Saturday, September 30, 2023

979. நானே அறிவாளி!

"இந்தக் கல்லூரியிலேயே என் அளவுக்கு அறிவாளிகள் யாரும் இல்லை" என்று கணிதப் பேராசிரியர் மணவாளன் தன் வகுப்பு மாணவர்களிடம் அடிக்கடி சொல்லிக் கொள்வார்.

கல்லூரி விட்டதும்  தங்கள் வீடுகளுக்குத் திரும்புகையில் சில மாணவர்கள் பல்வேறு விஷயங்கள் பற்றித் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தபோது மணவாளன் பற்றிய பேச்சு வந்தது. 

"இவரு மாத்ஸ் புரொஃபசர். ஆனா கல்லூரியிலேயே நான்தான் பெரிய அறிவாளின்னு சொல்லிக்கறாரே, அது எப்படி? ஃபிசிக்ஸ், கெமிஸ்டிரி டிபார்ட்மென்ட்ல கூட இவரை விட அறிவாளி இல்லேன்னு எப்படிச் சொல்றாரு" என்றான் ஒரு மாணவன்.

"அவரு முப்பதுக்கு மேலே ரிசர்ச் பேப்பர்ஸ் சப்மிட் பண்ணி இருக்காராம். அதனால தன் அளவுக்கு யாரும் இல்லைன்னு நினைச்சுக்கிட்டிருக்கார் போலருக்கு. தன்னைத்தானே உயர்த்திப் பேசறவங்க அப்படிதான் பேசுவாங்க. உலகத்திலேயே நான்தான் பெரிய அறிவாளின்னுக் கூடச் சொல்லிப்பாங்க!" என்றான் மற்றொரு மாணவன்.

"மாத்ஸ் டிபார்ட்மென்ட்டை மட்டும் எடுத்துக்கிட்டா கூட ஆதிகேசவன் சார் இவரை விடப் பெரிய அறிவாளின்னுதான் நான் சொல்லுவேன்!"

"எப்படி? அவரு பி எச் டி கூடப் பண்ணலியே!"

"பி எச் டி பண்ணாட்டா என்ன? எப்படி வகுப்பு எடுக்கறாரு! எவ்வளவு தெளிவா சொல்லிக் கொடுக்கறாரு1 என்ன சந்தேகம் கேட்டாலும் விளக்கமா பதில் சொல்றாரு.  எவ்வளவு கஷ்டமான கணக்கைக் கொடுத்தாலும் உடனே சால்வ் பண்ணிடுவாரு. ஆனா மணவாளன் சார் கிட்ட கேட்டா பார்த்துட்டு அப்புறம் சொல்றேம்பாரு. ஆனா பல சமயம் அப்புறம் அதைப் பத்திப் பேச மாட்டாரு. அவரால அதை சால்வ் பண்ண முடிஞ்சிருக்காதுன்னு நினைக்கறேன்!"

"எப்படி இருந்தா என்ன? அவரு பி எச் டி. அது அவருக்குப் பெருமைதானே? ஆதிகேசவன் சாருக்கு நல்ல நாலட்ஜ் இருக்கு, நல்லா சொல்லிக் கொடுக்கறாருன்னாலும் அவர் பி எச் டி இல்லையே! அது அவருக்கு மதிப்புக் குறைவுதானே?"

"மணவாளன் சார் தனக்குத்தானே தம்பட்டம் அடிச்சுக்கறாரு. ஆனா நாம அவரைக் கேலி செஞ்சுதானே பேசறோம்! ஆதிகேசவன் சார் அடக்கமா இருக்காரு. நாம அவரைப் புகழ்ந்து பேசறோம். ரெண்டு பேர்ல யாருக்கு உண்மையாகவே பெருமை இருக்குன்னு இதிலேந்தே தெரிஞ்சுக்கலாமே!"   

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

குறள் 979:
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

பொருள்: 
ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Thursday, September 28, 2023

978. தொலைபேசியில் வந்த பாராட்டு

"வணக்கம். நான் ராமகிருஷ்ணன் பேசறேன்" என்றார் தொலைபேசியில் பேசியவர்.

"எந்த ராமகிருஷ்ணன்?" என்றார் இசை அமைப்பாளர் வினீத்.

"நானும் இசை அமைப்பாளரா இருந்திருக்கேன் அஞ்சு வருஷம் முன்னால வரைக்கும்!"

"ஓ, நீங்களா? எப்படி இருக்கீங்க? இப்ப உங்களுக்குப் படம் எதுவும் இல்லை போலிருக்கே!"

"இல்லை. அதனாலதான் அஞ்ச வருஷம் முன்னால வரைக்கும் இசை அமைப்பாளரா இருந்தேன்னு சொன்னேன்!"

"ஓ, சரி. சொல்லுங்க. என்ன விஷயம்?"

"சமீபத்தில வந்த படத்தில நீங்க இசை அமைச்ச ஒரு பாட்டைக் கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது."

"என்னோட பாட்டு எல்லாமே ஹிட்தான். நீங்க எந்தப் பாட்டைச் சொல்றீங்க?"

"'மல்லிகை மணம் வீசும்'ங்கற பாட்டு."

"ஓ, அதுவா? அது ஒரு சூப்பர்ஹிட் பாட்டு. இளைஞர்கள் மத்தியில  அது ஒரு கிரேஸாகவே இருந்துக்கிட்டிருக்கு!"

"புதுப் பாடல்கள் எல்லாம் நான் அதிகம் கேட்கறதில்ல. ஆன தற்செயலா இந்தப் பாட்டைக் கேட்டேன். நல்லா போட்டிருக்கீங்க. அதுக்குப் பாராட்டுத் தெரிவிக்கத்தான் கூப்பிட்டேன். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. வாழ்த்துக்கள்!" என்றார் ராமகிருஷ்ணன்.

"நிகழ்காலமே சூப்பராத்தான் இருக்கு. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் ரொம்ப பிஸின்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே!ஃபோனை வச்சுடட்டுமா?" என்று கூறி ஃபோனை வைத்தார் வினீத்.

வினீத் அங்கிருந்து அகன்றதும், வினீத்தின் தொலைபேசி உரையாடலை அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த அவருடைய உதவியாளன் சந்திரன் அங்கே இருந்த டெக்னீஷியன் குணாவிடம், "யார் ஃபோன் பண்ணினாங்க தெரியுமா?" என்றான்.

"யாரு?"

"ராமகிருஷ்ணன் சார்!"

"எந்த ராமகிருஷ்.. அவரா?" என்றான் குணா வியப்புடன்.

"அவரேதான். திரை இசை வேந்தர் ராமகிருஷ்ணனேதான்!" 

"உனக்கு எப்படித் தெரியும்?"

"அவரு தன் பெயரைச் சொன்னவுடனேயே நம்ம ஆளு 'எந்த ராமகிருஷ்ணன்?'னு கேட்டாரே! அப்பவே அவராதான் இருக்கும்னு நினைச்சேன். அதோட அவரு இவரைப் புகழ்ந்து பேச ஆரம்பிச்சதும் நான் அதைக் கேக்கணுங்கறதுக்காக இவரு ஃபோனை ஸ்பீக்கர்ல போட்டுட்டாரு. என்ன ஒரு அல்ப புத்தி பாரேன்!"

"ராமகிருஷ்ணன் சார் அவர் காலத்தில கொடி கட்டிப் பறந்தவராச்சே!அவரை மாதிரி எல்லாம் மியூசிக் போட இனிமே யாராவது பொறந்துதான் வரணும்" என்றான் குணா.

"அப்படிப்பட்ட ஒரு பெரிய ஆளு இவரோட மல்லிகை மணம் வீசும் பாட்டைக் கேட்டுட்டு அது நல்லா இருக்குன்னு ஃபோன் பண்ணிப் பாராட்டறாரு. எவ்வளவு பெருந்தன்மை பாரு!"

"அவரு எப்பவுமே அப்படித்தான். அவர் டாப்ல இருந்த காலத்திலேயும் அடக்கமாத்தான் இருப்பாரு. தன்னைப் பற்றி உயர்வாப் பேசிக்க மாட்டாரு!"

"ஆனா நம்ம ஆளு அதுக்கு நேர்மாறானவரு. 'என்னைப் போல உண்டா?'ன்னு பேசிக்கிட்டுத் திரியவரு. அவ்வளவு பெரிய மியூசிக் டைரக்டர் இவரோட பாட்டைப் புகழ்ந்து பேசறாரு. இவரு அதுக்கு நன்றி கூடச் சொல்லல. உங்களுக்கு இப்ப படம் எதுவும் இல்லை போலருக்கேன்னு அவரைக் குத்திக் காட்டிப் பேசறாரு. என் பாட்டு எல்லாமே ஹிட்டுதான்னு அவர்கிட்டப் பெருமை அடிச்சுக்கறாரு. கடைசியில நான் ரொம்ப பிசின்னு சொல்லி போனை கட் பண்ணிட்டாரு!"

"ஒண்ணு தெரியுமா உனக்கு? இவரு போட்ட அந்த மல்லிகை மணம் வீசும் பாட்டே ராமகிருஷ்ணன் சார் போட்ட கனவில் வந்த கன்னியேங்ற பாட்டிலேந்து சுட்டதுதான். ஆனா அவரு பெருந்தன்மையா அதைக் கூடப் பொருட்படுத்தாம இவரைப் பாராட்டி இருக்காரு. இவரு வழக்கம் போல சுய தம்பட்டம் அடிச்சுக்கிட்டாரு போல இருக்கு!" என்றான் குணா

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

குறள் 978:
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

பொருள்: 
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Wednesday, September 27, 2023

977. புதிய பொது மேலாளர்

அந்த நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த தீனதயாளன் ஓய்வு பெற்றதும், அந்தப் பதவி தங்களில் யாருக்குக் கிடைக்கும் என்று அவருக்கு அடுத்த நிலையிலிருந்த ஆறு மூத்த நிர்வாகிகள்  பார்த்துக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராமல் வெளியிலிருந்து திவாகர் என்ற ஒருவர் பொது மேலாளராக நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது.

"யார் இந்த திவாகர்?"

"நான் விசாரிச்சதில, அவரு நம்ம கம்பெனி டைரக்டர் ஒத்தரோட அண்ணன் மகன்னு தெரியுது."

"இதுக்கு முன்னால அவர் எங்கே வேலை செஞ்சாரு. அனுபவம் உள்ளவரா?"

"சொன்னா வெட்கக் கேடு. அவருக்கு 30 வயசுதான் ஆகுது. ஏதோ ஒரு பட்டப்படிப்பை முடிச்சுட்டு ஒரு கம்பெனியில வேலை செஞ்சுக்கிட்டே ஏதோ ஒரு யூனிவர்சிடியில கரெஸ்பாண்டன்ஸ்ல எம் பி ஏ படிச்சிருக்காரு. அந்த எம் பி ஏ பட்டம், நாலைஞ்சு வருஷ அனுபவம் இதையெல்லாம் வச்சு அவரை ஜெனரல் மானேஜரா நியமிச்சிருக்காங்க!"

"நாமெல்லாம் நிறையப் படிச்சிருக்கோம். நமக்கு நிறைய அனுபவம் இருக்கு. இந்த கம்பெனிக்காக இவ்வளவு வருஷம் உழைச்சிருக்கோம். அதுக்கெல்லாம் மதிப்பு இல்லையா?"

"நாம யாரும் எந்த டைரக்டருக்கும் உறவு இல்லையே!"

மூத்த நிர்வாகிகள் ஆறு பேரும் தங்களுக்குள் பேசிக் கொண்டது இது.

புதிய பொது மேலாளர் திவாகரை ஆறு மூத்த நிர்வாகிகளும் சந்தித்தனர்.

தன் அறைக்கு வந்தவர்களை உட்காரக் கூடச் சொல்லாமல் நிற்க வைத்தே பேசினான் திவாகர்.

"உங்க ஒவ்வொத்தரோட டிபார்ட்மென்ட்டைப் பத்தி ஒரு நோட் போட்டு எனக்கு அனுப்புங்க" என்றான் திவாகர்.

"சார்! இப்ப நம்ம நிதி நிலைமை கொஞ்சம் டைட்டா இருக்கு. அதனால நாம சில சிக்கன நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கு. பழைய ஜி எம் இருந்தப்பவே இதைப் பத்தி ஒரு புரொபோசல் அனுப்பி இருக்கேன். ரிடயர் ஆகிற சமயத்தில அவரு முடிவு எடுக்க விரும்பல. அந்த ஃபைல நீங்க சீக்கிரம் கிளியர் பண்ணணும்" என்றார் நிதி மேலாளர் சிவப்பிரசாத்.

"அதை அப்புறம் பாக்கலாம். முதல்ல எனக்கு இந்த ரூம்ல உள்ள ஃபர்னிச்சர், இன்டீரியர் டெகொரேஷன் இதைல்லாம் மாத்தணும். அதுக்கு ஒரு ஆளை அனுப்புங்க!" என்றான் திவாகர்.

மூத்த நிர்வாகிகளை திவாகர் மதிக்காமலே நடந்து வந்ததால் ஆறு மூத்த நிர்வாகிகிளில் மூன்று பேர் வேலையை விட்டு விலகி விட்டனர்.

நிதி மேலாளர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகிளின் பேச்சை மதிக்காமல் திவாகர் செயல்பட்டதால் நிறுவனத்தின் நிதி நிலைமை இன்னும் மோசமாயிற்று. ஒரு கட்டத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கூடக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆறு மாதங்கள் கழித்து நடந்த போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் மீட்டிங்கில் திவாகரைப் பதவி நீக்கம் செய்வதென்றும், நிறுவனத்தின் மூன்று மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ரவிகுமாரைப் பொது மேலாளாக நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

குறள் 977:
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.

பொருள்: 
சிறப்பு நிலை அதற்குப் பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், அது வரம்பு மீறிய செயலை உடையதாக இருக்கும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

976. தந்தை விட்டுச் சென்ற 'சுமை'

தந்தையின் மறைவுக்குப் பிறகு அவருடைய தொழிலை வினோத் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தபோது அவன் பிரச்னையாகக் கருதியது அவன் தந்தை அவனுக்கு விட்டுச் சென்ற சுமை என்று அவன் கருதிய சுப்பையாவை.

இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பிருந்தே நோய்வாய்ப்பட்டிருந்த அவன் தந்தை அவனிடம் கூறிய விஷயம்: "சுப்பையா நம்ம கம்பெனிக்கு இருக்கிற ஒரு மதிப்புள்ள சொத்து. எந்தக் காரணத்தைக் கொண்டும் அவரை வேலையை விட்டு அனுப்பிடாதே! அவரா விரும்பி ரிடயர் ஆகிற வரையில அவரை வேலையில வச்சுக்க."

தந்தையின் விருப்பப்படி வினோத் சுப்பையாவைத் தொடர்ந்து வேலையில் வைத்திருந்தான். 

ஆனால் அவரால் நிறுவனத்துக்கு எந்தப் பயனும் இருந்ததாகத் தெரியவில்லை. அலுவலகத்தில் அவர் தன் விருப்பப்படி ஏதோ செய்து கொண்டிருந்தார்.

ஒருமுறை வினோத் தன் நிறுவன மனேஜரை அழைத்து, "சுப்பையா வேலை எதுவும் செய்யாம சுத்திக்கிட்டிருக்காரு. அவருக்குன்னு குறிப்பிட்ட வேலைகளை அலாட் பண்ணுங்க" என்றான்.

"கஷ்டம் சார்! அவரு என்ன வேலை செய்யறாருன்னு யாருக்கும் தெரியாது. ஆனா ஒரு நிமிஷம் கூட சும்மா இல்லாம ஏதாவது செஞ்சுக்கிட்டுத்தான் இருப்பாரு. உங்கப்பா காலத்திலிருந்தே அப்படித்தான். உங்கப்பா அவர் மேல ரொம்ப மதிப்பு வச்சிருந்தாரு. அதனால அவர்கிட்ட அவரோட வேலையைப் பத்தி நான் எதுவும் கேட்டதில்லை. அவருக்குக் குறிப்பா இந்த வேலைன்னு கொடுத்தா சரியா வராது" என்றார் மானேஜர்.

"ஆகக்கூடி அவர் தண்டச் சம்பளம் வாங்கிக்கிட்டுத்தான் இருப்பாரு. அவர்கிட்ட எந்த வேலையும் வாங்க முடியாதுன்னு சொல்றீங்க. எப்படியோ போங்க!" என்றான் வினோத் எரிச்சலுடன்.

சில மாதங்களில் சுப்பையா இறந்து விட்டார்.

வினோத் வெளிப்பார்வைக்கு அவர் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தாலும், மனதுக்குள், 'நல்லவேளை! மனுஷன் போய்ச் சேர்ந்தாரு. இல்லைன்னா தொடர்ந்து அவருக்கு தண்டச் சம்பளம் கொடுத்துக்கிட்டே இருக்க வேண்டி இருந்திருக்கும்!' என்று நினைத்துக் கொண்டான்.

"மானேஜர்! என்ன நடக்குது? திடீர்னு ஏன் இவ்வளவு குழப்பம், தப்புக்கள் எல்லாம் நடக்குது?" என்றான் வினோத் கோபத்துடன்.

"செக் பண்ணிக்கிட்டிருக்கேன் சார்! கோ-ஆர்டினேஷன் சரியா இல்ல. பார்த்து சரி பண்ணிடறேன்" என்றார் மானேஜர்.

"இத்தனை வருஷமா நீங்கதானே மானேஜரா இருக்கீங்க? என்னவோ இப்பதான் வேலைக்கு சேர்ந்த மாதிரி செக் பண்ணிக்கிட்டிருக்கேங்கறீங்க!"

"மன்னிச்சுக்கங்க சார்! நம்ம கம்பெனியில அஞ்சாறு டிபார்ட்மென்ட் இருக்கு. அதையெல்லாம் கோ-ஆர்டினேட் பண்ண வேண்டியது முக்கியம். சுப்பையா சார்தான் இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்தார்னு இப்பதான் தெரியுது.. உங்கப்பாவோட நண்பர்ங்கறதால அவர் என்ன செய்யறார்ங்கறதை அவர்கிட்ட கேட்க எனக்குத் தயக்கமா இருந்தது. சும்மா ஏதோ செய்யற மாதிரி இங்கேயும் இங்கேயும் போய்க்கிட்டிருந்தார்னுதான் நான் நினைச்சேன். அவர் எவ்வளவு முக்கயமான ரோல் ப்ளே பண்ணி இருக்கார்னு இப்பதான் தெரியுது. அவர் என்னென்ன வேலைகளைச் செஞ்சுக்கிட்டிருந்தார்ங்கறதை முழுசாப் புரிஞ்சுக்கிட்டு, அந்த வேலையை முறையா மத்தவங்களுக்குப் பிரிச்சுக் கொடுக்க எனக்குக் கொஞ்சம் டயம் வேணும்."

சுப்பையாவை அழைத்துப் பேசி அவர் என்ன வேலை செய்து வந்தார் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்திருந்தால் அவர் செய்து வந்த வேலையின் முக்கியத்துவத்தை அறிந்து அவருடைய மதிப்பையும் அறிந்து கொண்டிருக்கலாமே என்று நினைத்தான் வினோத்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

குறள் 976:
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.

பொருள்: 
பெரியாரை விரும்பிப் போற்றுவோம் என்னும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Tuesday, September 26, 2023

975. வேலை மாற்றல் உத்தரவு

"பாஸ் இஸ் ஆல்வேஸ் ரைட்ங்கறதுதான் எல்லா நிறுவனங்களோட அடிப்படை மந்திரம். நீ அதை மீறினா சும்மா விடுவாங்களா?" என்றான் சிவராமன்

"அப்படின்னா?" என்றான் நவனீத்.

"உனக்கு இங்கிலீஷ் தெரியாதா? பாஸ் ஏதாவது சொன்னா அது தப்பா இருந்தாலும் மறுப்பு சொல்லாம ஏத்துக்கணும்."

"நான் அதைக் கேக்கல. சும்மா விடுவாங்களான்னு சொன்னியே, என்ன செய்வாங்கன்னு கேட்டேன்."

"என்ன செய்வாங்க? உன்னை எங்கேயாவது தண்ணி இல்லாத காட்டுக்குத் தூக்கி அடிப்பாங்க. பரவாயில்லையா?" என்றான் சிவராமன் இகழ்ச்சியாக.

"ஜெனரல் மானேஜர் ஒரு டெவலப்மென்ட்பிளான் சொன்னாரு. அதைப் பத்திக் கருத்துக் கேட்டாரு. நான் என் கருத்தைச் சொன்னேன். அவ்வளவுதானே?"

"உனக்குப் புரியலைடா. தன்னோட திட்டத்தைப் பத்தி அவர் நம்ம கருத்தைக் கேட்டதே நாம எல்லாரும் அதை ரொம்பப் பிரமாதமான திட்டம்னு சொல்லணுங்கறதுக்காகத்தான். இங்கே ஆமாம் சாமி போடறவங்கதான் பிழைக்க முடியும். நீ அவர் திட்டத்தில குறைகள் சொன்னதோட, அதில என்ன மாற்றங்கள் செய்யலாம்னு யோசனைகளும் சொன்ன. என்ன ஆகுதோ பார்க்கலாம்."

சிவராமன் கணித்தபடியே நவனீத் தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு கிளைக்கு மாற்றப்பட்டான்.

"நான் நினைச்சதை விட மோசமா நடந்திருக்கு. தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்தி இருந்தாக் கூடப் பரவாயில்லை. பிசினஸ் இல்லாத பிராஞ்ச்சுக்கு மாத்தி இருக்காங்க!" என்றான் சிவராமன்.

"ஆனா என்னை அந்த பிராஞ்சசுக்கு மானேஜரா இல்ல போட்டிருக்காங்க?" என்றான் நவனீத். 

"முட்டாள் மாதிரி பேசாதேடா. இப்ப நீயும் நானும் ஹெட் ஆ்பீஸ்ல டிபார்ட்மென்ட் மானேஜரா இருக்கோம். பிராஞ்ச் மானேஜர் பதவியும் அதே ராங்க்தான். ஆனா நமக்குத்தான் அதிகாரம் அதிகம். பிராஞ்ச் மானேஜரை நாம கேள்வி கேக்கலாம். கேள்வி கேக்கற இடத்திலேந்து பதில் சொல்ற இடத்துக்குப் போகப் போற. இது முன்னேற்றமா?" என்றான் சிவராமன் சற்றே கோபத்துடன்.

"ஜி எம் எங்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா? 'நீங்க சில யோசனைகளை எல்லாம் சொன்னீங்களே, அதையெல்லாம் உங்க பிராஞ்ச்ல செயல்படுத்தி பிராஞ்சை முன்னுக்குக் கொண்டு வாங்க'ன்னாரு."

"அவரு உன்னைக் கிண்டல் பண்ணி இருக்காருடா.அவரை எதிர்த்துப் பேசினதுக்காக உன்னைப் பழி வாங்கினதோட இல்லாம நீ பேசினதை எல்லாம் அங்கே செஞ்சு பாருன்னு உன்னை நக்கல் அடிச்சிருக்காரு. இதைத்தான் குதிரை கீழே தள்ளி விட்டுக் குழியையும் பறிச்ச மாதிரின்னு சொல்லுவாங்க. இதுக்கு முன்னால அங்கே பிராஞ்ச் மானேஜரா போனவங்க ஒத்தர் கூட வெற்றிகரமா செயல்பட்டதில்ல. கெஞ்சிக் கூத்தாடி வேற எங்கேயாவது மாற்றல் வாங்கிட்டுப் போவாங்க, இல்ல, வெறுத்துப் போய் வேலையை விட்டுட்டுப் போயிடுவாங்க, "

"சரி, போய்த்தானே ஆகணும்? அங்கே போய் என்ன செய்ய முடியும்னு பாக்கறேன்."

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நவனீத் சீனியர் மானேஜராகப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டுத் தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டான்.

"சாதிச்சுட்டடா! சவாலைச் சாதனையா மாத்தறதுன்னு சொல்லுவாங்க. அதை செஞ்சு காட்டிட்ட. உனக்குக் கொடுத்த பனிஷ்மென்ட்டை ரிவார்டா மாத்திக்கிட்டே. எப்படிடா?" என்றான் சிவராமன் நவனீத்தின் கைகளைக் குலுக்கியபடி.

"நம்ம ஜி எம் சொன்ன மாதிரியே நான் சொன்ன யோசனைகளைச் செயல்படுத்திப் பார்த்தா என்னன்னு நினைச்சு முயற்சி செஞ்சேன். பலன் கிடைச்சது. இதுவரை இல்லாத அளவுக்கு பிராஞ்ச் வளர்ந்தது. அதனால அசிஸ்டன்ட் மானேஜரா இருந்தவரை பிராஞ்ச் மானேஜரா புரொமோட் பண்ணிட்டு எனக்கு புரொமோஷன் கொடுத்து இங்கே கொண்டு வந்துட்டாங்க!" என்றான் நவனீத் பெருமை ததும்பும் குலில்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

குறள் 975:
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.

பொருள்: 
பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலை, செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

974. தீயா இருக்கணும் குமாரு!

"துரைக்கண்ணு இத்தனை வருஷமா அரசியல்ல இருக்காரு. ஆனா அவர் மேல ஒரு கரும்புள்ளி கூட இல்ல. ரொம்ப ஆச்சரியமா இருக்கு!"

"இத்தனைக்கும் அவர் மூணு தடவை அமைச்சரா இருந்திருக்காரு. நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறைன்னு லஞ்சம் அதிகம் நடமாடற துறைக்கு எல்லாம் அமைச்சரா இருந்திருக்காரு. அப்படி இருந்தும் அவர் மேல ஒரு புகார் கூட இல்ல."

"ஒரு அசியல்வாதி தப்பு பண்ணாம இருந்தாக் கூட எதிர்க்கட்சிகள் அவர் மேல ஏதாவது குற்றம் சாட்டுவாங்க. ஆனா இவர் விஷயத்தில அவங்களால அதைக் கூட செய்ய முடியல!"

"ஒண்ணு ரெண்டு பேரு முயற்சி செஞ்சாங்க. ஆனா துரைக்கண்ணு அவங்க சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யின்னு ஆதாரபூர்வமா நிரூபிச்சப்பறம் அவங்க மன்னிப்புக் கேட்டுக்கிட்டாங்க."

இரண்டு பத்திரிகை நிருபர்கள் அரசியல்வாதி துரைக்கண்ணுவைப் பற்றிப் பேசிக் கொண்டது இது.

"ஏம்ப்பா, எல்லாரும் சொல்ற மாதிரி நீ அத்தனை சுத்தமானவனா?" என்றார் துரைக்கண்ணுவின் நண்பர் குலசேகரன்.

"ஏன் அதில உனக்கென்ன சந்தேகம்?" என்றார் துரைக்கண்ணு.

"எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான்தான் உன்னை சின்ன வயசிலேந்து பார்த்துக்கிட்டிருக்கேனே! உன் அரசியல் எதிரிகள் கூட உன்னை சுத்தமானவன்னு ஏத்துக்கறாங்களே, அதுதான் எனக்கு ஆச்சரியம்!"

"நாம எப்படி இருக்கோங்கறதைப் பத்தி நமக்கு ஒரு தெளிவு இருந்தா, நாம தப்பு செய்யாம இருக்கலாம். மத்தவங்களுக்கும் நம்மைக் குற்றம் சொல்ல வாய்ப்பு இருக்காது."

"நீ சொல்றது எனக்குப் புரியலியே!"

"இந்த உதாரணம் பழசுன்னாலும், இதைச் சொல்லி விளக்கறதுதான் பொருத்தமா இருக்கும். ஒரு பொண்ணு கற்பானவன்னா அவளைப் பத்தி என்ன சொல்லுவாங்க?"

"அவ நெருப்பு மாதிரி. அவளை யாரும் நெருங்கக் கூட முடியாதுன்னு சொல்லுவாங்க" என்றார் குலசேகரன்.

