Saturday, February 29, 2020

399. ஆத்திச்சூடி

"தாத்தா! நீ சொல்லிக் கொடுத்த தமிழ் ரைம் சொல்லிக் காட்டட்டுமா?" என்றான் ரித்விக்.

"தமிழ் ரைமா? நான் எப்ப சொல்லிக் கொடுத்தேன்?" என்றார் பெரியசாமி.

"அதான் தாத்தா 'அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்.' "

"ஓ, அதுவா? அது பேரு ரைம் இல்ல, ஆத்திச்சூடி!"

"அதான்! சொல்றேன். சரியா இருக்கான்னு பாரு" என்ற ரித்விக் ஆத்திச்சூடியின் 13 வரிகளையும் சொல்லி முடித்தான். 

"சரியாச் சொல்லிட்டியே! அடிக்கடி சொல்லிப் பாத்துக்க. அப்பதான் மறந்து போகாம இருக்கும்" என்றார் பெரியசாமி. 

சில நாட்களுக்குப் பிறகு, ரித்விக் தன் வகுப்புத் தோழன் ஒருவனையும், அவன் அம்மாவையும் வீட்டுக்கு அழைத்து வந்தான். நேரே பெரியசாமியிடம் வந்து, "தாத்தா! இவனும் என் கிளாஸ்தான் பேரு. அஸ்வின்" என்றான். 

"வாப்பா!" என்ற பெரியசாமி அஸ்வினின் அம்மாவைப் பார்த்தார். 

அவருக்குக் கைகூப்பி வணக்கம் தெரிவித்த அந்தப் பெண்மணி, "வணக்கம் அங்க்கிள்! நான் அஸ்வினோட அம்மா. ரித்விக் அழகா ஆத்திச்சூடி சொல்றதைப் பாத்து, அஸ்வின் தானும் கத்துக்கணும்னு ஆசைப்படறான். உங்களுக்கு நேரம் இருந்தா அவனுக்கும் சொல்லித் தரீங்களா?" என்றாள் 

"தாராளமா! நான் சும்மாதானே இருக்கேன்! தினம் 10 நிமிஷம் கத்துக்கிட்டாப் போதும். அஞ்சாறு நாள்ள முழுசாக் கத்துக்கலாம்" என்றார் பெரியசாமி.

"தாங்க்ஸ் அங்க்கிள்!" என்றாள் அவள். 

ரண்டு மூன்று நாட்கள் கழித்து அஸ்வினின் அம்மா இன்னும் மூன்று பெண்களுடன் வந்தாள்.

"அங்க்கிள்! அஸ்வின் ஆத்திச்சூடி கத்துக்கறது தெரிஞ்சதும், இன்னும் சில பெற்றோர்களும் தங்களோட குழந்தைகளும் ஆத்திச்சூடி கத்துக்கணும்னு ஆசைப்படறாங்க. மொத்தம் 10 குழந்தைங்க இருப்பாங்க. நீங்க அவங்களுக்கு தினம் அரை மணி நேரம் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் மாதிரி விஷயங்கள்ளாம் சொல்லிக் கொடுத்தா நல்லா இருக்கும். தப்பா நினைச்சுக்காதீங்க. இதை ஒரு டியூஷன் மாதிரி வச்சுக்கங்க. எல்லாருமே ஏதாவது ஃபீஸ் கொடுக்க விரும்பறாங்க!" என்றாள் அஸ்வினின் தாய்.

"சாரிம்மா! நான் ஆசிரியர் இல்ல. நான் படிச்சதில எனக்கு ஞாபகம் இருக்கற விஷயங்களை என் பேரனுக்கு சொல்லிக் கொடுத்தேன். வேற யாருக்காவது ஆர்வம் இருந்தா சொல்லித் தரேன். இதுக்கு நான் ஃபீஸ் எதுவும் வாங்க மாட்டேன். எனக்குத் தெரிஞ்சதும் கொஞ்சம்தான்!" என்றார் பெரியசாமி.

'உங்களுக்குத் தெரிஞ்சதை சொல்லிக் கொடுங்க அங்க்கிள் அது போதும். ஏன்னா, இதெல்லாம் இவங்களுக்கு ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கறதில்ல. எங்களுக்கும் இதெல்லாம் ஞாபகம் இல்ல. முன்ன படிச்சதெல்லாம் மறந்து போச்சு. என் பையன் சொல்றதைக் கேட்டுட்டு, நானே இதையெல்லாம் மறுபடி கத்துக்கறேன். என் வீட்டுக்காரர் கூட, இதையெல்லாம் மறுபடி கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொல்றாரு!" என்றாள் அஸ்வினின் அம்மா.

"சரிம்மா! ஆர்வம் இருக்கற குழந்தைகளை வரச் சொல்லுங்க. எனக்குத் தெரிஞ்சதை சொல்லித் தரேன்!" என்றார் பெரியசாமி. 

