Thursday, September 29, 2022

628. கைவிட்டுப் போன வீடு!

கல்லூரிரியில் படிக்கும்போதே பரந்தாமனுக்கு அவன் நண்பர்கள் சாமியார் என்று பெயர் வைத்து விட்டார்கள்.

"ஏண்டா சிகரெட், தண்ணிதான் கிடையாது. சினிமாவுக்குக் கூடவா வர மாட்டே?" என்றான் அவன் நண்பன் அண்ணாமலை.

"போனவாரம்தானே போயிட்டு வந்தோம்?"

"நாங்கள்ளாம் சினிமாவுக்குப் போய் ஒரு வாரம் ஆயிடுச்சேன்னு நினைக்கிறோம். நீ என்னடான்னா ஒரு வாரம் முன்னாலதானே போயிட்டு வந்தோங்கற! கல்யாணமாவது பண்ணிப்பியா,  இல்லை, நிஜமாவே சாமியாராத்தான் இருக்கப் போறியா?"

கல்யாணம் செய்து கொண்டான்.

ஆரம்பத்தில் அவன் மனைவி சரசுவும் அவன் சாமியார் மாதிரி இருக்கிறானே என்று நினைத்தாள். ஆனால் காலப்போக்கில் தன் கணவன் வாழ்க்கையின் சுகங்களை அளவோடு ரசிப்பவன், அதிகம் ஆசைப்படாதவன் என்று புரிந்து கொண்டாள்.

ஆயினும், அவளுடைய தேவைகளையும், விருப்பங்களையும் பரந்தாமன் நிறைவேற்றி வந்ததால், சரசு மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள்.

"என்னங்க இந்த வீடு உங்க பூர்வீக சொத்து. இதை உங்களுக்கு இல்லேன்னு சொல்லிட்டாங்களே, இது அநியாயமா இல்ல?" என்றாள் சரசு.

"என்ன செய்யறது? என் அப்பாவுக்குப் பூர்வீகமா வந்ததுதான் இந்த வீடு. அப்பாவுக்கப்பறம் எனக்கு சொந்தமா இருந்தது. என் அப்பாவோட சித்தப்பா  வீடு தனக்குத்தான் சொந்தம்னு போட்ட கேஸ்ல எத்தனையோ வருஷம் கழிச்சு இப்ப அவருக்கு சாதகமா தீர்ப்பு வந்திருக்கு!" என்றான் பரந்தாமன்.

"இப்ப இந்த வீட்டை விட்டு நாம எங்க போறது? உங்க சம்பளத்தில வாடகை கொடுத்து கட்டுப்படியாகுமா? பிள்ளைங்க படிப்பு வேற இருக்கு!" என்றாள் சரசு கவலையுடன்.

"இத்தனை வருஷமா இந்த வீட்டை அனுபவிச்சோம். இப்ப இது நம்மோடது இல்லேன்னதும் விட்டுட்டுப் போக வேண்டியதுதான். என் வருமானத்துக்குள்ள வாடகை கொடுத்துக்கிட்டு வாழறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். தாங்கிக்கத்தான் வேணும்!"

'உங்களால முடியும். என்னால முடியுமான்னு தெரியல'
 என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டள் சரசு.

அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை  (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)

குறள் 628:
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

பொருள்:
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிக் கொள்பவன் துன்பத்தினால் வருந்த மாட்டான்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Monday, September 26, 2022

626. காந்திமதியின் கவலை!

காந்திமதி வைரவனைக் கைப்பிடித்தபோது அவன் ஒரு சிறிய நிறுவனத்தில் உதவியாளனாக இருந்தான்.

சுமாரான சம்பளம்தான். இந்தச் சம்பளத்தில் இருவர் வாழ்க்கை நடத்த முடியும். குழந்தைகள் பிறந்து விட்டால் எப்படிச் சமாளிப்பது என்று காந்திமதி கவலைப்பட்டாள்.

ஆனல் வைரவன் அது பற்றியெல்லாம் யோசித்தது போல் தெரியவில்லை.

 காந்திமதி தன் கவலையை வைரவனிடம் தெரிவித்தபோது, "இப்ப நாம ரெண்டு பேருதானே இருக்கோம்? வர வருமானம் நம்ம ரெண்டு பேருக்குப் போதும். எதிர்காலத்தில வரக் கூடிய பிரச்னைகளைப் பத்தி இப்பவே ஏன் நினைச்சுக் கவலைப்படணும்?" என்றான்.

அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்த சமயத்தில் வைரவனுக்குப் பதவி உயர்வு கிடைத்து அவன் சம்பளம் உயர்ந்திருந்தது. அதனால் அப்போதும் அவர்களுக்குப் பிரச்னை எழவில்லை.

வைரவனை அவன் முதலாளிக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டதால் நிறுவனத்தில் அவன் நிலையும் அவன் வருமானமும் உயர்ந்து கொண்டே வந்தன.

அவர்கள் மகனும், மகளும் கல்லூரியில் சேர்ந்தபோது வைரவனின் பொருளாதார நிலை நன்றாகவே உயர்ந்திருந்தது. அவர்கள் மகன் மகளின் கல்லூரி நண்பர்கள் "உனக்கென்ன நீ பணக்கார வீட்டுப் பிள்ளை!" என்று சொல்லும் அளவுக்கு!

வசதி பெருகும்போது அவர்கள் செலவும் பெருகிக் கொண்டே வந்தது. வீட்டுக்கு விலை உயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள், மகனுக்கு அதிக விலையில் பைக், மகளுக்கு ஸ்கூட்டர் என்று தாராளமாகச் செலவழித்தான் வைரவன்.

"இப்படி வர பணம் எல்லாத்தையும் செலவழிக்கிறீங்களே, நாளைக்கு நமக்குன்னு நாலு காசு சேர்த்து வைக்க வேண்டாமா?" என்றாள் காந்திமதி.

வைரவன் அது பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

மகன் மகள் இருவரும் படித்து முடித்து நல்ல வேலைக்குப் போய் அவர்குக்குத் திருமணமும் ஆகி விட்டது. திருமணங்களுக்கும் நிறையச் செலவழித்தான் வைரவன்.

"படிச்சுப் படிச்சு சொன்னேன். நீங்க கேக்கல!" என்றாள் காந்திமதி.

"இப்ப என்ன ஆயிடுச்சு. நல்லாத்தானே இருக்கோம்?" என்றான் வைரவன்.

"நல்லா இருக்கோமா? எவ்வளவோ சம்பாதிச்சீங்க. ஆனா ஒரு வீடு கூட வாங்கல. பையனுக்கும், பெண்ணுக்கும் நிறைய செலவழிச்சீங்க. அவங்க ரெண்டு பேரும் இப்ப  எங்கேயோ தூரத்து ஊர்ல இருக்காங்க. அப்பா அம்மா எப்படி இருக்காங்கங்கற கவலை அவங்களுக்கு இல்ல. பையன் நமக்குப் பணம் எதுவும் அனுப்பறதில்ல. பொண்ணுக்கு அவ குடும்பத்தைப் பத்தி மட்டும்தான் நினைவிருக்கு. நீங்க ரிடயர் ஆயிட்டீங்க. உங்களுக்கு பென்ஷன் கிடையாது. உங்க பி எஃப் பணத்தை பாங்க்ல போட்டு அதில வர வட்டியில நாம வாழ வேண்டி இருக்கு. வீட்டு வாடகை, மற்ற செலவுகள் எல்லாம் அதிகமாகிக்கிட்டே இருக்கு. பாங்க்க்ல கொடுக்கற வட்டி குறைஞ்சுக்கிட்டே இருக்கு. இப்படியே போனா இந்தப் பணம் எத்தனை நாளைக்கு வரும்னே தெரியல!" என்று பொரிந்து தள்ளினாள் காந்திமதி.

"நமக்கு நிறைய வருமானம் இருந்தபோது நல்லா வாழ்ந்தோம். இப்ப வருமானம் இல்லேன்னா அதுக்கேத்தாப்பல வசதியைக் குறைச்சுப்போம். இனிமே வரக் கூடிய பிரச்னைகளைப் பத்தி இப்பவே ஏன் கவலைப்படணும்? " என்றான் வைரவன் அமைதியான குரலில்.

அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை  (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)

குறள் 626:
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.

பொருள்:
செல்வம் வந்தபோது இதைப் பெற்றோமே என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர் வறுமை வரும்போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ?

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Sunday, September 25, 2022

816. வயலில் மேய்ந்த மாடு!

