Saturday, April 29, 2023

701. சுருக்கெழுத்தாளரின் குறிப்புகள்!

விஜய் எஞ்சினியரிங் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் பிரதீப் என்டர்பிரைசஸ் நிர்வாகிகளுடனான முக்கியமான சந்திப்புக்காக கான்ஃபரன்ஸ் அறையில் கூடி இருந்தனர்.  

நிர்வாக இயக்குனரின் சுருக்கெழுத்தாளனான கிருஷ்ஷும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதற்காகப் பின் வரிசை இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தான்

பிரதீப் என்டர்பிரைசஸைத் தங்கள் . நிறுவனத்தின் வாடிக்கையாளராக ஆக்குவதற்கான முயற்சிக்கான சந்திப்பு அது.

 கூட்டம் துவங்குமுன் விஜய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜயன்பிரதீப் என்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குனர் பிரதீப்பிடம், "சார்! உங்களுக்கு ஆட்சேபம் இல்லேன்னா நாம விவாதிக்கிற முக்கியமான பாயின்ட்களை எங்க ஸ்டெனோ கிருஷ் குறிப்பு எடுத்துப்பாரு" என்றார்.

பிரதீப் ஆமோதிப்பதுபோல் தலையசைத்தார்.

கூட்டம் முடிந்ததும் கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த மானேஜர்களைத் தன் அறைக்கு அழைத்தார் நிர்வாக இயக்குனர் விஜயன். கிருஷ்ஷும் அழைக்கப்பட்டு மானேஜர்களுக்குப் பின்னால் அமர வைக்கப்பட்டான்.

பிரதீப் என்டர்பிரைசஸ் அதிகாரிகளுடன் தாங்கள் பேசிய விவரங்கள் பற்றி அவர்கள் விவாதித்தனர்.

"சார்! நாம சொன்ன இந்த யோசனை அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்!" என்றார் மார்க்கெடிங் மானேஜர் தனபால் உற்சாகமாக.

விஜயன் பின்னால் உட்கார்ந்திருந்த கிருஷ்ஷைப் பார்க்க, கிருஷ் தலையைப் பக்கவாட்டில் ஆட்டினான்.

"தனபால்! ஐ திங்க் யூ ஆர் ராங். அவங்களுக்கு இந்த யோசனை பிடிக்கலேன்னு நினைக்கிறேன்!" என்றார் விஜயன்.

"எப்படி சார் சொல்றீங்க?" என்றார் தனபால்.

"கிருஷ்ஷோட நோட்ஸில அப்படித்தான் இருக்கு. இல்லை, கிருஷ்?" என்றார் விஜயன்.

அனைவரும் பின்னால் திரும்பி கிருஷ்ஷைப் பார்த்தனர். அவன் மௌனமாகத் தலையாட்டினான்.

"இல்லை சார்! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அவங்க இதை மறுத்து எதுவும் சொல்ல. கிருஷ் தப்பா நோட்ஸ் எழுதி இருக்காரு!" என்றார் தனபால் உறுதியாக.

"அவங்க எதுவும் சொல்லல தனபால். ஆனா அதனால அவங்க அதை ஏத்துக்கிட்டாங்கன்னு அவசியம் இல்லை. ஒரு மரியாதைக்காக அவங்க மறுப்பு சொல்லாம இருந்திருக்கலாம்!"

"அப்ப எப்படி சார் கிருஷ் எடுத்த நோட்ஸில அவங்க அதை ஏத்துக்கலேன்னு இருக்கும்?"

"தனபால்! கிருஷ் எடுத்தது ஷார்ட்ஹேண்ட் நோட்ஸ் இல்ல. அவங்களோட முகக் குறிப்பிலேந்து அவர் புரிஞ்சுக்கிட்டதைத்தான் அவர் குறிப்பு எடுத்திருக்கார்!" என்றார் விஜயன் சிரித்தபடி.

அனைவரும் குழப்பத்துடன் விஜயனைப் பார்த்தார்.

"நாம மத்தவங்களோடபேசறப்ப அவங்க பேச்சைக் கேட்கறதிலதான் கவனம் செலுத்தறோம். அவங்க முகக் குறிப்பை கவனிக்கறதில்ல. மனிதர்கள் மௌனமாக இருக்கறப்ப கூட பல செய்திகளை அவங்க முகக் குறிப்பிலேந்து நாம புரிஞ்சுக்க முடியும். கிருஷ் என்னோட சுருக்கெழுத்தாளரா இருக்கற இந்த ரெண்டு மாசத்தில அவர்கிட்ட இந்தத் திறமை இருக்குன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். என் அறைக்கு வந்து யாராவது எங்கிட்ட பேசிட்டுப் போனப்பறம், அவங்க முகக் குறிப்பிலேந்து தான் புரிஞ்சுக்கிட்டதை கிருஷ் எங்கிட்ட சொல்லுவாரு. அதெல்லாம் சரியா இருந்திருக்கு. என்னால உணர முடியாத விஷயங்களை அவரு எனக்கு உணர்த்தி இருக்காரு. அதனாலதான் இந்த முக்கியமான மீட்டிங்குக்கு அவரை வரச் சொன்னேன்!" என்றார் விஜயன். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்

குறள் 701:
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.

பொருள்:
ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

700. இது எப்படி நடந்தது?

நிறுவனத்தின் உரிமையாளர் வேதமுத்துவின் அழைப்பின் பேரில் அவர் அறைக்கு நிறுவன மேலாளர் சுந்தரம் சென்றபோது, வேதமுத்து மிகவும் கோபமாக இருந்தார்.

சுந்தரம் எப்போது தன் அறைக்கு வந்தாலும் முதலில் அவரை உட்காரச் சொல்லும் பழக்கம் உள்ள வேதமுத்து அன்று தான் இருந்த கோபமான மனநிலையில் சுந்தரத்தை உட்காரக் கூடச் சொல்லாமல் அவர் உள்ளே நுழைந்ததுமே கோபமாகப் பேச ஆரம்பித்தார்.

"என்ன சுந்தரம், உங்களை நம்பித்தானே நான் கம்பெனியை ஒப்படைச்சிருக்கேன்! நீங்களே இப்படிச் செய்யலாமா?"

"எதை சார் சொல்றீங்க?" என்றார் சுந்தரம் பதட்டத்துடன்.

"ராம் என்டர்ப்ரைசஸ் பணம் கொடுக்க ரொம்ப லேட் பண்றாங்க, அதோட நாம அனுப்பின பொருளோட தரம் சரியில்லேன்னு பில் தொகையிலேந்து அவங்க இஷ்டத்துக்குக் குறைச்சுக்கிறாங்க. அதனல அவங்களுக்கு இனிமே சப்ளை பண்ண வேண்டாம்னு சொன்னேன். ஆனா மறுபடி அவங்களுக்கு சப்ளை பண்ணி இருக்கீங்களே!"

"சார்! அவங்க கேட்டப்ப நான் சப்ளை பண்ண முடியாதுன்னு சொல்லிட்டேன். ஆனா, நேத்திக்கு நான் லீவ்ல இருந்தப்ப சப்ளை ஆகி இருக்கு. நீங்கதான் சப்ளை பண்ணச் சொல்லி இருப்பீங்கன்னு நினைச்சேன். நீங்க ஆஃபீசுக்கு வந்த்ததும் உங்ககிட்ட இது பத்திக் கேக்கணும்னு நினைச்சேன், அதுக்குள்ள நீங்களே என்னைக் கூப்பிட்டுட்டீங்க!" என்றார் சுந்தரம்.

ஒரு கணம் யோசித்த வேதமுத்து பியூனை அழைத்து, "குமாரை வரச் சொல்லு!" என்றார்.

உள்ளே வந்த குமார் வேதமுத்துவுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து, "என்ன பெரியப்பா, எதுக்குக் கூப்பிட்டீங்க?" என்றான்.

"முதல்ல எழுந்திரு. மானேஜர் நின்னுக்கிட்டிருக்காரு. நீ பாட்டுக்கு வந்து உக்காந்துட்ட?" என்று குமாரைக் கடிந்து கொண்ட வேதமுத்து, சுந்தரத்தைப் பார்த்து, "சுந்தரம், நீங்க உக்காருங்க. எனக்கு இருந்த பதட்டத்தில உங்களை உக்காரச் சொல்லவே மறந்துட்டேன். ஐ ஆம் சாரி!" என்றார்.

"பரவாயில்லை சார்!" என்றபடியே சுந்தரம் அமர்ந்து கொள்ள, குமார் அதிர்ச்சியுடன் எழுந்து நின்று, "என்ன பெரியப்பா இது?" என்றான்.

"முதல்ல, என்னைப் பெரியப்பான்னு கூப்பிடறதை நிறுத்து. இது ஆஃபீஸ். நீ இங்கே வேலை செய்யற. சுந்தரம் உனக்கு மேலதிகாரி. மற்ற ஊழியர்கள் உன்னோட சக ஊழியர்கள். ஆனா நீ என்னோட சொந்தக்காரன்கற உரிமையில இங்கே எல்லாரையும் அதிகாரம் பண்றேன்னு கேள்விப்பட்டேன். உங்கிட்ட சொல்லி உன்னைக் கண்டிக்கணும்னு நினைச்சேன். அதுக்குள்ள நீ இன்னொரு பெரிய தப்பு பண்ணி இருக்க!" என்றார் வேதமுத்து கோபம் குறையாமல்.

"இல்லை பெரியப்பா..இல்லை, சார்..நான்.."

"ராம் என்டர்பிரைசஸுக்கு சப்ளை பண்ணக் கூடாதுன்னு மானேஜர் சொல்லி இருக்காரு. அவர் அப்படிச் சொன்னதே என்னோட முடிவுப்படிதான். நேத்திக்கு அவர் லீவ்ல இருந்தப்ப அவங்களுக்கு டெலிவரி போயிருக்கு. டெலிவரி கொடுக்கச் சொன்னது நீதானே?"

"அவங்க ஃபோன்ல கெஞ்சிக் கேட்டாங்க. அதான் சரின்னு சொன்னேன்!"

"அப்படிச் சொல்ல உனக்கு யாருக்கு அதிகாரம் கொடுத்தது? சரி, அவங்களுக்கு சப்ளை பண்ண வேண்டாம்னு மானேஜர் சொல்லி இருக்கார்னு மற்ற ஊழியர்கள் உங்கிட்ட சொல்லி இருப்பாங்களே!"

குமார் மௌனமாகத் தலையாட்டினான்.

"மானேஜர் சப்ளை பண்ணக் கூடாதுன்னு தெரிஞ்சும், நீ அவர் சொன்னதுக்கு எதிரா முடிவு எடுத்திருக்க. நீ என் சொந்தக்காரன்னு தெரிஞ்சதால மற்ற ஊழியர்கள் நீ சொன்னதை மறுக்க முடியாம சப்ளை பண்ணி இருக்காங்க!... நீ இங்கே தொடர்ந்து வேலை செய்யணும்னா மற்ற ஊழியர்கள் மாதிரி உன்னோட பொறுப்பு, லிமிட் எல்லாத்தையும் தெரிஞ்சு நடந்துக்க. இல்லேன்னா நீ வேற வேலை பாத்துக்கலாம்!" என்றார் வேதமுத்து.

"என்னை மன்னிச்சுடுங்க சார்! இனிமே நான் இப்படி நடந்துக்க மாட்டேன்!" என்றான் குமார், தாழ்ந்த குரலில். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 70
மன்னரைச் சார்ந்தொழுதல்

குறள் 700:
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.

பொருள்:

ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மன உரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, April 23, 2023

699. நம் ஊர்ப் பையன்!

"அப்ரூவல் விஷயமா அமைச்சரைப் பாக்கப் போனேனா, பாத்தா அங்கே நம்ம மாணிக்கம்தான் அமைச்சரோட தனிச் செயலரா இருக்கான்!" என்றார் முருகப்பன்.

"எந்த மாணிக்கம்?" என்றார் அவர் அண்ணன் கணேசன்.

"நம்ம ஊர்ப் பையன்தான். கதிரேசனோட பையன்!"

"ஓ, அவனா? ஐ ஏ எஸ் படிச்சுட்டு அரசு அதிகாரியா இருக்கான்னு சொன்னாங்களே, அவனா? என்ன சொன்னான்?"

"ஃபைலைப் பாத்துட்டு அமைச்சர்கிட்ட பேசறேன்னு சொல்லி இருக்கான். நான் விசாரிச்சதில அவன் அமைச்சருக்கு ரொம்ப நெருக்கமானவனாம். அமைச்சரே முதல்வர்கிட்ட கேட்டு அவனைத் தன்னோட தனிச் செயலரா நியமிக்க வச்சிருக்காராம்!" என்றார் முருகப்பன் உற்சாகத்துடன்.

"அவ்வளவு நெருக்கமான்றவனா? அப்ப நம்ம வேலை சுலபமா முடிஞ்சுடும்னு சொல்லு!" என்று தம்பியின் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார் கணேசன்

"என்னப்பா இப்படிச் சொல்ற?" என்றார் முருகப்பன் அதிர்ச்சியுடன்.

"ஆமாங்க. உங்க அப்ளிகேஷனைப் பார்த்தேன். விதிமுறைப்படி அதுக்கு நாங்க அங்கீகாரம் கொடுக்க முடியாதே!" என்றார் அமைச்சரின் தனிச் செயலர் மாணிக்கம்.

