Saturday, August 22, 2020

421. நேரடி ஒளிபரப்பு

 ஐம்பது வருடம் முன்பு சிறிய அளவில் ஒரு தொழிலைத் துவக்கினார் ஞானசேகரன். தன் 75ஆவது வயதில் தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.

ஒரு முன்னணிப் பொருளாதாரச் செய்தித் தொலைக் காட்சி நிலையம் அவரைப் பேட்டி காண விரும்பியது. 

"என் பேட்டியை லைவ் ஆக ஒளி பரப்ப வேண்டும்" என்றார் ஞானசேகரன்.

"பேட்டிகளை நாங்கள் லைவ் ஆக ஒளிபரப்புவதில்லையே!" என்றார் அந்த நிலையத்தின் அதிகாரி.

"அப்படியானால் பேட்டி இல்லை!" என்றார் ஞானசேகரன்.

தன் மேலதிகாரிகளிடம் கலந்து பேசி விட்டுச் சொல்வதாகக் கூறினார் அவர். ஆனால் அந்த நிறுவனத்தின் தலைமை இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

லைவ் நியூஸ் என்ற தொலைக்காட்சி நிலையம் சமீபத்தில்தான் துவக்கப்பட்டு நடந்து கொண்டிருந்தது. ஞானசேகரன் ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனத்துக்கு லைவ் ஆகத்தான் பேட்டி கொடுப்பேன் என்று நிபந்தனை விதித்து அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்ற விஷயம் வெளியே கசிய ஆரம்பித்திருந்தது.

லைவ் நியூஸின் தலைமை அதிகாரி குமார் தன் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை அழைத்தார்.

"நாம் ஞானசேகரனைப் பேட்டி கண்டால் என்ன?" என்றார்.

"சார்! நம் பார்வையாளர்கள் அரசியல் செய்திகளை மட்டும்தான் பாப்பாங்க. இது மாதிரி பேட்டிகளை அவங்க பாக்க மாட்டாங்க" என்றார் ஒரு மூத்த அதிகாரி.

"அப்படின்னா நமக்கு புதுப் பார்வையாளர்கள் கிடைப்பாங்களே! அது நமக்கு நல்லதுதானே?" என்றார் இன்னொருவர். 

குமார் அவரை சுவாரசியத்துடன் பார்த்தார்.

"அவர் ஏன் லைவா ஒளிபரப்பணும்னு நிபந்தனை போடறாருன்னு தெரியல. யாரையாவது பத்தி அவதூறா ஏதாவது சொல்லிட்டா நமக்குப் பிரச்னை ஆயிடுமே!"

"அதுதான் எனக்குக் கவலையா இருக்கு!" என்றார் குமார்.

"சார். எனக்கு ஒரு யோசனை தோணுது!" என்றார் தலைமை ஆசிரியர் ரவி. 

ஞானசேகரனின் பேட்டி லைவ் நியூஸ் தொலைக்காட்சியில் லைவ் ஆக ஒளிபரப்பப்படும் என்ற செய்தி ஒரு நாள் முன்பு வெளியிடப்பட்டதும் பெரும் பரபரபரப்பு ஏற்பட்டது. பெரும்பாலும் அரசியல் செய்திகளையே வெளியிடும் லைவ் நியூஸில் ஒரு தொழில் அதிபரின் பேட்டி ஒளிபரப்பாகிறது, அதுவும் லைவ் ஆக என்ற விஷயம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி ஏராளமானோரை நிகழ்ச்சியைப் பார்க்க வைத்தது.

பேட்டி துவங்கி சிறிது நேரம் கழித்து ஞானசேகரன் ஓரு விஷயத்தைக் கூறினார்.

"நான் இந்த பேட்டி லைவ் ஆக ஒளி பரப்பப்பட வேண்டும் என்று விரும்பியதற்கு ஒரு காரணம் உண்டு. நான் தொழில் தொடங்கியதிலிருந்து இப்போது வரை நிறையப் போட்டிகளைச் சந்தித்திருக்கிறேன். நேர்மையான போட்டியாளர்கள் உண்டு, எல்லாவிதமான தந்திரங்களையும் கடைப்பிடிக்கும் போட்டியாளர்களும் உண்டு. 