"என்னப்பா, லைப்ரரியிலேந்து கம்பராமாயணம், சிலப்பதிகாரம் எல்லாம் எடுத்துப் படிக்க ஆரம்பிச்சுட்டீங்க?" என்றான் பெரியசாமியின் மகன் வியப்புடன்.

"இந்தப் பையன்களுக்கு ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நாலடியார், நன்னெறி எல்லாம் சொல்லிக் கொடுக்கறேன் இல்ல? இதையெல்லாம் கத்துக்கறதில பையங்க ரொம்ப சந்தோஷப்படறாங்க. அவங்க பெற்றோர்களும் இதையெல்லாம் மறுபடி கத்துக்கறோம்னு சொல்லி சந்தோஷப்படறாங்க. அதனால எனக்கும் இன்னும் பல விஷயங்களைப் படிச்சுத் தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் வந்திருக்கு!" என்றார் பெரியசாமி.   

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 40
கல்வி
குறள் 399:
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

பொருள்:
தமக்கு இன்பம் அளிக்கும் கல்வி உலகத்தாருக்கும் இன்பம் அளிப்பதைக் கண்டு கற்றவர்கள் கல்வியின் மீது மேலும் விருப்பம் கொள்வார்கள்.
      அறத்துப்பால்                                                                           காமத்துப்பால் 

Thursday, February 20, 2020

398. படிக்காதவன்!

தான் படிக்கவில்லையே என்ற குறை அருளுக்கு எப்போதுமே உண்டு.  

மூன்று தலைமுறைக்கு முன் அவன் பரம்பரையில் வந்தவர்கள் படித்தவர்களாக மட்டுமின்றி அறிஞர்களாகவும் மதிக்கப்பட்டனர்.

ஆனால் அவன் தாத்தா ஏதோ ஒரு காரணத்தால் படிக்காமல் இருந்து விட்டார். அவர் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவர் தந்தை இறந்ததும் அவர் தன் படிப்பை நிறுத்தி விட்டார்.

பிறகு, தன் பதினைந்தாம் வயதிலேயே அவர் விவசாயத்தையும், வியாபாரத்தையும் கவனித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார். 

வியாபாரம் பெருகிச் செல்வம் வளர்ந்ததால் தன் மகன்களையும் அவர் அதிகம் படிக்க வைக்காமல் சிறு வயதிலேயே அவர்களை வியாபாரத்தில் ஈடுபடுத்தி விட்டார். அதனால் அருளின் தந்தையும் ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை!

'எழுதப் படிக்கவும், கூட்டிக் கழிக்கவும் தெரிந்தால் போதாதா, அதற்கு மேல் படிப்பு எதற்கு?' என்பதுதான் அருளின் தந்தையின் மனப்பான்மையாக இருந்ததால் அருளையும் அவர் அதிகம் படிக்க வைக்கவில்லை.

னால் தன் தந்தை, பாட்டனைப் போல் இல்லாமல், சற்று வளர்ந்ததுமே அருளுக்குக் கல்வியின் அருமை புரிந்தது. தான் படிக்கவில்லையே என்று வருந்திய அருள், நன்கு படித்தவர்கள் குடும்பத்திலிருந்து ஜெயாவைத் திருமணம் செய்து கொண்டான்.

ஜெயா அதிகம் படிக்கவில்லை என்றாலும், அவளுடைய இரு அண்ணன்களும் நன்கு படித்தவர்கள்.

"நான் படிக்காம இருந்துட்டேன். உன் அண்ணன்கள் நிறையப் படிச்சிருக்காங்க. அவங்களோட யோசனை எனக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்!" என்று திருமணமான புதிதில் அருள் ஜெயாவிடம் கூறியபோது ஜெயாவுக்குப் பெருமையாக இருந்தது.

ஆயினும், அருள் தான் ஜெயாவிடம் சொன்னபடி செய்யவில்லை!

அவர்கள் பையனைப் பள்ளியில் சேர்க்கும் நேரம் வந்தபோது, அவனை ஜெயாவின் சகோதரர்கள் சிபாரிசு செய்த பள்ளியில் சேர்க்காமல் வேறொரு பள்ளியில் சேர்த்தான் அருள்

"என் அண்ணன்களோட பையங்க அந்த ஸ்கூல்லதான் படிக்கறாங்க. அது ரொம்ப நல்ல ஸ்கூல். அதிலேயே நம்ம பையனையும் சேத்துடுங்க!" என்றாள் ஜெயா.

"எனக்கென்னவோ அந்தப் பள்ளிக்கூடம் பிடிக்கல. அவங்க படிப்பு படிப்புன்னு பையன்களை ரொம்பக் கஷ்டப்படுத்துவங்களாமே!" என்றான் அருள்.

