அதிகாரம் 39 - இறைமாட்சி

திருக்குறள் 
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 39
இறைமாட்சி

381. இருவரில் ஒருவர்

"சி ஈ ஓ போஸ்டுக்கு ரெண்டு பேரை ஷார்ட்லிஸ்ட் பண்ணி இருக்கேன். அதைப் பத்தி உங்ககிட்ட கலந்து பேசணும்" என்றார் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன்.

"நீங்களே ஒத்தரை செலக்ட் பண்ணி இருக்கலாமே? எங்கிட்ட கலந்து பேச வேண்டியது அவசியம் இல்லையே?" என்றார் நிறுவனத் தலைவர் அகர்வால்.

"இல்லை. நம்ப கம்பெனியில இருக்கிற அஞ்சு டிவிஷன்ல, ரெண்டு டிவிஷனோட ஜெனரல் மானேஜர்களை ஷார்ட்லிஸ்ட் பண்றது சுலபமா இருந்தது. ஆனா அவங்க ரெண்டு பேருக்குள்ள ஒத்தரை செலக்ட் பண்றது ரொம்ப கஷ்டமா இருந்தது. ரெண்டு பேரும் கம்பெனிக்கு நிறைய கான்ட்ரிபியூட் பண்ணியிருக்காங்க. நான் சில பராமீட்டர்ஸைப் பயன்படுத்தி ஒரு முடிவு எடுத்திருக்கேன். அதை உங்ககிட்ட டிஸ்கஸ் பண்றது நல்லதுன்னு நெனச்சேன். முதல்ல ரெண்டு பேரோட ப்ரொஃபைல் பாருங்க. சுருக்கமா எழுதியிருக்கேன்."

அகர்வால் இருவரைப் பற்றிய விவரங்களையும் விரைவாகப் படித்து முடித்தார். 

"நீங்க சொல்றது கரெக்ட்தான். ரெண்டு பேருமே சமமா இருக்கற மாதிரிதான் இருக்கு. நீங்க யாரை செலக்ட் பண்ணினீங்க? என்ன பராமீட்டர்ஸைப் பயன்படுத்தினீங்க?"

"குமார், ரமேஷ் ரெண்டு பேல குமாரோட டிவிஷன் கொஞ்சம் பெரிசு. லாபமும் அதிகம் வருது. அதனால குமார்தான் இயல்பான சாய்ஸாத் தெரிவாரு. ஆனா ரெண்டு பேரும் எங்கிட்ட நேரடியா ரிப்போர்ட் பண்றதாலயும், அவங்களுக்குக் கீழே வேலை செய்யற பல எக்சிக்யூட்டிவ்ஸ் கிட்ட நான் அடிக்கடி பேசறதாலயும் எனக்கு சில விஷயங்கள் தெரியும்."

"அப்ப ரமேஷ்தான் உங்க சாய்ஸ்னு தெரியுது. சஸ்பென்ஸ் வைக்காம சொல்லிட்டீங்களே!" என்றார் அகர்வால் சிரித்துக் கொண்டே.

"சஸ்பென்ஸ் இருக்கா இல்லையான்னு உங்களுக்கு நான் முழுசா  சொன்னப்பறம்தான் தெரியும்!" என்றார் சுந்தரேசனும் சிரித்தபடியே. "ஆனா, சஸ்பென்ஸ் இருக்காங்கறதை விட நான் சொல்ற விஷயங்கள்ள  சப்ஸ்டன்ஸ் இருக்கான்னு நீங்க சொல்லணும்ங்கறதாலதான் உங்ககிட்ட என் அணுகுமுறையை விவரமா சொல்றேன்."

"சொல்லுங்க."

"நான் ஆறு பராமீட்டர்ஸ் எடுத்துக்கிட்டேன். முதல்ல ரெண்டு பேரோட மார்க்கெட்டிங் டீமையும் ஒப்பிட்டுப் பாத்தேன். ஒரு நாட்டுக்கு ராணுவம் மாதிரிதான் ஒரு நிறுவனத்துக்கு மார்க்கெட்டிங் டீம். அதோட வலிமைதான் நிறுவனத்தோட வலிமையைத் தீர்மானிக்கும். குமாரோட மார்க்கெட்டிங் டீம் பெரிசு. அவங்களுக்கு வருமானம், இன்சென்ட்டிவ் எல்லாம் அதிகம். ஆனா ரமேஷோட மார்க்கெட்டிங் டீம் உற்சாகமா இருக்கற மாதிரி குமார் டீம் இல்ல. இத்தனைக்கும் ரமேஷோட டிவிஷன்லதான் மார்க்கெட்டிங் ரொம்ப கஷ்டம். ஆனா அவங்க எல்லாரும் உற்சாகமா வேலை செய்யறாங்க. இதுக்குக் காரணம் ரமேஷ் தன் மார்க்கெட்டிங் டீம்ல இருக்கறவங்களோட அடிக்கடி பேசி அவங்க பிரச்னைகளைக் கேட்டு, அவங்களை உற்சாகப்படுத்தறது."

"இப்பவே குமாரோட விக்கட் போயிடுச்சே. சஸ்பென்ஸுக்கு வாய்ப்பே இல்லையே!" என்றார் அகர்வால். 

"சப்ஸ்டன்ஸ் சார்! அது இருக்கான்னு பாருங்க. ரெண்டாவது விஷயம் ஊழியர்கள் மனநிலை. வெளிப்படையா, ரெண்டு டிவிஷன்லியுமே எல்லாரும் சந்தோஷமா இருக்கறமாதிரிதான் இருக்கு. ஆனா குமார் டிவிஷன்ல வேலையை விட்டுப் போறவங்களும், அதுக்கு பதிலா புதுசா சேரறவங்களும் அதிகம்."

"எம்ப்ளாயீ டர்னோவர்னு  சொன்னாலே எனக்குப் புரியும் சார். எனக்கும் கொஞ்சம் மானேஜ்மென்ட் ஜார்கன்லாம் தெரியும்!" என்றார் அகர்வால் சிரித்தபடி.

"சார்! எனக்குத் தெரிஞ்சது எதுவும் உங்களுக்குத் தெரியாம இருக்காதுன்னு எனக்குத் தெரியும். ஜார்கன் எதுவும் பயன்படுத்த வேண்டாம்னுதான் அப்படிச் சொன்னேன். மூணாவது விஷயம் ஊழியர்களுக்கான வசதிகள். நாம ஒவ்வொரு டிவிஷனும் சுதந்திரமா பல விஷயங்களை முடிவு பண்ண விட்டிருக்கோம். ரமேஷோட டிவிஷன்ல லாபம் குறைவானாலும், ஊழியர்களுக்கு சலுகைகள் அதிகம் இருக்கு, காட்டீன் சப்ஸிடி கூட குமார் டிவிஷனை விட அதிகம்."

"அதனாலதான் லாபம் குறைவா இருக்கோ என்னவோ!"

"இல்லை சார். இது ஊழியர்களோட உற்சாகம் சம்பந்தப்பட்ட விஷயம். குமார் சிலவகை ஊழியர்கள் முக்கியமானவங்கன்னு நினைச்சு செயல்படற மாதிரி அவங்களுக்கு அதிகச் சலுகை, மத்தவங்களுக்கு குறைந்த சலுகைங்கற கொள்கையைப் பின்பத்தற மாதிரி தெரியுது. உதாரணமா, அட்மினிஸ்ட்ரேஷன்ல இருக்கறவங்க ரொம்பப் புறக்கணிக்கப்பட்டவங்களா உணரறாங்க."

"நாலாவது, ஆலோசகர்கள். குமார் ஒரு சில சீனியர் எக்ஸிக்யூட்டிவ்களை மட்டும்தான்  கன்சல்ட் பண்றாரு. ரமேஷ் அப்படி இல்ல. அவர் எல்லாரோட யோசனைகளையும் காது கொடுத்துக் கேக்கறவரு. நல்ல யோசனை யார் சொன்னாலும் அதைப் பரிசீலனை பண்ற இயல்பு ரமேஷுக்கு உண்டு."

"இன்னும் என்ன சார் இருக்கு?"

"இன்னும் ரெண்டு இருக்கு சார்! நீங்க எதிர்பாக்கற சஸ்பென்ஸும் இருக்கு! சஸ்பென்னு சொல்றதை விட சர்ப்ரைஸ்ன்னு சொல்றது பொருத்தமா இருக்கும். அஞ்சாவது விஷயம், கான்டாக்ட்ஸ். ரமேஷுக்கு பல நிறுவனங்களோட எக்ஸிக்யூடிவ்ஸோட நெருக்கம் இருக்கு. ஏதாவது பிரச்னைன்னா அவங்ககிட்ட உதவி கேக்க முடியும் ஒரு தடவை மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டப்ப,  ரமேஷ் அவருக்குத் தெரிஞ்ச ஒரு நிறுவனத்திலேந்து கொஞ்சம் மூலப்பொருள் வாங்கி சேமிப்பில வச்சுட்டாரு எனக்குக் கூட இது அப்புறம் தான் தெரியும்."

"சரி. ஆறாவது?"