"எத்தனையோ முறை என் நிறுவனம் போட்டியாளர்களால் அழியப் போவதாகப் பத்திரிகைகள் ஆரூடம் கூறி இருக்கின்றன. சில சமயம் அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டுப் பங்குச் சந்தையில் என் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் எதிர் கொண்டு என் நிறுவனம் மீண்டு வந்திருக்கிறதென்றால் அதற்குக் காரணம்..."

ஞானசேகரன் சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்த, பேட்டியை நடத்திக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் ரவி, பார்வையாளர்கள் அனைவரும் அவர் என்ன சொல்லப் போவதைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர்.

"என் அறிவுத் திறமைதான்..." என்றார் ஞானமூர்த்தி சிரித்தபடி.

"சார்!" என்றார் ரவி, சற்று அதிர்ச்சியுடன்.

"இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பேட்டி லைவ் ஆக இருக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போதுதானே இதை நிறைய பேர் பார்த்து இந்தச் செய்தி அனைவருக்கும் போகும்?"

பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த குமார் சட்டென்று ஏமாற்றம் அடைந்தார். 'மனுஷன் தன்னைப் பற்றிப் பெருமை அடித்துக் கொள்ளத்தான் நேரடி ஒளிபரப்பு வேண்டுமென்று கேட்டாரா? ஏதோ பெரிதாகச் சொல்லப் போகிறார் என்று நினைத்து ஏமாந்து விட்டேனே!'

"சார்! உங்கள் அறிவுத் திறமை என்று நீங்கள் குறிப்பிட்டதைக் கொஞ்சம் விளக்க முடியுமா?" என்றார் ரவி, வேறு என்ன சொல்வதென்று தெரியாமல்.

"நிச்சயமாக. அதற்குத்தானே வந்திருக்கிறேன்? என் நண்பர்கள் சிலர் ஸ்டூடியோவுக்கு வெளியே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் உள்ளே அனுமதிக்க முடியுமா?" என்றார் ஞானசேகரன்.

"எதற்கு?" என்றார் ரவி குழப்பத்துடன்.

"அவர்கள் என்னுடன் பணி புரிபவர்கள். ஒரு சிலர் ஓய்வு பெற்று விட்டார்கள், இன்னும் சிலர் இப்போது உயிருடன் இல்லை. நான் என் அறிவுத்திறமை என்று குறிப்பிட்டது அவர்களைத்தான்! நான் தொழில் துவங்கிய முதல் நாளிலிருந்தே அறிவாற்றல்தான் என் தொழிலுக்குச் சிறந்த பாதுகாப்பு என்பதை உணர்ந்து அறிவாற்றல் மிகுந்தவர்களை என்னுடன் வைத்துக் கொண்டேன். 

"என் தொழிலின் வளர்ச்சிக்கு உதவியதோடு மட்டுமின்றி, என் தொழிலை அழிக்க என் எதிரிகள் முயன்றபோது அவர்கள் முயற்சிகளை முறியடித்து ஒரு அரணாக நின்று என் தொழிலைக் காத்தவர்களும் அவர்கள்தான். நீங்கள் அனுமதித்தால் அவர்களை இந்த உலகுக்கு அறிமுகப் படுத்தி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்வேன். நான் இந்தப் பேட்டி லைவ் ஆக இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததற்குக் காரணம் என் அறிவாக இருந்து என் நிறுவனத்தைக் காத்த அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரத்தான்."

"வித் ப்ளெஷர்!" என்றார் ரவி உற்சாகம் திரும்பியவராக.

"சார் ஞானசேகரனோட பேட்டியை நாம லைவா ஒளிபரப்பினது நமக்குப் பெரிய பூஸ்ட்.  நம்ப சானல் வியூவர்ஷிப் ரெண்டு மடங்கு ஆகி இருக்கு. நீங்க எடுத்த துணிச்சலான முடிவுதான் காரணம்!" என்றார் ரவி.