"அது நல்லதுதானே? அப்பதானே நம்ம பையன் நல்லாப் படிப்பான்?" என்றாள் ஜெயா.

"பையன்களை வாட்டி எடுக்கற பள்ளிக்கூடம் நம் பையனுக்கு வேண்டாம்! வேற ஒரு பள்ளிக்கூடம் இருக்கு. அதுவும் நல்ல பள்ளிக்கூடம்தான். ஆனா அவங்க பையங்களைப் போட்டுப் பிழிஞ்செடுக்க மாட்டாங்க!" என்று சொன்ன அருள் தன் பையனை வேறொரு பள்ளியில் சேர்த்தான். 

அதுபோல் தன் சேமிப்பை முதலீடு செய்யும் விஷயத்திலும் ஜெயாவின் சகோதரர்கள் பரிந்துரைத்த நிறுவனப் பங்குகளிலும், பத்திரங்களிலும் முதலீடு செய்யாமல் வங்கி வைப்புகளிலும், அரசாங்கப் பத்திரங்களிலும், வேறு சில நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்தான் அருள். 

"என்னவோ என் அண்ணங்க கிட்ட ஆலோசனை கேட்டு நடக்கப் போறதா முன்ன சொன்னீங்க! இப்ப எந்த விஷயத்திலேயுமே அவங்க சொல்றதைக் கேக்காம உங்க இஷ்டத்துக்குப் பண்றீங்க. என்னவோ போங்க!" என்று குறைப்பட்டுக் கொண்டாள் ஜெயா. 

ருபது வருடங்கள் கடந்து விட்டன. அவர்கள் பையன் பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல கல்லூரியில் அவன் விரும்பிய படிப்பில் சேர்ந்து விட்டான்.

"நம்ம பையன் நல்ல காலேஜில சேந்துட்டான். உனக்குத் திருப்திதானே?" என்றான் அருள்.

"என் அண்ணங்க சொன்ன பள்ளிக்கூடத்தில் சேக்காம வேற ஒரு பள்ளிக்கூடத்தில நீங்க நம்ம பையனைச் சேத்ததும் நான் கூடக் கவலைப்பட்டேன். ஆனா நீங்க செஞ்சது சரியாத்தான் இருந்திருக்கு!" என்றாள் ஜெயா.

"ஏன், உன் அண்ணங்களோட பையங்களும் நல்லாப் படிச்சு  நல்ல காலேஜிலதான சேந்திருக்காங்க?" என்றான் அருள்.  

"ஆமாம். ஆனா நீங்க சொன்ன மாதிரி அவங்க ஸ்கூல்ல அவங்களைக் கசக்கிப் பிழிஞ்சுட்டாங்க. ஆனா நம்ம பையன் அது மாதிரியெல்லாம் கஷ்டப்படாம, நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கிட்டானே!" என்ற ஜெயா, சற்றுத் தயங்கி விட்டு, "எங்க அண்ணங்க செஞ்ச முதலீடுகளை விட நீங்க செஞ்ச முதலீடுகள் அதிக லாபத்தைக் கொடுத்திருக்குன்னு எங்கிட்ட எங்க அண்ணங்க சொன்னாங்க!" என்றாள்.

"அப்படியா?" என்றான் அருள்.

"ஆமாம். அது எப்படிங்க? அதிகம் படிக்காதவரா இருந்தும் நீங்க எல்லாத்தையும் சரியா யோசிச்சு செஞ்சிருக்கீங்க?" 

"ஒரு வேளை போன ஜென்மத்தில் நான் நல்லாப் படிச்சிருக்கலாம். அதுதான் இந்த ஜென்மத்தில் எனக்கு உதவி இருக்கோ என்னவோ!" என்றான் அருள்.

ஜெயா மௌனமாக இருந்தாள்.

"சரி. உன்னால இதை ஒத்துக்க முடியலேன்னா இன்னொரு காரணம் சொல்றேன்!"

"என்ன அது?' 

"ஒத்தர் செய்யற நல்ல செயல் அவரோட ஏழு தலைமுறைக்குப் பயனுள்ளதா இருக்கும்னு சொல்லுவாங்க. மூணு தலைமுறைக்கு முன்னால என் தலைமுறையில எல்லாரும் படிச்சவங்களாத்தானே இருந்திருக்காங்க? அவங்களோட கல்வி அறிவுதான் எனக்கு உதவி செஞ்சிருக்கோ என்னவோ!" என்றான் அருள். 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 40
கல்வி
குறள் 398:
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

பொருள்:
ஒருவர் ஒரு பிறவியில் கற்ற கல்வி அவருக்கு ஏழு பிறவிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ('ஒருவர் கற்ற கல்வி அவருக்குப் பின் வரும் ஏழு தலைமுறைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்' என்பது இந்தக் குறளுக்கு திரு மு.கருணாநிதியின் உரை)
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்












Saturday, February 8, 2020

397. பாரிசுக்குப் போ!