"அதேதான். நானும் அப்படித்தான் தவறான எண்ணங்கள், ஆசைகள் இதையெல்லாம் என் பக்கத்தில நெருங்க விடாம கடுமையா நடந்துக்கறேன். அதனால தவறுகள் நடக்க வாய்ப்பே இல்லாமல் போகுது" என்றார் துரைக்கண்ணு.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

குறள் 974:
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

பொருள்: 
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

973. சிறு விபத்து

சட்டென்று பிரேக் போட்டு நிறுத்தப்பட்ட கார் ஒரு அதிர்வுடன் நின்றது.

"டிரைவர்! என்ன ஆச்சு? ஏதோ இடிச்ச மாதிரி இருந்ததே!" என்றாள் காரில் அமர்ந்திருந்த அபிராமி.

"ஆமாம் மேடம். ஒரு சைக்கிள் வந்து மோதிடுச்சு. இருங்க பாக்கறேன்" என்றபடியே காரிலிருந்து இறங்கினான் டிரைவர் சுதாகர்.

அந்தச் சாலையில் போக்குவரத்து எதுவும் இல்லை. சாலையில் அப்போது மனிதர்கள் யாரும் கூட இல்லை.

சுதாகர் காரிலிருந்து இறங்கி சைக்கிளுடன் சேர்ந்து கீழே விழுந்திருந்த மனிதனைத் தூக்கி நிறுத்தினான்.

அந்த மனிதனின் எளிய உடையும், பயந்த முகமும் அவன் சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் ஒரு மனிதன் என்பதை உணர்த்தின.

"ஏம்ப்பா குறுக்கே வந்தே? பார்த்து வரக் கூடாது?" என்று சுதாகர் அவனைக் கேட்டுக் கொண்டிருந்தபோதே, காரிலிருந்து இறங்கி வந்த அபிராமி பளாரென்று அந்த மனிதனின் கன்னத்தில் அறைந்தாள்.

"ஏண்டா, ரோடில எங்களையெல்லாம் நிம்மதியா கார் ஓட்ட விட மாட்டீங்களா? நீ பாட்டுக்குக் குறுக்கே வந்து மோதற! புது கார் டேமேஜ் ஆயிடுச்சு பார்!" என்றாள் அபிராமி.

காரில் ஒரு பெயின்ட் உதிரல் கூட ஏற்படவில்லை என்பதை கவனித்த சுதாகர், "அடிக்காதீங்க மேடம்! பிரச்னை ஆயிடும். காருக்கு ஒண்ணும் ஆகல" என்றான்.

அதற்குள் எங்கிருந்தோ வந்த சிலர் அங்கே கூடி விட்டனர்.

"என்ன ஆச்சு?" என்றான் முரட்டுத் தோற்றத்துடன் இருந்த ஒரு ஆள்.

"இந்த ஆளு பாவம் ஓரமா சைக்கிள்ள வந்துக்கிட்டிருந்தாரு. இந்த அம்மா வந்து காரை அவன் மேல மோதிட்டு அவனைக் கன்னத்தில வேற அறையறாங்க!" என்றான் சற்றுத் தொலைவிலிருந்து நடந்தவற்றைப் பார்த்த மற்றொருவன்.

"நான் காரை ஓட்டல!" என்றாள் அபிராமி எச்சரிக்கை உணர்வுடன்.

"நான்தாங்க கார் ஓட்டினேன். இவரு திடீர்னு குறுக்க வந்ததால கார் மோதிடுச்சு. அவருக்கு ஒண்ணும் ஆகல" என்றான் சுதாகர் சமாதானமாக.

சுதாகரின் பேச்சைப் பொருட்படுத்தாத அந்த முரட்டு ஆள், "ஏம்மா எவ்வளவு தெனாவெட்டு இருந்தா இவர் சைக்கிள் மேல காரை மோதிட்டு அவரைக் கன்னத்தில வேற அறைஞ்சிருப்பீங்க? சைக்கிள் ரிப்பேர் செலவு, அவரோட ஆஸ்பத்திரிச் செலவு, அவரை அறைஞ்சது எல்லாத்துக்கும் சேர்த்து பத்தாயிரம் ரூபா எடுத்து வையுங்க. இல்லேன்னா காரைப் போக விட மாட்டோம்!" என்றான் அபிராமியைப் பார்த்து.

"இல்லை நான் அவரை அடிக்கல" என்றாள் அபிராமி பலவீனமான குரலில்.

"அடிச்சதைப் பார்த்ததுக்கு சாட்சி இருக்கு. கையில பணம் இருக்கா? இல்லேன்னா ஜிபே கூடப் பண்ணலாம். நம்பர் சொல்லட்டுமா?"

அபிராமி பரிதாபமாக சுதாகரைப் பார்த்தாள்.

அதற்குள் கீழே விழுந்து கிடந்த சைக்கிளைத் தூக்கி நிறுத்திய அந்த மனிதன், "தப்பு என் மேலதான். நான்தான் குறுக்கே வந்துட்டேன். எனக்கு அடி எதுவும் படல. அவங்க என்னை அடிக்கவும் இல்ல. சைக்கிளுக்கு ஒண்ணும் ஆகல. கொஞ்சம் பெண்ட் ஆகி இருக்கு. பக்கத்தில இருக்கற சைக்கிள் கடையில பெண்டை நிமித்திக்கறேன்" என்று கூறி விட்டுத் தன்னால் முடிந்த அளவுக்கு சைக்கிளை நேராக்கி விட்டு அதைக் கஷ்டப்பட்டுத் தள்ளிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

முரட்டு ஆளும் மற்றவர்களும் முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்ப, அபிராமி காரில் ஏறி அமர்ந்து கொள்ள, சுதாகர் காரைக் கிளப்பினான்.

கார் கிளம்பியதும், "லோ கிளாஸ் பீப்பிள்!" என்றாள் அபிராமி.

"யாரைச் சொல்றீங்க?" என்றான் சுதாகர் தனக்குள் சிரித்தபடியே.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

குறள் 973:
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

பொருள்: 
மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Monday, September 25, 2023

972. புது மானேஜர்

புதிய மானேஜர் சங்கரராமனின் அறைக்குள் தயங்கிக் கொண்டே நுழைந்தான் சூபர்வைசர் கணபதி.

"வாங்க கணபதி! உக்காருங்க!" என்றார் சங்கரராமன்.

கணபதி சற்றே தயக்கத்துடன் அமர்ந்தான். 

பழைய மானேஜராக இருந்தால் அவன் அறைக்குள் நுழைந்ததுமே அவனைப் பார்த்துப் புருவத்தை உயர்த்துவார். சொல்ல வேண்டியதை கதவுக்கருகில் நின்றபடியே சொல்லி விட்டுப் போக வேண்டியதுதான். அவர் முன் உட்காருவது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

மானேஜருடன் பேசி விட்டுத் திரும்பியபோது 'இவர் சற்று வித்தியாசமானவர்' என்ற எண்ணம் கணபதியின் மனிதில் ஏற்பட்டது.

அடுத்தசில மாதங்களில் கணபதிக்கு சங்கர்ராமனுடன் ஒருவித நெருக்கமே ஏற்பட்டு விட்டது என் சொல்லலாம். இருவரும் தொழிற்சாலை விஷயங்களைப் பற்றித்தான் பேசினார்கள் என்றாலும் அவருடன் பேசி விட்டு வந்தபோது ஒரு நெருங்கிய நண்பனிடம் பேசியது போன்ற ஒரு உணர்வு கணபதிக்கு ஏற்பட்டது.

ருநாள் தொழிற்சாலை நிர்வாகம் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தன் கைக்கடிகராத்தைப் பார்த்த சங்கர்ரராமன், "எனக்கு டயாபடீஸ் இருக்கு. எனக்கு நேரத்துக்கு சாப்பிடணும். உங்க லஞ்ச் பாக்சை இங்கே எடுத்துக்கிட்டு வந்துடுங்களேன். ரெண்டு பேரும் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்" என்றார்.

கணபதி சற்று அதிர்ச்சியுடன், "நீங்க சாப்பிடுங்க சார். நான் அப்புறம் வரேன்" என்று எழுந்தான்.

"உக்காருங்க. ஏன், லஞ்ச் கொண்டு வரிலியா? அப்படீன்னா என்னோட லஞ்சசைக் கொஞ்சம் ஷேர் பண்ணிக்கங்க. வேணும்னா, அப்புறம் நீங்க வெளியில போய் சாப்பிட்டுக்கலாம்! ஏன்னா, என் லஞ்ச் பாக்ஸ்ல என் மனைவி ரொம்பக் கொஞ்சமாதான் சாப்பாடு வச்சிருப்பாங்க!" என்றார சங்கர்ராமன் .

"அதுக்கில்லை சார்! நீங்க உயர்ந்த ஜாதின்னு நினைக்கறேன். நான் தாழ்ந்த ஜாதி! உங்களோட சேர்ந்து சாப்பிடறது சரியா இருக்காது!" என்றான் கணபதி தயக்கத்துடன்.

"கடவுளே!" என்ற சங்கரராமன் ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டார்.

பிறகு, "அப்படியெல்லாம் எதுவும் இல்லை கணபதி. கடவுள் எல்லாரையும் சமமாத்தான் படைச்சிருக்காரு!" என்றார்.

"ஜாதிகளை நான்தான் படைச்சேன்னு கடவுளை சொல்லி இருக்கறதா சொல்றாங்களே சார்!"

"கடவுளே! உனக்கு இப்படி ஒரு கெட்ட பேரா?" என்று சொல்லிச் சிரித்தார் சங்கரராமன். 

"இப்ப நீங்க தொழிலாளர்களுக்கு ஒரு உத்தரவு போடறீங்க. நீங்க சொன்னா அவங்க கேப்பாங்களோ மாட்டாங்களோன்னு நினைச்சுக்கிட்டு, மானேஜர்தான் இப்படிச் சொன்னார்னு சொல்றீங்க. தொழிலாளர்கள் எங்கிட்ட வந்து நீங்க இப்படிச் சொன்னீங்களான்னு கேக்கவா போறாங்க? அது மாதிரிதான் யாரோ செஞ்சு வச்ச விஷயத்துக்குக் கடவுள் மேல பழியைப் போட்டுட்டாங்க!" என்றார் தொடர்ந்து.

"பிறப்பால எல்லாரும் சமம்னு சொல்றீங்க. அப்படீன்னா மனுஷங்களுக்குள்ள உயர்வு தாழ்வு இருக்கே, அது எப்படி சார்?"

"ரெண்டு விஷயம். ஒவ்வொத்தருக்கும் சூழ்நிலை வேறுபடலாம். வசதியான குடும்பத்தில பொறந்த ஒத்தருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கலாம். ரெண்டாவது உயர்வு தாழ்வுங்கறது நாம செயல்படற விதத்தால வருது. ரெண்டாவதுதான் ரொம்ப முக்கியம்னு நினைக்கறேன்.ஏன்னா ஒரே சுழ்நிலையில பொறந்து வளர்ந்த ரெண்டு பேர் வாழ்க்கையில ஒரே மாதிரி முன்னேறுவது இல்லையே!"

"நான் ஏழைக் குடும்பத்தில பொறந்தேன். அதனால அதிகமாப் படிக்க முடியல. வசதியான குடும்பத்தில பொறந்திருந்தா அதிகம் படிக்க வாய்ப்பு இருந்திருக்கும். அப்படிப் பார்த்தா சுழ்நிலை கூட நாம எங்கே பொறக்கறோங்கறதை ஒட்டித்தானே இருக்கு?"

"சூழ்நிலை நிச்சயம் ஒரு முக்கியமான விஷயம்தான். ஆனா, சூழ்நிலை சரியாக இல்லாட்டாலும் அதையும் மீறி வெற்றி அடைஞ்சவங்க உண்டு. சூழ்நிலை நல்லா இருந்தும் அதைப் பயன்படுத்திக்காம போனவங்களும் உண்டு. அதனால செயல்கள்தான் நம்மை வேறுபடுத்துதுன்னு சொல்லுவேன்."

கணபதி அவர் சொன்னதை முழுவதும் ஏற்றுக் கொள்ளாதது போல் மௌனமாக இருந்தான்.

"என்னைப் பார்க்க ஒத்தர் இங்கே அப்பப்ப வருவாரே கவனிச்சிருக்கீங்களா?" என்றார் சங்கரராமன்

"ஆமாம், பாத்திருக்கேன், எப்பவும் ஏதோ பிரச்னையில இருக்கற மாதிரி சோகமா இருப்பாரு." என்ற கணபதி, தான் அப்படிச் சொல்லி இருக்கக் கூடாதோ என்று நினைத்து உடனே "சாரி!" என்றான்.

"பரவாயில்ல. நீங்க அப்படி நினைச்சது சரிதான். அவன் என் தம்பிதான். எனக்கு இருந்த எல்லா வாய்ப்புகளும் அவனுக்கு இருந்தது. ஆனா அவன் அவற்றைப் பயன்படுத்திக்கல. சரியாப் படிக்காம அலட்சியமா விளையாட்டுத்தனமா இருந்தான். இப்ப அவனுக்குச் சரியான வேலை இல்லை. ரொம்ப கஷ்டப்படறான். எங்கிட்ட உதவி கேட்டு வருவான். நானும் என்னால முடிஞ்ச உதவியைச் செய்வேன்... என்ன எழுந்திட்டீங்க? போரடிக்கிறேனா?"

"இல்லை சார். நீங்க டயத்துக்கு சாப்பிடணும் இல்ல? நான் போய் என் லஞ்ச் பாக்சை எடுத்துக்கிட்டு வரேன்" என்றான் கணபதி சிரித்துக் கொண்டே. 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

குறள் 972:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

பொருள்: 
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரே தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் சிறப்புத்தன்மை ஒத்திருப்பதில்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

971. தந்தையும் மகனும்

"அரசு நிறுவனத்தில நல்ல வேலை. சம்பளம், இன்க்ரிமென்ட், விலைவாசிப் படி உயர்வுன்னு எல்லா வசதியும் இருக்கு. நீ ஒண்ணுமே செய்யாட்டாலும் புரொமோஷன் எல்லாம் ஆடோமாடிக்கா வந்துடும். அப்படி இருக்கறப்ப, இன்னும் எதுக்குப் புதுசா ஒரு கோர்ஸ் படிச்சுக்கிட்டிருக்கே!" என்றார் சம்பந்தம் தன் மகன் மகேஷிடம்.