"இல்லை மிஸ்டர் ரவி. ஞானசேகரனுக்கு இருந்த மாதிரி எனக்கும் நீங்கள்ளாம்  ஒரு அறிவா இருக்கறதுதான் காரணம். நான் ஒப்புக்காக இதைச் சொல்லல. லைவா ஒளிபரப்பினா அவரு யாரையாவது பத்தி அவதூறா ஏதாவது சொன்னா நமக்குப் பிரச்னை ஆயிடுமேன்னு நான் பயந்தப்ப, இப்ப இருக்கற தொழில் நுட்பத்தை வச்சு, பேட்டி ஒரு நிமிஷம் தாமதமா ஒளிபரப்பற மாதிரி செஞ்சுட்டா, அவர் ஏதாவது தப்பா சொன்னா உடனே பேட்டியை நிறுத்தி அது ஒளிபரப்பாகாம தடுத்துடலாம்னு நீங்க யோசனை சொன்னதாலதானே தைரியமா இதுக்கு சம்மதிச்சேன்?" என்றார் குமார்.  

பொருட்பால்
 அரசியல் இயல்
அதிகாரம் 43
அறிவுடைமை 
குறள் 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

பொருள்:
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். பகைவர்களால் உள்ளே புகுந்து அழிக்க முடியாத அரண் ஆகும்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

Wednesday, August 19, 2020

420. நினைவில்லை!

"நாளைக்கு ஜெயலக்ஷ்மி சபாவில ஒரு கச்சேரி இருக்கு. எனக்கு ரெண்டு டிக்கட் கிடைச்சது. நீயும் வரியா?" என்றான் சேதுபதி தொலைபேசியில்.

"சாரிடா! நாளைக்கு ஒரு ஆன்மீகச் சொற்பொழிவுக்குப் போகணும்" என்றான் பத்மநாபன்.

"பரவாயில்லையே! ஆன்மீகத்தில உனக்கு இவ்வளவு ஈடுபாடு இருக்குன்னு எனக்குத் தெரியாது."

"நல்ல விஷயங்கள் கொஞ்சமாவது காதில விழணும் இல்ல?".

"சரி. போயிட்டு வா. அப்புறம் பாக்கலாம்."

சில நாட்கள் கழித்து சேதுபதி பத்மநாபனின் வீட்டுக்கு வந்தான்.

சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த பிறகு, திடீரென்று நினைவு வந்தவனாக, "ஆமாம், போனவாரம் ஏதோ ஆன்மீகச் சொற்பொழிவுக்குப் போயிருந்தியே, எப்படி இருந்தது? என்றான் சேதுபதி

"நல்லா இருந்தது!" என்றான் பத்மநாபன்.

"யாரோட சொற்பொழிவு?"

"ஏதோ பேரு சொன்னங்க. ஞாபகம் இல்ல" என்றான் பத்மநாபன்.

"என்னடா, நான் கச்சேரிக்குக் கூப்பிட்டப்ப வர மாட்டேன்னுட்டு அந்த சொற்பொழிவுக்குப் போன! இப்ப அவர் பேர் கூட ஞாபகம் இல்லைங்கற?" என்றான் சேதுபதி

"சாந்தகுமார்" என்றாள் பத்மநாபனின் மனைவி, சமையற்கட்டில் இருந்தபடியே.

"அவர் ரொம்ப பிரபலமானவராச்சே! அவரு பேரு ஞாபகம் இல்லைங்கற!" என்றான் சேதுபதி வியப்புடன்.

'இதுக்கு முன்னால இது மாதிரி சொற்பொழிவுக்கெல்லாம் போனதில்லையே! அதனாலதான் பேரை மறந்துட்டேன்."

"எதைப் பத்திப் பேசினாரு?"

"ஏதோ ராமாயணக் கதைன்னு நினைக்கறேன்." 

"அவரு எப்பவுமே கீதையைப் பத்தித்தானே பேசுவாரு?"

"கீதையைப் பத்திப் பேசினா என்ன, சீதையைப் பத்திப் பேசினா என்ன, எல்லாமே ஆன்மீகம்தானே? அதை விடு!" என்று பேச்சை மாற்றினான் பத்மநாதன்.

பத்மநாபன் கிளம்பிச் சென்றதும், "ஏங்க ரெண்டு மணி நேரம் பேச்சைக் கேட்டிருக்கீங்க. பேசினவர் பேரு ஞாபகம் இல்லை, என்ன பேசினார்னும் ஞாபகம் இல்ல! ஏன் இப்படி?" என்றாள் அவர் மனைவி.

