Wednesday, November 18, 2020

430. வீட்டுக்காரரின் யோசனை

வாடகைப் பணத்தைக் கொடுத்த பிறகு தயங்கி நின்ற அன்புவைப் பார்த்து, "என்ன?" என்றார். சிவானந்தம்.

"வீட்டைக் காலி பண்றேன் சார்" என்றான் அன்பு.

"ஏன்? கல்யாணம் ஆகப் போகுதா? வேற வீடு பாத்துக்கிட்டுப் போகப் போறியா?" என்றார் சிவானந்தம். 

"இல்லை சார்! வேலையை விட்டுட்டேன். வேற வேலை எப்ப கிடைக்கும்னு தெரியல. அதனால வாடகை ஒழுங்காக் கொடுக்க முடியுமான்னு தெரியல. அதனால வேற வேலை கிடைக்கிற வரை கொஞ்ச நாள் யாராவது நண்பர்களோட தங்கிக்கலாம்னு இருக்கேன்" என்றான் அன்பு தயக்கத்துடன்.

"உள்ளே வா!" என்று அவனை உள்ளே அழைத்து சோஃபாவில் உட்காரச் சொன்ன சிவானந்தம், "உன்னைப் பத்தி எனக்கு அதிகமாத் தெரியாது. மாசாமாசம் முதல் வாரத்தில வாடகைப் பணத்தைக் கொடுத்துடுவ. அதனால எனக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் உண்டு. அதனால என்னால ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு பாக்கறேன். ஏன் வேலையை விட்ட?" என்றார்.

"என் முலாளியோட கொஞ்சம் மனஸ்பாபம். அதான் வேலையை விட்டுட்டேன்" என்றான் அன்பு சுருக்கமாக.

"நீ ஒரு கம்பெனியில மெஷின் ஆப்பரேட்டரா இருக்கறதா சொல்லி இருக்கே. உன் முதலாளியோட என்ன மனஸ்தாபம்? எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லு."

அன்பு ஒரு நிமிஷம் தயங்கி விட்டு, "ஒரு எஞ்சினியரிங் தொழிற்சாலையில நான் மெஷின் ஆப்பரேட்டரா இருந்தேன். பல தொழிற்சாலைகளுக்குப் பலவிதமான பாகங்கள் தயாரிக்க எங்களுக்கு ஆர்டர்கள் வரும். அதுக்கெல்லாம் நிறைய டூல்கள் டிசைன் பண்ணித் தயாரிச்சு அவற்றை வச்சுத்தான் அந்த பாகங்களைத் தயாரிக்கணும்.

"எங்க கம்பெனியில ஒரு எஞ்சினியர் இருந்தாரு. அவர்தான் டூல் எல்லாம் டிசைன் பண்ணுவார். அவர் வேலையை விட்டுப் போயிட்டார். அவர் டிசைன் பண்ணும்போது அவர் பக்கத்தில இருந்து பாத்து நானும் கொஞ்சம் கத்துக்கிட்டேன். அவரு போனப்பறம் நானே டிசைன் பண்ணிப் பாத்தேன். நல்லா வந்தது. என் முதலாளிக்கு ரொம்ப சந்தோஷம்.

"வேற எஞ்சினியரை வேலைக்கு எடுக்காம என்னையே டிசைன் பண்ணச் சொன்னாரு. ஆறு மாசம் பாத்துட்டு நான் தொடர்ந்து நல்லா செஞ்சா எனக்கு சம்பளம் அதிகமாக் கொடுக்கறேன்னாரு. ஆனா ஒரு வருஷம் ஆகியும் அவர் சொன்ன அளவுக்கு சம்பளம் கொடுக்கல. என் சம்பளத்தை ஒப்புக்குக் கொஞ்சம்தான் அதிகப்படுத்தினாரு. அதனாலதான் நான் வேலையை விட்டுட்டேன்."

"அவரு உன்னைப் போகாதேன்னு தடுக்கலியா?"

"போகாதேன்னு சொன்னாரு. ஆனா சம்பளம் அதிகமாக் கொடுக்க மாட்டேன்னுட்டாரு. 'நீ படிக்காதவன்தானே, என் கம்பெனியிலதானே வேலை கத்துக்கிட்ட? இப்ப நான் கொடுக்கறதே அதிகம்'னு சொல்லிட்டாரு."