"இல்லப்பா! டேட்டா அனாலிசிஸ்னு ஒரு சப்ஜெக்ட். அதில நிறைய வாய்ப்புகள் இருக்கறதா சொல்றாங்க. சாயந்திரம் ஆஃபீஸ்லேந்து வந்ததும் சும்மாதானே இருக்கேன். அதுதான் ரெண்டு மணி நேரம் கிளாஸ் போயிட்டு வரேன்" என்றான் மகேஷ்.

"அதுதான் எதுக்குங்கறேன்? இந்தப் படிப்பு உன் வேலையில முன்னேற உதவுமா?"

"நான் பாக்கற வேலைக்கும் இதுக்கும் தொடர்பு இல்லைப்பா. ஒரு ஆர்வத்திலதான் படிக்கறேன். இப்போதைக்குப் புதுசா ஒரு விஷயத்தைக் கத்துக்கறது உற்சாகமா இருக்கு. எதிர்காலத்தில  ஏதாவது பயன் இருக்கலாம். இல்லாட்டாலும் பரவாயில்ல. ஆர்வத்தோட ஏதாவது ஒரு செயல்ல ஈடுபட்டுக்கிட்டிருக்கறது மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுக்குது."

சில மாதங்கள் கழித்து மகேஷ் சம்பந்தத்திடம், "என்னப்பா, இப்பல்லாம் நீங்க சாயந்திரம் எங்கேயோ போயிட்டு வரீங்க போல இருக்கே!" என்றான்.

"ஆமாம். அன்னிக்கு நீ டேட்டா அனாலிசிஸ் படிக்கறது உனக்கு உற்சாகமா இருக்குன்னு சொன்னதை யோசிச்சுப் பார்த்தேன். பென்ஷன் வாங்கிக்கிட்டு வீட்டில சும்மா உக்காந்திருக்கறது எனக்கு போரடிக்குது. அதனால சில சமயம் விரக்தி கூட வர மாதிரி இருக்கு. அதனாலதான் நானும் ஏதாவது செய்யலாம்னு யோசிச்சு பக்கத்தில இருக்கற ஒரு சேவை நிறுவனத்துக்குப் போய்க் கொஞ்ச நேரம் வேலை செஞ்சுட்டு வரேன். இப்ப எனக்கு அது நிறைய உற்சாகத்தைக் கொடுக்குது!" என்றார் சம்பந்தம்.

"கிரேட் அப்பா!" என்றான் மகேஷ்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

குறள் 971:
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.

பொருள்: 
ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளி தருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர் வாழ்வது இழிவு தருவதாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

970. விவசாயிக்குச் சிலை

அந்தச் சிறிய ஊரில் பஸ் நின்றதும் இறங்கினேன்.

அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தை இன்ஸ்பெக்ட் செய்ய வேண்டிய அதிகாரி நான்.

பள்ளி எங்கே இருக்கிறது என்று விசாரித்தபோது,"நேரா போனீங்கன்னா பராங்குசம் சிலை வரும். அங்கே இடது பக்கம் திரும்பணும்" என்றார் எனக்கு வழி சொன்னவர்.

'பராங்குசம் என்று ஒரு அரசியல் தலைவர் இருக்கிறாரா என்ன? கேள்விப்பட்டதே இல்லையே!' என்று நினைத்துக் கொண்டே பள்ளிக்கூடத்துக்குச் சென்றேன்.

பள்ளிக்கூடத்தில் என் வேலை முடிந்ததும், தலைமை ஆசிரியரிடம், "இங்கே பராங்குசம்னு ஒத்தருக்கு சிலை வச்சிருக்காங்களே, அவரு என்ன இந்தப் பக்கத்தைச் சேர்ந்த அரசியல் தலைவரா" என்று தயங்கிக் கொண்டே கேட்டேன். ஒருவேளை அவர், "பராங்குசத்தைத் தெரியாதா உங்களுக்கு?" என்று கேட்டு என்னைப் பொது அறிவு இல்லாதவன் என்று உணர வைத்து விடுவாரோ என்ற பயம் எனக்கு இருந்தது.

"இல்லை சார்! அவர் இந்த ஊரைச் சேர்ந்த ஒரு விவசாயி" என்றார் தலைமை ஆசிரியர்.

"விவசாயியா? அவருக்கு ஏன் சிலை வச்சிருக்காங்க. விவசாயத்தில புதுமையா ஏதாவது செஞ்சாரா?"

"அதெல்லாம் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில இந்த ஜில்லாவோட கலெக்டரா இருந்தவர் ரொம்பக் கொடூரமானவர். வரி வசூலிக்கறில ரொம்ப கடுமையா இருப்பாரு. ஆனா வரி அதிகமா இருந்ததால, பல விவசாயிகளால வரியைக் கட்ட முடியல. அதனால வரி கட்டாதவங்களோட நிலங்களை ஜப்தி பண்ணச் சொல்லி கலெக்டர் உத்தரவு போட்டுட்டாரு. ஜப்திக்கான தேதியையும் அறிவிச்சுட்டாங்க.

"ஜப்தி பண்றதுக்கு முதல் நாள் ராத்திரி பராங்குசம் தன்னோட வயலுக்குப் போனாரு. அடுத்த நாள் காலையில அவர் தன்னோட நிலத்திலேயே இறந்து கிடந்தாரு. பூச்சி மருந்தைக் குடிச்சிருந்தாருன்னு தெரிஞ்சது."

"என்ன சார் இது? ஒத்தர் தற்கொலை செஞ்சுக்கிட்டார்ங்கறதுக்காக அவருக்குச் சிலை வைப்பாங்களா? தற்கொலை செஞ்சுக்கறது கோழைத்தனம் இல்லையா?" என்றான் நான் வியப்புடன்.

"ஊர்க்காரங்க அப்படி நினைக்கல. ஒரு விவசாயிக்கு அவரோட நிலம் ஜப்தி செய்யப்படறது பெரிய அவமானம். ஜப்தி நோட்டீஸ் வந்த எல்லா விவசாயிகளுமே இந்த அவமான உணர்வோடதான் இருந்தாங்க. ஆனா இப்படி ஒரு அவமானம் நேர்ந்தப்பறம் உயிர் வாழக் கூடாதுன்னு பராங்குசம் நினைச்சிருக்காரு. அவரோட தன்மான உணர்வை இந்த ஊர்க்காரங்க பெரிசா நினைக்கறாங்க. அது மட்டும் இல்ல. அவரோட தற்கொலையால அரசாங்கம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்தினதோட இல்லாம, வரி அதிகமா இருக்கறதை உணர்ந்து வரியைக் குறைச்சுட்டாங்க. அந்த நன்றி உணர்வுக்காகவும்தான் சிலை வச்சாங்கன்னு வச்சுக்கலாம்" என்றார் தலைமை ஆசிரியர்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 970:
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

பொருள்: 
தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர் வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, September 24, 2023

969. வழக்கறிஞரின் யோசனை!

அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் முரளிக்கு ஃபோன் செய்தாள் சியாமளா.

"முரளி. உங்கப்பாவுக்கு பிசினஸில கொஞ்சம் நஷ்டம் வந்துடுச்சு. அவருக்குப் பொருள் சப்ளை பண்ணினவங்களுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுக்க முடியல. நீ கொஞ்சம் பணம் அனுப்பினா நல்லா இருக்கும்" என்றாள்.

"எவ்வளவு?" என்றான் முரளி.

சியாமளா தயங்கிக் கொண்டே,"பத்து லட்ச ரூபாய்!" என்றாள். 

"பத்து லட்சமா? மை காட்! என்னம்மா நினைச்சுக்கிட்டிருக்கே? பத்து லட்ச ரூபாய்க்கு  நான் எங்கே போவேன்?" என்றான் முரளி கோபத்துடன். 

"பத்துப் பன்னண்டாயிரம் டாலர் உன்னால புரட்ட முடியாதா?"

"டாலர் கணக்கெல்லாம் போடாதே அம்மா! எனக்குப் பத்தாயிரம் டாலர்னா, உங்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் மாதிரின்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்களா?"

"முரளி! நான் அப்பா பேசறேன். நான் பொருட்கள் சப்ளை பண்ணின ஒரு பெரிய கஸ்டமர் திடீர்னு ஏதோ பிரச்னையில மாட்டிக்கிட்டார். அவரோட பாங்க் அக்கவுன்ட்டை எல்லாம் முடக்கிட்டாங்க. அவர்கிட்டே இருந்து எனக்கு வர வேண்டிய பெரிய தொகை முடங்கிப் போச்சு. ஆனா என்னோட சப்ளையர்களுக்கு நான் பணம் கொடுத்துத்தானே ஆகணும்? நீ இப்ப எனக்குப் பணம் கொடுத்தா நான் ஒரு வருஷத்தில அதை உனக்குத் திருப்பிக் கொடுத்துடுவேன்" என்றார் ரமணன்.

"அப்பா! இந்த பிசினஸ் எல்லாம் உங்களுக்கு வேண்டாம், உங்க ரெண்டு பேரோட குடும்பச் செலவுக்கு நான் பணம் அனுப்பறேன், நீங்க ரெண்டு பேரும் ஜாலியா லைஃபை எஞ்ஜாய் பண்ணுங்கன்னு நான் உங்களுக்கு எத்தனையோ தடவை சொல்லி இருக்கேன்!"

"அதெல்லாம் இருக்கட்டும். இப்ப இந்தப் பிரச்னையைத் தீர்க்கணும் இல்ல?  நான் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கணுங்கறது எனக்கு ரொம்ப முக்கியம்!"

"ஆனந்த்னு எனக்கு ஒரு லாயர் ஃபிரண்ட் இருக்கான். அவனை உங்களை வந்து பாக்கச் சொல்றேன். அவன் உங்க பிரச்னைக்கு ஒரு தீர்வு கொடுப்பான்" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் முரளி.

றுநாள் ரமணனின் அலுவலகத்துக்கு வந்த ஆனந்த், அவரிடம் விவரங்களைக் கேட்டுக் கொண்டு விட்டு, "சப்ளையர்ஸ் எல்லாம் அன்செக்யூர்ட் கிரடிடார்ஸ். அவங்களால உங்க எந்தச் சொத்தையும் தொட முடியாது. அதோட உங்க பேர்ல சொத்து எதுவும் இல்ல. உங்க வீடு பரம்பரை சொத்து. அதில உங்க பையனுக்கு உரிமை உண்டு. அதனால அதையும் அட்டாச் பண்ண முடியாது. சப்ளையர்ஸ் உங்க மேல கேஸ் போடட்டும். அதெல்லாம் விசாரிச்சுத் தீர்ப்பு வரப் பல வருஷங்கள் ஆகும். கேஸை எப்படி இழுத்தடிக்கறதுங்கறது எனக்குத் தெரியும். அப்படியே சீக்கிரம் தீர்ப்பு வந்தாலும் உங்ககிட்ட பணம், சொத்து எதுவும் இல்லைன்னு சொல்லி ஐபி கொடுத்துடலாம்!" என்றான் ஆனந்த்.

"ஐபி கொடுக்கறதா?" என்றார் ரமணன் அதிர்ச்சியுடன்

"ஆமாம். எத்தனையோ பேரு ஐபி கொடுத்துட்டுக் கவலை இல்லாம சுத்திக்கிட்டிருக்கான். கவலைப்படாதீங்க. நான் பாத்துக்கறேன்.. உங்களுக்கு வர வேண்டிய பணம் வராததால உங்களால சப்ளையர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுடுச்சுன்னு எல்லா  சப்ளையர்களுக்கும் ஒரு லெட்டர் அனுப்பிடலாம். நான் லெட்டர் டிராஃப்ட் பண்ணி நாளைக்கு எடுத்துக்கிட்டு வரேன்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் ஆனந்த்.

டுத்த நாள் காலை எட்டு மணிக்கு ஆனந்துக்கு முரளியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

"என்னடா இந்த நேரத்தில ஃபோன் பண்ற? இப்ப அங்கே ராத்திரி பதினோரு மணியா இருக்குமே!" என்றான் ஆனந்த்.

"இன்னிக்கு நீ என் அப்பாவைப் பார்க்கப் போகறதா இருந்த இல்ல? அங்கே போக வேண்டாம். என் அப்பா இறந்துட்டாரு" என்றான் முரளி.

"ஐயையோ! எப்ப? எப்படி?"

"தெரியல. தூக்கத்திலேயே இறந்துட்டாரு. அவருக்கு எந்த ஹெல்த் பிராப்ளமும் இல்ல. அதனாலதான் அவர் திடீர்னு இறந்தது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. கடன்காரர்களுக்குப் பணத்தைக் கொடுக்க முடியலியேன்னு நேத்து பூரா புலம்பிக்கிட்டிருந்தாராம். அந்த அவமான உணர்ச்சியே அவரைக் கொன்னிருக்கும்னு அம்மா சொல்றாங்க. விஷயம் தெரியாம நீ அங்கே போகக் கூடாதுன்னுதான் உனக்கு ஃபோன் பண்ணினேன்" என்று கூறி உரையாடலை முடித்தான் முரளி. 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 969:
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

பொருள்: 
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டு விடுவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

968. அரசனைக் காப்பாற்றியவர்கள்

"பத்து நாட்கள் கழித்துக் கண் விழித்திருக்கிறார் அரசர். அவர் கண் விழிக்கவே மாட்டாரோ என்று நான் அஞ்சிக் கொண்டிருந்தேன்" என்றான் பரஞ்சோதி.

"எல்லாம் நம் வைத்தியரின் கைவண்ணம்தான்" என்றான் வீரவல்லபன்.

அரசருக்கு அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டிருந்த பணிப்பெண் மேகலை, அறைக்கு வெளியில் வந்து, "அரசர் ஏதோ கேட்கிறார். வருகிறீர்களா?" என்றாள்.

இருவரும் விரைந்து அரசன் படுத்திருந்த அறைக்குள் ஓடினார்.