 

"கந்தசாமி மறுபடியும் நம் மாட்டைப் பிடிச்சுக் கட்டிப் போட்டிருக்கான்!" என்றான் மாதவன், தன் மனைவி செண்பகலட்சுமியிடம்.

"ஏன் திரும்பத் திரும்ப இப்படிச் செய்யறாரு?" என்றாள் செண்பகலட்சுமி கவலையுடன்.

"நம்ம மேல உள்ள விரோதத்தினாலதான். நேரடியா நமக்கு எதிரா ஏதாவது செஞ்சா தப்பாயிடும். நம்ம மாடு அவன் வயல்ல போய் மேஞ்சுதுன்னு சொல்லி அதைப் பிடிச்சுக் கட்டினா அவனைத் தப்பு சொல்ல முடியாது இல்ல? நான் அவங்கிட்ட போய்க் கெஞ்சித்தானே ஆகணும்? அப்படியும் ஒவ்வொரு தடவையும் பயிர்களை மேஞ்சதுக்கு நஷ்ட ஈடுன்னு இருநூறு ரூபா வாங்கிடறான்."

"நம்ம மாடு அங்கே போகாதபடி செய்ய முடியாதா?"

"எல்லாருமே மாட்டை வெளியிலதான் மேய விடுவாங்க. வயல் பக்கம் வந்தா அங்கே இருக்கறவங்க விரட்டி விடுவாங்க. இவன் வேணும்னே மாட்டை விரட்டாம ஓரமா கொஞ்சம் மேய விட்டு அப்புறம் பிடிச்சுக் கட்டறான். என்ன செய்யறது?"

"நீங்களும் ஒவ்வொரு தடவையும் போய்ப் பேசித்தான் பாக்கறீங்க. அவரு தொடர்ந்து இப்படியே செஞ்சுக்கிட்டிருக்காரே! இப்ப என்ன செய்யப் போறீங்க?"

"என் நண்பன் சபாபதியை அழைச்சுக்கிட்டுப் போய் கந்தசாமி கிட்ட பேசலாம்னு பாக்கறேன், சபாபதி கொஞ்சம் தைரியமா அடிச்சுப் பேசுவான்!"

"அப்படியே செய்யுங்க. உங்களை மாதிரி பயந்த சுபாவம் உள்ள ஆளுங்களால கந்தசாமி மாதிரி முரட்டு ஆளுங்களை சமாளிக்க முடியாது!" என்றாள் செண்பகலட்சுமி.

ரு மணி நேரம் கழித்து மாதவன் திரும்பி வந்தபோது அவன் முகம் சோர்வடைந்திருந்தது.

"என்ன ஆச்சு? மாட்டை விட்டுட்டாரா?" என்றாள் செண்பகலட்சுமி.

"விட்டுட்டான், ஐநூறு ரூபா வாங்கிக்கிட்டு!"

"என்னது ஐநூறு ரூபாயா? அக்கிரமமா இருக்கே! எப்பவும் இருநூறு ரூபாதானே கேப்பாரு? உங்க நண்பர் சபாபதியை அழைச்சுக்கிட்டுப் போகலியா நீங்க?" என்றாள் செண்பகலட்சுமி குற்றம் சாட்டும் தொனியில்.

"அவனை அழைச்சுக்கிட்டுப் போனதாலதான் இப்படி ஆயிடுச்சு! கொஞ்சம் சாமர்த்தியமாப் பேசுவான்னு நினைச்சுத்தான் கூட்டிக்கிட்டுப் போனேன். ஆனா அவன் முட்டாள்தனமாப் பேசி கந்தசாமிக்குக் கோபத்தை உண்டாக்கிட்டான்!"

"அப்படி என்ன பேசினாரு?"

" 'மாட்டை வெளியில மேய விட்டா சில சமயம் வயல்ல இறங்கி மேயத்தான் செய்யும். நீ உன் வயலுக்குக் காவல் போடணும், இல்லேன்னா மின்சார வேலி போடணும், மாட்டைப் பிடிச்சுக் கட்டறது என்ன அயோக்கியத்தனம்?'னு கேட்டான்."

"இப்படியா பேசுவாரு ஒத்தரு? ஏதோ தப்பு நடந்து போச்சு, விட்டுடுங்க, இனிமே ஜாக்கிரதையா இருந்துக்கறோம்னு சொன்னா பொருத்தமா இருக்கும்!"