ஒரு நிமிடம் யோசனை செய்த சிவானந்தம், "சரி. இப்ப எங்கே வேலை தேடப்போற?" என்றார்.

"இதே மாதிரி நிறைய கம்பெனி இருக்கே, அதில ஏதாவது ஒரு கம்பெனியில வேலை கிடைக்குமான்னு பாக்கணும்" என்றான்.

"இது மாதிரி இன்னொரு கம்பெனிக்கு வேலைக்குப் போனா, அங்கேயும் இதே மாதிரிதான் நடக்கும். நான் ஒண்ணு சொல்றேன். அதை முயற்சி பண்ணிப் பாரு. இந்த டூல் டிசைன் பண்றதை ஒரு தொழில் மாதிரி செய். இந்தத் தேவை இருக்கற கம்பெனிகளுக்குப் போய் உன்னை ஒரு டூல் டிசைன் எக்ஸ்பர்ட்னு சொல்லி குறிப்பிட்ட சில வேலைகளுக்கு டூல் டிசைன் பண்ற வாய்ப்பு கிடைக்குமான்னு பாரு. பல கம்பெனிகளுக்கு தனித் தனியான ஜாப்களுக்கு டூல் டிசைன் பண்ணி அதுக்கு ஒரு ரேட் சொல்லிப் பணம் வாங்கிக்க. உன்கிட்ட திறமை இருக்கறதால, உனக்கு நிச்சயமா வாய்ப்புகள் கிடைக்கும். கொஞ்ச நாள்ள உனக்குன்னு ஒரு பேர், இமேஜ் எல்லாம் கிடைச்சப்பறம் வருமானமும் நிறைய வரும். எந்த ஒரு கம்பெனியையும் நம்பி இருக்க வேண்டாம்" என்றார் சிவானந்தம்.

அன்பு தயங்கினான். 

"நீ சொன்னதிலேந்து உனக்கு இந்த வேலேயில ஒரு சிறப்பான அறிவு இருக்குன்னு எனக்குத் தோணுது. ஒரு மாசம் வேலை தேடாம இதை முயற்சி செஞ்சு பாரு. வீட்டை இப்ப நீ காலி செய்ய வேண்டாம். வாடகையைக் கூட நான் அப்புறம் வாங்கிக்கறேன். ஒரு மாசத்தில உனக்கு வாய்ப்பு எதுவும் வரலேன்னா அப்புறம் காலி பண்ணலாம்."

டுத்த மாதம் வாடகைப் பணம் கொடுப்பதற்காக சிவானந்ததைப் பார்க்க வந்த அன்பு, "சார்! நீங்க சொன்னபடி முயற்சி பண்ணினதில எனக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. ரெண்டு மூணு வேலை செஞ்சு கொடுத்திலேயே, நான் வாங்கின சம்பளத்துக்கு அதிகமா சம்பாதிச்சுட்டேன். இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும்னு நம்பிக்கை இருக்கு, உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்" என்றான்.

"நீ சொன்னதிலேந்து உனக்கு உன் தொழில்ல நல்ல அறிவு இருக்கன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். இந்த மாதிரி அறிவு இருக்கறவங்களால நிச்சயமா சாதிக்க முடியும்கறது என்னோட நம்பிக்கை. அதனாலதான் உன்னை என்கரேஜ் பண்ணினேன். அது சரி. உன் பழைய முதலாளி எப்படி இருக்காரு? ஏதாவது தெரியுமா?" என்றார் சிவானந்தம்.

"அவரு எனக்கு ஃபோன் பண்ணி என்னை மறுபடி வந்து வேலையில சேரச் சொன்னாரு. நான் கேக்கற சம்பளத்தைக் கொடுக்கறேன்னு சொன்னாரு. ஆனா நான் இப்ப சம்பளத்துக்கு வேலை செய்யல, சொந்தமாத் தொழில் செய்யறேன், எனக்கு சில வாடிக்கையாளர்கள் இருக்காங்கன்னு சொன்னேன். அவரு கோவிச்சுக்கிட்டு ஃபோனை வச்சுட்டாரு!" என்றான் அன்பு சிரித்தபடி. 