அவர்களைப் பார்த்துப் புன்னகைத்த அரசன் ராஜகம்பீரன் அவர்களை அருகில் வருமாறு சைகை செய்தான்.

"என்னுடைய விசுவாசமான ஊழியர்களான உங்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என்ன இடம்? நான் எப்படி இங்கே வந்தேன்?" என்றான் அரசன்.

எதிரி மன்னனுடனான போரில் ராஜகம்பீரனின் படைகள் தோற்றதும்,போரில் படுகாயம் அடைந்த ராஜகம்பீரன் எதிரி மன்னனால் சிறைப்பிடிக்கப்படாமல் அவனுடைய விசுவாச ஊழியர்கள் சிலர் அவனைக் காப்பாற்றித் தப்புவித்து ஒரு ரகசிய இடத்துக்குக் கொண்டு வந்து வைத்திருப்பதை அவர்கள் விளக்கினர்.

"போரில் ஏற்பட்ட காயங்களால் மயக்கமடைந்திருந்த தங்களை ஒரு பத்திரமான இடத்துக்கு அழைத்து வந்து வைத்தியரை வைத்துத் தங்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறோம். பத்து நாட்களுக்குப் பிறகு இன்றுதான் தாங்கள் கண் விழித்திருக்கிறீர்கள்" என்று விளக்கினான் பரஞ்சோதி.

ராஜகம்பீரன் கண்களை மூடிக் கொண்டான். மீண்டும் கண்களைத் திறந்தபோது அவனிடம் ஒரு சோர்வு இருந்தது.

"வைத்தியர் எங்கே?" என்றான் அரசன்.

"இன்னும் சற்று நேரத்தில் வருவார்" என்ற பரஞ்சோதி, "அரசே! தங்களுக்கு ஏற்பட்டிருந்த காயங்களின் தீவிரத்தன்மையைப் பார்த்தபோது எங்களுக்கு மிகவம் கவலை ஏற்பட்டது. ஆனால் வைத்தியர் தங்களைப் பிழைக்க வைக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார். அது போலவே தாங்களும் கண் விழித்து எங்கள் வயிற்றில் பாலை வைத்து விட்டீர்கள்" என்றான் .

"உங்கள் வைத்தியரின் பெருமையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவருடைய சிகிச்சை சிறப்பாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை ஆனால் இறந்து போகாமல் இருப்பதற்கான மருந்தை நான் முன்பே உட்கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது!"

"என்ன சொல்கிறீர்கள் அரசே?"

"போரில் தோற்றவுடன் போர்க்களத்திலேயே என் உயிர் போயிருக்க வேண்டும். அவ்வாறு போகாமல் பலத்த காயங்களுடன் நான் என் உயிரைப் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்றால் போரில் தோற்ற அவமானத்தை விட உயிர் வாழும் விருப்பம் என்னிடம் அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்பதுதானே பொருள்!" என்றான் ராஜகம்பீரன் கசப்புணர்வுடன்.

பொருட்பால்
குடியிந்யல்
அதிகாரம் 97
மானம்

குறள் 968:
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

பொருள்: 
மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

967.வேண்டாம் இந்த வேலை!

"எங்கே போயிட்டு வரீங்க?" என்றாள் சரசு.

"நல்ல விஷயமாத்தான்!" என்றான் சிரித்துக் கொண்டே.

"என்ன நல்ல விஷயம்?"

"சொல்றேன்."

ஆயினும் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கதிரேசன் அந்த நல்ல விஷயம் எது என்று சொல்லவில்லை. 

இரண்டு நாட்களுக்குப் பிறகு வெளியே எங்கோ போய் விட்டு வந்து சரசுவிடம் குடும்பச் செலவுக்குப் பணம் கொடுத்தான் கதிரேசன்.

"பணம் ஏதுங்க?" என்றாள் சரசு.

"நாளையிலேந்து வேலைக்குப் போகப் போறேன்!"

"அப்படியா?" என்று மகிழ்ச்சியுடன் கூறிய சரசு, "வேலைக்குப் போனா மாசம் முடிஞ்சதும்தானே சம்பளம் கொடுப்பாங்க! வேலைக்குப் போறதுக்கு முன்னாலேயே எப்படி சம்பளம் கொடுப்பாங்க?" என்றாள் வியப்புடன்.

"நமக்குத் தெரிஞ்சவங்களா இருந்தா, சொந்தக்காரங்களா இருந்தா கொடுக்க மாட்டாங்களா?"

"சொந்தக்காரங்களா?"

"நம்ம பரந்தாமன் கம்பெனியிலதான் நான் வேலைக்குப் போகப் போறேன்!"

"எந்தப் பரந்தாமன்?" என்று கேட்ட சரசு, உடனே எந்தப் பரந்தாமன் என்று புரிந்து கொண்டவளாக, "அவன் கம்பெனியிலேயா?" என்றாள் அதிர்ச்சியுடன்.

த்து ஆண்டுகளுக்கு முன் சரசு கதிரேசனைத் திருமணம் செய்து கொண்டதும் அவர்கள் அவனுடைய கிராமத்து வீட்டில்தான் குடித்தனம் நடத்தினர்.

அது கதிரேசனின் தந்தை கணபதி வியாபாரத்தில் ஈட்டிய பணத்தில் வாங்கிய வீடு.

சரசுவின் திருமணத்துக்குச்குச் சில ஆண்டுகள் முன்பிருந்தே கணபதியின் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட ஆரம்பித்திருந்தது. சமீபத்தில்தான் தந்தையுடன் வியாபாரத்தில் இணைந்திருந்த கதிரேசன் வியாபாரத்தை மேம்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான்.

ஆனால் திடீரென்று கணபதி இறந்து விட்டார்

கணபதி இறந்ததும் வியாபாரத்துக்காக அவருக்குக் கடன் கொடுத்திருந்தவர்கள் கதிரேசனை நெருக்க ஆரம்பித்தனர்.

கணபதிக்குக் கடன் கொடுத்திருந்தவர்களில் முக்கியமானவர் கணபதியின் ஒன்று விட்ட சகோதரர் பூமிநாதன்.. 

கதிரேசன் பூமிநாதன் வீட்டுக்குச் சென்றான்.

"சித்தப்பா! அப்பா இறந்துட்டாரு. நான் வியாபாரத்தை மேம்படுத்த முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன். மத்த கடன்கார்கள்கிட்ட எல்லாம் பேசிட்டேன். அவங்க ஆறு மாசம் டைம் கொடுத்திருக்காங்க. நீங்களும் கொஞ்சம் பொறுத்துக்கிட்டீங்கன்னா உங்க கடனைக் கொஞ்சம் கொஞ்சமாத் திருப்பிக் கொடுத்துடுவேன்!" என்றான் கதிரேசன்.

பூமிநாதன் பதில் சொல்வதற்குள் அருகிலிருந்த அவருடைய மகன் பரந்தாமன், "யாருடா சித்தப்பா? உங்கப்பா என்ன எங்கப்பாவோட கூடப் பொறந்தவரா? உறவை எல்லாம் சொல்லிக்கிட்டு வராதே! மரியாதையாக் கடனைத் திருப்பிக் கொடுக்கப் பாரு. இல்லேன்னா கோர்ட்ல கேஸ் போட்டுப் பணத்தை வாங்கிடுவோம்!" என்றான்.

"பரந்தாமா! நான் உன்னை விட வயசில பெரியவன். கொஞ்சம் மரியாதையாப் பேசு" என்றான் கதிரேசன் பொறுமையுடன்.

"கடன் வாங்கிட்டு அதைத் திருப்பிக் கொடுக்க முடியாதவங்கிட்ட என்னடா மரியாதை?" என்றான் பரந்தாமன்.

"பரந்தாமா! சும்மா இரு. நான் பேசிக்கறேன்" என்ற பூமிநாதனை, "நீங்க சும்மா இருங்கப்பா! உங்களுக்குக் கடன் கொடுக்கத்தான் தெரியும், கொடுத்த கடனைத் திருப்பி வாங்கத் தெரியாது" என்று அடக்கிய பரந்தாமன், "இங்கே பாரு கதிரேசா! உங்கப்பனை நம்பித்தான் எங்கப்பா கடன் கொடுத்தாரு. அவன் போய்ச் சேர்ந்தப்புறம், உன்னை நம்பி நாங்க காத்துக்கிட்டிருக்க முடியாது. இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள கடனை வட்டியோட செட்டில் பண்ணலேன்னா கோர்ட்ல கேஸ் போட்டுடுவேன்!" என்றான்.

தன்னை மட்டுமின்றித் தன் தந்தையையும் அவமரியாதையாகப் பேசியவனிடம் தொடர்ந்து பேசுவதில் பயனில்லை என்று உணர்ந்து கதிரேசன் மௌனமாக வெளியேறினான்,

பரந்தாமனின் வீட்டிலிருந்து கதிரேசன் வெளியே வந்தபோது அந்தத் தெருவில் இருந்தர்களில் பலர் பரந்தமனின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தபோது பரந்தாமன் உரத்த குரலில் தன்னையும் தன் தந்தையையும் மரியாதைக் குறைவாகப் கத்திப் பேசியது அவர்கள் காதில் விழுந்திருக்கும் என்ற உணர்வு கதிரேசனை மேலும் அவமானமாக உணரச் செய்தது.

வேறு வழியில்லாமல் வீட்டை விற்று எல்லாக் கடன்களையும் அடைத்து விட்டு ஊரை விட்டே வெளியேறி விட்டான் கதிரேசன்.

அதற்குப் பிறகு அருகிலிருந்த நகரத்தில் குடியேறி, ஒரு நிலையான வேலை கிடைக்காமல் பத்து வருடங்களாகப் பல வேலைகளில் இருந்து அல்லல் பட்டுக் கொண்டிருந்தான் கதிரேசன்.

"நீ நினைக்கிறது எனக்குப் புரியுது சரசு. பரந்தாமன் என்னை அவமானப்படுத்தினவன்தான். ஆனா நாம இப்ப இருக்கற நிலைமையில எனக்கு வேற வழி தெரியல. அவன் இந்த ஊர்ல ஒரு கம்பெனி வச்சு நடத்திக்கிட்டிருக்கான்னு கேள்விப்பட்டு அவனைப் போய்ப் பார்த்தேன். அவன் எனக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்து ஒரு மாசச் சம்பளத்தை அட்வான்சாகவும் கொடுத்திருக்கான்" என்றான் கதிரேசன் சங்கடத்துடன்.

ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டு யோசித்த சரசு, "நான் ஒண்ணு சொன்னா கேட்பீங்களா?" என்றாள்.

"சொல்லு சரசு!"

"உங்களுக்கு வேலை கிடைக்காம, நமக்கு வருமானம் இல்லாம நாம, பட்டினி கிடந்து செத்தாலும் பரவாயில்ல. ஆனா இந்த வேலை உங்களுக்கு வேண்டாம். இப்பவே போய் அவன் கொடுத்த அட்வான்சைத் திருப்பிக் கொடுத்துட்டு வந்துடுங்க!" என்றாள் சரசு உறுதியான குரலில், 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 967:
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

பொருள்: 
மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதை விட, அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Thursday, September 21, 2023

966. தணிகாசலம் போட்ட கணக்கு!

"என்ன தலைவரே இது, அந்த வீரய்யா உங்களைப் பத்தி எவ்வளவு கேவலமாப் பேசி இருக்காரு? அவரோட கூட்டணி வச்சுக்கலாம்னு சொல்றீங்களே!" என்றார் அகெமு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் செல்வமணி.

"இங்க பாருங்க. இந்தத் தேர்தல் நமக்கு ரொம்ப முக்கியம். போன தேர்தல்ல நாம தோத்து ஆட்சியை இழந்துட்டோம். இந்தத் தேர்தல்லேயும் தோத்துட்டோம்னா நம்ம கட்சி காணாமலே போயிடும், கருத்துக் கணிப்புகள் எல்லாம் ஆளும் கட்சிக்கும் நமக்கும் கடுமையான போட்டி இருக்கும்னு சொல்லுது. வீரய்யாவோட கட்சிக்கு அஞ்சு சதவீதம் ஓட்டு இருக்கு. அதனால அவரோட கூட்டு சேர்ந்தா நாம கண்டிப்பா ஜெயிச்சுடலாம்!" என்றார் பொதுச் செயலாளர் தணிகாசலம்.

"வீரய்யா உங்க மேல ஊழல் புகார் எல்லாம் சொல்லி இருக்காரு. உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து சிறைக்கு அனுப்பறதுதான் தன்னோட வாழ்க்கை லட்சியம்னு சொல்லி இருக்காரு. அவரோட போய் எப்படிக் கூட்டு வச்சுக்க முடியும்?" என்றார் செல்வமணி கோபத்துடன்.

"அப்படிச் சொல்லிட்டு நம்மோட கூட்டு வச்சுக்கிட்டது ஏன்னு சொல்ல வேண்டியது அவரோட பிரச்னை. நம்மைப் பொருத்தவரை நாம ரொம்பப் பெருந்தன்மையா நடந்துக்கிடதாக் காட்டிப்போம்!" என்றார் தணிகாசலம்.

தணிகாசலத்தின் அகெமு கட்சிக்கும், வீரய்யாவின் வெகெமு கட்சிக்கும் கூட்டணி ஏற்பட்டது. வெகெமு கட்சிக்கு அவர்கள் பலத்துக்குப் பொருந்தாத விதத்தில் அதிக இடங்களை அகெமு விட்டுக் கொடுத்தது.

"யாருக்கு எவ்வளவு இடம் என்பது முக்கியமில்லை. இந்தக் கூட்டணி எல்லா இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்கள் ஒரே நோக்கம்!" என்றார் தணிகாசலம்.

தேர்தல் முடிவுகள் வந்து விட்டன.