"இது ரொம்ப முக்கியம்னு நினைக்கறேன். முன்னெச்சரிக்கை. வரக் கூடிய ஆபத்துகளுக்கு எதிரான பாதுகாப்பு. ரமேஷ்கிட்ட இந்தப் பாதுகாப்பு உணர்வு இருக்கு. ஒருவேளை நம்ம தயாரிப்புக்கான டிமாண்ட் குறைஞ்சுட்டா, அல்லது போட்டியா வேற மாற்றுப் பொருள் வந்துட்டா, அதை எப்படி சமாளிக்கறதுங்கறதுக்காக ஒரு ரிஸர்ச் டிபார்ட்மெண்ட்டே வச்சிருக்காரு. லாபம் குறைய இதுவும் ஒரு காரணமா இருக்கலாம். ஆனா இது ஒரு இன்ஷ்யூரன்ஸ் மாதிரிதானே?"

"ஆகக்கூடி ரமேஷ் உங்க ஆறு பராமீட்டர்ஸ்லேயும் குமாரை மிஞ்சிட்டாரு. அதனால அவர்தான் அடுத்த சி ஈ ஓ. இதுதானே உங்க முடிவு?"

"என்னோட அணுகுமுறை சரியான்னு உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னுதான் உங்ககிட்ட இதை விவரமா சொன்னேன்."

"பிரில்லியண்ட். நீங்க எம் பி ஏ இல்லையே! இதையெல்லாம் எங்கே படிச்சீங்க? அது இருக்கட்டும். சஸ்பென்ஸ் அல்லது சர்ப்ரைஸ் இருக்கும்னீங்களே, அது என்ன?"

"நீங்க என்னோட அப்ரோச் தப்புன்னு சொல்லியிருந்தீங்கன்னா அதுதான் சஸ்பென்ஸா இருந்திருக்கும்!"

"இல்லை. வேற என்னவோ இருக்குன்னு நினைக்கறேன். நீங்க பின்பற்றின முறையை ஒரு புத்தகமா எழுதலாமே!"

"முடியாது சார்! ஏற்கெனவே ஒத்தர் எழுதிட்டாரு."

ஓ! இதுதான் சர்ப்ரைஸா? அமெரிக்கன் ஆதர்தானே?"

"இல்லை சார். இந்தியன் ஆதர்தான். அதுவும் ரெண்டாயிரம் வருஷம் முன்னாலேயே எழுதிட்டாரு - தமிழ்ல" என்றார் சுந்தரேசன்.

குறள் 381:
படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

பொருள்:
படை, குடிமக்கள், அமைச்சர்கள், (குடிமக்களுக்கு) உணவு, பிற அரசர்களுடன் நட்பு, பாதுகாப்பு என்ற ஆறு அங்கங்களும் சிறப்பாக உள்ளவனே அரசர்களில் சிறந்தவன்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

382. படையெடுப்பு

"முல்லைவன நாட்டுக்குச் சென்ற நம் ஒற்றர்கள் என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறார்கள்?" என்றான் மன்னன்மணிவர்மன்.

"நல்ல செய்திதான் மன்னா! அவர்கள் படைபலம் நம்மில் பாதி அளவுக்குக் கூட இல்லையாம்!" என்றார் அமைச்சர்.

"அப்படியானால் போரில் அவர்களை வீழ்த்துவது சுலபம், இல்லையா?" என்றான் மணிவர்மன் மகிழ்ச்சியுடன்.

"இருக்கலாம்" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"ஏன் தயங்குகிறீர்கள்? அண்டை நாட்டு அரசர் யாராவது அவர்கள் உதவிக்கு வருவார்களா?"

"அப்படியெல்லாம் இல்லை. தங்களைப் பகைத்துக் கொள்ளும் துணிவுள்ள அரசர்கள் யார் இருக்கிறார்கள்?"

"பின் ஏன் இந்தத் தயக்கம்?"

"முல்லைவன அரசர் சிங்கவர்மருக்கு வேறு சில பலங்கள் இருப்பதாக நம் ஒற்றர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்."

"வேறு என்ன பலம்? புஜபலமா? நான் என்ன சிங்கவர்மனுடன் மல்யுத்தமா செய்யப் போகிறேன்?"

"இல்லை மன்னா. நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையுடன் கேட்டு, பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள்."

"சொல்லுங்கள் அமைச்சரே! உங்கள் கருத்தை நான் எப்போதுமே மதிப்பவனாயிற்றே?"

"அவருடைய பலங்கள் என்று நான் குறிப்பிடுவது அவருடைய குணங்களை. முதலில் அவரது துணிவு. நம்மைச் சுற்றியுள்ள எல்லா மன்னர்களும் தங்களுக்கு அஞ்சி நம் நாட்டுக்கு கப்பம் கட்டி வருகிறார்கள். ஆனால் சிங்கவர்மர் மட்டும் நமக்கு அடிபணிய மறுத்து வருகிறார். படையெடுத்து வந்து அவருடைய நாட்டைப் பிடித்து விடுவோம் என்று நாம் எச்சரித்தபோதும் அவர் சற்றும் அஞ்சவில்லை.

"இரண்டாவது, அவருடைய கொடைக்குணம். தான் அரண்மனையில் மிக எளிமையாக வாழ்ந்து கொண்டு, குடிமக்களுக்கு வாரி வழங்கி வருகிறார் அவர். தன் குடிமக்கள் யார் வீட்டிலாவது அடுப்பு எரியாவிட்டால் தன் அரண்மனையிலும் அடுப்பு எரியக் கூடாது என்று அவர் உத்தரவே போட்டிருக்கிறார். அதனால் அவருடைய குடிமக்கள் அவரை தெய்வமாக நினைத்து வணங்குகிறார்கள்.

"மூன்றாவதாக, அவர் மிகவும் அறிவுடையவர் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன்."

"அந்த விஷயத்தில் நானும் சிங்கவர்மனுக்குக் குறைந்தவன் இல்லை!" என்று குறுக்கிட்டுச் சொன்னான் மணிவர்மன்.
"மன்னா..."

"ஆமாம். அமைச்சரே! எனக்கு அறிவு இருக்கிறதோ இல்லையோ, உங்களைப் போன்ற ஒரு அறிவார்ந்த அமைச்சரின் ஆலோசனை எனக்கு அறிவாக அமைந்திருக்கிறதே!" என்றான் மன்னன் சிரித்தபடி.

"மன்னரே! அடக்கத்தில் தங்களை மிஞ்சக்கூடிய மன்னர் இவ்வையகத்தில் இல்லை. பல நாடுகளைப் பணிய வைத்து சக்கரவர்த்தியாகத் திகழும் தாங்கள் என் போன்ற எளிய மனிதனின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்பதே என் பாக்கியம்!" என்றார் அமைச்சர் உணர்ச்சிப் பெருக்குடன்.

"மேலே சொல்லுங்கள். இன்னும் எத்தனை குணங்கள் இருக்கின்றன சிங்கவர்மனுக்கு? அவை எப்படி அவனுக்குப் போரில் உதவப் போகின்றன?"

"நான்கு முக்கியமான குணங்களைத்தான் குறிப்பிட்ட விரும்பினேன். இந்த குணங்கள் இருப்பவரை வீழ்த்துவது கடினம் என்று அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். தங்களிடமும் இந்த குணம் இருப்பதால்தான் தாங்கள் ஒரு சிறிய நாட்டுக்கு அரசராக இருந்தாலும் ஒரு பேரரசராக விளங்குகிறீர்கள்."

"என்னைப் புகழ்வது இருக்கட்டும். நான்காவது குணம் என்ன என்று இன்னும் நீங்கள் இன்னும் கூறவே இல்லையே!"

"நான்காவது குணம் ஊக்கம் அல்லது விடாமுயற்சி. சிங்கவர்மர் சிறுவனாக இருந்தபோதே அவருடைய தந்தை இறந்து விட்டார். அவரை நாடு கடத்தி விட்டு அவருடைய உறவினர்கள் நாட்டை ஆண்டு கொண்டிருந்தனர். சிங்கவர்மர் வாலிபராக வளர்ந்ததும் பலமுறை முயன்று தோற்ற பின் அவர்களை வென்று ஆட்சியைப் பிடித்தார்."

"ஒரு மண்டபத்தை நான்கு வலிய தூண்கள் தாங்குவதுபோல் இந்த நான்கு குணங்களும் சிங்கவர்மனைக் காக்கின்றன. அதனால், சிங்கவர்மனின் படைபலம் குறைவாக இருந்தாலும் அவனைத் தோற்கடிக்க முடியாது என்று சொல்ல வருகிறீர்கள். அப்படித்தானே?" என்றான் மணிவர்மன்.

"அரசே! தங்கள் அறிவுக்கூர்மை பற்றி நான் சொன்னது வெறும் புகழ்ச்சியல்ல என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்."

"இல்லை அமைச்சரே. இனிமேல்தான் நிரூபிக்கப் போகிறேன். இத்தகைய அரிய குணங்கள் கொண்ட சிங்கவர்மன் ஆளும் நாட்டை நம் நட்பு நாடாக ஆக்கிக் கொள்ளப் போகிறேன்" என்றான் மணிவர்மன்.

குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

பொருள்:
துணிவு, கொடைக்குணம், சிந்தித்துச் செயல்படுதல், விடாமுயற்சி ஆகிய நான்கு குணங்கள் ஒரு அரசனுக்கு இயல்பாக இருக்க வேண்டியவை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


383. முன்னாள் முதல்வர் 

"இவர் 'நாம்' பத்திரிகையிலேந்து வந்திருக்காரு" என்று என்னை அறிமுகப்படுத்தினார் ஆறுமுகத்தின் செயலர்.