"அதான் கீழேந்து எல்லா நிலைகளிலேயும் ரெகமெண்ட் பண்ணி இருக்காங்களே!" என்ற முருகப்பன், "இதுக்கெல்லாம் நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்னு உன்னால புரிஞ்சுக்க முடியுமே!" என்றார் சற்றுத் தாழ்ந்த குரலில், கண்ணைச் சிமிட்டியபடி.

"விதிமுறைகளுக்கு உட்படாத எதையும் அமைச்சர் அங்கீகரிஃக மாட்டார்!" என்றார் மாணிக்கம் சுருக்கமாக.

"என்னப்பா இது? நீ அமைச்சருக்கு நெருக்கமானவன், நீ சொன்னா அமைச்சர் மறுக்க மாட்டார்னு கேள்விப்பட்டிருக்கேன். நீ நம்ம ஊர்க்காரன். எங்களுக்கு உதவி செய்யக் கூடாதா?"

"ஐயா! அமைச்சர் என் மேல நம்பிக்கை வச்சுத்தான் என்னைத் தனிச் செயலரா வச்சுக்கிட்டிருக்காரு. அவர் எல்லாம் விதிமுறைகள்படி நடக்கணும்னு நினைக்கிறவரு. அவரோட விருப்பத்துக்கு மாறான எதையும் நான் செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்க!" என்றார் மாணிக்கம்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 70
மன்னரைச் சார்ந்தொழுதல்

குறள் 699:
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

பொருள்:
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் நெருக்கமானவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்ய மாட்டார்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Saturday, April 22, 2023

760. பார்த்திபனுக்குப் புரிந்தது!

பல தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வந்த தனசேகர் அனைத்திலிருந்தும் ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.

"ஏன் திடீர்னு இந்த முடிவு?" என்றாள் அவர் மனைவி கோகிலா.

":திடீர்னு எனக்கு 65 வயசு ஆயிடுச்சு இல்ல! அதனாலதான்!" என்றார் தனசேகர் சிரித்துக் கொண்டே.

"நீங்க நிர்வாகத்தில ஈடுபடாம இருந்தாலும், நிறுவனங்கள்ள ஒரு டைரக்டரா இருந்தா எனக்கு வழிகாட்டியா இருக்க முடியும், இல்ல?" என்றான் அவர் மகன் பார்த்திபன்.

"பார்த்திபா! நீ அஞ்சாறு வருஷமா நம்ம நிறுவனங்களைப் பாத்துக்கற. இதுக்கு மேல உனக்கு நீயேதான் வழிகாட்டியா இருக்கணும். நீ சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டது நினைவிருக்கா? உனக்கு கத்துக் கொடுக்கறவரு நீ ஓட்டறப்ப பின் னால பிடிச்சுக்கிட்டே வருவாரு. கொஞ்ச நேரம் கழிச்சு கையை விட்டுடுவாரு. அவரு சைக்கிளைப் பிடிச்சுக்கிட்டிருக்காருன்னு நினைச்சுக்கிட்டு நீ ஓட்டிக்கிட்டிருப்ப! அப்புறம் திரும்பிப் பாத்தாத்தான் தெரியும், அவரு எப்பவோ கையை விட்டுட்டு ஒதுங்கி நின்னுட்டாருன்னு. அது மாதிரி நான் உனக்கு வழிகாட்டறதா நீ நினைச்சுக்கிட்டிருக்கே! ஆனா ரெண்டு மூணு வருஷமா நீயேதான் நம் நிறுவனங்களை நடத்திக்கிட்டிருக்கே. நான் சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்!"

பார்த்திபன் மௌனமாக இருந்தான்.

"ஆனா நீ என் வாழ்க்கையை ஆரம்பத்திலேந்துபாத்ததில்ல. அது முழுமையா இருக்கறப்பதான் பாத்திருக்க!" என்றார் தனசேகர் தொடர்ந்து.

"முழுமையான்னா?"

"நீ என்னைப் பார்த்தப்ப என் தொழில் சிறப்பா நடந்துக்கிட்டிருந்தது. எனக்கு வாழ்க்கையில எல்லா வசதிகளும் இருந்தது. எல்லாமே மகிழ்ச்சியா இருந்தது. அதைத் தவிர என் வருமானத்தில ஒரு பகுதியை கஷ்டப்படறவங்களுக்கு உதவறதுக்காக நன்கொடைகள் மூலமும், அறக்கட்டளைகள் மூலமும் பயன்படுத்திக்கிட்டிருந்தேன். அதில கிடைச்ச திருப்தியும், மனநிறைவும் என் வாழ்க்கையை இன்னும் வளமா ஆக்கின."

"ஆமாம்ப்பா. 'தொழில்ல வெற்றிகரமா இருக்கறவங்கள்ள பல பேருக்கு வாழ்க்கையில பல பிரச்னைகள் இருக்கும், நிறையப் பணம் இருந்தும் மகிழ்ச்சி இருக்காது, நிம்மதி இருக்காது, அல்லது திருப்தி இருக்காது. ஆனா உங்க அப்பா ஒரு நிறைவான வாழ்க்கை வாழறார்'னு எங்கிட்ட சில பேர் சொல்லி இருக்காங்க. நீங்க முழுமையான வாழ்க்கைன்னு சொன்னீங்களே, அதைத்தான் அவங்க குறிப்பிட்டாங்கன்னு நினைக்கிறேன்!" என்றான் பார்த்திபன்.

கரெக்ட்! இதுக்கு என்ன காரணம்னு நினைக்கற?"

"உங்களோட கடின உழைப்புதான் நினைக்கிறேன்!"

"கடின உழைப்பு மட்டும் இல்ல. எந்த சந்தர்ப்பத்திலேயும் முறையில்லாத வழியில பணம் சம்பாதிக்கக் கூடாதுன்னு நான் உறுதியா இருந்ததுதான் எனக்கு வாழ்க்கையில வளத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்ததோட, என்னை அறவழியிலேயும் நடக்க வச்சுதுன்னு நினைக்கறேன்!"

தனசேகர் பார்த்திபனை உற்றுப் பார்த்தார். பார்த்திபன் சங்கடத்துடன் நெளிந்தான்.

"ஒரு உதராணம் சொல்றேன். தொழில் ஆரம்பிச்ச புதுசில எனக்கு ரொம்பப் பண நெருக்கடி. ஆர்டர்கள் கிடைக்கல. தொழிற்சாலையை நடத்த முடியாத நிலைமை. உன் அம்மாவோட நகையை நிறைய தடவை அடகு வச்சுத்தான் தொழிலை நடத்தி இருக்கேன்!" என்றுபடியே மனைவியைப் பார்த்தார் தனசேகர்.

"அதுதான் ஒவ்வொரு தடவையும் மீட்டுக் கொடுத்துடுவீங்களே!" என்றாள் கோகிலா.

"மீட்டாத்தானே மறுபடி நெருக்கடி வரும்போது அடகு வைக்க முடியும்! அப்ப சில பேர் எனக்கு ஒரு யோசனை சொன்னாங்க. என்னோட மூலப்பொருளா இருந்த ஒரு ரசாயனப் பொருளுக்கு அப்ப தட்டுப்பாடு இருந்தது. அதை அரசாங்கத்தில கோட்டா முறையில கொடுப்பாங்க. எனக்கு கோட்டாவில கிடைச்சதை சில பெரிய நிறுவனங்கள் மூணு நாலு பங்கு விலை கொடுத்து பிளாக்கில வாங்கிக்கத் தயாரா இருந்தாங்க. அப்படி நான் வித்திருந்தா என் பண நெருக்கடி பெருமளவு குறைஞ்சிருக்கும். ஆனா நான் அப்படி செய்யக் கூடாதுன்னு பிடிவாதமா இருந்தேன். எனக்குத் தேவைப்படாதபோது என்னோட கோட்டாவை வாங்கவே மாட்டேன். எல்லாரும் என்னைப் பைத்தியக்காரன்னு கூட சொன்னாங்க. அறவழியிலதான் பணம் சம்பாதிக்கணும்னு அப்படியெல்லாம் உறுதியா இருந்ததுதான் எனக்கு வாழ்க்கையில நிறைவைக் கொடுத்திருக்கு."

"இதையெல்லாம் எதுக்கு இப்ப அவங்கிட்ட சொல்றீங்க?" என்றாள் கோகிலா.

"எதுக்கு சொல்றேன்னு அவனுக்குப் புரியும்!" என்றார் தனசேகர் பார்த்திபனைப் பார்த்தபடி.

சில முறையற்ற செயல்கள் மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று தன்னிடம் சில நண்பர்கள் யோசனை கூறியதைப் பற்றித் தெரிந்து கொண்டுதான் தந்தை இதைத் தன்னிடம் கூறுகிறார் என்பது பார்த்திபனுக்குப் புரிந்தது.

பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை

குறள் 760:
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.

பொருள்: 
நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற இரு விழுப் பொருட்களான அறமும் இன்பமும் எளிதாகக் கிடைக்கும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Friday, April 21, 2023

759. முத்துக்குமரனின் பண ஆசை!

"இந்த கம்பெனியில யாருமே ஓவர்டைம் செய்ய விரும்ப மாட்டாங்க. ஏன்னா, இங்கே வேலை ரொம்ப கஷ்டம். நீ ஒத்தன்தான் விருப்பப்பட்டு ஓவர்டைம் செய்யற!" என்றான் முத்துக்குமரனின் சகதொழிலாளி கந்தன்.

முத்துக்குமரன் பதில் சொல்லாமல் சிரித்தான்.

"ரொம்ப கஷ்டப்படாதேடா! நாம குடும்பம் நடத்த உன் சம்பளம் போதும். எதுக்கு ஓவர்டைம் எல்லாம் பார்த்து உடம்பைக் கெடுத்துக்கற?" என்றாள் முத்துக்குமரனின் அம்மா சியாமளா. ஆனால் முத்துக்குமரன் ஓவர்டைம் செய்து பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்தான்.

முத்துக்குமரன் வேறு நல்ல வேலைக்குப் போன பிறகும், பிறகு சொந்தத் தொழிலைத் துவங்கிய பிறகும் கூட, மேலும் எப்படிப் பொருள் ஈட்டலாம் என்பதிலேயே கவனம் செலுத்தி வந்தான்.

"ஏண்டா, இப்படிப் பணம், பணம்னு அலையற?" என்றாள் சியாமளா.

திருமணத்துக்குப் பிறகு அவன் மனைவி ரம்யாவும் இதைத்தான் கேட்டாள். ஆனால் முத்துக்குமரன் பணம் சம்பாதிப்பதுதான் தன் வாழ்க்கையின் ஒரே நோக்கம் என்பது போல் செயல்பட்டான்.

குடும்பத்துடன் தங்கள் குல தெய்வம் கோவிலுக்குப் போனார்கள். வழிபாடு முடிந்ததும், முத்துக்குமரன் தன் தாயிடம், "அம்மா! நம்ம ஊருக்குப் போயிட்டு வரலாமா?" என்றான்.

சியாமளாவின் முகம் மாறியது. 

"அங்கே எதுக்குடா போகணும்?" என்றாள் அவள்.

"கந்தப்பனைப் பார்க்கத்தான்!" என்றான் முத்துக்குமரன் சிரித்தபடி.

"உன் அப்பா வாங்கின கொஞ்சம் கடனுக்காக அவரை ஏமாத்தி ஏதோ பத்திரத்தில எல்லாம் கையெழுத்து வாங்கிக்கிட்டு, அவர் போனப்பறம் நம்ம சொத்தையெல்லாம் பிடுங்கிக்கிட்டு நம்மை நடுத்தெருவில நிக்க வச்சு நம்மை ஊரை விட்டே விரட்டிட்டானே அந்தக் கந்தப்பன், அவனைப் பார்க்கவா?" என்றாள் சியாமளா கோபத்துடனும், ஆற்றாமையுடனும்.

"ஆமாம்மா!" என்றான் முத்துக்குமரன் சிரித்தபடி.

ந்தப்பன் விட்டு வாசலில் காரை நிறுத்திய முத்துக்குமன், "கந்தப்பன் இருக்காரா?" என்று காரிலிருந்தபடியே உரக்கக் கூவினான்.

வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த கந்தப்பன், "யாரு?" என்றான்.

"என்ன கந்தப்பன் மாமா, என்னைத் தெரியலியா? இதோ பின்னால உக்காந்திருக்காங்களே என் அம்மா, அவங்களைக் கூடவா தெரியல?" என்றான் முத்துக்குமரன் சிரித்தபடி.

கந்தப்பனின் முகம் வெளிறியது.

"இப்ப எதுக்கு இங்க வந்திருக்க?" என்றான் அவன்.

"இதென்ன கேள்வி? எனக்கு இந்த ஊர்ல நாலு வீடு இருக்கு. நான் இங்கே வரக் கூடாதா?"

"என்ன சொல்ற?" என்று கந்தப்பன் கேட்டபோதே அவனுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது. 

சென்னையிலிருந்து ஒருவர் அந்த ஊரில் நான்கு வீடுகளை வாங்கி இருப்பதாகவும், சில நாட்களில் ரிஜிஸ்திரேஷன் நடக்கப் போவதாகவும், வீட்டை வாங்கியவர் யார் என்பது அப்போதுதான் தெரிய வருமென்றும் இண்டு நாட்களுக்கு முன் அந்த ஊரில் ஒரு செய்தி பரவி அவன் காதுக்கும் எட்டி இருந்தது.