"அங்கே பேச்சு முடிஞ்சதும் அருமையான சக்கரைப் பொங்கல் கொடுக்கறாங்க, நிறையவே கொடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டுதான் நீ கூப்பிட்டதும் உன்னோட அங்கே வந்தேன். அவர் பேசினதை யார் கேட்டா? கொஞ்ச நேரம் மொபைல்ல மெஸ்ஸேஜ் எல்லாம் பாத்துக்கிட்டிருந்தேன். அப்புறம் தூக்கம் கண்ணைச் சுத்திச்சு. உக்காந்துகிட்டே நல்லா தூங்கினேன். பேச்சு முடியறப்பதான் தூக்கம் கலைஞ்சுது. ஃபிரஷ்ஷா இருந்தது. பிரசாதமும் அருமையா இருந்தது!" என்றான் பத்மநாபன்.

"நல்ல ஆளு நீங்க! அதுக்கு நீங்க உங்க நண்பரோட, கச்சேரிக்கே போயிருக்கலாமே! உங்களுக்குத்தான் சங்கீதம் கேக்கறது பிடிக்குமே! அங்கே கான்ட்டீன் கூட இருந்திருக்குமே!"

"போயிருக்கலாம்தான். ஆனா நான் மட்டும் போயிருந்தா முதல்ல கான்ட்டீன்ல போய் எனக்குப் பிடிச்ச அயிட்டங்களை  சூடா சாப்பிட்டுட்டு அப்புறம்தான் கச்சேரி கேட்டிருப்பேன்! ஆனா சேதுபதி கச்சேரி முடியறவரையில கான்ட்டீனுக்குப் போகவே விட மாட்டான். அதனாலதான் அவன் கூப்பிட்டப்ப போகல!" என்றான் பத்மநாபன்.

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 42
கேள்வி 
குறள் 420:
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

பொருள்:
செவியால் நல்ல விஷயங்களைக் கேட்கும் சுவையை உணராமல் உண்ணும் சுவையில் மட்டும் ஈடுபாடுள்ள மனிதர்கள்  உயிரோடு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன?
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

Monday, August 17, 2020

419. பேராசிரியரின் பேச்சு!

பேராசிரியர் குருமூர்த்தியின் வகுப்பு என்றால் மாணவர்களுக்கு உற்சாகம்தான். 

ஏனெனில் அவர் வகுப்பில் பாடம் நடத்துவதோடு வேறு சில விஷயங்களையும் பேசுவார். 

குறிப்பாகக் கல்லூரி நிர்வாகத்தைக் கிண்டல் செய்வார். கல்லூரி முதல்வரின் திறமையின்மை பற்றிப் பேசுவார். 

சில சமயம் அரசியல் தலைவர்கள் பற்றியும் பேசுவார். ஆனால் எல்லமே மறைமுகமாகப் பெயர் குறிப்பிடப்படாமல்தான் இருக்கும். 

பல மாணவர்களுக்கு இது சுவாரசியமாக இருந்தாலும் மகேஷுக்கு இது மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

"என்னடா இது காலேஜக்குப் படிக்க வரோமா, வம்புப் பேச்சு கேக்க வரோமா?" என்று தன் நண்பன் கேசவனிடம் அலுத்துக் கொண்டான்.

"போடா! வகுப்பு ஜாலியாப் போகுதுன்னு எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க! வகுப்புல லெக்சரர் சொல்லிக் கொடுத்தா நாம கத்துக்கப் போறோம்? இது பள்ளிக் கூடம் இல்லை, காலேஜ்!" என்றான் கேசவன்.

கல்லூரிக் கையேட்டை எடுத்து குருமூர்த்தியின் கல்வித் தகுதியைப் பார்த்தான் மகேஷ். அவர் முதுநிலைப் பட்டதாரி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முனைவர் பட்டம் பெற்றவர் இல்லை. அவரே ஒருமுறை இதைப்பற்றி வகுப்பில் குறிப்பிட்டார்.