பொருட்பால் 
அரசியல் இயல்
அதிகாரம் 43
அறிவுடைமை 
குறள் 430:
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

பொருள்:
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

Saturday, November 14, 2020

429. அவசரப்பட்டு எடுத்த முடிவு?

"50 வருஷமா இந்த ஊர்ல சாயப்பட்டறை நடத்திக்கிட்டிருக்கோம். நம்ப கழிவுகள் ஆத்தில கலக்கறதால ஆத்துத் தண்ணி கெட்டுப் போகுதுன்னு சொல்லி நம்ம பட்டறைகளை மூடச் சொல்றாங்க. இந்த வட்டாரத்தில நூறு பட்டறைகளுக்கு மேல இருக்கு. மொத்தம் ஐயாயிரம் பேருக்கு மேல வேலை செய்யறாங்க. பட்டறைகளை மூடினா ஐயாயிரம் குடும்பமும் நடுத்தெருவுக்குத்தான் வரும். நாம இதை எதிர்த்துப் போராடுவோம். யாரும் பயப்பட வேண்டியதில்ல."

சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பேசியதும் அனைவரும் கை தட்டினர்.

"சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஆணையத்திலேந்து நமக்கெல்லாம் நோட்டீஸ் வந்திருக்கே!" என்றார் ராஜாங்கம்.

"இது மாதிரி நோட்டீசுக்கெல்லாம் நாம பயப்பட வேண்டியதில்ல. பக்கத்து ஊர்ல ஒரு ரசாயனத் தொழிற்சாலையோட கழிவுகளால நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருக்குன்னு விவசாயிங்க 10 வருஷமாப் போராடிக்கிட்டிருக்காங்க. அவங்களையே இன்னும் மூட வைக்கலியே இந்த அரசாங்கம்!" என்றார் தலைவர்.

ரு வாரம் கழித்து ராஜாங்கம் தன் தொழிற்சாலை ஊழியர்களின் மூத்த உறுப்பினர்கள் சிலரைத் தன் அறைக்கு அழைத்தார்.

"நாளுக்கு நாள் சுற்றுச் சூழல் அமைப்புகள்கிட்டேந்து நமக்கு எதிர்ப்பு அதிகமாயிக்கிட்டே இருக்கு, இந்தத் தொழிலை ரொம்ப நாளைக்கு நம்மால நடத்த முடியாதுன்னு எனக்குத் தோணுது" என்று ராஜங்கம் ஆரம்பித்ததுமே, "சார்! அப்படி நடக்க விடமாட்டோம்னு உங்க சங்கத்தில சொல்லி இருக்காங்களே! ஒத்தர் கூடத் தங்கள் பட்டறையை மூடறதா இல்லை" என்றார் ஊழியர்களில் ஒருவர்.

"ஆனா, நான் மூடப் போறேன்!" என்றார் ராஜங்கம்.

"என்ன சார் இது?" என்றார் இன்னொரு ஊழியர் அதிர்ச்சியுடன்.

"நீங்க முதலாளி. நீங்க ஏதாவது தொழில் செஞ்சு பொழச்சுப்பீங்க. நாங்கள்ளாம் என்ன செய்யறது?" என்றார் மற்றொருவர், அழுது விடுவார் போன்ற தொனியுடன்.

"நீங்க சொல்றது சரிதான். நான் வேற தொழில் ஆரம்பிக்கத்தான் போறேன். ஆனா உங்க எல்லாருக்கும் அதில வேலை கொடுக்கப் போறேன்!" என்றார் ராஜாங்கம்.

"என்ன சார் சொல்றீங்க?"

"என்னோட திட்டத்தை சொல்றேன். இப்ப கையில இருக்கற ஆர்டர்களை மட்டும் முடிச்சுட்டு பட்டறையை மூடிடப் போறேன். இயந்திரங்களையெல்லாம் வித்துட்டு, தொ,ற்சாலையை இடிச்சுட்டு வேற கட்டிடம் கட்டி ஒரு துணிக்கடை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். நல்ல வேளையா இது என் சொந்த இடம். அதோட இது மெயின் ரோடில இருக்கு. பல இடங்களிலேந்தும் பல வகையான உடைகளை வாங்கிக் குறைஞ்ச லாபம் வச்சு வித்தா வியாபாரம் நல்லா நடக்கும்னு நினைக்கிறேன்.