'அப்ப அந்த நாலு வீட்டையும் வாங்கினது இவன்தானா?'

"எங்க சொத்தையெல்லாம் பறிச்சுக்கிட்டு எங்களை இந்த ஊரை விட்டே போக வச்சீங்க. இப்ப இந்த ஊர்ல எங்களுக்கு நாலு வீடு இருக்கு. இந்த ஊர்ல நாங்க வந்து இருக்கப் போறதில்ல. ஆனா நீங்க எங்ககிட்டேந்து பிடுங்கின ஒரு வீட்டுக்கு பதிலா இப்ப எங்ககிட்ட நாலு வீடு இருக்கு. இதை உங்ககிட்ட சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்!"

கந்தப்பனின் பதிலை எதிர்பார்க்காமல் காரைக் கிளப்பினான் முத்துக்குமரன்.

"என்னடா இதெல்லாம்?" என்றாள் சியாமளா.

"நம்ம சொத்தையெல்லாம் பிடுங்கிக்கிட்டு நம்மை நடுத்தெருவில நிறுத்தன எதிரியைப் பழி வாங்க நல்ல வழி நாம நிறையப் பணம் சம்பாதிச்சு அதை அவன் கண்ணுக்கு நேரா காட்டி அவனை வயிறெறிய வைக்கறதுதான். அதனாலதான் நான் ஆரம்பத்திலேந்தே பணம் சம்பாதிக்கறதிலே குறியா இருந்தேன்!" என்றான் முத்துக்குமரன் தன் தாயிடம்.

பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை

குறள் 759:
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.

பொருள்: 
ஒருவர் பொருள் ஈட்ட வேண்டும்; பகைவரின் செருக்கை அறுக்கும் வாள் அதை விடக் கூரியது இல்லை.
குறள் 760 (விரைவில்)
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

698. கதிரவனுக்குப் புரியவில்லை!

"என்ன தலைவரே இது? கரிகாலன் என்னை திடீர்னு அமைச்சர் பதவியிலேந்து நீக்கி இருக்கான். நான் எந்தத் தப்பும் செய்யலியே!" என்றார் கதிரவன் கட்சித் தலைவர் நலங்கிள்ளியிடம்.

"அமைச்சர்களை நீக்கறது முதலமைச்சரோட உரிமை!" என்றார் நலங்கிள்ளி.

"அது சரிதான். ஆனா நான் ஒரு சீனியர் அமைச்சர். கட்சியிலேயும் அவனை விட சீனியர். வயசிலேயும் பெரியவன். அந்த மரியாதைக்காகவாவது என்ன பிரச்னைன்னு எங்கிட்ட கேட்டிருக்கணும் இல்ல?"

"நீங்க சீனியரா இருக்கறதுதான் பிரச்னை!" என்றார் நலங்கிள்ளி.

"என்ன சொல்றீங்க?"

இதற்கு பதில் சொல்ல நலங்கிள்ளி யத்தனித்தபோது, அவருடைய கைபேசி ஒலித்தது.

""முதல்வர்தான் கூப்பிடறாரு!" என்ற நலங்கிள்ளி, தொலைபேசியில், "சொல்லுங்க தம்பி!" என்றார்.

மறுமுனையியில் முதல்வர் ஏதோ சொல்ல, "சரி. அப்படியே செஞ்சுடலாம். எங்கிட்ட விட்டுடுங்க. நான் பாத்துக்கறேன்!" என்று கூறி உரையாடலை முடித்தார்.

";நான் கரிகாலன்கிட்ட பேசினதை கவனிச்சீங்களா?" என்றார் நலங்கிள்ளி கதிரவனிடம்.

"நீங்க, எதைப் பத்திப் பேசினீங்கன்னு எனக்குத் தெரியலியே!"

"நான் அதைக் கேக்கல. நான் முதல்வர்கிட்ட எப்படிப் பேசினேன்னு கவனிச்சீங்களா? அவர் முதல்வர் ஆறதுக்கு முன்னால அவர்கிட்ட நான் எப்படிப் பேசுவேன்னு கவனிச்சிருப்பீங்களே! அவரைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, வா, போன்னுதான் பேசுவேன். ஏன், ஆரம்ப காலத்தில அவரை வாடா போடான்னு கூடப் பேசி இருக்கேன். ஆனா இப்ப அவர் முதல்வர் ஆயிட்டாரு. அவர் பதவிக்கான மரியாதையைக் கொடுத்துத்தானே அவர்கிட்ட பேசணும்!"

"அப்படின்னா..?" என்றார் கதிரவன் புரிந்தது போல்.

"நீங்க மூத்த தலைவர்தான். ஆனா கரிகாலன் முதல்வர் ஆனப்பறம், அவரோட அமைச்சரவையில ஒரு அமைச்சரா இருந்துக்கிட்டு நீங்க அவரை வா, போன்னு பேசி இருக்கீங்க, மத்தவங்க முன்னால கூட! மத்தவங்ககிட்ட முதல்வரைப் பத்திப் பேசறப்ப அவன், இவன்னு பேசி இருக்கீங்க. ஏன், இப்ப எங்கிட்டபேசறப்ப கூட அப்படித்தானே பேசினீங்க? பதவியில இருக்கறவங்ககிட்ட உரிமையோடயோ, நெருக்கத்தோடயோ பேசினா அதை அவங்க விரும்ப மாட்டாங்க. நீங்க அப்படிப் பேசினது பிடிக்காமதான் முதல்வர் உங்களைத் தூக்கிட்டாரு. கொஞ்ச நாள் கழிச்சு மறுபடி ஒரு வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கலாம். அப்பவாவது பார்த்து நடந்துக்கங்க!" என்றார் நலங்கிள்ளி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 70
மன்னரைச் சார்ந்தொழுதல்

குறள் 698:
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.

பொருள்:
ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழக வேண்டும்..

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Wednesday, April 19, 2023

697. அமுதவல்லி

"நல்லது அமைச்சரே! நாட்டில் குற்றம் செய்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கி, அதன் மூலம் நாட்டில் குற்றச் செயல்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று நீங்களும் காவல் தலைவரும் கூறியதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகள் பற்றிய நிகழ்வுகள் ஏதேனும் உண்டா?" என்றார் அரசர் பத்மபத்ரன்

"அப்படி எதுவும் இல்லை அரசே! தங்கள் ஆணைப்படி சிறையில் உள்ள அனைவருக்கும் நல்ல உணவு அளிக்கப்பட்டு, மருத்துவர்களைக் கொண்டு அவர்கள் உடல்நலம் பேணப்படுகிறது. ஒரு சிலர் வயதானதாலோ, நோய்வாய்ப்பட்டோ இறந்தால் அவர்கள் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன. தங்கள் ஆட்சியில் எல்லாமே சிறப்பாகத்தான் நடக்கின்றன, அரசே!" என்றார் அமைச்சர்.

அரசர் சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு, "வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் யாரேனும் இருக்கிறார்களா?" என்றார்.

"அரசே! வீட்டுச் சிறையில் யாரையும் வைக்கும் நடைமுறை நம் நாட்டில் இல்லை. தங்கள் தந்தையர் காலத்திலிருந்தே இந்த நிலைதானே இருந்து வருகிறது?" என்றார் அமைச்சர்.

ரசரைப் பார்த்து விட்டு வெளியே வந்ததும், "அமைச்சரே! அரசர் வீட்டுச் சிறையில் இருப்பவர்கள் பற்றிக் கேட்டதற்கு இல்லை என்று சொல்லி விட்டீர்களே!" என்றார் காவல் தலைவர், அமைச்சரிடம்.

"ஆமாம். ஏன் நீங்கள் யாரையாவது வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறீர்களா என்ன?" என்றார் அமைச்சர் வியப்புடன்.

"அமைச்சரே! அமுதவல்லி..."

"காவல் தலைவரே! அமுதவல்லியை நாம் வீட்டுச் சிறையில் வைக்கவில்லை. பத்ம்பத்ரரின் தந்தை துங்கபத்ரர் அரசராக இருந்தபோது அவர் விருப்பப்படி அமுதவல்லி தன் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்து கொண்டு தன் வாழ்க்கையை நடத்துவதற்கான வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறோம். அவ்வளவுதான்!" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! அமுதவல்லி துங்கபத்ரரின் காதலி..."

"காவல் தலைவரே! தன் ரகசியக் காதல் தன் மகனுக்கோ மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கோ தெரியக் கூடாது என்பதற்காகத்தான் துங்கபத்ரர் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்தார். அமுதவல்லியை யாரும் சந்திக்காமல் இருக்கவும், அமுதவல்லியே யாரிடமும் இது பற்றிப் பேசாமல் இருக்கவும்தான் இந்த ஏற்பாடு. உங்கள் வீட்டிலும், என் வீட்டிலும் பாதுகாப்புக்காகக் காவலர்கள் இருப்பதைப் போல்தான் அமுதவல்லியின் வீட்டிலும் இருக்கிறார்கள். அமுதவல்லியின் ஆயுட்காலம் வரை இது தொடர வேண்டும் என்பதும், நம் இருவரைத் தவிர வேறு யாருக்கும் இது பற்றித் தெரியக் கூடாது என்பதும் துங்கபத்ரரின் விருப்பம்! இது உங்களுக்கு நினைவிருக்கிறது அல்லவா?" என்றார் அமைச்சர்.

"ஆனால் அரசர் இது பற்றிக் கேட்டதைப் பார்த்தால் அவருக்கு இது பற்றித் தெரிந்திருக்கும் போல் இருக்கிறதே!"

"அரசர் தெரிந்து கேட்டாரோ, ஊகத்தில் கேட்டாரோ எனக்குத் தெரியாது. ஆனால் நம் அரசரைப் பொருத்தவரை இது அவருக்குத் தேவையற்ற விஷயம், எந்த விதத்திலும் பயனற்ற விஷயமும் கூட அதனால்தான் அவர் குறிப்பிட்டுக் கேட்ட பிறகும் நான் அப்படிச் சொன்னேன். நான் சொன்னது உண்மைதானே! நாம் யாரையும் வீட்டுச் சிறையில் வைக்கவில்லையே! சிலருடைய வீடுகளுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறோம், அவ்வளவுதானே!" என்றார் அமைச்சர் சிரித்தபடி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 70
மன்னரைச் சார்ந்தொழுதல்

குறள் 697:
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

பொருள்:
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

758. நண்பனின் கோபம்!

வீரா வங்கி மேலாளரைப் பார்க்கச் சென்றபோது ஏன்கெனவே சிலர் அவரைப் பார்ப்பதற்காக அறைக்கு வெளியே காத்திருந்தனர். 

தன் முறை வருவதற்கு நீண்ட நேரம் ஆகும் என்று தோன்றியதால், மற்றொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து வீரா இருக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றபோது, வங்கி மேலாளரின் அறைக்குள்ளிருந்து வெளியே வந்த பியூன், வீராவைப் பார்த்து, "சார்! மானேஜர் உங்களை உள்ளே வரச் சொல்றாரு!" என்றான்.

உள்ளே சென்ற வீரா வங்கி மேலாளரிடம், "வெளியில அஞ்சாறு பேர் காத்துக்கிட்டிருக்கறதால உங்களைப் பார்க்க நேரம் ஆகும்னு நினைச்சேன்!" என்றான்.

"அவங்களும் உங்களை மாதிரி தொழிலதிபர்கள்தான்.அவங்கள்ளாம் தங்களோட கடன் தவணையைக் கட்டாததால பாங்க்லேந்து நோட்டீஸ் அனுப்பிட்டோம், அதைப் பாத்துப் பதைபதைச்சுப் போய் 'நடவடிக்கை எதுவும் எடுத்துடாதீங்க, இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்க!'ன்னு கேக்கறதுக்காக வந்திருக்காங்க. உங்களுக்குத்தான் அந்தப் பிரச்னை இல்லையே! நீங்க கடனே வாங்காம தொழில் பண்றவரு. எப்பவாவது வாங்கினாலும் சரியாத் திருப்பிக் கட்டிடறவரு. அனாலதான் கண்ணாடி வழியா உங்களைப் பார்த்ததும், உங்களை முதல்ல பார்த்துடலாம்னு வரச் சொன்னேன்!" என்றார் வங்கி மேலாளர்.

வங்கி மேலாளரிடம் பேசி விட்டு வெளியே வந்த வீரா, அங்கே பதட்டத்துடனும், கவலையுடனும் அமர்ந்திருந்த தொழிலதிபர்களின் முகங்களைப் பார்த்தான். உடனே அவனுக்குக் கண்ணனின் நினைவு வந்தது.

ண்ணன், வீரா இருவரும் பொறியியல் கல்லூரியில் படித்தபோதே சொந்தத் தொழில் துவங்க வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருந்தனர். படிப்பை முடித்ததும் இருவரும் ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர்.

வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு, கண்ணன் வீராவிடம், "இந்த ரெண்டு வருஷத்தில நாம தொழிலை நல்லாக் கத்துக்கிட்டோம்.  நாம சொந்தத் தொழில் ஆரம்பிச்சுடலாம். அரசாங்கத்தில புதுக்கோட்டை பக்கத்தில புதுசா ஒரு தொழிற்பேட்டை ஆரம்பிக்கறாங்க. நாம அப்ளை பண்ணினா நமக்கு இடம் கிடைக்கும் - கட்டிடத்தோட.. அதுக்குத் தவணை முறையில பணம் கொடுத்தாப் போதும். பாங்கல கடன் வாங்கி இயந்திரங்கள் வாங்கிக்கலாம். நாலஞ்சு வருஷத்தில கடனையெல்லாம் அடைச்சுடலாம்!" என்றான்.

"நம்மகிட்ட இருக்கற பணத்தை வச்சு சின்னதா ஒரு தொழில் ஆரம்பிச்சு அந்தத் தொழில் வளர்ந்தப்பறம் கடன் வாங்கினா பரவாயில்ல. கடன் வாங்கித் தொழில் ஆரம்பிக்கறது சரியா இருக்குமா? ரெண்டு மூணு வருஷம் ஆகட்டும். நம் கையில கொஞ்சம் பணம் சேத்துக்கிட்டு அப்புறமா ஆரம்பிக்கலாம்!" என்றான் வீரா.

"அப்படியெல்லாம் என்னால காத்துக்கிட்டிருக்க முடியாது. நீயும் என்னோட சேர்ந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். பரவாயில்ல. நான் தனியாவே ஆரம்பிக்கறேன்!" என்றான் கண்ணன். 

அடுத்த சில நாட்களில் கண்ணன் வேலையை விட்டுச் சென்று விட்டான். போகும்போது வீராவிடம் சொல்லிக் கொள்ளக் கூட இல்லை. தன் யோசனையை நண்பன் ஏற்றுக் கொள்ளாதது அவனுக்கு ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

சில வருடங்களுக்குப் பிறகு வீரா தான் திட்டமிட்டபடியே தான் சேமித்த பணத்தை முதலீடு செய்து, சிறிதாகத் தொழில் ஆரம்பித்து சில வருடங்களில் அதை நிலைபெறச் செய்து விட்டான். 

தொழில் வளர்ச்சி அடைந்த பிறகு அவ்வப்போது தேவைக்காக வங்கியில் கடன் வாங்கி அதை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

கண்ணனைப் பற்றி அப்புறம் தகவல் ஏதுமில்லை. நிச்சயம் தான் விரும்பியபடி அவன் தொழிலை ஆரம்பித்திருப்பான். கடன் வாங்கித்தான் ஆரம்பித்திருப்பான்!

கடன் தொகையைத் திரும்பச் செலுத்த முடியாமல் வங்கி மேலாளரின் அறைக்கு வெளியே பதட்டத்துடன் அமர்ந்திருந்த தொழிலதிபர்களின் நிலை தன் நண்பனுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டான் வீரா.

பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை

குறள் 758:
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

பொருள்: 
தன் கைப்பொருளைக் கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்றது.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Monday, April 17, 2023

757. பணத்துக்கு மரியாதை!

"ஆன்மீகத்தைப் பரப்புகிற நம் மடத்தில பணத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கல!" என்றான் விஜயன் சரவணனிடம்.

இருவரும் அந்த மடத்தில் சீடர்களாக இருப்பவர்கள்.

மடத்தின் தலைவர் சாந்தானந்தர் மடத்துக்கு நன்கொடை அளித்தவர்களை கௌரவிப்பதற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்ததைப் பற்றித்தான் விஜயன் இவ்வாறு குறிப்பிட்டான்.

நிகழ்ச்சி நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு மடத்தின் சீடர்கள் அனைவரையும் அழைத்து நிகழ்ச்சி எப்படி நடைபெற வேண்டும் என்பது பற்றி விவாதித்தார் சாந்தானதர்.

இறுதியில், "இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யற குழுவில பொருளாளர் இருக்கறதால, இந்த நிகழ்ச்சி முடிகிற வரையில் பொருளாளரோடவேலையை விஜயன் பாத்துக்கட்டும்!" என்ற சாந்தானந்தர் பொருளாளரைப் பார்த்து, "கையில இருக்கற பணத்தை விஜயன்கிட்ட கொடுத்து செய்ய வேண்டிய வேலைகளைப் பத்தி அவன்கிட்ட சுருக்கமா சொல்லிடுங்க. அவன் தனியா கணக்கு எழுதி நிகழ்ச்சி முடிஞ்சதும் உங்ககிட்ட கொடுக்கட்டும். அப்புறம் நீங்க முறையா கணக்கு எழுதிக்கலாம்!" என்றார்.

"என்ன விஜயா?" என்றார் சாந்தானந்தர் விஜயனைப் பார்த்துச் சிரித்தபடி

விஜயன் எதுவும் புரியாமல் தலையாட்டினான்.

நிகழ்ச்சி முடிந்து விஜயன் கணக்குகளைப் பொருளாளரிடம் ஒப்படைத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவனை சாந்தானந்தர் அழைத்தார்.

கணக்கில் ஏதேனும் தவறு நேர்ந்திருக்குமோ, அதை விசாரிக்கத்தான் தன்னை அழைக்கிறாரோ என்று பயந்தபடியே சாந்தானந்தரைப் பார்க்கச் சென்றான் விஜயன்.

"வா, விஜயா! உக்காரு. பொருளாளரோடவேலையை சிறப்பா செஞ்சு கணக்கெல்லாம் சரியாப் பராமரிச்சிருக்கேன்னு பொருளாளர் சொன்னாரு. பாராட்டுக்கள்!" என்றார் சாந்தானந்தர்.

விஜயன் எதிர்பாராத மகிழ்ச்சியில் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தான்.

"சரி. நீ பொருளாளரா இருந்த ஒரு வாரத்தில சுமாரா எவ்வளவு பணம் வரவு செலவு பண்ணி இருப்பே?"

விஜயன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு, "அஞ்சு லட்சம் ரூபா இருக்கும்" என்றான். 

"அப்படின்னா நம்ம மடத்தில மாசம் இருபது இருபத்தைஞ்சு லட்சம் ரூபா புழங்குதுன்னு வச்சுக்கலாமா?"

விஜயன் தலையாட்டினான்.

"சரி. இந்த இருபத்தைஞ்சு லட்சம் ரூபாயில உன்னோட பங்களிப்பு எவ்வளவு?" என்றார் சாந்தானந்தர் சிரித்தபடி.

"சுவாமிஜி!" 

"என்னடா இது, நாம சம்பளம் இல்லாம இந்த மடத்தில உழைச்சுக்கிட்டிருக்கோம், இவரு நம்மகிட்ட வந்து நீ எவ்வளவு பணம் கொடுத்தேன்னு கேக்கறாரேன்னு பாக்கறியா? சரி, நான் எவ்வளவு கொடுத்தேன்னு தெரியுமா?"

விஜயன் மௌனமாக இருந்தான்.

சாந்தானந்தர் தன் ஆள்காட்டி விரலால் காற்றில் ஒரு வட்டம் போட்டார்.

"இந்த மடத்தில இருக்கறவங்க யாருமே, நீயோ, நானோ, வேற யாருமே ஒரு பைசா கூட இந்த மடத்துக்காக சம்பாதிச்சுக் கொடுக்கல. ஆனா இந்த மடத்தில இவ்வளவு நல்ல வேலைகள் நடக்குதே - அனாதை ஆசிரமம் நடத்தறோம், அன்னதானம் செய்யறோம், இன்னும் பல நல்ல காரியங்கள் செய்யறோம். இதுக்கெல்லாம் பணம் எங்கேந்து வருது?"

சுவாமிஜி பணத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று தான் சரவணனிடம் பேசியதை சாந்தானந்தர் கேட்டிருக்க வேண்டும் என்று விஜயனுக்குப் புரிந்தது.

"சுவாமிஜி! நான் தெரியாம..." என்றான் விஜயன் சங்கடத்துடன்.

"விஜயா! உனக்கு இந்தக் கேள்வி வந்தது தப்பு இல்ல. அதுக்கு விளக்கம் சொல்ல வேண்டியது என் கடமை. நாம சில அனாதைக் குழந்தைகளை எடுத்து வளக்கறோம். அவங்க பெற்றோர்கள்தான் அவங்களை உருவாக்கினாங்க. ஆனா அனாதையா விடப்பட்ட அவங்களை நம்மை மாதிரி யாராவது எடுத்து வளர்க்கலேன்னா அந்தக் குழந்தைகளால எப்படி ஜீவிக்க முடியும், எப்படி வளர முடியும்? நமக்கு எல்லார்கிட்டேயும் அன்பு இருக்கு. நம்மகிட்ட கருணை இருக்கு. ஆனா பணம் இல்லேன்னா நம்மகிட்ட இருக்கற அன்புக்கும், கருணைக்கும் பலன் இல்லாம போயிடும். நமக்குப் பணம் கொடுத்து உதவறவங்கதான் நம் அன்புக்கும், அருளுக்கும் உயிர் கொடுக்கறாங்க. அதனாலதான் அவங்களுக்கு நம் நன்றியைத் தெரிவிக்கிற விதமா, அவங்களைப் பாராட்ட ஒரு விழா ஏற்பாடு செஞ்சேன். புரிஞ்சுதா?" 

"சுவாமிஜி!" என்றுபடியே சாந்தானந்தரின் காலில் விழுந்தான் விஜயன்.

பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை

குறள் 757:
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.

பொருள்: 
அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Friday, April 14, 2023

756. அமைச்சரின் யோசனை

"அரசாங்கத்துக்கு எவ்வளவு வருவாய் வந்தாலும் போதவில்லையே! என்ன செய்வது?" என்றார் அரசர்.

"அரசே! வருவாய் போதவில்லையென்றால், ஒன்று செலவினங்களைக் குறைக்க வேண்டும் அல்லது வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!" என்றார் அமைச்சர்.

"நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் வருவாயை உயர்த்துவதற்கான வழி இல்லை. மக்கள் மீதான வரிச் சுமையை ஏற்ற நான் விரும்பவில்லை. எனவே செலவினங்களைக் குறைப்பதற்கான வழிவகைகளை ஆராயுங்கள்."

"அரசே! அரசாங்கச் செலவுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து விட்டோம். தாங்களே மிகவும் எளிமையாகத்தான் வாழ்கிறீர்கள். இனி செலவுகளைக் குறைப்பதென்றால் மக்கள் நலனுக்கான செலவுகளைத்தான் குறைக்க வேண்டும்!" என்றார் அமைச்சர்.

"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் அமைச்சரே?"

"அரசே! வரிகளை உயர்த்தாமல் வேறு வகைகளில் நம் வருவாயை அதிகரிப்பது பற்றி நாம் பரிசீலிக்க வேண்டும்."

"வேறு வகைகளில் என்றால் மற்றொரு நாட்டின் மீது படையெடுத்து வென்று அவர்களிடமிருந்து கப்பம் பெறுவதா?" என்றார் அரசர் சிரித்தபடி.

"அதுவும் ஒரு வழிதான் அரசே! ஆனால் அதற்கான வாய்ப்பு வரும்போதுதான் அதைச் செய்ய முடியும்."

"அத்துடன் மற்றொரு நாட்டிடமிருந்து கப்பம் பெறுவது அந்த நாட்டு மக்களிடமிருந்து அடித்துப் பிடுங்குவது. அதை நான் எப்போதுமே ஏற்றுக் கொண்டதில்லை!"

"தங்கள் உயர்ந்த உள்ளத்தை நான் அறிவேன் அரசே! நான் சொல்ல வந்தது வெளிநாட்டு வணிகர்களைத் தங்கள் பொருட்களை இங்கே விற்க அனுமதித்து அந்தப் பொருட்களின் மீது சுங்கவரி விதித்து அதை அவர்களிடமிருந்து வசூலிப்பது!"

"வெளிநாட்டுப் பொருட்களை இங்கே விற்கச் செய்தால் நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் விற்பனை பாதிக்கப்படாதா?"

"அரசே! நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல பொருட்கள் உள்ளன. அவற்றை வாங்குவதில் நம் நாட்டு மக்கள் ஆர்வம் காட்டக் கூடும். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சில பொருட்களை வெளிநாட்டு வணிகர்கள் விற்றாலும், அவற்றின் விலை உள்நாட்டுப் பொருட்களின் விலையை விட அதிகமாக இருக்கும் அளவுக்கு நாம் சுங்கவரி விதிக்கலாம். இங்கே உள்ள வசதியுள்ள சிலர் மட்டும் இந்தப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். அதனால் உள்நாட்டுப் பொருட்களின் விற்பனை பெருமளவு பாதிக்கப்படாமல் நாம் பார்த்துக் கொள்ளலாம். அத்துடன்..."

தான் கூறுபவற்றை அரசர் எப்படி எடுத்துக் கொள்கிறார் என்று அறிய விரும்புவதுபோல் அரசரின் முகத்தைப் பார்த்தார் அமைச்சர்.

"சொல்லுங்கள்!" என்றார் அரசர் ஆர்வத்துடன்.

"இங்கே வணிகம் செய்ய வரும் வெளிநாட்டு வணிகர்கள் நம் நாட்டுப் பொருட்களை வாங்கிச் சென்று தங்கள் நாட்டில் விற்கலாம். ஏன் அந்த வணிகர்களைப் பர்த்து விட்டு நம் நாட்டு வணிகர்களில் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் பொருட்களை விற்கும் முயற்சியில் ஈடுபடலாம். இவையெல்லாம் நம் நாட்டுக்கு நன்மை பயத்து, நம் வருவாயையும் அதிகரிக்கச் செய்யும் அல்லவா?" என்று முடித்தார் அமைச்சர்

"சிறந்த யோசனை அமைச்சரே! நீங்கள் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர்!" என்றார் அரசர் பாராட்டும் தொனியில்.

பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை

குறள் 756:
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.

பொருள்: 
வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

696. அரசரின் சம்மதம்

"நாட்டில் கடும் பஞ்சம் நிலவுகிறது. மக்கள் உணவில்லாமல் தவிக்கிறார்கள். இதைத் தாங்கள் அரசரிடம் எடுத்துக் கூறிப் பசியால் வாடும் மக்களுக்கு உதவி கிடைக்கச் செய்ய வேண்டும்!" என்றார் தனாதிகாரி.

"அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அரசாங்கத்தின் உணவு தானியக் கிடங்குகளிலிருந்து உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் மக்களுக்கு இலவசமாக எதையும் வழங்குவது அரசருக்குப் பிடிக்காது. மன்னரிடம் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பதென்றே தெரியவில்லை!" என்றார் அமைச்சர்.

"மழை பெய்தால்தான் நிலைமை மேம்படும். மழை வருவதற்கான அறிகுறிகளே தென்படவில்லையே!" என்றார் தனாதிகாரி கவலையுடன்.

அமைச்சரின் முகம் சட்டென்று மலர்ந்தது. "எனக்கு ஒரு யோசனை பிறந்திருக்கிறது!" என்றார் அவர்.

"நாட்டின் பல பகுதிகளிலும் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்து விட்டீர்கள். மழை வரும் வரை அன்னதானம் தொடரும் என்றும் மன்னர் அறிவித்து விட்டார். இதை எப்படிச் சாதித்தீர்கள் அமைச்சரே?" என்றார் தனாதிகாரி வியப்புடன்.

"நம் அரசருக்கு தர்மசிந்தனை கிடையாது. நீங்கள் என் நம்பிக்கைக்குரியவர் என்பதால் உங்களிடம் நான் இதை வெளிப்படையாகச் சொல்கிறேன். ஆனால் அரசருக்கு ஆன்மீகம், சோதிடம் போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. நாட்டில் ஒரு பீடை நிலவுவதாகவும், தொடர்ந்து அன்னதானம் செய்தால்தான் அந்தப் பீடை நீங்கி நாட்டில் மழை பொழிந்து சுபீட்சம் ஏற்பட்டு அரசாங்கப் பெட்டகத்தில்பணம் வந்து நிறையும் என்றும் ஒரு புகழ் பெற்ற சோதிடரைக் கொண்டு அரசரிடம் சொல்ல வைத்தேன்" என்றார் அமைச்சர்.

"சோதிடர் எப்படி இதற்கு ஒப்புக் கொண்டார்?""

"நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதால் சோதிடர் இதற்கு ஒப்புக் கொண்டார். அதுவும் அவர் சொன்னது பொய் இல்லையே! பசியால் வாடும் மக்களுக்கு உணவளித்தாலே அது பீடை நீங்குவதுதானே! அரசர் இதற்கு உடனே ஏற்பாடு செய்து விட்டார். 

"அரசாங்கம் மட்டும் அன்னதானத்துக்குப் பணம், தானியங்கள் கொடுத்து உதவினால் போதாது, வசதி படைத்தவர்கள், வியாபாரிகள், பெருந்தனக்காரர்கள் ஆகியோரும் இதற்குப் பணம் கொடுத்து உதவினால்தான் அன்னதானத்தைத் தொடர்ச்சியாகவும், பெரிய அளவிலும் நடத்த முடியும் என்று நான் அரசரிடம் கூறினேன். அவர் அதை ஏற்றுக் கொண்டு பொருள் படைத்தவர்கள் அனைவரும் இந்த அன்னதானத்துக்கு உதவ வேண்டும் என்று அறிவிப்புச் செய்து விட்டார்.

"அதனால் ஓரளவுக்கு வசதி உள்ளவர்கள் கூட அன்னதானத்துக்குப் பணம், பொருட்கள், தானியங்கள் கொடுத்து உதவுகிறார்கள். நிலைமை சரியாகும் வரை பசியால் வாடும் ஏழைகளுக்கு ஒருவேளை உணவாவது வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்து விட்டோம் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது. 

"நீங்கள் அன்று மழை வருவதற்கான அறிகுறிகளே தென்படவில்லையே என்று கூறியதைக் கேட்டதும்தான் எனக்கு இந்த யோசனை தோன்றியது. அதானால் உங்களுக்குத்தான் நான் நன்றி கூற வேண்டும்!

தானாதிகாரியைக் கனிவுடன் பார்த்துச் சிரித்தார் அமைச்சர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 70
மன்னரைச் சார்ந்தொழுதல்

குறள் 696:
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.

பொருள்:
ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்ல வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Thursday, April 13, 2023

695. அமைச்சரின் உதவியாளர்

"என்னோட உதவியாளர் ஒத்தர் ஓய்வு பெறப் போறாரு. அவருக்கு பதிலா இன்னொரு உதவியாளரை நான் நியமிக்கணும். உங்க உதவியாளர்கள் ரெண்டு பேருமே திறமையானவங்கன்னு கேள்விப்பட்டேன். அவங்கள்ள ஒருத்தரை நீங்க எனக்குக் கொடுக்கணும்!"என்றார் முதலமைச்சர் செல்வன் சிரித்தபடி.

அமைச்சர் அன்புமொழி, "இந்தத் தலைமைச் செயலகத்திலேயே எவ்வளவோ திறமையான ஊழியர்கள் இருக்காங்களே செல்வன்! ஏன் என்னோட உதவியாளர்கள்ள ஒருத்தர் வேணும்னு கேக்கறீங்க?" என்றார்.

செல்வனும், அன்புமொழியும் இளம் வயதிலிருந்தே கட்சியில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பதால் அவர்களுக்குள் நெருக்கமும் இணக்கமும் உண்டு. 

செல்வனின் தலைமைப் பண்பைச் சிறு வயதிலிருந்தே பார்த்து வந்த அன்புமொழி அவரைத் தன் தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டார். செல்வனும் அன்புமொழியிடம் நட்புடன் இருந்ததுடன் கட்சியிலும், அமைச்சரவையிலும் அவருக்கு உரிய மரியாதையைக் கொடுத்து வந்தார்.

"உங்களோட உதவியாளர்கள் ரெண்டு பேரும்தான் இருக்கறதிலேயே சிறந்தவங்கன்னு எல்லா அதிகாரிகளும் சொல்றாங்க. உங்களோட பயிற்சிதான் அதுக்குக் காரணம்னும் சொல்றாங்க!"

"அப்படி இருக்கும்போது எங்கிட்டேந்து ஒத்தரை எடுத்துக்கிறீங்களே, அது நியாயமா?" என்றார் அன்புமொழி சிரித்தபடி.

"அதனால என்ன? வேற ஒத்தரை உதவியாளரா எடுத்துக்கிட்டு சில மாசங்களிலேயே அவரைச் சிறந்தவரா ஆக்கிடுவீங்களே நீங்க!"

"சரி. அப்படீன்னா, முருகனை எடுத்துக்கங்க!" என்றார் அன்புமொழி.

"உங்க உதவியாளர்கள் முருகன், பாபு ரெண்டு பேரில பாபுதான் அதிகத் திறமையானவர்னு கேள்விப்பட்டேன். அதிகத் திறமையானவரை நீங்க வச்சுக்க நினைக்கிறது நியாயம்தான். நான் முருகனையே எடுத்துக்கறேன்!" என்றார் செல்வன்.

"இல்லை செல்வன். பாபு அதிகத் திறமையானவர்தான். ஆனா முதலமைச்சரா இருக்கற உங்களுக்கு உதவியாளரா இருக்க பாபுவை விட முருகன்தான் அதிகப் பொருத்தமானவர்!" என்றார் அருள்மொழி.

"எதனால அப்படிச் சொல்றீங்க?"

"இப்ப நான் என் அறைக்குப் போய் உங்களுக்கு ஃபோன் செஞ்சுட்டு இணைப்பைத் துண்டிக்காம இருக்கேன். என் அறையில நான் யார்கிட்டேயும் பேசறதை நீங்க கேக்கலாம் இல்லையா? என் அறையில நடக்கற பேச்சுக்களை நீங்க கேளுங்க. நான் அப்புறம் திரும்ப வந்து உங்ககிட்ட பேசறேன்" என்று சொல்லி எழுந்து சென்றார் அன்புமொழி.

சில நிமிடங்களுக்குப் பிறகு முதலமைச்சரின் அறைக்குத் திரும்பி வந்த அன்புமொழி, "என்ன செல்வன், இப்ப புரிஞ்சுதா, முருகன்தான் உங்களுக்குப் பொருத்தமானவரா இருப்பார்னு நான் ஏன் சொன்னேன்னு?" என்றார் சிரித்தபடி.

"புரிஞ்சுது அன்புமொழி! உங்க அறைக்குப் போனதும் நீங்க முதல்ல முருகனைக் கூப்பிட்டீங்க. நீங்க என்னைப் பாத்துட்டு வந்தது அவருக்குத் தெரியும். ஆனா அவர் உங்ககிட்ட எதுவும் கேக்கல. நீங்க சொன்ன வேலையை மட்டும் கேட்டுக்கிட்டு வெளியில போயிட்டாரு. அப்புறம் பாபுவைக் கூப்பிட்டீங்க. அவரு உள்ளே வந்ததுமே, 'முதல்வர் அறைக்குப் போனீங்களே சார், ஏதாவது முக்கியமான விஷயமா?'ன்னு கேட்டாரு. நீங்க ஒண்ணும் இல்லேன்னு சொல்லீட்டீங்க. அப்புறம் கூட, அறையை விட்டுப் போறப்ப, 'முதல்வர் ஏதாவது தகவல் சொன்னாரா' சார்?ன்னு கேட்டாரு. விஷயங்களைத் தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வம் உள்ளவரா இருப்பார் போல இருக்கு. அதனாலதான் அவரை நீங்க பரிந்துரைக்கலேன்னு நினைக்கறேன், சரியா?" என்றார் முதலமைச்சர்."

ஆம் என்று தலையாட்டிய அன்புமொழி, "நான் யாருகிட்டயாவது தனியாப் பேசினா நன் என்ன பேசினேன்னு தெரிஞ்சுக்க பாபு எப்பவுமே ஆர்வமா இருப்பாரு, பல சமயம் தன்னோட ஆவலை அடக்க முடியாம எங்கிட்டயே கேப்பாரு! ஆனா முருகன் அப்படி இல்லை. நானாகச் சொன்னால் ஒழிய எதையும் கேட்டுத் தெரிஞ்சுக்க முயல மாட்டாரு. நீங்க ஒரு முக்கியப் பொறுப்பில இருக்கறதால உங்க உதவியாளருக்கு இருக்க வேண்டிய குணம் முருகன்கிட்ட இருக்குன்னு நினைக்கிறேன்!" என்றார்.

"நீங்க நல்லா யோசிச்சுதான் சொல்லி இருக்கீங்க. பாபு மாதிரி இருக்கறவங்க ஆர்வம் மிகுதியால ஒட்டுக் கேட்கறதைக் கூடச் செய்யலாம் இல்ல?"

"வாய்ப்பு இருக்கு. ஆனா இதுவரையில அப்படி செஞ்சதில்லைன்னு நினைக்கிறேன். நீங்க சொன்னதால இனிமே நான் இன்னும் அதிக எச்சரிக்கையா இருக்கணும்!உங்களுக்கென்ன, அதிர்ஷ்டக்காரர்! ஒரு நல்ல உதவியாளர் கிடைக்கப் போறாரு!" என்றார் அன்புமொழி சிரித்துக் கொண்டே.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 70
மன்னரைச் சார்ந்தொழுதல்

குறள் 695:
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.

பொருள்:
ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Tuesday, April 11, 2023

694. மூர்த்திக்குப் புரியவில்லை!

"கோவிலுக்குக் குடமுழுக்கு பண்றது நல்ல விஷயம்தானே? இது மாதிரி நல்ல காரியங்களுக்கு உதவறதில எனக்கு சந்தோஷம்தான்!"

காசி கூறியதைக் கேட்டதும் மூர்த்திக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது.

 'நாம் செய்யப் போற வேலை எதிர்பார்த்ததை விட சுலபமாகவே முடிந்து விடும் போலிருக்கிறதே!" என்று நினைத்துக் கொண்டான் அவன்.

தன் பக்கத்தில் அமர்ந்திருந்த ராமசாமியைப் பார்த்தான். அவர் முகமும் மலர்ந்திருந்தது. அங்கே அமர்ந்திருந்த கோவில் குடமுழுக்குக் குழுவின் ஒன்பது உறுப்பினர்களுமே காசியின் பேச்சைக் கேட்டு உற்சாகமடைந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டான் அவன்..

கோவிலுக்குக் குடமுழுக்கு செய்யத் தீர்மானித்து அதற்காக ஒன்பது பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, குடமுழுக்குக்கான செலவுகளுக்காக ஊரில் அனைவரிடமும் நன்கொடை கேட்டுப் பெறத் தீர்மானித்து, முதலில் ஊர்ப் பெரியவரான காசியைப் பார்க்க வந்தனர். துவக்கத்திலேயே அவர் உதவுவதாகக் கூறியது உற்சாகம் அளிக்காதா என்ன?