"வெகெமுவோட கூட்டு வச்சுக்கறதுக்கு முன்னால நமக்கும் ஆளும் கட்சிக்கும் சமமான அளவு ஆதரவு இருக்கறதா கருத்துக் கணிப்புகள் சொல்லிச்சு. வெகெமுவோட அஞ்ச சதவீதம் ஓட்டுக்களும் சேர்ந்தா நாம ஆளும் கட்சியை விட அஞ்சு சதவீதம் அதிக ஓட்டு வாங்கி ஜெயிச்சிருக்கணும். ஆனா அஞ்சு சதவீத ஓட்டு  குறைச்சு வாங்கித் தோத்திருக்கோம். அப்படின்னா நாம பத்து சதவீத ஓட்டை இழந்திருக்கோம்னு அர்த்தம்!" என்றார் செல்வமணி.

தணிகாசலம் மௌனமாக இருந்தார்.

"ஆனா நீங்க சொன்ன ஒரு விஷயம் நடக்கப் போகுது!"

"என்ன?" என்றார் தணிகாசலம்.

"இந்தத் தேர்தல்ல தோத்துட்டா நம்ம கட்சி காணாமப் போயிடும்னு சொன்னீங்க இல்ல, அது!" என்றார் செல்வமணி.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 966:
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

பொருள்: 
தன்னை இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்கும் நிலை, ஒருவனுக்குப் புகழும் தராது, அவனை தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன?
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Wednesday, September 20, 2023

965. வெள்ளையால் வந்த கறை!

அரசு அலுவலகத்தில் ஒரு உதவியாளராக இருந்த ரமணன் மீது அந்த அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் எல்லோருக்கும் ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு. அவருடைய உயரதிகாரிகள் கூட அவரிடம் அதிக மரியாதையுடன்தான் பேசுவார்கள்.

இதற்குக் காரணங்கள் இரண்டு. 

ஒன்றுஅந்த அலுவலகத்தின் விதிகள் மற்றும் நடைமுறைகள் பற்றி ரமணனுக்கு இருந்த ஆழ்ந்த அறிவு. அந்த அலுவலகத்தின் தலைமை அதிகாரியின் அறையை ஒட்டி இருந்த ஒரு பழைய அறையில் ஒரு அலமாரி முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலுவலக விதிமுறைகள், சட்டங்கள், நடைமுறைகள் பற்றிய புத்தகங்கள், கையேடுகள் ஆகியவற்றில் இருக்கும் அத்தனை விஷயங்களும் அவர் மூளைக்குள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தன.

யார் எந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டாலும் டக்கென்று பதில் சொல்வார் ரமணன். சிக்கலான விஷயங்களை எப்படி அணுகுவது என்று யோசனை சொல்லுவார். சில சமயம் அவருடைய மேலதிகாரிகள் அவரிடம் சந்தேகம் கேட்டு விளக்கம் பெற்றபின் அவர் சொன்தைச் சரிபார்க்க சட்டப் புத்தகங்களைப் பார்ப்பார்கள். அவர் கூறியது ஒருமுறை கூடத் தவறாகப் போனதில்லை.

இரண்டாவது காரணம் அவருடைய நேர்மை. பணிகளை முடித்துக் கொடுக்கப் பொதுமக்களிடமிருந்து லஞ்சம் பெறுவது ஒரு வழக்கமாக இருந்த அந்த அலுவலகத்தில் ரமணன் மட்டும் யாரிடமும் லஞ்சம் பெற்றதில்லை. அவரிடம் வரும் விண்ணப்பங்கள் சட்டப்படி சரியாக இருந்தால் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பெழுதுவார். விதிகளுக்குப் புறம்பாக இருந்தால், அதைக் குறிப்பிட்டு எழுதி விடுவார்.

அவரைத் தங்களுக்குச் சாதகமாகக் குறிப்பு எழுதும்படி செய்ய சில விண்ணப்பதாரர்கள் எவ்வளவோ முயன்றும் அவர் தன் நிலையை மாற்றிக் கொண்டதில்லை. இறுதியில் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பம் ரமணனிடம் போய் விடக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டது.

மணனின் வீட்டுக்கு வந்திருந்த அவருடைய சக ஊழியர் நாதன், "என்ன சார்! வீட்டுக்கு வெள்ளையடிச்சு ரொம்ப வருஷம் ஆகி இருக்கும் போல இருக்கே!" என்றார்.

"ஆமாம். என் மனைவி கூட சொல்லிக்கிட்டிருக்கா. அதுக்கு நிறைய செலவாகுமே! எப்ப முடியுமோ தெரியல!" என்றார் ரமணன்.

"நீங்க எப்ப வெள்ளை அடிக்கறதானாலும் தண்டபாணியை விட்டு அடிக்கச் சொல்லுங்க. அவர்தான் குறைஞ்ச கட்டணத்துக்கு நல்லா அடிச்சுக் கொடுப்பாரு."

"அவர் நம்ம ஆஃபீஸ்ல அடிக்கடி அப்ளிகேஷன் போட்டுக்கிட்டே இருப்பாரே! அவரை விட்டு செய்யச் சொன்னா சரியா இருக்குமா?"

"அவர் என்ன சும்மாவா அடிக்கப் போறாரு? காசு வாங்கிக்கிட்டுத்தானே அடிக்கப் போறாரு! நமக்குக் கொஞ்சம் குறைஞ்ச கட்டணத்தில அடிச்சுக் கொடுப்பாரு. அவ்வளவுதான்! நம்ம ஆஃபீஸ்ல இருக்கற எல்லார் வீட்டுக்கும் அவர்தான் வெள்ளை அடிக்கறாரு" என்றார் நாதன்.

"என்ன சார்! நாங்கள்ளாம் ஏதோ அஞ்சு பத்துன்னு வாங்கறோம். நீங்க மொத்தமா வாங்கறீங்க போல இருக்கே!" என்றான் சுந்தர் என்ற சக ஊழியன். 

"என்னப்பா சொல்ற?" என்றார் ரமணன் புரியாமல்.

"கான்டிராக்டர் தண்டபாணியை வச்சு உங்க வீட்டுக்கு வெள்ளை அடிச்சுட்டீங்களே, அதைச் சொல்றேன்!"

"தப்பாப் பேசாதே! பணம் கொடுத்துத்தான் அடிக்கச் சொன்னேன்" என்றார் ரமணன் கோபத்துடன்.

"கொடுத்திருப்பீங்க. அம்பதாயிரம் ரூபா வேலைக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுத்திருப்பீங்க!"

ரமணன் பதில் சொல்வதற்குள் அவரை அவர் மேலதிகாரி அழைப்பதாக பியூன் வந்து சொல்ல, மேலதிகாரியின் அறைக்குச் சென்றார் ரமணன்.

"ரமணன்! உங்ககிட்ட ஒரு அப்ளிகேஷன் அனுப்பி இருக்கேன்.அதுக்கு பேவரபிளா நோட் போட்டுடுங்க!" என்றார் மேலதிகாரி.

"ரூல்ஸ்படி எல்லாம் சரியா இருந்த போட்டுடறேன்."

"ரூல்ஸ்படி எல்லாம் சரியா இருந்தா நான் ஏன் இதை உங்ககிட்ட சொல்றேன்? நீங்க கேஷ் வாங்க மாட்டீங்க, கைண்ட்லதான் வாங்குவீங்க போல இருக்கு!அவரு உங்களுக்கு ஏதாவது செய்யணும்னா சொல்லுங்க. செஞ்சு கொடுத்துடுவாரு, தண்டபாணி உங்க வீட்டுக்கு வெள்ளை அடிச்சுக் கொடுத்த மாதிரி!" என்று சொல்லிச் சிரித்தார் மேலதிகாரி.

அவருக்குச் சூடாக பதில் சொல்ல வேண்டும் என்று எழுந்த எண்ணத்தை அடக்கிக் கொண்ட ரமணன் அமைதியாகத் தன் இருக்கைக்குத் திரும்பினார்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 965:
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

பொருள்: 
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈ.டுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Tuesday, September 19, 2023

964. கோவில் திருவிழா

அந்த ஊரில் யாருமே சொக்கலிங்கத்தைப் பெயர் சொல்லிக் குறிப்பிட மாட்டார்கள் பண்ணையார் என்றுதான் சொல்வார்கள்.

அந்த அளவுக்கு அந்த ஊர் மக்களிடையே அவருக்குப் பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தன.

இத்தனைக்கும் பண்ணையார் என்று சொல்லும் அளவுக்கு அவர் அதிக நிலம் வைத்திருந்தவர் அல்ல. ஓரளவுக்கு வசதியானவர் அவ்வளவுதான்.

சொக்கலிங்கத்துக்குப் பரம்பரையாக இருந்த பெருமையைத் தவிர, அவருடைய பண்பான அணுகுமுறையும் அவருக்கு மதிப்பைத் தேடித் தந்தன. அவர் யாரையும் கீழானவர்களாக நினைத்ததில்லை, யாரையும் மரியாதைக் குறைவாக நடத்தியதும் இல்லை.

"மனுஷன்னா இப்படி இருக்கணும்யா! நாலு காசு சம்பாதிச்சுட்டு ரெண்டு சென்ட் நிலம் வாங்கினவங்கள்ளாம் பெரிய ஜமீன்தார் மாதிரி பந்தா பண்றாங்க. இவரு எப்படி இருக்காரு பாருங்க!" என்று ஊரில் பலரும் தங்களுக்குள் பேசிக் கொள்வது உண்டு.

க்கத்து ஊரில் இருந்த கனகம் என்ற பெண்மணி கொலை செய்யப்பட்ட செய்தி அந்த ஊரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

"அந்தப் பொண்ணு ஒரு மாதிரியாம்! அவளோட தொடர்பு வச்சிருந்த யாரோ ஒத்தர்தான் அவளைக் கொன்னிருப்பாங்கன்னு பேசிக்கறாங்க!" என்ற பேச்சு ஊர்மக்களிடையே எழுந்தது.

கொலை நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் சொக்கலிங்கத்தைக் கைது செய்தனர்.

ஆயினும், அடுத்த சில வாரங்களில் உண்மையான கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டு, சொக்கலிங்கம் விடுதலை செய்யப்பட்டார். 

வீட்டுக்கு வந்த சொக்கலிங்கம் பல நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

"உங்களைப் பார்க்க கோவில் தர்மகர்த்தா வந்திருக்காரு" என்றாள் சொக்கலிங்கத்தின் மனைவி.

"வாங்க! உக்காருங்க" என்று தர்மகர்த்தாவை வரவேற்றார் சொக்கலிங்கம்.

தர்மகர்த்தா உட்காரவில்லை.

"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்" என்றார்.

"சொல்லுங்க!"

"அடுத்த வாரம் கோவில் திருவிழா வருது."

கோவில் திருவிழாவின்போது சொக்கலிங்கதத்துக்கு முதல் மரியாதை தருவது வழக்கம். அதைச் சொல்லத்தான் வந்திருக்கிறார் போலிருக்கிறது. 

"இந்த சந்தர்ப்பத்தில நான் முதல் மரியாதை வாங்கிக்கறது சரியா இருக்குமான்னு தெரியல!" என்றார் சொக்கலிங்கம் தயக்கத்துடன்.

"இந்த வருஷம் சுந்தரமூர்த்திக்கு முதல் மரியாதை கொடுக்கறதுன்னு கமிட்டியில முடிவு செஞ்சுட்டாங்க. நான் சொல்ல வந்தது வேற விஷயம்!"

"என்ன? என்றார் சொக்கலிங்கம் அதிர்ச்சியுடன்.

"கொலையில உங்களுக்குத் தொடர்பு இல்லேன்னாலும், அந்தப் பொண்ணோட உங்களுக்குத் தொடர்பு  இருந்த விஷயம் தெரிஞ்சதால ஊர்மக்கள் ரொம்ப அதிர்ச்சியில இருக்காங்க. இந்த நிலைமையில உங்களைப் பொது எடத்தில பார்த்தா  மக்கள் எப்படி நடந்துப்பாங்கன்னு தெரியாது. அதனல நீங்க திருவிழாவில கலந்துக்காம வீட்டில இருக்கறதுதான் நல்லதுன்னு உங்ககிட்ட சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்."

சொக்கலிங்கத்தின் பதிலை எதிர்பாராமல் தர்மகர்த்தா வெளியே நடந்தார். "

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 964:
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

பொருள்: 
உயர்ந்த நிலையில் இருந்தவர் தன் நிலை தாழ்ந்தால், தலையிலிருந்து உதிர்ந்த முடியைப்  போன்றவர் ஆவார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Monday, September 18, 2023

963. உயர்ந்த இடத்தில் இருந்தபோது...

"டாப் இண்டஸ்டிரிலிஸ்ட்கள்ள ஒருத்தரா இருந்த நீங்க இன்னிக்கு இவ்வளவு கீழே வந்ததுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?" என்றார் மதன்மோகன்.

"சார்! இது நான் உங்களோட நடத்தற மூணாவது மீட்டிங். இந்த பாயின்ட்டை நாம ஏற்கெனவே விரிவா விவாதிச்சுட்டோம். இப்ப நீங்க தீர்மானிக்க வேண்டியது என் நிறுவனத்தை மறுபடி மேலே கொண்டு வருவதற்கான என்னோட திட்டத்துக்கு நீங்க உதவப் போறீங்களாங்கறதுதான்!" என்றார் முத்துகிருஷ்ணன்.

"சரி. அடுத்த வாம் வாங்க. மறுபடி பேசலாம்."

"மன்னிச்சுக்கங்க சார்!  உங்களுக்கு இன்னும் ஏதாவது விளக்கங்கள் வேணும்னா சொல்லுங்க. அதையெல்லாம் கொடுக்கறேன். ஆனா திரும்பத் திரும்ப உங்களை வந்து பார்க்கறதை நான் விரும்பல. உங்களுக்கு வேற என்ன விவரம் வேணும்னாலும் என்னோட கன்சல்டன்ட்கிட்ட சொல்லுங்க. நான் வரேன்!" என்று கூறிக் கிளம்பினார் முத்துகிருஷ்ணன்.

சிறிது நேரம் கழித்து முத்துகிருஷ்ணனின் கன்சல்டன்ட் ஹரிபாபுவிடமிருந்து மதன்மோகனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது? 

"என்ன சார், மீட்டிங் எப்படிப் போச்சு?" என்றார் ஹரிபாபு.