"என்ன அழகேசா, பாரிஸ்லேந்து எப்ப வந்த?" என்றார் கனகசபை.

"ரெண்டு நாள் ஆச்சு. ரெண்டு நாளும் தூங்கியே கழிச்சுட்டேன். இன்னிக்குத்தான் வெளியே வந்திருக்கேன்" என்றார் அழகேசன்.

"ஆமாம். ஜெட்லாக்னு சொல்லுவாங்களே! நான் திருப்பதியைத் தாண்டி எங்கேயும் போனதில்லை. சொல்லக் கேட்டிருக்கேன்! ஆமாம், பையன் எப்படி இருக்கான் பாரிஸ்ல?"

"அவனுக்கென்ன ஓகோன்னு இருக்கான்!" என்றார் அழகேசன் பெருமிதத்துடன். 

"ஆமாம். அவனுக்கு ஃபிரெஞ்ச் தெரியுமா?"

"தெரியாது. இப்பதான் கொஞ்ச கொஞ்சம் கத்துக்கறான்."

"அப்ப எப்படி சமாளிக்கறான்? அங்கெல்லாம் இங்கிலீஷ் அதிகம் பேச மாட்டாங்களே!" என்றார் கனகசபை.. 

"நீ பெரிய ஆளுதான் கனகசபை! திருப்பதி தாண்டிப் போனதில்லன்னு சொல்லிக்கிட்டு உலகம் முழுக்க எப்படின்னு தெரிஞ்சு வச்சிருக்கியே!" என்ற அழகேசன், தொடர்ந்து, "அவன் போனது கம்ப்யூட்டர் படிச்சுட்டுத்தானே? அதனால பாஷை தெரியாதது பெரிய பிரச்னை இல்லை" என்றார்.

"உங்க குடும்பத்தில இது ரொம்ப இயல்பு போலருக்கு. அந்தக் காலத்திலேயே உன் தம்பி அமெரிக்கா போய் அங்க செட்டில் ஆயிட்டானே!"

"ஆமாம். அவன் ஏதோ மோட்டார் மெக்கானிசம் படிச்சான். இங்க ஒரு கார் கம்பெனியில வேலை செஞ்சான். அவன் திறமையைப் பாத்துட்டு அவங்களே அவனை அமெரிக்காவுக்கு அனுப்பிச்சாங்க. அதுக்கப்பறம் அவன் அங்கேயே செட்டில் ஆயிட்டான். அவனுக்கும் அமெரிக்கா போறப்ப இங்கிலீஷ் சுத்தமாத் தெரியாது. அவன் தொழில் அறிவுதான் அவனை அமெரிக்காவுக்கு அழைச்சுக்கிட்டுப் போச்சு" என்ற அழகேசன், "இப்பதான் ஞாபகம் வருது. என் பையன் தன் நண்பர்கள் சில பேருக்கு சில பொருட்கள் கொடுத்து அனுப்பி இருக்கான். பேர் வாரியா, யார் யாருக்கு என்னென்ன பொருள்னு ஒரு பேப்பர்ல குறிச்சுக் கொடுத்திருக்கான். இதோ வரேன்" என்று உள்ளே சென்றார்.

சற்று நேரத்தில் கையில் ஒரு காகிதத்துடன் வந்த அழகேசன், அதை கனகசபையிடம் கொடுத்து, "என் பையன் இதைப் படிச்சு சொன்னான். ஆனா நான் சரியா ஞாபகம் வச்சுக்கறதுக்காக நீ ஒரு தடவை படிச்சு சொல்லிடு. நாளைக்கு அவன் நண்பர்கள் வந்தா பொருட்களை மாத்திக் கொடுக்காம சரியாக் கொடுக்கணும் இல்ல?" என்றார் சிரித்தபடி.

"என்ன அழகேசா! பள்ளிக்கூடப் படிப்பு அதிகம் இல்லாட்டாலும் தொழில் படிப்பு படிச்சுட்டு உன் தம்பி அமெரிக்கா போயிட்டான். உன் பையன் கம்ப்யூட்டர் படிப்பு படிச்சுட்டு பாரிஸ்ல வேலை செய்யறான். நீ இன்னும் எழுதப் படிக்கக் கூடத் தெரிஞ்சுக்காம இருக்கியே!" என்றார் கனகசபை சிரித்தபடி. 
பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 40
கல்வி
குறள் 397:
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

பொருள்:
கற்றவனுக்கு எந்த நாடும் எந்த ஊரும் தன் சொந்த ஊர் போல்தான் என்று இருக்கும்போது, ஒருவன் இறக்கும்வரை கல்லாமல் இருப்பது ஏன்?

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
          அறத்துப்பால்                                                                      காமத்துப்பால்
















1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...