சற்று நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த பிறகு, மூர்த்தி ராமசாமியைப் பார்த்தான். அவர் தலையசைத்ததும், "ஐயா! அப்ப நாங்க கிளம்பறோம்!" என்றடியே தன் கையிலிருந்த துணிப்பையிலிருந்து ஒரு புதிய நோட்டுப் புத்தகத்தை எடுத்து அதைக் காசியிடம் நீட்டினான்

"கடையில புதுசா நோட்டு வாங்கி, சாமி சந்நிதியில வச்சு எடுத்துக்கிட்டு வந்திருக்கோம். முதல் ஆளா உங்க பேரை எழுதித் தொகையை எழுதிடுங்க. நீங்க எப்ப சொல்றீங்களோ அப்ப வந்து பணத்தை வாங்கிக்கறோம்!" என்றான் மூர்த்தி.

காசி அவன் நீட்டிய நோட்டுப் புத்தகத்தை வாங்கிக் கொள்ளாமலேயே, "இருக்கட்டும். அப்புறம் எழுதிக்கலாம். என் பேரைத்தான் முதல்ல எழுதணும்னு இல்ல. மத்தவங்ககிட்ட வசூலிச்சுக்கங்க. நான் அப்புறம் தரேன்!" என்றார் சற்று இறுக்கத்துடன்.

"இல்லீங்கையா! உங்க பேருதான் முதல்ல வரணும்னு விருப்பபடறோம். பேரை எழுதித் தொகையை மட்டும்..."

கையை ஆட்டி மூர்த்தியை இடைமறித்த காசி, "இருக்கட்டும் தம்பி! இந்த வருஷம் விளைச்சல் எப்படி இருக்குன்னு தெரியல. அதையெல்லாம் பாத்துட்டுதான் முடிவு செய்யணும். நீங்க போயிட்டு அப்புறம் வாங்களேன்!" என்று சொல்லி விட்டு எழுந்து விட்டார்.

மூர்த்தி குழப்பத்துடன் எழுந்து நிற்க அனைவரும் எழுந்து வெளியேறத் தயாராயினர்.

காசியின் வீட்டை விட்டு வெளியே வந்ததும், மூர்த்தி ராமசாமியிடம், "என்னண்ணே! முதல்ல அவ்வளவு உற்சாகமாப் பேசினவரு ஏன் திடீர்னு வேற மாதிரி பேசினாரு?" என்றான்.

ராமசாமி அவனுக்கு பதில் சொல்லாமல் மற்ற உறுப்பினர்களைப் பார்த்து, "நீங்கள்ளாம் வீட்டுக்குப் போயிட்டு சாயந்திரம் மூர்த்தி வீட்டுக்கு வந்துடுங்க. மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பத்தி அப்ப பேசலாம்!" என்றார்.

அவர்கள் சென்றதும், ராமசாமி மூர்த்தியிடம், "வா! நடந்துக்கிட்டே பேசலாம்!" என்றார்.

சற்று நேரம் நடந்ததும்,"மூர்த்தி! நீயும் நானும் முன்னால உக்காந்திருந்தோம். மத்த ஏழு பேரும் நமக்குப் பின்னால உக்காந்திருந்தாங்க. பின்னால உக்காந்திருந்தவங்க என்ன செஞ்சாங்கன்னு நீ கவனிக்கல!" என்றார் ராமசாமி.

"சும்மாதானே உக்காந்துக்கிட்டிருந்தாங்க?" என்றான் மூர்த்தி.

"சும்மா உக்காந்துக்கிட்டிருந்திருந்தாங்கன்னா எல்லாம் நல்லபடியாப் போயிருக்கும். காசி ஒரு பெரிய தொகையை எழுதி இருப்பாரு, ஏன் பணத்தைக் கூடக் கொடுத்திருப்பாரு!"

"அப்படீன்னா?"

"கடைசியா உக்காந்திருந்த சுப்புவும் மணியும் தங்களுக்குள்ள ஏதோ ரகசியமாப் பேசிக்கிட்டு சிரிச்சுக்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கு முன்னால உக்காந்திருந்த குணாவும், கருணாகரனும் அவங்களைத் திரும்பிப் பார்ஃத்தைக் கூட நான் கவனிச்சேன். நான் திரும்பிப் பார்த்து அவங்களை அடக்கலாமான்னு நினைச்சேன். ஆனா அப்படி செஞ்சா அவங்க செய்யறதைக் காசியோட கவனத்துக்குக் கொண்டு வர மாதிரி இருக்கும்னு நினைச்சுப் பேசாம இருந்துட்டேன். நீ காசிகிட்ட மும்முரமாப் பேசிக்கிட்டிருந்ததால இதை கவனிக்கல. ஆனா காசி அதை கவனிச்சுட்டாரு."

"அப்படியா? நான் கவனிக்கல. ஆனா அது அவ்வளவு பெரிய குத்தமா என்ன?" என்றான் மூர்த்தி.

""மூர்த்தி! பெரியவங்க, அதிகாரத்தில இருக்கறவங்க, பணக்காரங்க, பெரிய மனுஷங்க இவங்ககிட்டல்லாம் பேசறப்ப ரொம்ப கவனமா இருக்கணும். இவங்கள்ளாம் ரொம்ப... இங்கிலீஷ்ல ஒரு வார்த்தை இருக்கே, அது என்ன. ம்..ம்.. ஆங்.. சென்சிடிவ். இவங்கள்ளாம் ரொம்ப சென்சிடிவானவங்க. அவங்க முன்னால மத்தவங்க அமைதியா. அடக்கமா இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. இந்த ரெண்டு பேரும் இப்படி ரகசியம் பேசிச் சிரிச்சதைப் பார்த்ததும் காசிக்கு எரிச்சல் வந்திருக்கும். அதனாலதான்பணம் கொடுக்கத் தயாரா இருந்தவரு மனசை மாத்திக்கிட்டாரு. ரெண்டு மூணு நாள் கழிச்சு நீயும் நானும் அவரைத் தனியாப் போய்ப் பார்த்து சுப்புவும், மணியும் அப்படி நடந்துக்கிட்டதுக்கு அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுப்போம். அப்ப சமாதானமாயிடுவாருன்னு நினைக்கிறேன். இன்னிக்கு சாயந்திரம் எல்லாரும் உன் வீட்டில கூடறப்ப இப்படியெல்லாம் நடந்துக்கக் கூடாதுன்னு அவங்க ரெண்டு பேருக்கும் புத்தி சொல்லணும்!" என்றார் ராமசாமி.

அரசியல் இயல்
அதிகாரம் 70
மன்னரைச் சார்ந்தொழுதல்

குறள் 694:
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.

பொருள்:
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

693. என்ன தவறு செய்து விட்டேன்?

ஒரு நாள் தவறாமல் தன்னை அழைத்துப் பேசும் முதலமைச்சர் இரண்டு நாட்களாகத் தன்னை அழைக்கவில்லை என்பதை அமைச்சர் பூபதி மூன்றாம் நாள்தான் உணர்ந்தார்.

எப்படி இதை உணராமல் போனாம்? இரண்டு நாட்களாகத் தன் அமைச்சகத்தில் சில முக்கியமான பணிகளில் மூழ்கி இருந்ததால் இதை கவனிக்கத் தவறி விட்டோம் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டார் பூபதி.

முதலமைச்சரின் செயலரைத் தொலைபேசியில் அழைத்துத் தான் முதல்வரைச் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டார் பூபதி.

"சார்! முதல்வர் இப்ப ரொம்ப பிசியா இருக்காரு. யாருக்கும் நேரம் கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாரு!" என்றார் முதல்வரின் செயலர்.

"பொதுவா சொல்லி இருப்பாரு. நான் அவரைச் சந்திக்க விரும்பறேன்னு சொல்லுங்க. கண்டிப்பா நேரம் ஒதுக்குவாரு!"

சற்றுத் தயங்கிய செயலர், "மன்னிக்கணும் சார்! குறிப்பா நீங்க நேரம் கேட்டா, கொடுக்க வேண்டாம்னு சொல்லி இருக்காரு!" என்றார்.

ன்று மாலை கட்சி அலுவலகத்துக்குச் சென்ற பூபதி அங்கே கட்சித் தலைவரைச் சந்தித்தார்.

"என்ன ஐயா பிரச்னை? ஏன் முதல்வர் என்னைச் சந்திக்க மாட்டேங்கறாரு?" என்றார் பூபதி.

"உங்க அமைச்சகத்தோட செயல்பாடு பற்றி முதல்வருக்கு ஏதோ புகார் வந்திருக்கு. அவர் துறைச் செயலாளரைக் கூப்பிட்டு விசாரிச்சிருக்காரு. துறைச் செயலாளரோட ஆலோசனையை ஏத்துக்காம நீங்க முடிவெடுத்ததா அவர் சொல்லி இருக்காரு. நீங்க எடுத்த முடிவால அரசுக்குக் கெட்ட பேர் ஏற்பட்டிருக்கு.அதனாலதான் முதல்வர் கோபமா இருக்காரு!" என்றார் கட்சித் தலைவர்.

"ஓ! அந்தப் பாலம் விஷயமா? வேலை சீக்கிரம் நடக்கணுங்கறதுக அந்தப் பாலம் தொடர்பான ஒப்பந்தத்தோட நிபந்தனைகளைக் கொஞ்சம் தளர்த்தினேன். அதனால வேலை சீக்கிரம் முடிஞ்சு அந்தப் பாலத்தைத் திறந்துட்டமே! நல்லதுதானே நடந்திருக்கு?" என்றார் பூபதி.

"நீங்க எந்த நோக்கத்தோட செஞ்சீங்களோ, தெரியாது. ஆனா ஒப்பந்தத்தோட நிபந்தனைகளை நீங்க தளர்த்தினது அந்த ஒப்பந்ததாரருக்கு சலுகை காட்டத்தான்னு புகார் எழுந்திருக்கு. அதனால அந்தப் பாலத்தோட வேலைகள் சரியா நடந்திருக்காதுன்னு மக்கள் மத்தியில ஒரு சந்தேகம் வந்திருக்கு..."

"இதெல்லாம் எதிர்க் கட்கள் கிளப்பி விடுகிற புரளி..." என்றார் பூபதி, தலைவரை இடைமறித்து.

"துறைச் செயலாளரோட ஆலோசனைக்கு எதிரா நீங்க செயல்படறதுக்கு முன்னே முதல்வர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கணும் இல்ல? அவர்கிட்ட நெருக்கமா இருந்தும் நீங்க இதை அவர்கிட்ட சொல்லாதது அவருக்கு உங்க மேல சந்தேகத்தை ஏற்படுத்தாதா?"

"நான் முதல்வர்கிட்ட இதை நேரடியாப் பேசி விளக்கினா அவர் புரிஞ்சுப்பாரு."

"உங்களுக்கு முதல்வரைப் பத்தித் தெரியும். அவர் ஒத்தர் மேலே வச்சிருக்கற நம்பிக்கை குறையும்படி ஏதாவது நடந்தா திரும்பவும் அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்தறது கஷ்டம்."

"இன்னிக்கு ராத்திரி நான் முதல்வரை அவர் வீட்டில பார்த்துப் பேசி அவர்கிட்ட எல்லாத்தையும் விளக்கமா சொல்லிப் புரிய வைக்கறேன்!" என்றார் பூபதி நம்பிக்கையுடன்.

"அதுக்கு அவசியம் இல்லேன்னு நினைக்கறேன். முதல்வர் உங்களை அமைச்சரவையிலேந்து நீக்கிட்டாரு. எல்லா டிவி சேனல்லேயும் இப்ப அந்தச் செய்திதான் ஓடிக்கிட்டிருக்கு!" என்ற தலைவர், பூபதி பார்ப்பதற்காகத் தன் அறையிலிருந்த டிவியை ரிமோட் மூலம் இயங்கச் செய்தார்.

அரசியல் இயல்
அதிகாரம் 70
மன்னரைச் சார்ந்தொழுதல்

குறள் 693:
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

பொருள்:
அரசரைச் சார்ந்திருப்பவர் தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் கடுமையான தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அரசருக்கு ஐயம் ஏற்பட்டபின், அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் இயலாத செயல்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Monday, April 10, 2023

692. புதிய முதலமைச்சர்!

ஆதிமூலம் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்து விட்டார்.

முதலமைச்சர் பதவியிலிருந்து உடனே விலகப் போவதாக அறிவித்த அவர் சிறிது காலத்துக்குப் பின் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

தனக்குப் பிறகு முதல்வர் பொறுப்பை ஏற்கப் போவது யார் என்பதைக் கட்சியின் உயர்மட்டக் குழு தீர்மானிக்கும் என்று அவர் அறிவித்தார். 

இருபது உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு என்பது ஆதிமூலத்தின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிதான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

முதலமைச்சராக யார் நியமிக்கப்படுவார் என்பது பற்றிப் பல பெயர்கள் அடிபட்டன. 