"இங்கே 30 பேரு வேலை செய்யறீங்க. ஒத்தரை கூட நான் வேலையை விட்டு அனுப்பப் போறதில்ல. அத்தனை பேருக்கும் அதே சம்பளத்தில வேலை கொடுக்கப் போறேன். கடை ஆரம்பிக்க ரெண்டு மூணு மாசம் ஆகும். ஆனா எல்லாருக்கும் தொடர்ந்து சம்பளம் கிடைக்கும். வேற வேலைக்குப் போகணும்னு நினைக்ககறவங்க போகலாம்" என்றார் ராஜாங்கம்.

"அவ்வளவு பேருக்கும் கடையில வேலை இருக்குமா சார்? அதுவும் அது வேற விதமான வேலையா இருக்குமே சார்?"

"வேற விதமான வேலைதான். ஆனா அதுக்கு நீங்க தயாரா இருக்கணும். இப்ப சாயப்பட்டையில உடையெல்லாம் சாயமாக்கிக்கிட்டு வேலை செய்யறீங்க. உடையில அழுக்குப் படாத கடை வேலை யாருக்கும் கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன். முப்பது பேரில பத்து பேர் கடையில வேலை செய்வாங்க. அஞ்சாறு பேர் இருந்தாப் போதும். ஆனா எல்லாருக்கும் வேலை கொடுக்கணுமே, அதனால பத்து பேரைக் கடையில வைக்கலாம்னு நினைக்கிறேன். இப்ப ஆஃபீஸ்ல வேலை பாக்கற அஞ்சு பேரு அங்கேயும் ஆஃபீஸ் வேலை பாப்பாங்க. பல ஊர்களுக்குப் போய் துணிகளைப் பாத்து தரமாவும், விலை குறைவாகவும் இருக்கற துணிகளைப் பாத்து வாங்கணும். அது மாதிரி சின்ன ஊர்களில இருக்கள துணிக்கடைகளிலே நம்ம துணிகளை விக்கணும். இதுக்கெல்லாம் ஒரு அஞ்சு பேரு..."

"இன்னும் அஞ்சு பேரு இருக்காங்களே!"

"கவலைப் படாதீங்க. அவங்களுக்கு ஒரு திட்டம் வச்சிருக்கேன்" என்றர் ராஜாங்கம் சிரித்துக் கொண்டே. மாற்றத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் ஐந்தாறு பேர் வேலையை விட்டுப் போய் விடுவார்கள் என்ற தன் எதிர்பார்ப்பை அவர் அவர்களிடம் சொல்லவில்லை.

"சார்! சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க! நாம கொஞ்ச காலம் பொறுத்திருந்து பாக்கலாமே! சங்கத் தலைவர் சொல்ற மாதிரி அரசாங்கத்தில நம்மளை இந்தத் தொழிலைத் தொடர்ந்து நடத்த அனுமதிக்கலாம் இல்ல?" என்றார் வயதில் மூத்த ஒரு ஊழியர்.

"பொதுவாகவே இப்ப சுற்றுச் சூழல் பாதிப்பு விஷயத்தில கடுமையா நடவடிக்கை எடுடக்கற போக்கு இருக்கு. நடவடிக்கை எடுக்கறது சில மாதங்கள் தள்ளிப் போகலாம். ஆனா இந்தத் தொழிலை ரொம்ப நாளைக்கு நடத்த அனுமதிக்க மாட்டாங்க. வெள்ள அபாயம் இருக்கும்போது ஒரு பாதுகாப்பான இடத்துக்குப் போக நாம நம்மை முன்னமே தயார்ப்படுத்திக்கணும். வெள்ளம் வந்தப்பறம் நமக்கு நேரமும் இருக்காது, போறதுக்கு இடமும் இருக்காது" என்றார் ராஜாங்கம்.

மற்ற சாயப்பட்டறை உரிமையாளர்கள் கூட ராஜாங்கம் தேவையில்லாத பயத்தில் அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டதாக நினைத்தார்கள். 