"வாங்க" என்று என்னை வரவேற்ற ஆறுமுகம், "ஆறு மணிக்கே வந்துட்டீங்களே!" என்றார்.

"நீங்க சொன்ன நேரம்தானே!" என்றேன் நான்.

"என்னோட ஒரு நாள் முழுக்க இருந்து பாக்க வந்திருக்கீங்க. என் நாள் ஆறு மணிக்கே ஆரம்பிச்சுடும். அதனாலதான் ஆறு மணிக்கு வரச் சொன்னேன். ஆனா உங்க பத்திரிகை வேலை ஒன்பது மணிக்கு மேலதானே?"

"இல்லை சார். இப்பல்லாம் எங்க வேலையும் 24 மணி நேரம்னு ஆயிடுச்சு" என்றேன் நான்.

"உங்க கட்டுரைக்கு 'ஆறுமுகம் - ஆறு முதல் ஆறு வரை'ன்னு தலைப்பு  வச்சுக்கலாம். ஆனா என் நாள் முடிய இரவு மணி பதினொண்ணு ஆயிடும்" என்றார் ஆறுமுகம்.

"உங்களுக்கு மறுப்பு இல்லேன்னா, நீங்க தூங்கப் போற வரை உங்களோட இருக்கேன்" என்றேன்.

"இருங்க. என் கனவிலே கூட இருந்து பாருங்க. அப்பத்தான் கனவில கூட நான் மக்களைப் பத்தித்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன்னு உங்களுக்குத் தெரியும்" என்றார் ஆறுமுகம் சிரித்தபடி.

ஆறுமுகம் எதிர்க்கட்சியின் தலைவர். அவர் ஆட்சியை இழந்து ஒன்பது வருடங்கள் ஆகி விட்டன. ஆயினும் இந்த ஒன்பது ஆண்டுகளில் அவரைப் பற்றிய செய்தி இல்லாமல் ஒரு நாள் கூட செய்திப் பத்திரிகைகள் வெளிவந்ததில்லை.

அடுத்த ஆண்டு நடக்கப் போகும் தேர்தலில் அவர் கட்சி பெரும் வெற்றி பெற்று அவர் மீண்டும் முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் ஊடகங்கள் அவர் மீது இன்னும் அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சத் தொடங்கின.

எங்கள் பத்திரிகையில் 'முன்னாள் முதல்வருடன் ஒருநாள்' என்ற தலைப்பில் அவருடன் ஒருநாள் முழுவதும் இருந்து அவரைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட முடிவு செய்தோம்.

ஆறுமுகம் தன் செயலரை அழைத்து தன் அன்றைய பணிகளைப் பற்றிக் கேட்டுக் கொண்டார். பிறகு அவரது பணிகள் சுறுசுறுப்பாகத் தொடங்கின. பிற்பகலில் ஒரு மணி நேரம் உறங்கியதைத் தவிர, தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டுதான் இருந்தார்.

அவர் சொன்னது போலவே அவர் பணிகள் முடிய இரவு மணி 11 ஆகி விட்டது.

நான் விடைபெறும்போது,"நீங்க என்ன எழுதப் போறீங்கன்னு தெரியாது. ஆனா, ஒருநாள் இருந்து பாத்ததில என்னைப் பத்தி என்ன நினைக்கறீங்கன்னு சுருக்கமா சொல்லுங்க. என் தூங்கும் நேரம் 10 நிமிஷம் தள்ளிப் போகும். பரவாயில்ல" என்றார் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி.

"சார்! நீங்க முதல்வரா இருந்தப்ப உங்க செயல்பாடுகளை நான் கவனிச்சதில்ல. அப்ப நான் சின்னவன். ஆனா இன்னிக்கு நான் உங்களைப்  பாத்ததில, ஒரு நாட்டின் தலைவருக்குத் தேவையான ஒரு முக்கியமான குணம் உங்ககிட்ட இருக்கறதை கவனிச்சேன்."

"என்ன அது?"

"செய்ய வேண்டியவற்றை உடனே செய்யறது. இன்னிக்கு பல முறை உங்க நிகழ்ச்சி நிரலைத் தள்ளி வச்சுட்டு சில முக்கியமான வேலைகளை கவனிச்சீங்க. உதாரணமா, உங்களோட கூட்டணி வச்சுக்க விருப்பம் தெரிவிச்சு 'தமிழ் அரசு கட்சி'யின்  தலைவர் ஒரு பேட்டியில சொன்னதும் உடனே அவருக்கு ஃபோன் பண்ணி அவரை வரவழைச்சுப் பேசி அவரை கமிட் பண்ண வச்சீங்க. ஆளும் கட்சி கூட அவரைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி பண்றாங்கங்கற நிலையில உங்க உடனடி நடவடிக்கை உங்களுக்கு பலம் சேர்த்திருக்கு. இது மாதிரி இன்னும் சில விஷயங்கள்ள உடனே நீங்க செயல்பட்டதை நான் பாத்தேன். ஏன், இப்ப கூட, நான் எழுதப் போறதை என் கட்டுரை வந்தப்பறம் படிச்சுக்கலாம்னு நினைக்காம உங்க தூக்கத்தைத் தள்ளிப் போட்டுட்டு நான் என்ன நினைக்கிறேன்னு தெரிஞ்சுக்க விரும்பறீங்க. இதனால உங்களுக்கு எந்தப் பயனும் இருக்காதுன்னாலும், என் கருத்தைத் தெரிஞ்சுக்க விரும்பறீங்க."

"பயன் இருக்காதுன்னு சொல்லாதீங்க. நான் என்ன செய்யறேங்கறதை விட, நான் செய்யறதை மத்தவங்க எப்படிப் பாக்கறாங்கங்கறதுதான் என் அரசியல் வெற்றியைத் தீர்மானிக்கும். உங்களை மாதிரி படிச்ச இளைஞர்களோட பார்வை எப்படின்னு தெரிஞ்சுக்கறதுல எனக்கு எப்பவுமே ஆர்வம் உண்டு."

"நீங்க இப்படிச் சொன்னதும் உங்களோட இன்னொரு குணத்தைக்  குறிப்பிடணும்னு நினைக்கறேன். விஷயங்களைத் தெரிஞ்சுக்கற ஆர்வம். கல்லூரியில படிக்காட்டாலும் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை மாதிரி பல விஷயங்களைப் பத்தி நீங்க நுணுக்கமா கருத்து சொல்றதை நான் பல தடவை கவனிச்சிருக்கேன். இன்னிக்கு ஒத்தர் வந்து பொருளாதாரம், தொழில்நுட்பம், வெளிநாட்டு அரசியல் மாதிரி விஷயங்களைப் பத்தி ஒரு மணி நேரம் உங்களுக்கு பிரீஃப் பண்ணினாரு. நீங்க அவர்கிட்ட பல நுணுக்கமான கேள்விகளைக் கேட்டு தெளிவுபடுத்திக்கிட்டீங்க."

"ஆமாம். வாரம் ஒருமுறை அவர் வருவார். அவர் நிறையப் படிக்கிறவர். பல வருஷமா நான் அவர்கிட்ட இந்த டியூஷன் எடுத்துக்கறேன்" என்று சொல்லிச் சிரித்தார் ஆறுமுகம்.

"இன்னொரு விஷயம் நான் சொல்லியே ஆகணும். உங்க துணிவு பத்தி எல்லாருக்கும் தெரியும். இன்னிக்கு அதை நான் பாத்தேன். பிரதமர் சென்னைக்கு வரச்சே உங்க கட்சி கறுப்புக் கொடி காட்டும்னு அறிவிச்சிருந்தீங்க. அப்படிக் காட்டறவங்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வோம்னு இன்னிக்கு முதல்வர் சொன்னாரு. அவர் அறிக்கை வந்து அஞ்சு நிமிஷத்துக்கெல்லாம் நீங்களே கறுப்புக் கொடிப் போராட்டத்துக்குத் தலைமை ஏற்கப் போவதா அறிவிச்சுட்டீங்க. உங்க துணிவு உங்க கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகம் கொடுக்கும்."

"ரொம்ப நன்றி நண்பரே. உங்க கட்டுரையில என்னைப் பத்தின நெகட்டிவ் விஷயங்களும் வரும்னு நினைக்கறேன். அதையெல்லாம் கட்டுரை வரும்போது படிச்சுக்கறேன்! காலம் தாழ்த்தாம செயல்பட வேண்டியதைப் பத்தி நீங்க சொன்னீங்க. என் தூக்கத்தையும் இன்னும் காலம் தாழ்த்தாம செய்ய விரும்பறேன். போயிட்டு வாங்க. மறுபடி சந்திப்போம். வாழ்த்துக்கள்" என்று எனக்கு விடை கொடுத்தார் ஆறுமுகம்.