ஆனால் யாரும்எதிர்பாராத விதமாக, இரண்டு வருடங்களுக்கு முன்பே முதல் முறையாக அமைச்சரான பூவரசன் கட்சியின் அடுத்த முதல்வராக இருப்பார், சட்டமன்ற உறுப்பினர்களால் அவர் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று உயர்மட்டக் குழு அறிவித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

"என்ன இது, மூத்த அமைச்சர்கள் நாம இத்தனை பேர் இருக்கோம்! நம்ம எல்லாரையும் ஒதுக்கிட்டு தலைவர் பூவரசனைத் தேர்ந்தெடுத்திருக்காரு?" என்று பொருமினார் ஒரு மூத்த அமைச்சர்.

"நாம என்ன செய்ய முடியும்? அவரை மீறிக் கட்சியில எதுவும் நடக்காது. கட்சித் தலைவர்பதவியிலேந்து அவர் விலகிப்பறம் அந்தப் பதவியாவது நம்ம யாருக்காவது கிடைக்குதான்னு பாக்கலாம். தலைவர் விலகினப்பறம் கட்சி நம்ம கையிலதானே இருக்கும்? அப்ப பூவரசனைத் தூக்கியடிக்க நம்மால முடியாதா என்ன?" என்றார் மற்றொரு மூத்த அமைச்சர்.

"என்ன பூவரசா! சாதிச்சுட்டியே! தலைவர் எப்படி உன்னைத் தேர்ந்தெடுத்தாரு?" என்றான் பூவரசனின் நண்பன் அருள்.

"நான் இருபது வருஷமா அரசியல்ல இருக்கேன். மாவட்டச் செயலாளரா இருந்திருக்கேன். ரெண்டு வருஷமா அமைச்சரா இருக்கேன்.. தலைவர்கிட்ட நெருங்கிப் பழகற வாய்ப்பு கிடைச்சப்பவே தலைவரைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டேன். தலைவர் எல்லாரையும் சந்தேகப்படறவரு. தன்னைச் சுற்றி இருக்கற எல்லாரும் தன்னைக் கவிழ்த்துடுவாங்கன்னு சந்தேகபடறவரு. தானே எப்பவும் அதிகாரத்தில இருக்கணும்னு நினைக்கிறவரு. இப்ப கூட உடல்நிலை சரியில்லாத்தால ஓய்வில இருக்கணும்னு மருத்துவர்கள் சொன்னதாலதான் அவர் பதவி விலகறாரு. அவரோட நம்பிக்கையைப் பெறணும்னா பதவிக்கு ஆசைப்படக் கூடாதுன்னு ரொம்ப நாள் முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டேன். ரெண்டு தடவை அவர் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தப்ப வேண்டாம்னு சொல்லிட்டேன்.நான் அமைச்சர் பதவியில ஆசை உள்ளவன்னு அவர் நினச்சால என்னிக்காவது ஒருநாள் நான் அவரைக் கவுத்துடுவேன்னு நினைக்கிற ஆளு அவரு. அதனாலதான் ரெண்டு தடவை அமைச்சர் பதவியை வேண்டாம்னு சொல்லிட்டேன். மூணாவது தடவை அவர் வற்புறுத்திக் கேட்டப்ப ஒத்துக்கிட்டேன். இப்ப அவரே என்னை முதல்வரா ஆக்கி இருக்காரு!" என்றான் பூவரசன்.

"அது சரி. அவர் அரசில்லேந்து விலகினப்பறம் புதுசா வர கட்சித் தலைவர் உன்னை முதல்வர் பதவியிலேந்து தூக்கப் பாப்பாரே!"

"நான் சொன்னதை நீ சரியாப் புரிஞ்சுக்கல. பதவி ஆசை இல்லாதவன் மாதிரி நான் நடிக்கல. அந்த ஆசை எனக்கு வேண்டாம், தலைவருக்கு விசுவாசியா இருந்தாப் போதும்னு நினைச்சு என்மனசைப் பக்குவப்படுத்திக்கிட்டேன். அதனால நாளைக்கே என் பதவி போனாலும் நான் வருத்தப்பட மாட்டேன்!" என்றான் பூவரசன்.

அரசியல் இயல்
அதிகாரம் 70
மன்னரைச் சார்ந்தொழுதல்

குறள் 692:
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.

பொருள்:
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரிடமிருந்து நிலைத்த செல்வத்தைப் பெற்றுக் கொடுக்கும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Friday, April 7, 2023

691. அமைச்சருடன் நெருக்கம்

"என்ன புலவரே, சௌக்கியமா இருக்கீங்களா?" என்றது தொலைபேசியின் மறுபுறத்திலிருந்து வந்த குரல்.

தமிழறிஞர் வேதாசலம் அதிர்ச்சியில் ஒருகணம் பதைபதைத்து விட்டார்.

"என்னையா நீங்களேஃபோன் பண்றீங்க? உங்க செயலர்கிட்ட சொல்லி ஃபோன் பண்ணி இருந்தீங்கன்னா நான் உங்களை வந்து சந்திச்சிருப்பேனே!" என்றார் வேதாசலம் பதட்டத்துடன்.

"பரவாயில்லை. உங்களை செயலர் மூலமா கூப்பிடாம நானே கூப்பிடறேன்னு வச்சுக்கங்களேன்! இன்னிக்கு சாயந்திரம் நாலு மணிக்கு என்னை அலுவலகத்தில வந்து பாருங்க."

ஃபோனை வைத்து விட்டார் அமைச்சர் சுப்பு.

"பல வருஷங்களுக்கு முன்னே ஒரு வீட்டுமனை வாங்கினதாச் சொன்னீங்களே, அதை வித்துட்டீங்களா, இன்னும்  வச்சிருக்கீங்களா?" என்றார் சுப்பு.

'எப்போதோ பேச்சு வாக்கில் சொன்னதை நீனைவு வைத்துக் கொண்டு இப்போது ஏன் கேட்கிறார்?' என்று நினைத்துக் கொண்ட வேதாசலம், "இருக்கு!" என்றார்.

"அது இப்ப என்ன விலைக்குப் போகும்?"

"தெரியலையே! பத்துப் பதினைஞ்சு லட்சத்துக்குப் போகலாம். ஏன் கேக்கறீங்க?"

"அதை ஒத்தர் ரெண்டு கோடி ரூபாய்க்கு வங்கிக்கறதாச் சொன்னா கொடுப்பீங்களா?" என்றார் சுப்பு சிரித்துக் கொண்டே.

"அது எப்படி ஐயா?" என்றார் வேதாசலம் குழப்பத்துடன்.

"எப்படியோ! அதை ரெண்டு கோடி ரூபாய்க்கு வித்துட்டு நான் சொல்ற ஒரு பங்களாவை ரெண்டு கோடி ரூபாய்க்கு வாங்கறீங்க. உண்மையில அதோட மதிப்பு அஞ்சு கோடி ரூபா. ஆனா அதோட சொந்தக்காரரு எனக்காகஅதை உங்களுக்கு ரெண்டு கோடி ரூபாய்க்கு விக்கறாரு!" என்றார் சுப்பு..

சுப்பு என்ன சொல்ல வருகிறார் என்பது வேதாசலத்துக்குப் புரிய ஆரம்பித்தது.

"அப்புறம்?" என்றார் வேதாசலம், தயக்கத்துடன்

"அப்புறம் என்ன? அந்த வீட்டை எனக்கு வாடகைக்கு விட்டுடறீங்க. உங்களுக்கு ரொக்கமா முப்பது லட்சம் கிடைக்க ஏற்பாடு செஞ்சுடறேன். அப்புறம் பின்னால நான் எப்ப சொல்றேனோ அப்ப அதை நான் சொல்ற ஆளுக்கு ரிஜிஸ்தர் பண்ணிக் கொடுத்துடணும்!"

"நல்ல விஷயம்தானே! முப்பது லட்ச ரூபா சுளையாக் கிடைக்கும். உங்க பேர்ல வாங்கப் போற வீட்டை அவரு கேக்கறப்ப அவர் சொல்றவங்க பேருக்கு ரிஜிஸ்தர் பண்ணிக் கொடுத்துடலாமே! இதில நமக்கென்ன பிரச்னை?" என்றாள் வேதாசலத்தின் மனைவி கமலா.

"அவரு என்னைத் தனக்கு பினாமியாப் பயன்படுத்தப் பாக்கறாரு. நாளைக்கு அவர் மேல ஏதாவது கேஸ் வந்தா நானும் இல்ல மாட்டிப்பேன்? தற்செயலா அவரோட தொடர்பு கிடைச்சது. அரசியல் தலைவரோட பழக்கம் நமக்குப் பயனுள்ளதா இருக்கும்னு நினைச்சுப் பழகினேன். என்னை அறியாம ரொம்ப நெருக்கமாயிட்டேனோ என்னவோ தெரியல, என்னை பினாமியா வச்சுக்கலாம்னு அவர் நினைக்கிற அளவுக்குப் போயிடுச்சு!"

"அவருக்கு என்ன பதில் சொன்னீங்க?"

"வேணாங்க, எனக்கு பயமா இருக்குன்னு சொல்லிட்டேன். அவரும் என்னோட பயத்தைப்  புரிஞ்சுக்கிட்டாரு. என் மேல கோபமோ வருத்தமோ படலேன்னு நினைக்கிறேன். இனிமே அவர்கிட்ட ஜாக்கிரதையாப் பழகணும். அவர் கூப்பிட்டா மட்டும் போய் அளவோட பேசிட்டு வரணும். நெருப்போட பழகற மாதிரி இல்ல எச்சரிக்கையா இருக்க வேண்டி இருக்கு!" என்றார் வேதாசலம், பதைபதைப்பு இன்னும் நீங்காதவராக.

அரசியல் இயல்
அதிகாரம் 70
மன்னரைச் சார்ந்தொழுதல்

குறள் 691:
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

பொருள்:
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வது போல் அதிகமாக நெருங்கி விடாமலும், அதிகமாக நீங்கி விடாமலும் இருக்க வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Thursday, April 6, 2023

755. அப்பாவின் வீடு.

"ஏண்டா அப்பா போனதிலேந்து அந்த வீட்டைப் பூட்டியே வச்சிருக்கியே! அது பெரிய விடு. நாம அங்கே போய் இருக்கலாம் இல்ல?" என்றாள் மீனாட்சி.

"இத்தனை வருஷமா வெளியூர்ல இருந்தேன். இங்கே வந்ததும் நானே ஒரு வீடு வாங்கிட்டேன். அப்பா போனதுக்கப்பறம் நீயும் என்னோடதான் இருக்கே. அதனால அப்பாவோட வீட்டைப் பயன்படுத்தல. இந்த வீடு நமக்குப் போதாதா? பெரிய வீடுங்கறதுக்காக அங்கே போகணுமா?" என்றான் முத்து.

"அப்ப அதை வாடகைக்காவது விடலாம் இல்ல? சும்மா பூட்டி வச்சிருக்கறதில என்ன பயன்?"

"வேற ஒரு யோசனை வச்சிருக்கேம்மா!" என்றான் முத்து.

"நீ செஞ்சிருக்கறது ரொம்ப நல்ல காரியம்டா. அப்பாவோட வீட்டைப் பூட்டி வச்சிருக்கியேன்னு கவலைப்பட்டேன். இப்ப அதை ஒரு அநாதை இல்லத்துக்கு லீஸுக்கு விட்டிருக்க, அதுவும் வாடகை இல்லாம! எனக்கு இது சந்தோஷமாவும், பெருமையாகவும் இருக்கு!" என்றாள் மீனாட்சி.

"எனக்கும்தான்!" என்ற முத்து, 'ஆனா எனக்கு சந்தோஷம் மட்டும்தான், பெருமை இல்லை. வட்டிக்குக் கடன் கொடுத்துக்கிட்டிருந்த அப்பா கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத ஒத்தர்கிட்டேந்து கடனுக்கு ஈடா எழுதி வாங்கின வீடு அது. அதில குடியிருக்க எனக்கு இஷ்டமில்ல. அந்த வீட்டிலேந்து எனக்கு எந்தப் பயனும் கிடைக்கக் கூடாதுன்னுதான் அதை வாடகை இல்லாம ஒரு அனாதை இல்லத்தோட பயன்பாட்டுக்குக்  கொடுத்தேன். ஆனா இதை அம்மாகிட்ட சொல்ல முடியாதே!' என்று நினைத்துக் கொண்டான்.

பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை

குறள் 755:
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

பொருள்: 
அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கி விட வேண்டும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Wednesday, April 5, 2023

754. இரு சந்திப்புகள்

நிர்வாக அதிகாரி சரவணகுமாரின் அறையிலிருந்து  வெளியே வந்த நீலகண்டனின் முகம் வெளிறி இருந்தது.

நீலகண்டன் சென்றதும் மானேஜர் பூபதியைத் தன் அறைக்கு அழைத்த சரவணகுமார், "இப்ப வந்துட்டுப் போனாரே, இவர் யார் தெரியும் இல்ல? சாரதா இண்டஸ்ட்ரீஸ் பர்சேஸ் மானேஜர் நீலகண்டன். ரொம்ப நாளா இந்த கம்பெனிகிட்ட நாம ஆர்டர் வாங்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கோமே! இவருக்கு ரெண்டு பர்சன்ட் கமிஷன் கொடுத்தா நமக்கு ஆர்டர் கொடுக்கறாராம். இவருக்குக் கொடுக்கற கமிஷனை நாம விலையில ஏத்திக்கலாமாம். என்ன சொல்றீங்க?" என்றார்.