"என்ன சார் இது? மனுஷன் நொடிச்சுப் போயிருக்காரு. அவருக்கு உதவி செய்ய யாருமே தயாரா இல்ல. நீங்க ரெஃபர் பண்ணினதால நான் அவரோட ரிவைவல் புராஜக்டுக்கு உவி செய்யறதைப் பத்திப் பரிசீலனை செய்யலாம்னு நினைச்சேன். ஆனா அவரு இவ்வளவு திமிராப் பேசறாரு!" என்றார் மதன்மோகன் கோபத்துடன்.

"சார். தப்பா நினைச்சுக்காதீங்க! அது திமிர் இல்லை. எந்த நிலைமையிலும் தன்னோட கௌரவம் பாதிக்கப்படக் கூடாதுன்னு நினைக்கிறாரு. அவ்வளவுதான். அவர் மூணு தடவை உங்களை சந்திச்சு விளக்கமாப் பேசிட்டாரு. நீங்க மறுபடியும் வரச் சொன்னதை அவர் விரும்பல அவ்வளவுதான்!" என்றார் ஹரிபாபு.

"பண உதவி கேக்கறவங்க பணிஞ்சுதான் போகணும். அவரு உச்சத்தில இருந்தப்ப எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்பவும் இருக்கணும்னா முடியுமா?"

"சார்! அவரு உச்சத்தில இருந்தப்ப நீங்க அவரைப் பார்த்ததில்ல. அதனால அப்ப அவர் எவ்வளவு பணிவா இருந்தார்னு உங்களுக்குத் தெரியாது. அவரோட பணிவைப் பார்த்து அவரை சாதாரணமா நினைச்சவங்க எத்தனையோ பேரு. ஒரு தடவை பாங்க்ல போய் கியூவில நின்னுருக்காரு. மானேஜர் பார்த்துட்டு ஓடி வந்து, 'நீங்க ஏன் சார் கியூவில நிக்கறீங்க? என்னோட கேபினுக்கு வந்திருந்தா உங்களுக்கு வேண்டியதை நான் செஞ்சு கொடுத்திருப்பேனே' ன்னு சொல்லி இருக்காரு. அதுக்கு இவரு 'என் வேலைக்காக உங்க அறைக்குள்ள வந்து உங்க வேலையைக் கெடுக்கறது எப்படி நியாயமா இருக்கும்?' னு சிரிச்சுக்கிட்டே சொன்னாராம்.

"ஏன், நான் அவருக்கு அறிமுகமானப்ப நான் ஒரு சாதாரண ஆளாத்தான் இருந்தேன். நான் என் கன்சல்டன்ட் தொழிலை ஆரம்பிச்ச புதுசு. அவரைப் பார்க்க முடியுமான்னு பயந்துகிட்டேதான் அவர் ஆஃபீசுக்குப் போனேன். முன்பின் தெரியாத என்னைக் கொஞ்சம் கூடக் காக்க வைக்காம தன் அறைக்குக் கூப்பிட்டுப் பேசினாரு. நான் என் தொழிலைப் பத்தி சொன்னப்ப, 'இப்ப எனக்கு கன்சல்டன்ட் உதவி தேவைப்படல. தேவைப்பட்டா உங்களைக் கூப்பிடறேன்'னு சொன்னாரு. அது மாதிரியே ரெண்டு வருஷம் கழிச்சு ஒரு புது புராஜக்ட் ஆரம்பிக்கறப்ப ஞாபகம் வச்சுக்கிட்டு என்னைக் கூப்பிட்டாரு.

"அவர் உயர்ந்த நிலையில இருந்தப்ப எந்த அளவுக்குப் பணிவா இருந்தாரோ, அந்த அளவுக்கு இப்ப தன்மானத்தோட இருக்காரு. அவருக்கு உதவறதா வேண்டாமாங்கறதை நீங்க முடிவு செஞ்சு எங்கிட்ட சொல்லுங்க."

மதன்மோகனின் பதிலை எதிர்பார்க்காமல் ஃபோனை வைத்து விட்டார் ஹரிபாபு.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 963:
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

பொருள்: 
உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், நிலை தாழ்ந்து விட்டால், அப்போது உயர்வான மான உணர்வும் இருக்க வேண்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Sunday, September 17, 2023

962. புதிய வாய்ப்புகள்!

"இப்பல்லாம் குளோப் டிவியில நடக்கற பட்டிமன்றங்கள்ள உனக்குக் கண்டிப்பா ஒரு இடம் உண்டுன்னு ஆயிடுச்சு. வாழ்த்துக்கள் குமரன்!" என்றார் அவன் பணி புரிந்த நிறுவனத்தின் பொது மேலாளர்.

"ரொம்ப நன்றி சார்!" என்றான் குமரன்.

"இனிமே நீ இது மாதிரி நிகழ்ச்சிகளுக்குப் போகணும்னா உனக்கு லீவ் கொடுக்கணும்னு சொல்லி இருக்கேன்."

"ரொம்ப நன்றி சார்!" என்றான் குமரன் திரும்பவும். 

ன்று குமரன் அலுவலகத்தில் இருந்தபோது அவனைப் பொது மேலாளர் அழைப்பதாக பியூன் வந்து அழைத்தான்.

பொது மேலாளர் அறைக்குச் சென்றதும் அங்கே அமர்ந்திருந்த ஒருவரைக் குமரனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பொது மேலாளர்.

"குமரன்! இவர் வினோத்குமார். நம்ம கம்பெனியோட மார்க்கெடிங் கன்சல்டன்ட். இவர் உங்கிட்ட ஏதோ சொல்ற விரும்பறார். கேளு!" என்றார் பொது மேலாளர்.

"மிஸ்டர் குமரன்! உங்க நிகழ்ச்சிகளை நான் பார்த்திருக்கேன். நீங்க நல்லாப் பேசறீங்க!" என்றார் வினோத்குமார்.

"நன்றி சார்!"

"இப்ப நீங்க நம்ம கம்பெனிக்கு ஒரு அஸெட் ஆயிட்டீங்க. நீங்க பிரபலமா இருக்கறது நம்ம கம்பெனிகு நல்ல பப்ளிசிடியைக் கொடுத்திருக்கு. அதனால உங்களுக்கு இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள் கிடைச்சு உங்களுக்கு இன்னும் அதிகப் புகழ் கிடைக்கணும்னு கம்பெனி விரும்புது. அதனால வேற சில டிவிகள்ள நடக்கற சில  நிகழ்ச்சிகள்ள உங்களுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்க நான் முயற்சி செஞ்சேன்!" என்றார் வினோத்குமார்.

"நான் சொல்லித்தான் அவர் இதை செஞ்சாரு!" என்றார் பொது மேலாளர்.

"ஆனா அவங்க நீங்க ரொம்ப சீரியசானவர்னும் அது மாதிரி நிகழ்ச்சிகளுக்கு நீங்க சரியா வர மாட்டீங்கன்னும் சொல்லிட்டாங்க."

"சார்! நான் சீரியசானவானாங்கறது எனக்குத் தெரியாது. ஆனா பட்டிமன்றத்தில நகைச்சுவை இல்லாம பேச முடியாது. நானும் எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு நகைச்சுவையாப் பேசறேன். மக்களும் அதை ரசிக்கறாங்க. நீங்க எந்த நிகழ்ச்சியைப் பத்தி சொல்றீங்கன்னு எனக்குத் தெரியல!" என்றான் குமரன்.

"நீங்க சீரியசானவர்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லைன்னு அர்த்தம் இல்ல. பட்டிமன்றங்கள்ள நீங்க நகைச்சுவையாப் பேசறீங்க, அதை மக்கள் ரசிக்கறாங்கங்கறது உண்மைதான். ஆனா இதில உங்களுக்கு ஒரு சாசுரேஷன் வந்துடுச்சு. வருஷத்துக்கு நாலைஞ்சு தடவை உங்களைக் கூப்பிடறாங்க. அவ்வளவுதான். அதுக்குத்தான் உங்களை வேற நிகழ்ச்சிகள்ள பங்கேற்க வைக்க முயற்சி செய்யறோம்" என்றார் பொது மேலாளர்.

"என்ன மாதிரி நிகழ்ச்சிகள் சார்!"

"'ஊர் சிரிக்குது!' மாதிரி நிகழ்ச்சிகள்."

"சார்! அது மாதிரி நிகழ்ச்சிகள் எனக்குச் சரியா வராது சார்!"

"அந்த நிகழ்ச்சியை நடத்தறவங்களும் எங்கிட்ட அப்படித்தான் சொன்னாங்க. உங்களுக்குக் கொஞ்சம் டிரெயினிங் கொடுத்தா சரியாயிடும்" என்றார் வினோத்குமார்.

"எதுக்கு சார்!"

"குமரன்! அந்த நிகழ்ச்சியில நீ கலந்துக்கிட்டா வாராவாரம் டிவியில வருவே. நிறையப் பணம் கிடைக்கும். அதை விட உனக்கு எவ்வளவு புகழ் வரும்னு நினைச்சுப் பாரு. நீ ஆஃபீசுக்கே வர வேண்டாம். உன்னோட சம்பளம் மாசாமாசம் உன்னோட அக்கவுன்ட்டுக்கு வந்துடும். இன்க்ரிமென்ட் ஆடோமாடிக்கா வரும். புரொமோஷன் எல்லாம் சீக்கிரமே வரும். இவ்வளவு புகழோட இருக்கற நீ எங்க கம்பெனியில வேலை செய்யறேங்கற பெருமை மட்டும் எங்களுக்குப் போதும். உன் ஃபோட்டோவை நம் கம்பெனி விளம்பரங்கள்ள பயன்படுத்திப்போம். அவ்வளவுதான். மிஸ்டர் வினோத் ரெண்டு மூணு மாசத்தில உனக்கு டிரெயினிங் கொடுத்து உன்னை அவங்க செலக்ட் பண்ற மாதிரி தயார் செஞ்சுடுவார். என்ன சொல்ற?" என்றார் பொது மேலாளர்.

"சார்! எங்கப்பா ஒரு தமிழறிஞர். அவரைப் பார்த்துதான் எனக்குத் தமிழ்ல ஆர்வம் வந்தது. பட்டிமன்ற நிகழ்ச்சிகள்ள கலந்துக்கற வாய்ப்பு கிடைச்சது.  குளோப் தொலைக்காட்சியில வாய்ப்புக் கிடைச்சதும் எனக்குப் பேரும் புகழும் கிடைச்சது. நீங்க சொல்ற மாதிரி வருஷத்துக்கு நாலைஞ்சு தடவைதான் வாய்ப்புக் கிடைக்குதுன்னாலும் எனக்கு அதில ஒரு திருப்தி இருக்கு. என் பேச்சை ரசிக்கிறவங்க என் மேல நல்ல மதிப்பு வச்சிருக்காங்க. நீங்க சொல்ற 'ஊர் சிரிக்குது' நிகழ்ச்சியை நான் பார்த்திருக்கேன். அதை நிறைய பேர் பார்க்கலாம். ஆனா எனக்கு அது ஒரு தரக் குறைவான நிகழ்ச்சியாத் தோணுது. அதுல நான் கலந்துக்கிட்டா எனக்கு அதிகப் பணமும், புகழும் கிடைக்கலாம். ஆனா அந்த மாதிரிப் புகழை நான் விரும்பல. 'இவனோட அப்பா ஒரு தமிழறிஞர், ஆனா இவன் இப்படிப்பட்ட மட்டமான நிகழ்ச்சிகள்ள கலந்துக்கறானே!' ன்னு யாரும் நினைக்கறதை நான் விரும்பல. என்னை மன்னிச்சுடுங்க சார்!" என்றான் குமரன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 962:
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

பொருள்: 
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்ய மாட்டார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Saturday, September 16, 2023

961.வேலை கிடைக்க ஒரு வழி

"இன்டர்வியூவுக்குப் போயிட்டு வந்தியே என்ன ஆச்சு?" என்றார் மோகனரங்கன் தன் மகன் வாசுவிடம்.

"இன்டர்வியூ நல்லாத்தான் பண்ணி இருக்கேன். ரெண்டு மூணு வாரத்தில ரிசல்ட் தெரியும்" என்றான் வாசு.

"அவன் படிப்பை முடிச்சு ஆறு மாம் ஆச்சு. இது மட்டும் எத்தனையோ இன்டர்வியூவுக்குப் போயிட்டு வந்துட்டான். ஆனா வேலை கிடைக்க மாட்டேங்குதே!" என்றாள் மோகனரங்கத்தின் மனைவி கல்யாணி.

"கிடைக்கும்!" என்றார் மோகனரங்கம்.

"இந்த ஊரிலேயே பெரிய குடும்பம் நம்மோடது. உங்க அப்பாவும் சரி, நீங்களும் சரி, ஊர்ல எத்தனேயோ பேருக்கு கணக்குப் பார்க்காம காசு, பணம், நெல்லு, அரிசின்னு வாரிக் கொடுத்திருக்கீங்க.  நம்மகிட்ட உதவி கேட்டு வந்தவங்கல்லாம்  இப்ப வசதியா வாழறாங்க. ஆனா நாம நொடிச்சுப் போயிட்டோம்!" என்று புலம்பினாள் கல்யாணி.

"அதுக்கு என்ன செய்யணுங்கற? நாம யாருக்கு உதவி செஞ்சோமோ அவங்ககிட்டே எல்லாம் போய்ப் பிச்சை கேக்கணுங்கறியா?" என்றார் மோகனரங்கம்.

"இந்தப் பையனுக்கு ஒரு வேலை கிடைச்சா நம்ம கஷ்டம் கொஞ்சமாவது விடியும்னு பாக்கறேன். ஆனா கிடைக்க மாட்டேங்குதே!" என்றாள் கல்யாணி ஆதங்கத்துடன்

"அப்பா! என் நண்பன் ஒரு விஷயம் சொன்னான். நான் இன்டர்வியூவுக்குப் போயிட்டு வந்தேனே அந்த கம்பெனியில நம்ம ஊர்க்காரர் ஒத்தர் டைரக்டரா இருக்காராம்!" என்றான் வாசு.

"யாரு?" என்றார் மோகனரங்கம்.