"சபாபதியை அழைச்சுக்கிட்டுப் போனதுக்கு உன்னை அழைச்சுக்கிட்டுப் போயிருக்கலாம் போல இருக்கே!" என்றான் மாதவன் சிரித்தபடி.

"கேலி செய்யாதீங்க!"

"கேலி இல்ல. உண்மையாவே சபாபதி இது மாதிரிதான் பேசி இருக்கணும். இப்படி முட்டாள்தனமா நடந்துப்பான்னு நான் எதிர்பாக்கல. எதிரி மோசமானவன்னு தெரியும், ஆனா நண்பன் இப்படி முட்டாளா இருப்பான்னு தெரியாது. எதிரி மோசமானவன்னு தெரிஞ்சப்பறம் இனிமே நான்தான் ரொம்ப கவனமா இருக்கணும். இன்னொரு முறை இப்படி நாடக்காம பாத்துக்கணும்!" என்றான் மாதவன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு

குறள் 816:
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.

பொருள்: 
அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை கோடி நன்மையாம்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Friday, September 23, 2022

815. வேலைமாற்றல் உத்தரவு

"இத்தனை வருஷமா இந்த நிறுவனத்திலே வேலை செய்யறேன். ஒரு உயர்ந்த பதவியில இருக்கேன். என் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அவருக்கு இந்த ஊர்லதான் சிகிச்சை கொடுக்கணும். அதுக்காக இந்த டிரான்ஸ்ஃபரை ரத்து செய்யுங்கன்னு கேட்டேன். இந்தக் கோரிக்கையை நிராகரிச்சுட்டாங்களே!" என்றான் செல்வராகவன் தன் மனைவி சாரதாவிடம்.

"உங்க நண்பர் சங்கர்தாதானே இங்கே பிராஞ்ச் மானேஜரா இருக்காரு? அவருக்கு நீங்க எவ்வளவோ உதவி செஞ்சிருக்கீங்களே! அவர் ரெகமண்ட் பண்ணினா உங்க ஹெட் ஆஃபீஸ்ல ஒத்துக்க மாட்டாங்களா?" என்றாள் சாரதா.

"அவன் ரெகமண்ட் பண்ணி இருக்கான் ஆனாலும் ஹெட் ஆஃபீஸ்ல ஒத்துக்க மாட்டேன்னுட்டாங்க."

"அவன் ரெகமண்ட் பண்ணல!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான் அவன் அலுவலக நண்பன் சேகர். அவன் உள்ளே நுழைந்தபோதே  அவர்கள் பேசுவது அவனுக்குக் கேட்டிருக்க வேண்டும்.

"என்னடா சொல்ற?" என்றான் செல்வராகவன்.

"இப்பதான் ஹெட் ஆஃபீஸ்ல பர்ஸனல் டிபார்ட்மென்ட்ல இருக்கற என் நண்பன்கிட்ட பேசினேன். டிரான்ஸ்ஃபர் பாலிசியிலேந்து உன்னை மாதிரி ஒரு மூத்த அதிகாரிக்கு விலக்குக் கொடுத்தா அதை சுட்டிக் காட்டி டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்திருக்கற இன்னும் சில பேரு விலக்குக் கேட்பாங்க. அது நிறுவனத்துக்கு நல்லது இல்லன்னு ஹெட் ஆஃபீசுக்கு எழுதி இருக்கான் உன்னோட அருமை நண்பன் சங்கர்!" என்றான் சேகர்.

"ஸ்ட்ராங்கா ரெகமெண்ட் பண்ணி இருக்கேன்னு சொன்னானே எங்கிட்ட?"

