Thursday, June 22, 2023

720. மனமகிழ் மன்றம்!

ஒரு பேச்சாளர் என்ற முறையில் சிற்றம்பலத்துக்குப் பல அமைப்புகளிலிருந்தும் அழைப்பு வரும். அதுபோல்தான் அந்த மனமகிழ் மன்றத்திலிருந்தும் வந்தது.

மனமகிழ் மன்றம்  என்ற பெயர் இருந்ததால் நகைச்சுவைத் தலைப்பில் பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து 'புகழ் என்னும் போதை' என்ற தலைப்பில் நகைச்சுவையுடன் கூறிய ஒரு உரையைத் தயார் செய்து கொண்டு போனார் சிற்றம்பலம்.

சொற்பொழிவு முடிந்து திருச்சிற்றம்பலம் வீட்டுக்குள் நுழைந்ததும், அவர் மனைவி வானதி, "ஏன் ரொம்ப சோர்வா இருக்கீங்க? உடம்பு சரியில்லையா?" என்றாள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை" என்று கூறிக் கொண்டே சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டார் திருச்சிற்றம்பலம். 

"ஜுரம் இருக்கா என்ன?" என்றபடியே அவர் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள் வானதி.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஏதோ பேசக் கூப்பிட்டாங்களேன்னு போனேன். இவ்வளவு மட்டமான ஒரு கூட்டத்தை நான் பாத்ததில்ல!" என்றார் திருச்சிற்றம்பலம்.

"ஏன்? என்ன ஆச்சு?"

"அது உறுப்பினர்கள் வந்து குடிச்சிட்டு, அரட்டை அடிச்சுட்டு, சீட்டாடிட்டுப் போற கிளப். அந்த செகரெட்டரி ஏதோ நல்ல எண்ணத்தில ஒரு சொற்பொழிவை ஏற்பாடு பண்ணிட்டாரு. கூட்டம் முடிஞ்சப்பறம்தான் மது சப்ளைன்னு சொல்லிட்டாரு போலருக்கு. கூட்டத்துக்கு வந்த அத்தனை பேரும் கூட்டம் ஆரம்பிச்ச உடனேயே கைக்கடிகாரத்தைப் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. 

"நான் பாட்டுக்கு மேடையில பேசிக்கிட்டிருக்கேன். அவங்க தங்களுக்குள்ள பேசிக்கறாங்க. செகரட்டரி எவ்வளவோ தடவை சொல்லியும் அவங்க கேக்கல. நான் நகைச்சுவையாப் பேசிக்கிட்டிருக்கேன். ஏதோ இங்கே ஒரு மூலையில, அங்கே ஒரு மூலையிலன்னு சில பேர்தான் என் பேச்சைக் கேட்டாங்க. 

"நான் வேற 'புகழ் என்னும் போதை'ன்னு தலைப்பு வச்சிட்டேனா, ஒத்தர் எழுந்து கேக்கறாரு, 'ஏன் சார், புகழ் போதையிலேயும் விஸ்கி போதை அளவுக்கு கிக் இருக்குமா?'ன்னு! ஒரு மணி நேரம் பேசத் தயார் பண்ணிக்கிட்டுப் போனவன் அரை மணி நேரத்தில முடிச்சுட்டேன். 

"நான் கிளம்பறப்ப செகரட்டரி எங்கிட்ட வருத்தப்பட்டாரு. முதல் தடவையா எங்க மன்றத்தில ஒரு பேச்சு ஏற்பாடு செஞ்சோம், அது இப்படி ஆயிடுச்சு'ன்னு. 'இதுவே முதலும், கடைசியுமா இருக்கட்டும். இனிமே யாரையும் கூப்பிட்டுப் பேசச் சொல்லாதீங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன். நல்ல விருந்து தயார் பண்ணிக்கிட்டுப் போய் அழுக்கான முற்றத்தில கொட்டிட்டு வந்த மாதிரி இருக்கு!'

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 72 
அவையறிதல்

குறள் 720:
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.

பொருள்:
தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தின் முன் ஒரு பொருளைப் பற்றிப் பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

குறள் 719
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...