"நான் பி எச் டி எல்லாம் பண்ணல. எதுக்கு? பி ஜி படிச்சவனை விட பி எச் டி படிச்சவனுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் அதிகமாக் கிடைக்கும். இதுக்காக கைடுன்னு ஒத்தனைப் புடிச்சு மூணு வருஷம் அவனுக்குக் கால் புடிச்சு விட்டு பி எச் டி வாங்கணுமா? மேல போக முடியாதேன்னு கேக்கலாம். நம்ம ஊர்ல பி எச் டி பண்ணாம வைஸ் சான்ஸ்லராவே ஆகி இருக்காங்க. அதனால மேல வரதுக்குத் தேவை மேல் படிப்பு இல்லை, கால் பிடிப்புதான்!" என்று சொல்லிச் சிரித்தார் அவர்.

ஒருமுறை வேறொரு செக்‌ஷனில் படித்த ஒரு மாணவனைச் சந்தித்தபோது அவர்களுக்கு வகுப்பு எடுக்கும் பேராசிரியரைப் பற்றிக் கேட்டான் மகேஷ்.

"எங்களுக்கு ப்ரொஃபசர் தனபால்தான் எடுக்கறார்" என்றான் அவன்

"அவர் கிளாஸ் எப்படி இருக்கும்?" என்றான் மகேஷ்

"ஓ! ரொம்ப நல்லா இருக்கும். வகுப்பில சப்ஜெக்டைத் தவிர வேற எதையும் பேச மாட்டாரு. ஆனாலும் அவர் கிளாஸ் ரொம்ப இன்ட்டரஸ்டிங்கா இருக்கும். ஏன்னா அவருக்கு ரொம்ப டீப் நாலட்ஜ் உண்டு. சிலபஸ்ல இருக்கறதுக்கு மேலயும் சில விஷயங்களைப் பத்திப் பேசுவாரு. அவர் கிளாஸை யாருமே மிஸ் பண்ண மாட்டாங்க. 

"சில சமயம் அவரைப் பாக்க ஸ்டாஃப் ரூமுக்குப் போயிருக்கேன். மத்தவங்கள்ளாம் அரட்டை அடிச்சுக்கிட்டிருப்பாங்க. இவர் மட்டும் ஏதாவது புத்தகத்தைப் படிச்சுக்கிட்டிருப்பாரு. 

"ஒரு தடவை அவர் ஏதோ பத்திரிகை படிச்சுக்கிட்டிருந்தார். அது என்ன பத்திரிகைன்னு கேட்டேன். 'நம்ப சப்ஜெக்ட்ல புதுசா என்னென்ன டெவலப்மென்ட் நடக்குதுன்னு தெரிஞ்சுக்க இது மாதிரி டெக்னிகல் ஜேர்னல்ஸைப் படிக்கறது என் வழக்கம்'னு சொன்னார். 

"இப்ப கூட மும்பையில ஒரு செமினார்னு போயிருக்காரு. காலேஜ்ல கூட அனுப்பல. காலேஜுக்கு லீவ் போட்டுட்டு அவர் சொந்த செலவில போயிருக்காரு!" என்றான் அவன்.

குருமூர்த்தி போன்றவர்கள் இருக்கும் இதே கல்லூரியில் தனபால் போன்றவர்களும் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டான் மகேஷ்.

அடுத்த நாள் வகுப்பில், "இந்த காலேஜ்லேருந்தே சில பேரு லீவ் போட்டுட்டு செமினார்ல கலந்துக்கறேன்னு சொந்தச் செலவில மும்பாய் கொல்கத்தான்னு போறாங்க. இதைத்தான் சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கறதுன்னு சொல்றது!" என்று சொல்லிச் சிரித்தார் குருமூர்த்தி.

வகுப்பில் சிரிப்பலை எழுந்தது. 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 42
கேள்வி 
குறள் 419:
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

பொருள்:
நுட்பமான கேள்வி அறிவு இல்லாதவர்கள் பணிவான சொற்களைப் பேசுபவர்களாக இருக்க மாட்டார்கள்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

Friday, August 14, 2020

418. வியக்க வைக்கும் திறமை!