குறள் 383:
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு

பொருள்:
காலம் தாழ்த்தாமை, கல்வியறிவு, துணிவு இந்த மூன்று குணங்களும் ஒரு நாட்டை ஆள்பவருக்கு எப்போதும் இருக்க வேண்டிய குணங்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


384. ஊர்ப் பஞ்சாயத்து


"தலையாரிங்கறவரு ஊருக்குக் காவலா இருந்து, ஊர் ஜனங்க கட்டுப்பாட்டோட இருக்கும்படி பாத்துக்கணும். அவரே தப்புப்  பண்ணினா என்ன செய்யறது?" என்றார் மாணிக்கம்.

"அவரு தப்புப் பண்ணினாரா இல்லையான்னு தீர்மானிக்கத்தானே பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கோம்? விசாரிப்போம்!" என்றார் பஞ்சாயத்துத் தலைவர் கணேசன்.

"இந்த ஆளு என்னை அரிவாளை எடுத்து வெட்ட வந்தான் ஐயா!" என்றார் மாணிக்கம் ஆவேசத்துடன்.

"என்னய்யா? அரிவாளால வெட்டப் போனியா?" என்றார் கணேசன்.

"வெட்டப் போகல ஐயா! ஆனா அரிவாளை ஓங்கினேன்" என்றான் தலையாரி மாரிமுத்து.

"பாத்தீங்களா? அவனே ஒத்துக்கறான். முதல்ல அவனை இந்தப் பதவியிலேந்து தூக்குங்க!" என்றார் மாணிக்கம்.

"இங்க பாருங்க மாணிக்கம். பஞ்சாயத்துதான் உத்தரவு போடணும். நீங்க பஞ்சாயத்துக்கு உத்தரவு போடக் கூடாது" என்ற கணேசன், "சரி. இது நடந்தப்ப பாத்தவங்க யாராவது இருக்காங்களா?" என்றார்.

"என்னோட ஆளுங்க பத்து பேரு இருந்தாங்க. அவங்க இருக்கறப்பவே என்னை வெட்ட வந்தான் அவன். எவ்வளவு திமிரு இருக்கணும்?" என்றார் மாணிக்கம்.

"சரி. மாரிமுத்து, மாணிக்கம் ரெண்டு பேரும் தெருக்கோடியில் போய் நில்லுங்க. சாட்சிகளை விசாரிச்சுட்டு, உங்களைக் கூப்பிடறோம்" என்றார் கணேசன்.

"ஐயா! அவங்க பத்து பேரும் அவரோட ஆளுங்க. அவங்க அவருக்கு சாதகமாத்தான் பேசுவாங்க" என்றான் மாரிமுத்து.

"அதுக்கு என்ன செய்யறது? பக்கத்தில இருந்து பாத்தவங்களைத்தானே சாட்சிக்கு கூப்பிட முடியும்? யாரு உண்மை பேசறாங்க, யாரு பொய் பேசறாங்கன்னு எங்களால கண்டுபிடிக்க முடியும்" என்றார் கணேசன்.

அரை மணி நேரம் கழித்து அவர்கள் இருவரையும் அழைத்து வரச் சொன்னார் கணேசன்.

"பத்து பேரையும் தனித்தனியா விசாரிச்சோம். அவங்க மாணிக்கத்தோட ஆளுங்கங்கறதால அவருக்கு சாதகமாத்தான் பேசினாங்க. ஆனா ஒவ்வொத்தர்கிட்டயும் தனித்தனியாப் பேசினதில என்ன நடந்ததுங்கறதை நாங்க தெளிவாப் புரிஞ்சுக்கிட்டோம்.

"நேத்து ராத்திரி, மாணிக்கம் தன் ஆட்களை வச்சு ஊர்க் கண்மாயிலேந்து சின்ன கால்வாய் வெட்டித் தன் வயலுக்குத் தண்ணி பாய்ச்சி இருக்காரு. அப்ப ரோந்து வந்த தலையாரி மாரிமுத்து அதைப் பாத்துட்டு அதைத் தடுத்திருக்கான். மாணிக்கத்தோட ஆளுங்க தாங்க வெட்டின இடத்தை மண் போட்டு மூடிட்டு  வீட்டுக்குப் போயிட்டாங்க.   

"இன்னிக்குக் காலையில, மாணிக்கம் தன் ஆட்களோட மாரிமுத்துவைத் தேடித் போயிருக்காரு. ஊர்ப் பஞ்சாயத்தில புகார் கொடுக்காதேன்னு அவன்கிட்ட சொல்லி இருக்காரு. ஆனா புகார் கொடுக்கப் போறதா மாரிமுத்து சொல்லி இருக்கான். மாணிக்கம் அவனுக்குப் பணம் கொடுத்து அவன் வாயை மூடப் பாத்திருக்காரு. ஆனா மாரிமுத்து அதுக்கு மசியலை. அதனால மாணிக்கம் கோபப்பட்டு அவனை ரொம்ப மோசமாத் திட்டி இருக்காரு. அவனோட குடும்பத்தைப் பத்தியும் கேவலமாப் பேசி இருக்காரு. தன் குடும்பத்தைப் பத்தி மாணிக்கம் தப்பாப் பேசினதால மாரிமுத்துவுக்குக் கோபம் வந்து அரிவாளை ஓங்கி இருக்கான். இப்ப நாங்க என்ன செய்யணும்னு சொல்லுங்க" என்றார் கணேசன்.

யாரும் பதில் சொல்லவில்லை.

"இதில எனக்கு நாலு விஷயம் தெரியுது. முதல்ல, மாரிமுத்து நியாயமா நடந்துக்கிட்டிருக்கான். ரெண்டாவது, பணம் கொடுத்தப்ப வாங்காம இருந்து, தான் நியாயத்துக்கு விரோதமா நடந்துக்க மாட்டேன்னு காட்டி இருக்கான். மூணாவதா, தன் குடும்பத்தைப் பத்தித் தப்பாப் பேசினதும் அவனுக்குக் கோபம் வந்திருக்கு. மானம் உள்ள எந்த மனுஷனுக்கும் வரக் கூடியதுதான் இது. கடைசியா, மாணிக்கம் தன் ஆட்கள் பத்து பேரோட இருந்தப்பவும் தைரியமா அரிவாளை ஓங்கி இருக்கான். ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய வீரம் அவன்கிட்ட இருக்கு. அதைப் பாராட்டணும். அவன் அரிவாளால வெட்டல. அரிவாளை ஓங்கினது அவனோட கோபத்தைக் காட்டத்தான். அதனால, தலையாரியா இருக்க மாரிமுத்து எல்லா விதத்திலேயும் தகுதி படைச்சவன்னு நாங்க நினைக்கறோம். கண்மாயிலேந்து கால்வாய் வெட்டித் தண்ணி இழுத்ததா மாணிக்கத்து மேல யாராவது புகார் கொடுத்தா அதைத் தனியா இன்னொரு நாளைக்கு விசாரிப்போம்" என்றார் கணேசன்.

குறள் 384:
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

பொருள்:
அறத்திலிருந்து வழுவாமல், அறம் அல்லாதவற்றை விலக்கி, வீரத்துடனும், மானத்துடனும் செயல்படுபவனே நல்ல அரசன்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ.

385. குடும்பத் தலைவி

நண்பனின் சிபாரிசின் பேரில் அந்த நிதி ஆலோசனை நிறுவனத்துக்குச் சென்றான் மதி.

"உன் குடும்பத்தில யார் யார் இருக்காங்க, அவங்க வயசு என்ன, உங்க குடும்பத்துக்கான மாதாந்தரச் செலவுகள் என்ன மாதிரி விவரங்களை முதல்ல கேட்டுப்பாங்க. அப்புறம் உன் பிள்ளை, பெண்ணை என்ன படிக்க வைக்க விரும்பற, அதுக்கு எவ்வளவு செலவாகும், அவங்களுக்குக் கல்யாணம் சுமாரா எத்தனை வயசில நடக்கும், அதுக்கு எவ்வளவு செலவாகும், அப்புறம் நீ 60 வயசில ரிடையர் ஆகறேன்னா, அதுக்கப்பறம் நூறு வயசு வரை உனக்கும் உன் மனைவிக்கும் குடும்பச் செலவுக்குத் தேவையான வருமானம் வர அளவுக்கு ரிடயர்மெண்ட் சமயத்தில மொத்தத்தொகை எவ்வளவு வேணும், இதையெல்லாம் கணக்குப் போட்டுச் சொல்லிடுவாங்க" என்றான் அவன் நண்பன் கிட்டு.

"அது எப்படி? இன்னும் 10 வருஷம் கழிச்சு படிப்புச் செலவு எவ்வளவு ஆகும், 20 வருஷம் கழிச்சு கல்யாணச் செலவு எவ்வளவு ஆகும், நான் ரிடையர் ஆகற சமயத்தில மாதாந்தரச் செலவு எவ்வளவு ஆகும் இதையெல்லாம் இப்ப எப்படிச் சொல்ல முடியும்?" என்றான் மதி.

"இப்ப இருக்கற அளவிலேந்து ஆண்டுக்குப் பண வீக்கம் 8% இருக்கும்னு வச்சுக் கணக்குப் போடுவாங்க. எனக்கு அப்படித்தானே போட்டுக் கொடுத்தாங்க?"

"அது சரி. இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு என்ன பிரயோசனம்?'

"இந்தச் செலவுக்கெல்லாம் நமக்குப் பணம் வேணும்னா, நாம இப்பலேந்தே மாசத்துக்கு எவ்வளவு சேமிக்கணும், எதில முதலீடு செஞ்சா, எவ்வளவு ரிடர்ன் வரும்னு சொல்லுவாங்க."