"நீங்க இதுமாதிரி ஏற்பாடுகளுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டீங்களே சார்!" என்றார் பூபதி.

"ஒத்துக்கிட்டிருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்களா?"

"சார்! உண்மையைச் சொல்லணும்னா, நான் உங்க இடத்தில இருந்திருந்தா, இதுக்கு ஒத்துக்கிட்டிருப்பேன்னு நினைக்கிறேன். ஆனா நீங்க சில கொள்கைகளை வச்சுக்கிட்டிருக்கீங்க. நேர்மையா சம்பாதிக்கணும், வரியையெல்லாம் ஒழுங்காக் கட்டணும், வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள்கிட்ட நேர்மையா நடந்துக்கணும். உங்ககிட்ட வேலை செய்யறவங்ககிட்டயும் நியாயமா நடந்துக்கணுங்கற மாதிரி பல கொள்கைகள். உங்ககிட்ட வேலை செய்யறது எனக்குப் பெருமையா இருக்கு சார்!" என்றார் பூபதி.

"என்னோட கொள்கைகளால நான் நிறைய வாய்ப்புகளை இழந்துட்டதா நினைக்கிறீங்களா?" என்றார் சரவணகுமார்.

ஒரு நிமிடம் யோசித்த பூபதி, "சில வாய்ப்புகளை இழந்திருக்கலாம் சார்! ஆனா நம்ம கம்பெனி ரொம்ப நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு? வேற கம்பெனிகள்ள வேலை செய்யற சில பேரை எனக்குத் தெரியும். மற்ற கம்பெனிகள்ள பல பிரச்னைகள் இருக்கு. ஆனா நம்ம கம்பெனியில எல்லாமே ஸ்மூத்தாப் போயிக்கிட்டிருக்கு. அது எனக்கு எப்பவுமே ஆச்சரியமா இருக்கும். நீங்க நேர்மையா இருக்கறதால உங்களுக்கு இயல்பாவே எல்லாம் நல்லா நடக்குதுன்னு நினைக்கிறேன். அதோட உங்க தொழில் நேர்மை உங்களை வேறு பல விதங்கள்ளேயும் நியாயமாகவும், தர்மசிந்தனையோடும், மனிதாபமானத்தோடயும் நடக்க வைக்குதுன்னு நினைக்கிறேன். இன்னிக்கு உங்களைப் பார்க்க ரெண்டு பேர் வந்தாங்க. ஒத்தரு அனாதை ஆசரமத்துக்கு நன்கொடை கேட்டு வந்தாரு. அவரு உங்ககிட்டேந்து ஒரு பெரிய தொகையை நன்கொடையா வாங்கிக்கிட்டு சந்தோஷமாப் போனாரு. இன்னொத்தரு தனக்கு கமிஷன் கொடுத்தா ஆர்டர் தரேன்னு சொல்லிட்டு நீங்க ஒத்துக்காததால ஏமாற்றத்தோட போனாரு. இந்த ரெண்டு சந்திப்புகளும் சேர்ந்து உங்க வாழ்க்கையைப் பிரதிபலிக்குதுன்னு நான் நினைக்கிறேன்!" என்றார்.

உடனேயே, "சாரி சார்! நான் கொஞ்சம் அதிகமாப் பேசி இருந்தா என்னை மன்னிச்சுடுங்க. நீங்க கேட்டதால சொன்னேன்!" என்றார் 

"இல்லை, இல்லை. நாம செய்யறது சரின்னு நமக்குத் தெரிஞ்சாலும், சில சமயம் நமக்கு மத்தவங்ககிட்டேந்து ஒரு கன்ஃப்மேஷன் வேண்டி இருக்கு இல்லையா? அதுக்காகத்தான் உங்ககிட்ட கேட்டேன். நீங்க விவரமா பதில் சொன்னதுக்கு நன்றி!" என்றார் சரவணகுமார்.

பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை

குறள் 754:
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

பொருள்: 
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப்பட்டு வந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Tuesday, April 4, 2023

753. டெண்டர் கிடைக்குமா?

"இந்த முறை டெண்டர் எனக்குக் கிடைக்காது போல இருக்கு!" என்றார் தொழிலதிபர் பாலமுருகன் தன் நண்பர் சதாசிவத்திடம்.

"ஏன்?" என்றார் சதாசிவம்.

"புதுசா ஒரு போட்டி நிறுவனம் வந்திருக்கு. அவங்க ரொம்பக் குறைஞ்ச தொகைக்கு டெண்டர் கேக்கப் போறதா எனக்குத் தகவல் வந்திருக்கு."

"நீ அந்தத் தொகைக்குக் கீழே கோட் பண்ண முடியாதா?"

"அவங்களோடது சின்ன நிறுவனம். எனக்கு இருக்கற மாதிரி செலவுகள் அவங்களுக்குக் கிடையாது. அதோட இந்த ஒரு டெண்டருக்கு நான் குறைவா கோட் பண்ணினா என்னோட மத்த கான்டிராக்ட்களுக்கும் நான் விலையைக் குறைக்கும்படியா இருக்கும். என் போட்டி நிறுவனத்துக்கே நீண்ட கால அடிப்படையில இது லாபகரமா இருக்காது. ஆனா அதைப் புரிஞ்சுக்காம இந்த டெண்டரை எப்படியாவது ஜெயிச்சுடணும்னு அவங்க வெறித்தனமா செயல்படறாங்க."

சற்று யோசித்த சதாசிவம், "டெண்டர் நோட்டீஸ் வந்துடுச்சா?" என்றார்.

"இல்லை. ரெண்டு மூணு நாள்ள வரும்னு சொல்றாங்க"  என்றார் பாலமுருகன்.

"சரி. நீ நாளைக்கு ராத்திரி எனக்கு ஃபோன் பண்ணு!" என்றார் சதாசிவம்.

றுநாள் இரவு பாலமுருகன் சதாசிவத்துக்கு ஃபோன் செய்தபோது, "முடிஞ்சுடுச்சு!" என்றார் சதாசிவம்.

"அப்படீன்னா?"

"நாளைக்குக் காலையில டெண்டர் நோட்டீஸ் வரும். அதைப் பாத்துட்டு எனக்கு ஃபோன் பண்ணு. அப்புறம்..."

"சொல்லு!" என்றார் பாலமுருகன் சற்றுப் பதட்டத்துடன்.

சதாசிவம் கூறியதைக் கேட்டதும், "அவ்வளவா?" என்றார் பாலமுருகன் அதிர்ச்சியுடன்.

மறுநாள் காலை பாலமுருகன் சதாசிவத்துக்கு ஃபோன் செய்தபோது அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார். 

"சதாசிவம்! இதை நான் எதிர்பாக்கல. இந்த வருஷம் டெண்டரோட கண்டிஷன்ளை எல்லாம் மாத்தியிருக்காங்க. என்னோட போட்டியாளரால இந்த டெண்டர்ல கலந்துக்கவே முடியாது. சொல்லப்போனா, இந்த டெண்டர் எனக்குக் கிடைக்கணுங்கறதுக்காகவே இந்த டெண்டர் நோட்டீஸ் அமைஞ்சிருக்கற மாதிரி இருக்கு!"

"பின்னே? நேத்திக்கு நான் சொன்னப்ப அவ்வளவான்னியே! சும்மாவா சொன்னாங்க ஏதோ ஒண்ணு பாதாளம் மட்டும் பாயும்னு!" என்றார் சதாசிவம் சிரித்தபடியே.

பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை

குறள் 753:
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.

பொருள்: 
பொருள் என்ற அணயா விளக்கு, நினைத்த இடத்துக்குச் சென்று ஏற்பட்டுள்ள இடையூற்றை அழித்து விடும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Monday, April 3, 2023

752. உமாவின் அண்ணன்கள்

"உன் பெரிய அண்ணனோட அறுபதாம் ஆண்டு நிறைவு விழா நல்லா நடந்தது இல்ல?" என்றான் சோமு தன் மனைவி உமாவிடம்.

"என்னத்தை நடந்தது? வந்திருந்தவங்களை சரியா வரவேற்று உபசரிக்கல. சாப்பாடு சுமார்தான். இருக்கறது ஒரே தங்கச்சி. எனக்கு ஒரு நல்ல புடவையா வாங்கி இருக்கக் கூடாது?" என்றாள் உமா.

"உன் அண்ணன் மணமேடையில உக்காந்திருந்தாரு. அப்படியும் அப்பப்ப எழுந்து வந்து வந்தவங்களைப் பார்த்து வரவேற்பு சொல்லி விசாரிச்சுக்கிட்டுத்தான் இருந்தாரு. எனக்கென்னவோ சாப்பாடு நல்லா இருந்த மாதிரிதான் இருந்தது. புடையைப் பத்தி எனக்குத் தெரியாது!" என்றான் சோமு.

"என் சின்ன அண்ணன் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்காம். அடுத்த மாசம் கல்யாணம்!" என்றாள் உமா பேச்சை மாற்றி.

"அப்படியா? எனக்குத் தெரியாதே! எப்ப நிச்சயமாச்சு? நம்மகிட்டல்லாம் ஒரு வார்த்தை கூடச் சொல்லல!" என்றான் சோமு.

"திடீர்னு நிச்சமாயிருக்கும் போல இருக்கு. அதான் கல்யாணத் தேதியைக் கூட சீக்கிரமா வச்சிருக்காங்க. பெரிய அண்ணனோட அறுபதாம் கல்யாணத்தும்போதுதான் சின்ன அண்ணன் எங்கிட்ட இதைச் சொன்னாரு!"

"எங்க சின்ன அண்ணனோட பொண்ணு கல்யாணம் எவ்வளவு சிறப்பா நடந்துது பாத்தீங்களா?" என்றாள் உமா தன் கணவனிடம் பெருமையுடன்.

"கல்யாணம் நல்ல ஆடம்பரமாத்தான் நடந்தது. ஆனா கல்யாணத்துக்கு வந்தவங்களை வாங்கன்னு கூட யாரும் கூப்பிடல. உங்க அண்ணனும், அண்ணியும் மணமேடையை விட்டு இறங்கவே இல்லை!" என்றான் சோமு.

"பெண்ணோட கல்யாணம்னா அவங்க மணமேடையில இருக்க வேண்டாமா? உங்களுக்கு ஏதாவது குற்றம் சொல்லணும்!"

"ஆமாம். சாப்பாடு எப்படி இருந்தது?"

"பரவாயில்லை."

"சாப்பாடு நல்லா இல்லேன்னு நிறைய பேர் பேசிக்கிட்டதை நான் கேட்டேன்!"

"கல்யாணத்தில நிறைய பேருக்கு சமைக்கறப்ப எல்லாமே பிரமாதமா இருக்கும்னு சொல்ல முடியாது!"

"நல்லாதான் சப்பைக் கட்டு கட்டற! அது சரி. உனக்குப் புடவை எதுவும் வாங்கிக் கொடுக்கலியா உங்க அண்ணன்?"

"கல்யாணத் தேதியை சீக்கிரமே வச்சுட்டதால எல்லாருக்கும் புடவை வாங்க நேரம் இல்லையாம். அதனால அண்ணன் புடவைக்கு பதிலா ஐநூறு ரூபாய் பணம் கொடுத்துட்டாரு!"

"உன் பெரிய அண்ணன் அவரோட அறுபதாம் கல்யாணத்துக்காக உனக்கு வாங்கிக் கொடுத்த புடவையோட விலை ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு மேல இருக்கும் இல்ல?" என்றான் சோமு.

உமா மௌனமாக இருந்தாள்.

"உன் பெரிய அண்ணன் தன் அறுபதாம் கல்யாணத்தில உனக்குப் புடவை வாங்கிக் கொடுக்கறதிலேந்து, வந்தவங்களை உபசாரம் செய்யறது, சாப்பாடு நல்லா இருக்கும்படி பாத்துக்கறதுன்னு எல்லாத்தையும் கவனமா பாத்துத் பாத்து செஞ்சாரு. ஆனா நீ அவர் மேல ஆயரம் குற்றம் சொன்ன. ஆனா உன் சின்ன அண்ணன் தன் பொண்ணு கல்யாணத்தில நம்மை மதிச்சு நடந்துக்கல, ஒரே தங்கையான உனக்குப் புடவை வாங்கிக் கொடுக்கல, கல்யாணச் சாப்பாடு நல்லா இருக்கணுங்கறதில கூட அக்கறை எடுத்துக்கல. ஆனா நீ அவரைப் புகழற! நான் சுட்டிக் காட்டின  குறைகளையெல்லாம் இல்லைன்னு சாதிக்கற. இதுக்கு ஒரே காரணம்தான்!" என்றான் சோமு.

"என்ன காரணம்?" என்றாள் உமா.

"உன் பெரிய அண்ணன் அவ்வளவு வசதியானவர் இல்ல. ஆனா உன் சின்ன அண்ணன் பணக்காரர்!"

"அப்படியெல்லாம் இல்லை..."

"அப்படித்தான். ஆனா இது உன்னோட தப்பு இல்ல. ஒத்தன் பணக்காரனா இருந்தா அவனைத் தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடறதும், ஒத்தன் ஏழையா இருந்தா அவனை ஏளனமாப் பேசறதும்தானே இந்த உலகத்தோட இயல்பாகவே இருக்கு!" என்றான் சோமு.

பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை

குறள் 752:
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

பொருள்: 
பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

 

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...