந்தத் தொழில் ஆரம்பிக்கலையே! 25 வருஷம் வேலை  செஞ்சுட்டு, நம்ம பெண்ணைப்  படிக்க வச்சு, கல்யாணம் பண்ணிக் கொடுத்தப்புறம்தானே சொந்தத் தொழில் ஆரம்பிக்கறேன்? அதோட கொஞ்சம் பணமும் சேத்து வச்சிருக்கோம். என் கனவை நிறைவேத்த இதுதான் சரியான சமயம்."

"என்னவோ போங்க. நான் சொன்னா கேக்கவா போறீங்க?"

னபால் திட்டமிட்டபடியே வேலையை விட்டு விட்டு, கொஞ்சம் பணத்தை முதலீடு செய்து சிறிய அளவில் ஒரு சொந்தத் தொழிலை ஆரம்பித்தார். 

ஆறே மாதங்களில் தொழிலில் வளர்ச்சி ஏற்பட்டது. அதிக முதலீடு தேவைப்பட்டதால் வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தார். அவர் வீட்டை அடமானம் வைத்தால் கடன் கொடுப்பதாக வங்கி கூறியது.

மனைவியின் எதிர்ப்பை மீறி வீட்டை அடகு வைத்துக் கடன் வாங்கினார் தனபால். "தொழில்தான் நல்லாப் போய்க்கிட்டிருக்கே! அப்புறம் ஏன் பயப்படணும்? அஞ்சு வருஷத்திலே கடனையெல்லாம் அடைச்சு வீட்டை மீட்டுடறேன்!" என்றார் தனபால்.

ஆனால் அவர் எதிர்பாராத விதமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தொழிலில் நலிவு ஏற்படத் தொடங்கியது. சில மாதங்களில் பிரச்னை பெரிதாகித் தொழிலையே மூடும் அளவுக்கு வந்து விட்டது. வங்கிக்கடன், வெளிக்கடன் என்று கடன்கள் பெருகிப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தின.

வேறு வழியின்றி, தனபால் தன் வீட்டை விற்று எல்லாக் கடன்களையும் அடைத்தார். சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்பே கரைந்து விட்டன. கடன்களையெல்லாம் அடைத்த பிறகு, கையில் ஒரு சில லட்சங்கள் கூட மிஞ்சவில்லை.  

ஒரு லட்ச ரூபாய் முன் பணம் கொடுத்து ஒரு வாடகை வீட்டுக்குக் குடிபோனார் தனபால். 

"ராஜா மாதிரி இருந்தீங்க. இப்ப வாடகை வீட்டுக்குக் குடிபோக வேண்டிய  அளவுக்கு ஆயிடுச்சே நம்ப நிலைமை! கையில இருக்கற காசு எவ்வளவு நாளைக்கு வரும்? எப்படி வாடகை கொடுக்கப் போறோம்? சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போறோம்?" என்று புலம்பினாள் அம்பிகா.

தனபால் எதுவும் பேசவில்லை.

அடுத்த சில நாட்களில் தனபால் இரண்டு மூன்று முறை வெளியே சென்று வந்தார். அவர் எங்கே போகிறார் என்று அம்பிகாவும் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை.

ரு வாரம் கழித்து தனபால் அம்பிகாவிடம் சொன்னார். "அம்பிகா! திங்கட்கிழமையிலேந்து நான் வேலைக்குப் போறேன்."

"அப்படியா? எங்கே?" என்றாள் அம்பிகா சற்று வியப்புடன்.

நிறுவனத்தின் பெயரைச் சொன்னார் தனபால்.

"எவ்வளவு சம்பளம்?"

"ஒரு லட்சம் ரூபாய்."

"பரவாயில்லையே! நம்ப சேமிப்பு, வீடு எல்லாம் நம்ம கையை விட்டுப் போனதும், எல்லாமே போயிடுச்சுன்னு நினைச்சேன்!" என்றாள் அம்பிகா. 

"நம்ப சொத்தெல்லாம் போனாலும், நான் படிச்ச படிப்பு நம்மளைக் காப்பாத்திடுச்சு!" என்றார் தனபால். 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 40
கல்வி
குறள் 400:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

பொருள்:
ஒருவருக்கு அழிவு இல்லாத செல்வம் கல்வி மட்டுமே. மற்ற செல்வங்கள் ஒருவருக்கு உண்மையான செல்வம் அல்ல.
             அறத்துப்பால்                                                                           காமத்துப்பால் 










1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...