"நம்ப கணபதி இருக்கானே அவனுக்குக் காது ரொம்ப கூர்மை. தூரத்திலேந்து யாராவது பேசினா கூட அதைத் துல்லியமாக் கேட்டுடுவான்!" என்றான் கிருஷ்ணன்

"அப்ப அவனுக்குப் பக்கத்து வீடுகள்ள இருக்கறவங்க ரொம்ப கவனமாத்தான் பேசணும்!" என்றான் சுரேஷ்.

"பக்கத்து வீட்டில இருக்கறவங்களை விடு, இவன் வீட்டில இருக்கறவங்களே அவன் இருக்கறப்ப கவனமாத்தான் பேசுவாங்களாம்! ஒரு நாளக்கு நான் அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். நானும் அவனும் ஹால்ல உக்காந்து பேசிக்கிட்டிருந்தோம். அப்ப உள்ள அறைக்குள்ள இருந்த அவன் தம்பிக்கு ஃபோன் வந்திருக்கும் போலருக்கு. ஃபோனை எடுத்துக்கிட்டு வெளியில போயிட்டான். அறைக்குள்ளேந்து பேசினா கூட கணபதிக்குக் காதில விழுந்துடும்னு பயம் போலருக்கு!"

"இது கொஞ்சம் ஓவரா இல்ல? சும்மா கதை விடாதே!"

"கதை இல்லடா, உண்மைதான். அது மட்டும் இல்ல. ஒரு விஷயத்தைக் கேட்டா அப்படியே அவன் மனசில பதிஞ்சுடுமாம்."

"அப்படி இருந்தா அது ஒரு பெரிய கிஃப்ட்தான்!" என்றான் சுரேஷ்

கிருஷ்ணன் கூறியது உண்மைதான் என்று சுரேஷ் உணர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

அவர்கள் கல்லூரி ஆண்டு விழாவில் ஒரு போட்டி நடந்தது. ஒரு திரைப்படப் பாடலின் துவக்க இசை ஒலிபரப்பப்படும். அது எந்தப் பாடல் என்று கண்டுபிடித்து அந்தப் பாடலின் முதல் வரியைக் கூற வேண்டும் என்பது போட்டி.

எல்லோரும் வியக்கும் வகையில் அநேகமாக எல்லாப் பாடல்களுக்குமே ஆரம்ப இசை ஒலிக்கத் துவங்கிய ஒரு சில விநாடிகளுக்குள்ளேயே பாடல் வரியைச் சொல்லி முதல் பரிசை வென்று விட்டான் கணபதி.

"எப்படிடா? இத்தனைக்கும் நீ சினிமாப் பாட்டெல்லாம் அதிகம் கேக்கறதில்லையே!" என்றான் சுரேஷ்.

"ஒண்ணு ரெண்டு தடவை கேட்டிருப்பேன்ல? அதை வச்சுதான் சொன்னேன்!" என்றான் கணபதி, அது ஏதோ எளிதான விஷயம் போல்.

கல்லூரியில் ஒரு சயன்ஸ் க்விஸ் வைத்திருந்தார்கள். அதில் சுரேஷ் கணபதியைத் தன் பார்ட்னராக வைத்துக் கொண்டான். ஆனால் அவர்கள் இருவரும் அடங்கிய குழுவால் பெரும்பாலான கேள்விகளுக்கு விடை சொல்ல முடியவில்லை. அவர்கள் குழுவுக்கு மிகக் குறைந்த மதிப்பெண்களே கிடைத்தன.

"கணபதிக்கு நிறைய கேள்விகளுக்கு விடை தெரிஞ்சிருக்கும்னு நினைச்சு அவனை என் பார்ட்னரா வச்சுக்கிட்டேன். ஆனா எனக்குத் தெரிஞ்சது கூட அவனுக்குத் தெரியல!" என்றான் சுரேஷ் கிருஷ்ணனிடம்.

"அவனை நீ பார்ட்னராத் தேர்ந்தெடுத்தது தப்பான சாய்ஸ்!" என்றான் கிருஷ்ணன்.

"நீதானே சொன்னே, அவன் எதையாவது கேட்டா அவன் மனசில ஆழமாப் பதிஞ்சுடும், மறக்காதுன்னு?"