"சரி. மாசம் இவ்வளவு ரூபா சேமிக்கணும்னு கணக்குப் போட்டு சொல்றாங்க. நம்ம வருமானத்தில் அவ்வளவு தொகை சேமிக்க முடியாதுன்னா என்ன செய்யறது?" என்றான் மதி.

"என் நிலைமை அப்படித்தானே இருக்கு!" என்றான் கிட்டு, பெருமூச்சுடன்.

"இதுக்கு எவ்வளவு சார்ஜ் பண்ணுவீங்க?" என்றான் மதி.

"இது ஃப்ரீ சர்வீஸ் சார்! இந்த சாஃப்ட்வேரை உருவாக்க எங்களுக்கு ரெண்டு லட்ச ரூபாய் செலவாச்சு. ஆனா, நாங்க இந்த சேவையை, பொது மக்களோட நன்மைக்காக இலவசமா வழங்கறோம்" என்றார் நிதி ஆலோசகர்.

"இதில உங்களுக்கு என்ன லாபம்?" என்றான் மதி.

"நாங்க கொடுக்கற ரிப்போர்ட்டின் அடிப்படையில நீங்க எவ்வளவு சேமிக்கணும்னு சொல்லுவோம். நீங்க விரும்பினா, நாங்க சிபாரிசு செய்யற பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். உங்க முதலீட்டுத் தொகையில் அரை சதவீதம் எங்களுக்கு கமிஷனா கிடைக்கும். அதுதான் எங்களுக்குக் கிடைக்கிற லாபம்" என்றார் அவர்.

"சரி. நீங்க சொல்ற தொகையை சேமிக்கற அளவுக்கு என் வருமானம் இல்லேன்னா?" என்று நண்பனிடம் கேட்ட கேள்வியைக் கேட்டான் மதி.

"ரெண்டு வழிதான் சார் இருக்கு. ஒண்ணு, நீங்க விரும்புகிற விஷயங்களைக் குறைச்சுக்கணும். உதாரணமா, உங்க குழந்தைகளுக்கு பி.ஈ, எம்.பி.பி.எஸ். படிப்பு வேண்டாம், பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் படிப்பு போதும்னு முடிவு செய்யலாம்."

"இன்னொரு வழி?"

"உங்க வருமானத்தைப் பெருக்கிக்கறது. வேற வேலை தேடியோ, அல்லது சொந்தத் தொழில் செஞ்சோ!"

அவர்கள் கொடுத்த படிவத்தில் விரங்களை எழுதிக் கொடுத்தான் மதி.

அவன் கொடுத்த விவரங்களை அவர் கம்ப்யூட்டரில் பதிவு செய்து முடித்த சில வினாடிகளில் கம்ப்யூட்டர் ஒரு ரிப்போர்ட்டை பிரிண்ட்டர் மூலம் அளித்தது.

ரிப்போர்ட்டைப் படித்துப் பார்த்த மதி, ஆலோசகரிடம், "ரொம்ப ஆச்சரியமா இருக்கு சார்! கிட்டத்தட்ட நீங்க சொன்ன அதே தொகையை நான் இப்ப சேமிச்சுக்கிட்டிருக்கேன்" என்றான் மதி.

"அது எப்படி சார்?" என்றார் ஆலோசகர் வியப்புடன்.

"அஞ்சு வருஷம் முன்னால எனக்குக் கல்யாணம் ஆச்சு. சில மாசங்களிலேயே என் மனைவி, எங்கிட்ட பேசி,  கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு கணக்குப் போட்டாள் - பிறக்கப் போற குழந்தைகளையும் கணக்கில எடுத்துக்கிட்டு! அவ கம்ப்யூட்டர் பயன்படுத்தல. ஒரு பேப்பர், பேனா, கால்குலேட்டர் வச்சு ரொம்ப தோராயமா ஒரு கணக்குப் போட்டா. போட்டு முடிச்சதும், 'நீங்க இப்ப வாங்கற சம்பளத்தில் இதையெல்லாம் செய்ய முடியாது. வேற வேலைக்கு முயற்சி செய்யுங்க. உங்க படிப்புக்கும், திறமைக்கும் கண்டிப்பா நல்ல வேலை கிடைக்கும்'னு சொன்னா. அது மாதிரி முயற்சி செஞ்சு, அதிக சம்பளத்தில வேலை கிடைச்சு, நீங்க கணக்குப் போட்டு சொல்ற தொகையை சேமிச்சுக்கிட்டிருக்கேன். ரெண்டு வருஷம் முன்னாடியே சேமிக்க ஆரம்பிச்சுட்டதால கொஞ்சம் குஷன் கூட இருக்கும்னு நினைக்கறேன். உங்க ரிப்போர்ட்டுக்கு நன்றி. புதுசா ஏதாவது முதலீடு பண்றப்ப கண்டிப்பா உங்க மூலமா பண்றேன்" என்று சொல்லி விடைபெற்றான் மதி.

குறள் 385:
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

பொருள்:
பொருள் வரும் வழிகளைத் திட்டமிடுதல், பொருள் ஈட்டல், ஈட்டிய பொருளைப் பாதுகாத்தல், பொருளை முறையாகப் பங்கிடுதல் ஆகியவற்றை ஒரு அரசன் திறமையாகச் செய்ய வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ.

386. வெளிநாட்டுப் பயணம்

"அரசே! தாங்கள் கூறியபடியே,  அண்டை நாடுகளுக்கு தூதுவர்களை அனுப்பி, நம் இளவரசர் ஆறு அண்டை நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று வர ஏற்பாடு செய்து விட்டேன். நம் இளவரசர் தங்கள் நாட்டுக்கு வருவது பற்றி, ஆறு அண்டை நாட்டு மன்னர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி" என்றார் அமைச்சர்.

"நல்லது. இளவரசன் மாறவர்மன் நாளையே கிளம்பி, ஒவ்வொரு நாட்டிலும் ஒரு வாரம் தங்கி, அந்த நாட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு வரட்டும்" என்றார் மன்னர் ராஜவர்மர்.

"மன்னரே! எதற்கு இந்த சுற்றுப் பயணம் என்று தெரிந்து கொள்ளலாமா?"

"இளவரசனின் உலக அறிவு வளர வேண்டும் என்பதற்காகத்தான்" என்றார்  ராஜவர்மர்  சிரித்தபடி.

அமைச்சர் புரியாதவராக அரசரைப் பார்த்தார்.

று நாடுகளுக்கும் சென்று திரும்பியதும் இளவரசன் மாறவர்மன் தந்தையைச் சந்தித்தான். அப்போது அமைச்சரும் உடனிருந்தார்.

"பயணம் எப்படி இருந்தது?" என்றார் அரசர்.

"நன்றாக இருந்தது. ஆறு நாடுகளுமே நம்மை விட மிகவும் சிறிய நாடுகள் என்பதால், நான் அங்கு போனதை அவர்கள் எல்லோருமே தங்களுக்கு ஒரு கௌரவமாக நினைத்தார்கள்."

"நான் சொன்னபடி செய்தாயா?'

"செய்தேன். ஒரு நாள் அரண்மனையில் தங்கி அங்கு நடப்பவற்றை  கவனித்தேன், அதன் பிறகு நான்கைந்து நாட்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றேன். மக்கள் சிலரிடம் இயல்பாக உரையாடினேன்."

"சரி. ஆறு நாடுகளிலும் மக்கள் மன்னர்களைச் சந்திப்பது எளிதாக இருந்ததா?'

"இரண்டு நாடுகளில் மட்டும்தான் அப்படி இருந்தது. மற்ற நான்கு நாடுகளிலும் மன்னரை மக்கள் சந்திப்பது எளிதானதாக இல்லை."

"சரி. எல்லா நாட்டு மன்னர்களும் மற்றவர்களிடம் இனிமையாக நடந்து கொண்டார்களா?"

"இல்லை. ஒரு மன்னர் மட்டும்தான் எல்லோரிடமும் இனிமையாகப் பழகினார். மற்ற ஐந்து மன்னர்களும் அமைச்சர்களிடமும், மற்றவர்களிடம் அடிக்கடி கோபமாகப் பேசினார்கள்."

"சரி. நீ  சொன்ன இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையிலும், மக்களிடம் நீ பேசியதன் அடிப்படையிலும் நீ உணர்ந்து கொண்டது என்ன என்று சொல்ல முடியுமா?" என்றார் அரசர்.

இளவரசன் ஓரிரு நிமிடங்கள் யோசித்து விட்டு, "நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்குப் புரிகிறது. கௌதம நாட்டில் மட்டும்தான் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அரசரையும், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் புகழ்ந்து பேசினர். கௌதம நாட்டு மன்னரை மக்கள்  எளிதாகச் சந்திக்க முடியும். அவர் அதிகம் கடிந்து பேசாத இயல்புடையவர்.

"மற்ற ஐந்து நாடுகளில், மக்களிடம் அதிருப்தி இருந்தது. அவற்றில் குசல நாட்டில் மட்டும் அதிருப்தி குறைவாக இருந்தது. குசல நாட்டு மன்னரை  மக்களால் எளிதில் சந்திக்க முடியும். ஆயினும் அவர் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் கடிந்து பேசக் கூடியவர் என்பதால், அவருக்கு ஆலோசனை சொல்ல அமைச்சர்கள் அஞ்சியதைப் பார்க்க முடிந்தது. 