"கார்த்திகேயன். அவங்க அப்பா பேரு தர்மலிங்கம்னு சொன்னாங்க."

"ஓ, தர்மலிங்கம் பையனா? பாவம்! தர்மலிங்கம் சின்ன வயசிலேயே செத்துப் போயிட்டாரு. அவர் மனைவி தன்னோட ஒரு வயசுக் குழந்தையை வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டப்பட்டாங்க. எப்படியோ அந்தப் பையன் படிச்சு முடிச்சு வேலை கிடைச்சு தன் அம்மாவை அழைச்சுக்கிட்டு இந்த ஊரை விட்டுப் போயிட்டான். அவன் ஒரு பெரிய பதவியில இருக்கான்னு கேக்க சந்தோஷமா இருக்கு!"

"அவரு சிபாரிசு பண்ணினா வேலை கண்டிப்பாக் கிடைக்கும். அது ரொம்ப நல்ல கம்பெனி. அதில வேலை கிடைச்சா வாழ்க்கையில செட்டில் ஆயிடலாம். உங்களுக்கு அவரைத் தெரியும் இல்ல அப்பா?" என்றான் வாசு தயக்கத்துடன்.

"அவங்க குடும்பம் கஷ்டப்பட்டதா உங்கப்பா சொன்னாரே, அந்தப் பையனோட படிப்புக்கு உதவி செஞ்சது உங்கப்பாதான்! பள்ளிக்கூடத்தில சேக்கறதிலேந்து காலேஜ் ஃபீஸ் கட்டற வரையிலேயும் முழுக்க முழுக்க உதவினவரு உங்கப்பாதான்!" என்றாள் கல்யாணி.

"அப்புறம் என்னப்பா? நீங்க சென்னைக்குப் போய் கார்த்திகேயனைப் பார்த்து அவரோட கம்பெனியில  நான் இன்டர்வியூவுக்குப் போயிட்டு வந்திருக்கேன்னு சொன்னாப் போதுமே!" என்றான் வாசு உற்சாகத்துடன்.

"சொன்னாப் போதும்தான். ஆனா உங்க அப்பா சொல்ல மாட்டாரு!" என்றாள் கல்யாணி.

"நாம ஒத்தருக்கு உதவி செஞ்சிருக்குங்கறதுக்காக அவங்ககிட்ட போய் பதிலுக்கு ஒரு உதவி கேக்கறதைப் போல அவமானமான விஷயம் எதுவும் இல்ல. உனக்கு அந்த வேலை அதுவா கிடைச்சா கிடைக்கட்டும். இல்லேன்னா வேற வேலைக்கு முயற்சி பண்ணு!" என்றார் மோகனரங்கம் உறுதியான குரலில்."

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 961:
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

பொருள்: 
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும் கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Friday, September 15, 2023

950. சாதாரண ஜுரம்!

"மூணு நாள் ஆகியும் ஜுரம் குறையல. அதனால நீங்க அட்மிட் ஆயிடறது நல்லது. டிரிப்ஸ் ஏத்தினா மாத்திரையை விட வேகமா பலன் கிடைக்கும். என்ன மாதிரி ஜுரம்ங்கறதைக் கண்டுபிடிக்க பிளட் டெஸ்ட் எடுத்துப் பார்த்துடலாம்" என்றார் டாக்டர்.

"சரி சார். அட்மிட் ஆகிக்கறேன்!" என்றான் ராகவ்.

அட்மிட் ஆனதும் மனைவி கௌரிக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னான் ராகவ்.

"சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க? வீட்டிலேந்து கொடுத்தனுப்பலாம்னா ஆள் யாரும் இல்லை. அத்தையை வீட்டில தனியா விட்டுட்டு என்னாலயும் வர முடியாது" என்றாள் கௌரி.

"ஆஸ்பத்திரியிலேயே கான்ட்டீன் இருக்கு. இங்கேயே கொண்டு வந்து கொடுத்துடுவாங்க. இங்கேயே சாப்பிட்டுக்கறேன்."

ராகவுக்கு இரத்தப் பரிசோதனை செய்தார்கள். அவன் மணிக்கட்டில் ஊசி குத்திக் குழாய் மூலம் ஏதோ திரவத்தை ஏற்றினார்கள். அதுதான் மருந்து போலும். ஆனால் பார்ப்பதற்குத் தண்ணீர் மாதிரிதான் இருந்தது.

மணிக்கட்டில் மருந்தை ஏற்றி விட்டு அவனைத் தனியாக விட்டு விட்டு எல்லோரும் போய் விட்டாலும், அடிக்கடி யாராவது அறைக்குள் வந்து அவனுடைய உடல் வெப்பநிலை, இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு ஆகியவற்றை அளந்து, அளவுகளை அவன் படுக்க வைக்கப்பட்டிருந்த கட்டிலின் கால்மாட்டில்  தொங்கிய அட்டையில் குறித்து விட்டுப் போனார்கள்.

இரண்டு மூன்று முறை அவன் கழிவறைக்குச் செல்ல வேண்டி இருந்தபோது, கட்டிலுக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த பொத்தனை அழுத்தினான். உள்ளே வந்த நர்ஸ் அவன் மணிக்கிட்டில் செருகி இருந்த ஊசியை அகற்றி அவனுக்குத் தற்காலிகமாக விடுதலை அளித்தாள். 

அவன் திரும்ப வந்து படுத்துக் கொண்டு பொத்தானை அழுத்தியதும், மீண்டும் அவன் மணிக்கட்டில் ஊசியைச் செருகி விட்டுப் போனாள்.

ரவு எட்டு மணிக்குப் புதிதாக வந்த நர்ஸ், "ஆரானும் ராத்திரி உங்களுக்குத் துணையா இருக்கப் போறது?" என்றாள், அதட்டும் குரலில்.

"ஆரும் இல்லை" என்று பதிலளித்த ராகவ், மனதுக்குள், 'நான் என்ன சின்னக் குழந்தையா, துணைக்கு யாராவது இருக்க வேண்டும் என்பதற்கு?' என்று நினைத்துக் கொண்டான்.

"ராத்திரியில கண்டிப்பா ஒத்தர் கூட இருக்கணும். இது ஆஸ்பத்திரி ரூலாக்கும்!" என்றாள் நர்ஸ்.

'இல்லாவிட்டால் என்னை டிஸ்சார்ஜ் செய்து விடுவீர்களா என்ன?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ராகவ், கௌரிக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னான்.

"இப்படிச் சொல்லுவாங்கன்னு எனக்குத் தெரியும். அதனாலதான் உங்க தங்கைக்கு ஃபோன் பண்ணி நம் வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கேன். அவ இங்கே இருந்து அத்தையைப் பார்த்துப்பா. நான் வரேன் அங்கே!" என்றாள் கௌரி, ஏதோ உல்லாசப் பயணத்துக்குக் கிளம்புவது போன்ற உற்சாகத்துடன்.

இரவு சுமார் ஒன்பதரை மணிக்கு மருத்துவமனைக்கு கௌரி வந்தாள். அதற்குள் இரண்டு மூன்று முறை நர்ஸ் அறைக்கு வந்து, "ஆரும் வரலியா?" என்று கவலையுடன் விசாரித்து விட்டுப் போய்விட்டாள்.

டுத்த நாள் காலை ஆறு மணிக்கு ராகவின் அறைக்கு காப்பி வந்தது.

"உனக்கு வேணுமா?" என்றான் ராகவ் கௌரியிடம்.

கௌரி பதில் சொல்வதற்குள், "பேஷன்ட்டுக்கு மட்டும்தான் நாங்க கொடுப்போம். கெஸ்ட்டுக்கு வேணும்னா எக்ஸ்ட்ரா பே பண்ணணும்!" என்றான் காப்பி கொண்டு வந்த கான்ட்டீன் பையன், அவசரமாக.

"வேண்டாம். நான் வீட்டுக்குப் போய்க் குடிச்சுக்கறேன்!" என்றாள் கௌரி.

சற்று நேரத்தில் கௌரி வீட்டுக்குக் கிளம்ப யத்தனித்தபோது, அங்கே வந்த நர்ஸ், "அவரோட பிளட் டெஸ்ட் ரிபோர்ட் வந்துடுச்சு. டாக்டரைப் பாத்துட்டுப் போயிடுங்க!" என்றாள் கௌரியிடம்.

"ரிபோர்ட் என்ன சொல்லுது - மலேரியாவா, டெங்குவா?" என்றான் ராகவ்.

நர்ஸ் அவனை முறைத்துப் பார்த்து விட்டு, "அதை டாக்டர் சொல்லும்" என்று சொல்லி விட்டுப் போனாள்.

எட்டு மணிக்கு ராகவுக்குக் காலைச் சிற்றுண்டி வந்தது. ஆனால் அதுவரை டாக்டர் வரவில்லை.

"உங்களுக்கு வேணுமா? நூற்றைம்பது ரூபா ஆகும்!" என்றான் கான்ட்டீன் பையன் கௌரியைப் பார்த்து.

"வேண்டாம். இப்ப நான் கிளம்பிடுவேன்!" என்றாள் கௌரி கைக்கடிகாரத்தைக் கவலையுடன் பார்த்தபடியே.

ராகவ் காலைச் சிற்றுண்டி அருதிக் கொண்டிருதபோது, "ராத்திரி பூரா தூக்கமே வரல. இந்தக் குறுகலான பெஞ்ச்சில புரண்டு கூடப் படுக்க முடியல. முதுகெல்லாம் வலிக்குது. இவ்வளவு நேரம் ஆச்சு. டாக்டர் இன்னும் வரல. நான் இன்னும் காப்பி கூடக் குடிக்கல. காலையில ஆறு மணிக்கெல்லாம் காப்பி குடிச்சுப் பழகியாச்சு. இவ்வளவு நேரம் காப்பி குடிக்காம இருக்கறது ஒரு மாதிரியா இருக்கு!" என்றாள் கௌரி.

"காப்பி கொண்டு வரச் சொல்லட்டுமா? எவ்வளவு கேக்கறாங்களோ, கொடுத்துடலாம்!" என்றான் ராகவ்.

"வேண்டாம், வேண்டாம். தண்ணியா காப்பி கொடுத்துட்டு அதுக்கு அம்பது அறுபதுன்னு கறந்துடுவாங்க. ஏற்கெனவே உங்களுக்கான ஆஸ்பத்திரி செலவு வேற ஆட்டோ மீட்டர் மாதிரி நிமிஷத்துக்கு நிமிஷம் ஏறிக்கிட்டிருக்கு!" என்றாள் கௌரி, ராகவைக் குற்றம் சாட்டுவது போல்.

ராகவ் அவள் கூறியதைப் பொருட்படுத்தாமல், சிற்றுண்டியை ரசித்து உண்பதில் கவனத்தைச் செலுத்தினான்.

ஒன்பதரை மணிக்கு டாக்டர் வந்தார். கட்டிலின் கால் பகுதியில் தொங்க விடப்பட்டிருந்த ரிபோர்ட்டை வேகமாகப் படித்து விட்டு, "உங்க பிளட் டெஸ்ட் ரிபோர்ட் வந்துடுச்சு. ஒண்ணும் இல்ல, சாதாரண ஜுரம்தான் ஆனா மாத்திரைக்குக் கட்டுப்படாம இருந்திருக்கு. மாத்திரை ரத்தத்தில கலந்தாதான் வேலை செய்யும். ஆனா நீங்க சாப்பிட்ட மாத்திரைகளை உங்க உடம்பு ரிஜக்ட் பண்ணிடுச்சு போல இருக்கு. இப்ப டிரிப்ஸ் ஏத்தும்போது மருந்து நேரா ரத்தத்தில கலந்துடும். அதனால மருந்து வேலை செஞ்சு ஜுரம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ஆனா இன்னும் ரெண்டு நாளைக்கு டிரிப்ஸ் ஏத்தணும். நாளைக்கு சாயந்திரம்தான் உங்களை டிஸ்சார்ஜ் பண்ண முடியும்னு நினைக்கறேன்" என்று சொல்லி விட்டுப் போனார்.

"இதைக் கேக்கறதுக்குத்தானா இத்தனை நேரம் உட்கார்ந்திருந்தேன்! பசி வயித்தைக் கிள்ளுது. காலையிலேந்து காப்பிகூடக் குடிக்கல!" என்று எரிச்சலுடன் கூறியபடியே வீட்டுக்குக் கிளம்பினாள் கௌரி.

"வீட்டுக்குப் போய் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்க. இன்னிக்கு ராத்திரி வேற வரணும் இல்ல?" என்றான் ராகவ்.

அவனை முறைத்து விட்டுப் போனாள் கௌரி.

ஆனால் அன்றிரவு கௌரி தான் வீட்டில் இருந்து கொண்டு, ராகவின் தங்கை பத்மாவை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டாள்.

கௌரியைப் போல் இல்லாமல், பத்மா, அன்று இரவு பால், மறுநாள் காலை காப்பி, சிற்றுண்டி என்று எல்லாவற்றையும் வாங்கி அருந்தி விட்டுத்தான் போனாள்.

'கௌரிக்கு விஷயம் தெரிந்தால் குய்யோ முறையோ என்று கத்துவாள், பாவம்!' என்று நினைத்துக் கொண்டான் ராகவ்.

டுத்த நாள் மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தான் ராகவ்.

"மூணு நாள் ஆஸ்பத்திரி வாசம், உங்களைப் பார்த்துக்க டாக்டர், நர்ஸ்கள்னு ஒரு படை, டிரிப்ஸ் ஏத்த பாட்டில் பாட்டிலா மருந்துகள், ராத்திரி கூட இருக்க ரெண்டு பேர், எல்லாத்துக்கும் மேல ஆயிரக்கணக்கில பில்! ஒரு சாதாரண ஜுரத்துக்கு இவ்வளவா!" என்று அலுத்துக் கொண்டாள் கௌரி.

"நீயே இவ்வளவு அலுத்துக்கறியே, இந்த பில்லுக்கான பணத்தில பெரும்பாலான தொகையைக் கொடுக்கப் போற இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்காரன் எவ்வளவு அலுத்துப்பான்!" என்றான் ராகவ்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 95
மருந்து

குறள் 950:
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.

பொருள்: 
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...