ராஜாங்கத்தின் சாயப்பட்டறை மூடப்பட்டு அவரது துணிக்கடை செயல்படத் தொடங்கிய ஓரிரு மாதங்களில் அரசின் உத்தரவால் எல்லா சாயப்பட்டறைகளும் நிரந்தரமாக மூடப்பட்டன. 

பொருட்பால் 
அரசியல் இயல்
அதிகாரம் 43
அறிவுடைமை  
குறள் 429:
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்
பொருள்:
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ள வல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் எதுவும் நேராது.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

Wednesday, November 11, 2020

428. தேர்தல் "வியூகம்"

அந்தத் தொகுதியின் சட்டமன்றஉறுப்பினராக இருந்த சரவணகுமார் மாவோயிஸ்ட்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் அங்கே இடைத்தேர்தலை அறிவித்தது. 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்துக்குள்ளேயே, அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்தக் கூடாதென்றும், அப்படி நடத்தினால் தேர்தல் நடைபெறுவதைத் தாங்கள் அனுமதிக்க முடியாதென்றும் மவோயிஸ்ட்களிடமிருந்து அறிவிப்பு வெளியாகியது.

கொல்லப்பட்ட சரவணகுமார் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர். தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே ஆளும் கட்சி தன் வேட்பாளரை அறிவித்து விட்டது. 

மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தலின் பின்னணியில் முக்கியமான எதிர்க்கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் தாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அறிவித்து விட்டன.

எதிர்க்கட்சியின் தலைவர் சண்முகம் துணிச்சலுக்குப் பெயர் பெற்றவர். தன் ஐம்பது கால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டவர். அவருக்கு "அஞ்சாநெஞ்சர்" என்றே ஒரு பட்டப் பெயர் உண்டு. அவர் என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ஆளுங்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான பரணிகுமாரிடமிருந்து ஒரு அறிக்கை வெளியாகியது. 

"மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தலால் தொகுதியில் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அது எங்கள் வசம் இருந்த தொகுதி. எதிர்க்கட்சித் தலைவர் அங்கே வேட்பாளரை நிறுத்தாமல் இருந்தால் எங்கள் கட்சி வேட்பாளர் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தலுக்கே அவசியம் இருக்காது. இதனால் மவோயிஸ்ட்களின் வன்முறை தடுக்கப்படும். மக்கள் நலனையும், அமைதி நிலவ வேண்டிய அவசியத்தையும் கருத்தில் கொண்டு எதிர்க் கட்சித் தலைவர் ஒரு நல்லமுடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்" என்று அந்த அறிக்கையில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

பொதுவாக இது போன்ற அறிக்கைகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் இயல்புள்ள எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து இரண்டு நாட்கள் எந்த பதிலும் வரவில்லை.

ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு எதிர்க் கட்சித் தலைவர் சண்முகம் முதலமைச்சரை அவர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

"என் வேண்டுகோள் மீது என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்?" என்றார் முதலமைச்சர் பரணிகுமார்.

"உங்கள் அறிக்கையைப் பார்த்தேன். உங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன். நாங்கள் வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை!" என்றார் சண்முகம்.

"மிகவும் நன்றி. இதை நேரே சொல்லத்தான் என்னைப் பார்க்க வந்தீர்களா?".என்றார் பரணிகுமார் மகிழ்ச்சியுடன்.

"இல்லை அதை நான் அறிக்கை மூலமே அறிவித்திருக்கலாம். நான் உங்களைப் பார்க்க வந்தது உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்க!"

"சொல்லுங்கள்!" என்றார் பரணிகுமார், என்ன கேட்கப் போகிறாரோ என்ற எச்சரிக்கை உணர்வுடன்.

"உங்கள் கட்சி வேட்பாளரையும் நீங்கள் விலக்கிக் கொள்ள வேண்டும்!"

"எதற்கு? அப்புறம் தேர்தலே ரத்தாகி விடும். மவோயிஸ்ட்கள் விரும்பியது நடக்கும். அதுவா நம் நோக்கம்?"