"மற்ற நான்கு நாட்டு மன்னர்களிடம் இந்த இரண்டு குறைகளுமே இருந்ததால், அங்கே மக்களின் குறைகள் தீர்க்கப்படாமல் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அங்கே அதிருப்தி அதிகமாக நிலவுகிறது என்று நினைக்கிறேன்" என்றான் இளவரசன்.

"ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டாயா?" என்றார் அரசர்.

"புரிந்து கொண்டேன் தந்தையே!" என்றான் மாறவர்மன்.

"இளவரசனை எதற்கு ஆறு நாடுகளுக்கும் அனுப்பினேன் என்று இப்போது புரிகிறதா அமைச்சரே?" என்றார் அரசர்.

"புரிகிறது அரசே.அடுத்த மாதம் இளவரசுரர் முடி சூட்டிக் கொண்டு அரசாளத்  துவங்கும் முன், அவர் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் அனுப்பி இருக்கிறீர்கள். 'இளவரசர் உலக அறிவு வளரத்தான் இந்தப் பயணம்' என்று நீங்கள் சொன்னதன் பொருள் இப்போதுதான் எனக்கு விளங்குகிறது. ஆனால், இளவரசர் தங்களைப் பார்த்தே இவற்றை அறிந்து கொண்டிருக்கலாமே!" என்றார் அமைச்சர்.

"மாறுபட்ட இயல்புகளைப் பார்த்து, அவற்றின் விளைவுகள் என்ன என்பதையும் பார்த்தால், இன்னும் சற்று ஆழமாகப் புரியும் அல்லவா?" என்றார் ராஜவர்மன். 

குறள் 386:
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

பொருள்:
மக்களால் எளிதில் காணக் கூடியவனாகவும், கடுமையான சொற்களைப் பயன்படுத்தாதவனாகவும் இருக்கும் அரசனை உலகம் போற்றும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ.

387. தலைவரிடமிருந்து அழைப்பு 

குமரன் ஒரு அரசியல் கட்சியின் உள்ளூர்த் தலைவன்.

அன்று அவன் தன் கட்சி அலுவலகத்துக்குப் போனபோது, அங்கே நான்கு பேர் அவனுக்காகக் காத்திருந்தார்கள்.

"வணக்கம். வாங்க!" என்றான் குமரன்.

"ஏம்ப்பா, நீ செய்யறது நல்லா இருக்கா? ரெண்டு நாள் முன்னாடி உங்க கட்சித் தலைவர் மீட்டிங்குக்காகப் போட்ட மேடையை இன்னும் பிரிக்கல. ரோட்டில போறவங்களுக்கு எவ்வளவு இடைஞ்சலா இருக்கு தெரியுமா?" என்றார் ஒருவர்.

"மன்னிச்சுக்கங்க. முந்தாநாள் ராத்திரி மீட்டிங் நடந்தது. நேத்திக்கே மேடையைப் பிரிக்கச் சொன்னேன். தலைவர் நேத்து இங்க தங்கி இருந்ததால கட்சிக்காரங்கள்ளாம் அவர் கூடவே இருந்துட்டாங்க. இன்னிக்குக் காலையிலேயே மேடையைப் பிரிக்க ஆளை அனுப்பி இருக்கேன். வேலை நடந்துக்கிட்டிருக்கும். தாமதத்துக்கு மன்னிச்சுக்கங்க" என்று கை கூப்பினான் குமரன்.

"மேடை போடத் தெரியுது. பிரிக்கத் தெரியல!"என்று முணுமுணுத்தபடியே அந்த நான்கு பேரும் அங்கிருந்து சென்றனர்.

"இவங்களுக்கு நம்ம கட்சியைப் பிடிக்காது. மத்த கட்சிக்காரன்லாம் மேடை போட்டா, பத்து நாள் கழிச்சுத்தான் பிரிக்கறான். அவங்களை இவங்க எதுவும் கேக்க மாட்டாங்க. 'மெதுவாத்தான்யா பிரிப்போம். உன்னால ஆனதைப் பாத்துக்க'ன்னு சொல்றதை விட்டு இவர்களுக்கெல்லாம் நீ பொறுமையா பதில் சொல்லிக்கிட்டிருக்கே. மன்னிப்பு வேற கேக்கற. எனக்குப் பத்திக்கிட்டு வந்தது" என்றான் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சோமு

"கேட்டதுக்கு ஒழுங்கா பதில் சொல்ல வேண்டாமா? கொஞ்சம் பணிவாப் பேசறதில தப்பு இல்லையே?" என்றான் குமரன்.

"நேத்திக்கு ஒரு தமாஷ் நடந்தது. நீ இல்லையே!" என்றான் சோமு.

"என்ன தமாஷ்?"

"கொஞ்ச நாள் முன்ன வெள்ளம் வந்தப்ப, நீ உன் வீட்டிலேந்து சாப்பாடு செஞ்சு எடுத்துக்கிட்டு வந்து, அதை கட்சி அலுவலகத்தில வச்சு பாதிக்கப்பட்டவங்களுக்கு விநியோகம் பண்ணினதை, கட்சிப் பணத்தில அரிசி, காய்கறி எல்லாம் வாங்கி, உனக்குப் பேர் வரணுங்கறதுக்காக உன் வீட்டில சமையல் செஞ்சு நீ கொடுத்த மாதிரி காட்டிக்கிட்டதா தலைவர்கிட்ட யாரோ தப்பா சொல்லிட்டாங்க. தலைவர் எங்கிட்ட தனியா விசாரிச்சார். நான் சொன்னேன்: "ஐயா! அவன் தன் சொந்த பணத்திலதான் எல்லாம் செஞ்சான். கட்சிக்கு நல்ல பேர் கிடைக்கணுங்கறதுக்காக, அவன் வீட்டில செஞ்ச சாப்பாட்டை கட்சி ஆபீஸ்ல கொண்டு வச்சு விநியோகம் பண்ணினான். இந்த மாதிரி யாரும் செய்ய மாட்டாங்க ஐயா'ன்னு சொன்னேன். தலைவர் ஆச்சரியப்பட்டாரு."

"அப்படியா? ஆனா, அவருக்கு இன்னும் சந்தேகம் தீர்ந்த மாதிரி தெரியல. அடுத்த வாரம் என்னைத் தலைமை அலுவலகத்துக்கு வரச் சொல்லி இருக்காரு. எங்கிட்ட நேரா விசாரிக்க விரும்பறாரு போலருக்கு" என்றான் குமரன்.

"வாப்பா குமரன்! உன்னைப் பத்தி நிறையக் கேள்விப்பட்டேன்" என்றார் தலைவர்.

"ஐயா! அது உண்மை இல்லைங்க..." என்று ஆரம்பித்தான் குமரன்.

"எது உண்மை இல்லை? நீ எல்லார்கிட்டேயும் பொறுமையாப் பழகி ஊர்ல நல்ல பேரு வாங்கி இருக்கறதா கேள்விப்பட்டேன். அது உண்மையில்லையா? உன் செலவில ஊருக்கெல்லாம் உணவு கொடுத்து, அதைக் கட்சி செஞ்ச மாதிரி காட்டினதாக் கேள்விப்பட்டேன், அது உண்மை இல்லையா?" என்றார் தலைவர் சிரித்தபடி.

"ஐயா!" என்றான் குமரன்.

"உன்னை மாதிரி ஆள்தான் கட்சிக்கு வேணும். கட்சிக்கு மட்டும் இல்ல, நாட்டுக்கும் வேணும். வரப்போற  சட்டமன்றத் தேர்தல்ல உன் தொகுதியில நம் கட்சி வேட்பாளர் நீதான். இதைச் சொல்லத்தான் உன்னை வரச் சொன்னேன்" என்றார் தலைவர்.

குறள் 387:
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

பொருள்:
இன்சொல் பேசி, ஈகை செய்து வாழும் அரசனை, உலகம் புகழ்ந்து, அவன் விரும்பியவற்றை  நிறைவேற்றும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

 
388. இன்று போய் நாளை வாரீர்!

செல்லமுத்து அந்த கிராமத்துக்கு ஓட்டுக் கேட்கச் சென்றபோது, உடன் வந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சொன்னார் "அண்ணே! இந்த ஊர்ல ஒருத்தர் இருக்கார். அவர் சொல்ற ஆளுக்குத்தான் எல்லாரும் ஓட்டுப் போடுவாங்க."

"ஓ! அப்ப நம்ம வேலை சுலபமாப்  போச்சு. அவரைப் பாத்துப் பேசி, அவருக்கு செய்ய வேண்டியதை செஞ்சு, மொத்த ஓட்டையும் நாம அள்ளிடலாமே. அவரு பேரு என்ன? அவர் வீடு எங்கேன்னு தெரியுமா உங்களுக்கு?"

குழந்தைசாமி என்ற அந்த நபரின் வீடு என்று ஒரு சிறிய ஒட்டு வீட்டைக் காட்டினார்கள்.

வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த இளைஞனைப் பார்த்து, "ஏம்ப்பா, குழந்தைசாமி இருக்காரா?" என்றான் செல்லமுத்து அதிகாரமாக.