"ஆமாம். ஆனா, கேட்டாதானே? அவன்தான் கிளாசுக்கே வரதில்லையே! அப்புறம் எங்கே லெக்சரைக் கேக்கறது, ஞாபகம் வச்சுக்கறது? பரீட்சைக்கு முன்னால புத்தகத்தைப் படிச்சுப் பரீட்சை எழுதி பாஸ் மார்க் வாங்கப் பாக்கற ஆளு அவன்!" என்றான் கிருஷ்ணன்.

"இப்படி ஒரு திறமை இருந்து என்ன பிரயோசனம்? அதைப் பயன்படுத்திக்காம இருக்கானே!" என்றான் சுரேஷ். 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 42
கேள்வி 
குறள் 418:
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

பொருள்:
கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள் கேட்கும் சக்தி கொண்டிருந்தாலும் அவை கேளாத செவிகள் என்றே கருதப்பட வேண்டும்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

Sunday, August 2, 2020

417. கருணாகரனின் தயக்கம்

கருணாகரன் சுவாமி தன்மயானந்தாவின் பேச்சினால் கவரப்பட்டு அவர் சொற்பொழிவுகளுக்கு அதிகம் செல்ல ஆரம்பித்தான். ஒரு கட்டத்தில் அவருடன் அவனுக்கு அறிமுகமும் ஏற்பட்டது.

அப்போதுதான் ஒருமுறை தன்மயானந்தா அவனிடம் சொன்னார்: 

"உனக்கு ஆன்மீக விஷயங்களில் நிறைய ஆர்வம் இருக்கிறது. ஓரளவுக்குத் தேர்ச்சியும் இருக்கிறது. நீ எங்கள் மிஷனில் சேர்ந்து பயிற்சி பெற்று எங்கள் ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்பும் சொற்பொழிவாளர் ஆகலாமே!"

"நான் திருமணம் ஆனவன். ஒரு தொழில் செய்து வருகிறேன். எனக்குத் துறவியாக விருப்பம் இல்லை சுவாமிஜி!" என்றான் கருணாகரன்.

"இவையெல்லாம் ஒரு தடை இல்லை. பயிற்சி வகுப்புகள் மாலையில் மட்டும்தான் நடக்கும். 6 மாதம் பயிற்சி பெற்ற பிறகு நீ சொற்பொழிவுகள் செய்ய ஆரம்பிக்கலாம். எங்கள் மிஷனில் எல்லா ஏற்பாடுகளும் செய்வார்கள். நீ தலைப்புக்கேற்றவாறு தயார் செய்து கொண்டு பேசினால் போதும். உன் தொழிலுக்கு எந்த பாதிப்பும் வராது" என்றார் தன்மயானந்தர். 

சிறிது யோசனைக்குப் பிறகு கருணாகரன் அவர் யோசனைக்கு ஒப்புக் கொண்டான்.

று மாதங்களுக்குப் பிறகு கருணாகரன் தன்மயானந்தரைத் தனியாகச் சந்தித்தான்.

"பயிற்சியைச் சிறப்பாக முடித்து விட்டாய். பாராட்டுக்கள்" என்றார் தன்மயானந்தர்.

"சுவாமிஜி! ஒரு சந்தேகம்."

"கேள்!"

"ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருப்பவர்கள் திருமண வாழ்க்கையில் ஈடுபடக் கூது என்று உங்கள் குரு கூறியிருப்பதாகப் பயிற்சியின்போது நீங்கள் கூறினீர்கள்."

"ஆமாம். அதற்கென்ன?"

"பிறகு, நான் எப்படி ஆன்மீக விஷயங்கள் பற்றிப் பேச முடியும்?"

"உனக்கு ஒருவர் வேலை கொடுப்பதாகச் சொல்கிறார். அப்போது அதற்கான தகுதி உனக்கு இல்லை என்று நீ சொல்வாயா?"

தன் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் அவர் தவிர்க்கிறார் என்பது கருணாகரனுக்குப் புரிந்தது.