"சரி. உங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். அதற்குப் பிறகு, அவரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்ற மாவோயிஸ்ட்கள் அனுமதிப்பார்களா? அவர் தொகுதிக்குப் போகும்போது அவரைக் கொலை செய்ய முயற்சி செய்ய மாட்டார்களா?"

"செய்வார்கள். அவருக்கு அரசாங்கம் அதிகப் பாதுகாப்பு கொடுக்கும்."

"உங்கள் பாதுகாப்பை மீறி அவர் கொல்லப்பட மாட்டார் என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? சொல்ல வேண்டாம். உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறதா?"

"அதற்காக? மாவோயிஸ்ட்களின் மிரட்டலுக்கு பயந்து நாம் செயல்பட முடியாது!" என்றார் பரணிகுமார்.

"சில விஷயங்களுக்கு நாம் பயந்துதான் ஆக வேண்டும். உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு தொலைபேசி வந்தால் உடனே அனைவரும் வெளியில் ஒட மாட்டீர்களா? பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயந்துதான் ஆக வேண்டும். இன்றைய சூழலில் மவோயிஸ்ட்களின் மிரட்டலை நாம் புறக்கணிக்க முடியாது. உங்கள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை மவோயிஸ்ட்கள் கொல்ல முயற்சிகள் செய்யும்போது பொது மக்கள் பலரும் கூட பாதிக்கப்படுவார்கள். அதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சிறிது காலத்துக்கு அந்தத் தொகுதிக்குச் சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருப்பதுதான் நல்லது. மாவோயிஸ்ட்களை பேச்சு வார்த்தை மூலமோ, நேரடி மோதல் மூலமோ வழிக்குக் கொண்டு வரும் வரையில் அவர்கள் அச்சுறுத்தல்களை மதித்து நடப்பதுதான் நடைமுறைக்கு ஏற்ற வழி" என்றார் அஞ்சாநெஞ்சர் சண்முகம். 

பொருட்பால் 
அரசியல் இயல்
அதிகாரம் 43
அறிவுடைமை  
குறள் 428:
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

பொருள்:
அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு அஞ்சாமல் இருப்பது அறியாமையாகும். அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு அஞ்சுவது அறிவுடையோர் செயல்
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்

Friday, November 6, 2020

427. தோழிக்குத் தெரிந்தது...

பல வருடங்களாக கிராமத்தில் வசித்து வந்த தன் சிறு வயதுத் தோழி சந்திரா தான் வசிக்கும் நகரத்துக்குக் குடி வந்தது அருணாவுக்கு மிகவும் உற்சாகமளித்தது.

நேரம் கிடைக்கும்பொதெல்லாம் தோழிகள் இருவரும் சந்தித்து அரட்டை அடிப்பது, கடைகள், கோவில்கள், சினிமா தியேட்டர் போன்ற இடங்களுக்குச் சென்று வருவது என்று சேர்ந்து பொழுதைக் கழித்தனர்.

பல வருடங்கள் கிராமத்திலேயே வாழ்ந்து அதிகமாக வேறெங்கும் செல்லாமலே கிணற்றுத் தவளையாக இருந்து விட்ட சந்திராவுக்கு நகர வாழ்க்கையின் சிறப்புகளைக் காட்டுவதில் அருணா அதிக ஆர்வம் கொண்டிருந்தாள்.

ஷாப்பிங் மால் போன்ற புதிய நகர அதிசயங்களைப் பார்த்து சந்திரா மலைத்து நின்றபோது, 'இப்படி நகர வாசனையே இல்லாத கிராமத்துப் பெண்ணாக இருக்கிறளே இவள்!' என்று நினைத்தாள் அருணா.

ன்று அருணா அவளை ஒரு நகைக்கடைக்கு அழைத்துச் சென்றாள். அந்தக் கடையில் அருணா நகைச்சீட்டு போட்டு வந்தாள்.

அந்த மாத சீட்டுப் பணத்தைக் கட்டி விட்டுத் தோழிக்குக் கடையைச் சுற்றிக் காட்டி விட்டு வெளியே வந்தபோது, "கடை எப்படி இருக்கு?" என்றாள் அருணா தோழியிடம்.

"நல்லாத்தான் இருக்கு" என்ற சந்திரா, "ஆமாம்! இதில சீட்டு போடறியே, அதனால உனக்கு என்ன லாபம்?" என்றாள்.

