Wednesday, June 28, 2023

730. கம்பன் ஏமாந்தான்!

தலைமை ஆசிரியர் அழைக்கிறார் என்றதும் அவர் அறைக்குச் சென்றார் தமிழாசிரியர் கண்ணப்பன்.

"உக்காருங்க கண்ணப்பன்! உங்களை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு!" என்றார் தலைமையாசிரியர் வைத்திலிங்கம்.

"எதனால சார்?"என்றார் கண்ணப்பன், புரியாமல்.

"என் அனுபவத்தில நான் எத்தனையோ தமிழாசிரியர்ளைப் பாத்திருக்கேன். ஆனா உங்களை மாதிரி இலக்கிய ஆர்வம், புலமை, பொருள் விளக்கற அழகு இதெல்லாம் சேர்ந்த ஒத்தரை நான் பார்த்ததில்லை!"

"எப்படி சார் சொல்றீங்க?" என்றார் கண்ணப்பன் நெளிந்தபடி.

"போன வாரம் பத்தாம் வகுப்புக்கு நீங்க கம்ப ராமாயணப் பாடம் எடுக்கறப்ப அந்தப் பக்கம் வந்துக்கிட்டு இருந்த என் காதில அது விழுந்தது. சுவாரசியமா இருக்கேன்னு கொஞ்ச நேரம் கேக்கலாம்னு நின்னேன். உங்க வகுப்பு முடிநற வரையில என்னால அங்கேந்து நகர முடியல!"

"தெரியாது சார்! நீங்க வெளியில நின்னு கேட்டுக்கிட்டிருங்கீன்னு தெரிஞ்சிருந்தா என்னால பாடமே எடுத்திருக்க முடியாது." 

கண்ணப்பன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாதது போல் வைத்திலிங்கம் தொடர்ந்தார்.

"மாணவர்களுக்குப் பரீட்சைக்கு மார்க் வாங்கற அளவுக்கு சொல்லிக் கொடுத்தா போதும்னு நினைக்காம அவ்வளவு ஈடுபாட்டோட சொல்லிக் கொடுத்தது உங்களோட இலக்கிய ஆர்வத்தையும், புலமையையும் காட்டுது."

"நன்றி சார்! இதைச் சொல்லத்தான் கூப்பிட்டீங்களா?" என்று எழுந்து செல்ல யத்தனித்தார் கண்ணப்பன்.

"இல்லை, உக்காருங்க. நம் ஊரில அடுத்த மாசம் கம்பன் விழா நடத்தறாங்க இல்ல?"

"ஆமாம். அறிவிப்பைப் பார்த்தேன்."

"அதில உங்களை ஒரு பேச்சாளரா சேர்க்கச் சொல்லி விழா நடத்தறவங்ககிட்ட கேட்டேன். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க!" என்றார் வைத்திலிங்கம் பெருமிதத்துடன்.

"சார்!" என்றார் கண்ணப்பன் திகைப்புடன்.

"உங்க வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தெரிஞ்சிருக்கிற உங்க பெருமை  இப்ப இந்த ஊருக்குத் தெரியும். அப்புறம் காலப்போக்கில இந்த உலகத்துக்கே தெரியும். எவ்வளவு சீக்கிரமே நீங்க பாபுலர் ஆகப் போறீங்க, பாருங்க!"

"சார், வேண்டாம் சார்."

"என்ன வேண்டாம். புகழ் வேண்டாமா?"

"இல்லை சார். என்னால பொது மேடையில எல்லாம் பேச முடியாது. நாலு பேர் முன்னால பேசவே கூச்சப்படறவன் நான்."

"கவலைப்படாதீங்க. பேச ஆரம்பிச்சீங்கன்னா கூச்சம் எல்லாம் பறந்துடும். வகுப்பில மாணவர்கள் முன்னால பேசலையா?"

"அது வேற சார். அவங்க எனக்குக் கட்டுப்படறவங்க. நான் அதட்டினா பயப்படறவங்க. அவங்க முன்னால பேசறது வேற. ஒரு சபை முன்னால பேசறது வேற. நம்ம பள்ளிக்கூடத்திலேயே எல்லா மாணவர்களையும் கூட்டி வச்சு என்னைப் பேசச் சொன்னீங்கன்னா அது கூட என்னால முடியாது!"

கண்ணப்பன் பேச்சில் தெரிந்த பரிதாபமும், கெஞ்சலும் வைத்திலிங்கத்துக்கு அதிர்ச்சியாக இருந்தன.

"என்ன சார் இது? அன்னிக்கு அவ்வளவு அருமையா உணர்ச்சிகளோட பேசி நடிக்கற மாதிரி வகுப்பு எடுத்தீங்க? இப்படிச் சொல்றீங்களே! நான் வேற விழாக் குழுவினர்கிட்ட சொல்லி உங்க பேரை சேத்துட்டேனே!"

"உங்களை ஏமாற்றமடையச் செஞ்சதுக்கு என்னை மன்னிச்சுடுங்க சார். நீங்க அவங்ககிட்ட சொல்லி என் பெயரை எடுத்துடச் சொல்லுங்க!" என்றபடியே எழுந்தார் கண்ணப்பன்.

"ஏமாற்றமடைஞ்சது நான் மட்டும் இல்ல, கம்பனும்தான்! நீங்க மட்டும் அன்னிக்கு வகுப்பில பேசின மாதிரி பொதுமேடையில பேசியிருந்தா அது கம்பனுக்கு எவ்வளவு பெருமை சேத்திருக்கும்!" என்றார் வைத்திலிங்கம் பெருமூச்சுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 73 
அவையஞ்சாமை

குறள் 730:
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

பொருள்:
அவைக்கு அஞ்சித் தாம் கற்றவைற்றைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.

குறள் 729
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...