"மன்னிக்க வேண்டும் சுவாமிஜி. உங்கள் குருவின் பேச்சுக்கள் சிலவற்றின் பதிவுகளைப் போட்டுக் காட்டினீர்கள். அவை எல்லாவற்றிலும் வாழ்க்கையை கடவுள் நமக்கு அளித்த ஒரு பரிசாக நினைத்து நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் அவர் சொல்கிறார். பிரம்மச்சரியம் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. இது முரண்பாடாக இருப்பதாகத் தோன்றுகிறதே!"

"நீ என்ன சொல்ல வருகிறாய்? என் குரு சொல்லாத விஷயத்தை நான் சொல்வதாகவா? அவருடைய இறுதிக் காலத்தில் அவரால் பேச முடியாதபோது அவர் சில கருத்துக்களை சுருக்கமாக எழுதி என்னிடம் கொடுத்தார். அவருடைய கருத்துக்களைப் பரப்ப வேண்டிய என் கடமையைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். அவர் கருத்துக்களில் முரண்பாடு இருக்கிறதா என்று ஆராய நான் எப்போதும் துணிந்ததில்லை."

தன்மயானந்தரின் பேச்சில் கோபம் இருப்பது தெரிந்தது.

"நான் அதிகப் பிரசிங்கித்தனமாகப் பேசி இருந்தால் என்னை மன்னிக்க வேண்டும் சுவாமிஜி. எனக்குச் சிறிது குழப்பமாக இருக்கிறது. எனவே தெளிவு பெற்ற பிறகு நீங்கள் குறிப்பிட்ட பணியில் ஈடுபடுவது பற்றி முடிவு செய்கிறேன். தவறாக நினைக்காதீர்கள்" என்று சொல்லி அவரிடமிருந்து விடை பெற்றான் கருணாகரன்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு தன்மயானந்தர் அவனைச் சந்திக்க விரும்புவதாக தன்மயானந்தரின் அலுவலகத்திலிருந்து அவனுக்குத் தொலைபேசியில் ஒரு செய்தி வந்தது.

சற்றுத் தக்கத்துடன் தன்மயானந்தரைச் சந்திக்கச் சென்றான் கருணாகரன்.

அவனை உற்சாகமாக வரவேற்ற தன்மயானந்தர், "வா கருணகரா! நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும்!" என்றார்.

"என்ன சொல்கிறீர்கள் சுவாமிஜி?"

."உனக்கு ஏற்பட்ட சந்தேகம் என் மனதிலும் நீண்ட நாட்களாக உறுத்திக் கொண்டிருந்த விஷயம்தான். ஆனால் அதைப் பற்றி நான் பெரிதாக ஆராயவில்லை. ஆனால் உன்னிடம் அன்று பேசிய பிறகு என் குரு எழுதிய குறிப்பை எடுத்துப் படித்தேன். அவர் ஆங்கிலத்தில் எழுதி இருந்தார். ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் celebate செய்ய வேண்டும் என்று அவர் எழுதி இருந்தார். celebate என்றால் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது என்றுதானே பொருள்? 

"ஆனால் உன்னிடம் பேசிய பிறகு என் குரு தன் கைப்பட எழுதிய குறிப்புத் தாளை எடுத்துப் பார்த்தேன். அப்போதுதான் ஒரு விஷயம் உறைத்தது. அவர் எழுதி இருந்தது celebrate என்று! அவர் கையெழுத்து தெளிவாக இல்லாததால், நான் ஒரு துறவியாக  இருந்ததால் அதை celebate  என்று படித்து விட்டேன். 

"வாழ்க்கையைக் கொண்டாடுவதுதான் ஆன்மீகம் என்றுதான் அவர் சொல்லி இருக்கிறார். எனவே அவர் கூறியதில் முரண்பாடு எதுவும் இல்லை. நீ தெளிவாகச் சிந்தித்ததால் எனக்கும் தெளிவைக் கொடுத்து விட்டாய். என் குருவின் கருத்துக்களைப் பரப்ப என்னை விடவும் அதிகத் தகுதி உனக்குத்தான் இருக்கிறது!" என்றார் தன்மயானந்தர். 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 42
கேள்வி 
குறள் 417:
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

பொருள்:
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவு உடையவர்கள் ஒருவேளை எதையாவது தவறாகப் புரிந்து கொண்டாலும், அறிவற்ற விதத்தில் பேச மாட்டார்கள்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...