"இவருதாங்க குழந்தைசாமி!" என்றார் உடன் வந்தவர்.

"ஓ! நீதானா அது? பேருக்கு ஏத்தாப்பல குழந்தை மாதிரிதான் இருக்கே! இவ்வளவு செல்வாக்கு இருக்கற நீ நம்ப கட்சியில சேந்துடலாமே! தலைவர்கிட்ட சொல்லி உனக்கு இளைஞர் அணியில ஏதாவது பதவி வாங்கித் தரேன்" என்றான் செல்லமுத்து.

"உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க? உங்களை உக்கார வைக்க இங்க இடம் இல்லை. வெளியில இருக்கிற மரத்தடியில் உக்காந்து பேசலாமா?" என்ற குழந்தைசாமி, உள்ளே திரும்பி, "பொன்னம்மா! வந்திருக்கிறவங்களுக்குக் கொஞ்சம் மோர் கொண்டு வா" என்றான்.

வெளியில் வந்து மரத்தடியில் உட்கார்ந்ததும், செல்லமுத்து, "தம்பி! நான் சட்டமன்றத் தேர்தல்ல ஆளுங்கட்சி வேட்பாளரா நிக்கறேன். உனக்கு இந்த ஊர்ல செல்வாக்கு இருக்கறதா சொன்னாங்க. இந்த ஊர்ல இருக்கற மொத்த ஓட்டையும் நீ எனக்கு வாங்கிக் கொடு. உனக்கு என்ன செய்யணுமோ செய்யறேன்" என்றான் செல்லமுத்து.

குழந்தைசாமி பதில் சொல்வதற்குள், நான்கைந்து பேர் அங்கே வந்தனர். குழந்தைசாமியுடன் புதிதாகச் சிலர் இருப்பதைக் கண்டு தயங்கினர்.

"சொல்லுங்க!" என்றான் குழந்தைசாமி அவர்களைப் பார்த்து.

"இங்க பாரு குழந்தை, நேத்துதான் ஊர்ல வாய்க்கால்லேந்து முறை வச்சுத் தண்ணி பாய்ச்சிக்க ஒரு ஏற்பாடு சொல்லி எல்லாரையும் ஒத்துக்க வச்சே. இன்னிக்கு என்னோட முறை. ஆனா தங்கப்பன் அவன் வயலுக்குத் தண்ணி பாய்ச்சிக்கிட்டிருக்கான்" என்றார் அவர்.

"அப்படியா?" என்ற குழந்தைசாமி, "ஐயா, மன்னிச்சுக்கங்க! இதோ போய்ப் பாத்துட்டு வரேன். கொஞ்ச நேரம் இங்கேயே உக்காந்திருங்க" என்றான்.

"நாங்க சொல்றதைக் கேட்டுட்டுப்  போயேன் அப்பா!" என்றான் செல்லமுத்து.

"இல்லீங்க. ஊர்ப் பிரச்னையைத் தீக்கறதுதான் முக்கியம். நீங்க வேணும்னா நீங்க சொல்ல வேண்டியதைச் சொல்லிக்கிட்டு என் கூடவே வாங்களேன்" என்று சொல்லி எழுந்து நடக்க ஆரம்பித்தான் குழந்தைசாமி.

குழந்தைசாமி சென்றவுடன், செல்லமுத்து கோபத்துடன், அருகில் இருந்தவர்களிடம், "என்ன, இந்த ஆளு என்னை மதிக்கவே மாட்டேங்கறான். ரொம்பத் திமிர் பிடிச்சவனா இருப்பான் போலருக்கே!" என்றான்.

"அவனுக்கு ஊர்ப் பிரச்னைதாங்க முக்கியம்!"

"அப்படி என்ன செல்வாக்கு இவனுக்கு இந்த ஊர்ல? பணக்காரன் மாதிரியும் தெரியல. இவ்வளவு சின்ன வீட்டில இருக்கான்!" என்றான் செல்லமுத்து.

"ஊர்ப் பிரச்னைகளைத் தலையில போட்டுக்கிட்டு செய்வான். அதனால்தான் ஊர்ல இவன் பேச்சுக்கு இவ்வளவு மரியாதை. ஊர்ல இருக்கற பணக்காரங்க, பெரிய மனுஷங்கல்லாம் கூட இவன் பேச்சுக்கு கட்டுப்படுவாங்க. இத்தனைக்கும் ஊர்க்காரங்க எவ்வளவோ கேட்டும், இவன் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கான தேர்தல்ல கூட நிக்க மாட்டேன்னுட்டான். ஊர்க்காரங்க இவனை தெய்வமா நினைக்கறாங்க. யாருக்காவது ஏதாவது சொப் பிரச்னைன்னா கூட முதல்ல இவன்கிட்ட வந்து சொல்லி அழுதுட்டு அப்புறம்தான் கோவில்ல போய் வேண்டிப்பாங்கன்னா பாத்துக்கங்களேன்!"

"அப்படிப்பட்ட ஆளா இருந்தா, நமக்கு ஒத்துவர மாட்டானே!" என்றான் செல்லமுத்து கவலையுடன்.

"இந்த ஊருக்குத் தேவையான எதையாவது செய்யறதா வாக்குக் கொடுத்தீங்கன்னா, ஊர் மக்களை உங்களுக்கு ஓட்டுப் போடச் சொன்னாலும் சொல்லுவான்."

"சரி, பாக்கலாம். வந்ததுக்கு அவனைப் பாத்துட்டாவது போகலாம்" என்றான் செல்லமுத்து அவநம்பிக்கையுடன்.

அரை மணி நேரம் கழித்து அங்கே வந்த ஒரு ஆள், "ஐயா! ஊர்ல ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலி வந்துருச்சு. வண்டி ஓட்ட ஆள் யாரும் இல்லேன்னு குழந்தையே வண்டியில அவங்களை அழைச்சுக்கிட்டு பக்கத்து ஊர்ல இருக்கற ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கான். உங்களை இன்னொரு நாள் வரச் சொன்னான். உங்ககிட்ட மன்னிப்புக் கேக்கச் சொன்னான்" என்றான்."
 
குறள் 388:
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

பொருள்:
நீதி தவறாமல் ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் அரசன் மக்களால் கடவுள் போல் கருதப்பட்டு போற்றப்படுவான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ!

389. விலை போன விட்டல்?

"இந்த அரசாங்கத்துக்கு இன்னும் 30 நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன். அதற்குள் இந்த அரசு ஊழல் புகார்களை விசாரிக்க அதிகாரம் பெற்ற 'மக்கள் காவல்' அமைப்பை ஏற்படுத்தாவிட்டால், நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்."

சமூகப் போராளி விட்டல் இந்த அறிவிப்பை விடுத்து 20 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால் அரசாங்கம் இதுவரை 'மக்கள் காவல்' அமைப்பை ஏற்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அது எப்படிப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றிப் பல்வேறு தரப்பு மக்களிடமும் கருத்துக் கேட்டு வருவதாகவும், இந்தக் கருத்துக் கேட்பு முடிந்து, பெரும்பாலான மக்கள் விரும்பும் வகையில், 'மக்கள் காவல்' அமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் அறிவித்த பிரதமர், விட்டல் தன் உண்ணாவிரத  யோசனையைக் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், விட்டல் இந்த பதிலை ஏற்கவில்லை. அரசாங்கம் நேரம் கடத்துகிறது என்றும், இந்தக் கருத்துக் கேட்புகள் முடிந்து சட்டம் இயற்றப்பட இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகி விடும் என்றும், அதற்குள் அடுத்த தேர்தல் வந்து விடும் என்றும் குற்றம் சாட்டிய விட்டல், திட்டமிட்டபடி தான் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறினார்.

அரசாங்கத்தின் சார்பாக சில அமைச்சர்கள் விட்டலைச் சந்தித்துப் பேசினர். ஆனால் விட்டல் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

சில பத்திரிகை ஆசிரியர்களும், தொலைக்காட்சி சானல் நிர்வாகிகளும் கூட விட்டலைச் சந்தித்துப் பேசினர். விட்டலிடம் தாங்கள் பேசியது என்ன என்பதை அவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். அரசாங்கம் தனக்கு வேண்டிய ஊடகவியலாளர்கள் மூலம் விட்டலுக்கு அழுத்தம் கொடுப்பதாக சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

உண்ணாவிரதம் துவங்க வேண்டிய தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பு தனக்கு உடல் நிலை சரியில்லாததால், தன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தள்ளி வைப்பதாக விட்டல் அறிவித்தார்.

'விட்டல் விலை போய் விட்டார்' என்று சமூக ஊடகங்கள் ஒருமித்த குரலில் உரக்கக் கூவின.

"என்ன சார் இப்படிப் பண்ணிட்டீங்க?" என்றார் விட்டலின் நண்பரும் பத்திரிகை நிருபருமான சதீஷ்.

"நீங்கதான் காரணம்!" என்றார் விட்டல்.

"நானா, நான் என்ன செஞ்சேன்?"

"நீங்கன்னா, உங்க பத்திரிகைத்துறை நண்பர்களைச் சொன்னேன்!"

"ஆமாம். பத்திரிகைத் துறையிலேந்து சில பேர் உங்களை சந்திச்சாங்களே! அவங்க உங்களை உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்னு சொன்னாங்களா?"