துவக்கத்தில் கொடுக்கப்படும் விலை மதிப்புள்ள பரிசு, சீட்டு முடிந்ததும் கட்டிய பணத்தை விடக் கூடுதலான தொகைக்கு (பாங்க்கில் ரெகரிங் டெபாசிட் போட்டால் கிடைக்கும் தொகையை விட அதிகம் என்று விளக்கினாள் அருணா), செய்கூலி, சேதாரம் இல்லாமல், சந்தை விலையை விடக் கணிசமான அளவு குறைந்த விலையில் நகை வாங்கிக் கொள்ளும் சலுகை போன்ற பலன்களை அருணா விளக்கினாள். 

"இதெல்லாம் அவங்களுக்கு எப்படிக் கட்டுப்படியாகும்?" என்றாள் சந்திரா.

"கட்டுப்படி ஆகறதாலதானே கொடுக்கறாங்க? இது மாதிரி சலுகைகள் எல்லாக் கடைகளிலேயுமே கொடுக்கறாங்க. ஆனா இவங்க அளவுக்கு வேற யாரும் சலுகைகள் கொடுக்கறதில்ல!" என்றாள் அருணா.

"அதனாலதான் கேக்கறேன்" என்றாள் சந்திரா.

"நீ கூட இதில சீட்டு சேரலாம்" என்றாள் அருணா.

"எனக்கு வேண்டாம்மா! நீ கூட இதில போடறது ரிஸ்க்குன்னுதான் எனக்குத் தோணுது!"

சந்திரா தனக்கு ஆலோசனை சொன்னது அருணாவுக்கு வியப்பாக இருந்தது. ஆனால் அவள் பதில் ஏதும் சொல்லவில்லை.

டுத்த மாதம் சீட்டுப்பணம் கட்ட அந்தக் கடைக்கு அருணா சென்றபோதும் சந்திரா அவளுடன் சென்றாள்.

வெளியே வந்ததும், "சீட்டுக் கட்டறதை நிறுத்திட்டு கட்டின பணத்தையோ, அதற்கு ஈடான நகையையோ கேட்டா கொடுப்பாங்களா?" என்றாள் சந்திரா.

"கொடுக்க மாட்டாங்க. ஏன் கேக்கறே?" என்றாள் அருணா வியப்புடன்.

"எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. போன தடவை பாத்ததுக்கு இப்ப பல தட்டுகள் காலியா இருக்கு!"

"இருந்தா என்ன? அங்கே இருந்த நகையெல்லாம் வித்திருக்கும். வியாபாரம் நல்லா இருக்குன்னுதானே அர்த்தம்?"

"விற்பனை ஆயிடுச்சுன்னா அந்த இடத்தில புதுசா நகைகளை வாங்கி வைப்பாங்க. பொதுவா கடைகள்ள தட்டுகளைக் காலியா வைக்க மாட்டாங்க" என்றாள் சந்திரா.

அருணா பதில் சொல்லவில்லை.

இரண்டு மாதங்களில் அந்த நகைக்கடை மூடப்பட்டது. அருணாவைப் போல் நகைச்சீட்டு போட்டவர்கள் அனைவரும் தங்கள் பணத்தை இழந்தனர்.

அதிகம் விஷயம் தெரியாத கிராமத்துப் பெண் என்று தான் நினைத்த சந்திரா அறிவுள்ள பெண்ணாக இருந்திருக்கிறாள், விஷயம் தெரிந்தவளாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் தான் அந்த அளவுக்கு அறிவுள்ளவளாக நடந்து கொள்ளவில்லை என்ற கசப்பான உண்மையை அருணா உணர்ந்து கொண்டாள்.

பொருட்பால் 
அரசியல் இயல்
அதிகாரம் 43
அறிவுடைமை 
குறள் 427:
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

பொருள்:
அறிவுடையோர் நடக்கப் போவதை முன்பே அறிந்து கொள்வார்கள். அறிவு இல்லாதவர்கள் அவ்வாறு அறிய மாட்டார்கள்.
அறத்துப்பால்                                                                                      காமத்துப்பால்


1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம். தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்ம...