"அப்படிச் சொல்லல. ஆனா, அவங்க சொன்ன ஒரு விஷயம் என்னை யோசிக்க வச்சது."

"என்ன விஷயம் அது?" என்றார் சதீஷ்.

"சமீபகாலமா, இந்த அரசாங்கத்து மேல, குறிப்பா பிரதமர் மேல கடுமையான விமரிசனம் வருது. விமரிசனம் வரது தப்பு இல்ல. ஆனா, பிரதமரைத் தரக்குறைவாத் தாக்கி சில விமரிசனம்லாம் வருது."

"ஆமாம். நான் கூடப் பாத்திருக்கேன். எங்க பத்திரிகை கூட இந்த அரசாங்கத்தைக் கடுமையா விமரிசக்கற பத்திரிகைதான். ஆனா சில தரக்குறைவான விமரிசனங்கள் வரதை நாங்களே கண்டிச்சிருக்கோம்."

"பிரதமர் மென்மையானவர், விமரிசனங்களை சிரிச்சுக்கிட்டே ஏத்துக்கறவர்ங்கறதால சில பேரு அவரைக்  கொஞ்சம் அதிகமாவே விமர்சிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அரசாங்கத்தில் சில பேரு இப்படி விமரிசனம் செஞ்சவங்க மேல நடவடிக்கை எடுக்க வச்சிருக்காங்க. சில பேர் மேல வழக்கு, சில பேர் கைதுன்னு கொஞ்சம் கடுமையான நடவடிக்கை எல்லாம் எடுக்கப்பட்டிருக்கு. ஆனா, பிரதமருக்கு இது தெரிஞ்சதும், அந்த நடவடிக்கையை எல்லாம் ரத்து பண்ணச் சொல்லிட்டாராம். அரசாங்கத்தை யாரு எவ்வளவு கடுமையா விமரிசனம் செஞ்சாலும், அவங்களுக்கு பதில் சொல்லணுமே தவிர, அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கக் கூடாதுன்னு மற்ற அமைச்சர்கள் கிட்டயும், அதிகாரிகள்கிட்டயும் கடுமையா சொல்லி இருக்காரு."

"ஆச்சரியமா இருக்கே! இது உண்மையா? உங்களுக்கு இது எப்படித் தெரியும்?"

"என்னைச் சந்திச்ச பத்திரிகைக்காரங்க சொன்னதுதான்! சில பேர் சொல்ற மாதிரி, என்னைச் சந்திக்க வந்த ஊடகவியலாளர்கள் அரசாங்கம் அனுப்பி வரல. அவங்களாகவேதான் வந்து எங்கிட்ட இதை சொன்னாங்க. தன்னைப் பத்தின கடுமையான விமர்சனத்தைப் பொறுத்துக்கற பிரதமர் நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கறவராத்தான் இருப்பார்னு எனக்குத் தோணிச்சு. அதனாலதான் இந்த அரசாங்கத்துக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாம்னு என் உண்ணாவிரதத்தை ஒத்தி வச்சேன்" என்றார் விட்டல்.

"அது சரி. ஆனா இப்ப எல்லோரும் நீங்க விலை போயிட்டதா உங்களை இல்ல தப்பாப் பேசறாங்க?" என்றார் சதீஷ்.

"பரவாயில்ல. தன்னைப் பத்தின கடுமையான விமரிசனங்களைத் தாங்கிக்கற ஒரு அரசாங்கத்துக்காக நான் இந்த அவதூறைக் கொஞ்ச நாளைக்குத் தாங்கிக்கறேன்!" என்றார் விட்டல்.

குறள் 389:
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

பொருள்:
காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்குப் பிறர் தன்னைக் கடிந்து பேசுவதையும் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய அரசனின் ஆட்சியில் நாடு நலம் பெறும்.

390. பொன்னம்பலம்- சிற்றம்பலம்
"அஞ்சு வருஷம் மோசமான அரசாங்கத்துக்கப்புறம் வேற ஒரு கட்சி ஆட்சிக்கு வந்திருக்கு. எப்படி இருக்கோ பாக்கலாம்" என்றார் சிற்றம்பலம்.

"எல்லா அரசாங்கமும் ஒரே மாதிரிதான். ஆளுங்கதான் மாறுவாங்களே தவிர, ஆட்சி மாறாது" என்றார் பொன்னம்பலம்.

"என்னங்க, ஆட்சி மாறி ஆறு மாசம் ஆச்சே, இப்ப என்ன சொல்றீங்க, புது அரசாங்கத்தைப் பத்தி?" என்றார் சிற்றம்பலம். 

"நிறைய வரிச் சலுகை கொடுத்திருக்காங்க. அதனால மக்கள் கையில புழங்கற பணம் அதிகரிக்கும். இது நல்ல விஷயம்தான். ஆனா, மத்த விஷயங்கள்ள எப்படி நடந்துக்கறாங்கன்னு பாக்கலாம்" என்றார் பொன்னாம்பலம்.

"ஒரு வருஷம் ஆச்சு. எனக்கென்னவோ இந்த அரசாங்கம் நல்லா செயல்படற  மாதிரிதான் தோணுது. நீங்க என்ன நினைக்கறீங்க?" என்றார் சிற்றம்பலம்.

"ஒரு விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. இந்த அரசாங்கம் எல்லா விஷயத்தையும் ரொம்பப் பரிவோடு அணுகுது. முன்னால இருந்த அரசாங்கம் அடக்குமுறையைக் கையாண்டது. ஆனா இந்த அரசாங்கம் பேச்சு வார்த்தை மூலமா பிரச்னைகளைத் தீர்க்க முயற்சி செய்யுது. அதுக்காக எல்லாத்துக்கும் சரின்னு சொல்லாம சில விஷயங்கள்ள உறுதியாவும் இருக்கு. புதுத் துடைப்பம் நல்லாப்  பெருக்கும்னு சொல்லுவாங்க. பார்க்கலாம்!" என்றார் பொன்னம்பலம்.

"என்னங்க, ரெண்டரை வருஷம் ஆயிடுச்சு. பாதி டர்ம் முடிஞ்சு போச்சு. இப்பவாவது இந்த அரசாங்கத்துக்கு பாஸ் மார்க் கொடுப்பீங்களா?" என்றார் சிற்றம்பலம். 

"பாஸ் மார்க் கண்டிப்பாக் கொடுக்கலாம். ஆனா இந்த அரசாங்கம் எண்பதுக்கு மேல மார்க் வாங்கும்னு நினைக்கறேன். வாங்கணும்னு எதிர்பாக்கறேன். அந்த அளவுக்கு எல்லாமே நல்லாப் போயிட்டிருக்கு. இந்த அரசாங்கத்தோட இன்னொரு சிறப்பான விஷயம் என்னன்னா எல்லார் விஷயத்திலேயும் ஒரே மாதிரி நியாயமா நடந்துக்கறாங்க. ஆளுங்கட்சிக்காரங்க தப்பு செஞ்சா அவங்க மேலயும் நடவடிக்கை எடுக்கறாங்க. அதனால அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் பயந்து தப்புப் பண்ணாம இருக்காங்க. இது ரொம்ப அபூர்வம். நான் இதை மனசாரப் பாராட்டறேன்" என்றார் பொன்னம்பலம்.

"நாலு வருஷம் ஆயிடுச்சே, இப்ப எண்பது மார்க் கொடுப்பீங்களா?" என்றார் சிற்றம்பலம்.

"எண்பது என்ன, தொண்ணூறே கொடுக்கலாம். எல்லா அரசாங்கமும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. ஏன்னா, வளர்ச்சி இருந்தாத்தான் அரசாங்கத்துக்கு வருமானம் வரும். ஆனா, வளர்ச்சியோட பலன் எல்லாருக்கும் போய்ச் சேரணும்கறதுக்காக, இந்த அரசாங்கம் எல்லா மக்களுக்கும் உதவற  விதத்தில கிராமப்புற, நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டங்கள் மாதிரி நிறைய திட்டங்களை உருவாக்கி இருக்கு. மக்களைக் காப்பாத்தறது தன்னோட கடமைன்னு நினைச்சு செயல்படுது இந்த அரசாங்கம். பாராட்டப்பட வேண்டிய விஷயம்"  என்றார் பொன்னம்பலம்.

"வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி!" என்றார் சிற்றம்பலம்.

"ஒத்தர் பிரம்மரிஷியா இருந்தா, வசிஷ்டரா இருந்தா என்ன, வேற யாரா இருந்தா என்ன, அதை ஏத்துக்கிட்டுத்தானே ஆகணும்!" என்றார் பொன்னம்பலம்.

(குறிப்பு: இது எந்த ஒரு அரசாங்கத்தையும் குறித்த கதை அல்ல. ஒரு கற்பனை அரசாங்கம் குறித்தது. என்றோ ஒருநாள் இப்படி ஒரு அரசு அமையும் என்று நாம் கனவு காணத்தான் முடியும்!)

குறள் 390:
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

பொருள்:
கொடை, அருள், செங்கோல், நலிந்த மக்களைக் காத்தல் ஆகிய நான்கு பண்புகளும் உள்ள அரசன் அரசர்களுக்கெல்லாம் ஒளி போன்றவன்.

அறத்துப்பால்                                                                           காமத்துப்பால் 


No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...