"மனிதாபிமானம் இல்லாம நடந்துக்கறவனுக்குப் போய் சொல்றது ஒரு பெரிய விஷயமா?" என்றான் சேகர்

"என்னங்க உங்க நண்பர் இப்படிப் பண்ணிட்டாரு? நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வேலைக்குச் சேர்ந்தீங்க.  வேலைக்குச் சேர்ந்த நாலஞ்சு வருஷத்தில அவருக்கு டிரான்ஸ்ஃபர் உத்தரவு வந்தப்ப அவருக்கு ஏதோ குடும்பப் பிரச்னைங்கறதுக்காக ஆஃபீஸ்ல சொல்லி அவரோட டிரான்ஸ்ஃபரை நீங்க வாங்கிக்கிட்டுப் போனீங்க. நான்கூடக் கேட்டேன் என்னதான் நண்பர்னாலும் அதுக்காக இவ்வளவு பெரிய உதவி செய்வாங்களான்னு! அதுக்கு நீங்க 'எப்படியும் ஒண்ணு ரெண்டு வருஷத்தில எனக்கும் டிரான்ஸ்ஃபர் வரும். என் நண்பனுக்கு உதவறத்துக்காக கொஞ்சம் முன்னாலேயே போறேன், அவ்வளவுதான்!'னு சொன்னீங்க. இன்னிக்கு அவரு உங்களை விட சீக்கிரம் புரொமோஷன் கிடைச்சு பிராஞ்ச் மானேஜர் ஆயிட்டாரு. அன்னிக்கு அவருக்கு அவ்வளவு பெரிய உதவி செஞ்ச உங்களுக்கு உங்க கோரிக்கையை ஆதரிச்சு ஹெட் ஆஃபீசுக்கு எழுதற ஒரு சின்ன உதவியைச் செய்யக் கூட அவருக்கு மனசு வல்லை. இவரெல்லாம் ஒரு நண்பரா?" என்று கோபத்துடன் வெடித்தாள் சாரதா.

"அவனோட டிரான்ஸ்ஃபரை நீ உனக்கு மாத்திக்கிட்டியா? அது எனக்குத் தெரியாதே! அதைக் கூட நினைச்சுப் பாக்காத இவன் பக்கத்தில இருக்கறது கூட உனக்கு நல்லது இல்ல. நீ போற இடத்தில உன் அப்பாவுக்கு இன்னும் நல்லபடியாவே சிகிச்சை கிடைக்கும். கவலைப்படாதே!" என்றான் சேகர் 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு

குறள் 815:
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.

பொருள்: 
நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.
குறள் 816
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

625. "சிக்" சீதாராமன்!

குருமூர்த்திக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாக இருந்ததால் இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கச் சிகிச்சை பெற வேண்டும் என்று அவருடைய மருத்துவரின் வலியுறுத்தலினால் அவர் அந்தத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த மருத்துவமனையில் தனி அறை கிடைக்காததால் குருமூர்த்தி இரண்டு பேர் இருக்கும் அறையில் அனுமதிக்கப்பட  வேண்டி இருந்தது. அவருக்குப் பக்கத்துப் படுக்கையில் இருந்த சீதாராமனுடன் அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

"என்ன உடம்பு உங்களுக்கு?" என்றார் குருமூர்த்தி.

"இப்ப நெஞ்சில சளி இருக்கிற பிரச்னை!ம என்றார் சீதாராமன்

"இப்பன்னா?"

சீதாராமன் இலேசாகச் சிரித்தார்.

"எனக்கு அப்பப்ப ஏதாவது பிரச்னை வந்துக்கிட்டுத்தான் இருக்கும். அதனால அடிக்கடி மருத்துவமனையில வந்து படுத்துக்கிட்டுத்தான் இருப்பேன்!"

சொல்லி முடிக்கும்போதே அவருக்கு இருமல் வந்து பல விநாடிகள் தொடர்ந்து இரும்பினார்.

"மன்னிச்சுக்கங்க. உங்க கிட்ட பேச்சுக் கொடுத்து இருமலை வரவழைச்சுட்டேன்" என்றார குருமூர்த்தி குற்ற உணர்வுடன்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. அப்படிப் பாத்தா நான் வாழ்க்கை முழுக்க பேசாமதான் இருந்திருக்கணும். அப்புறம் எனக்கு வாழ்க்கையே இருந்திருக்காதே?"

"இன்ன வயசிலேந்தே இந்த பிரச்னை இருக்கா உங்களுக்கு?"

"பிறந்ததிலேந்தே இருக்கு. என் அப்பா அம்மா வசதி இல்லாதவங்கதான். ஆனா அவங்க சளைக்காம என்னை அடிக்கடி அரசாங்க மருத்துவமனைக்கு அழைச்சுக்கிட்டுப் போய் மருத்துவம் பாத்தாங்க. சரியாகும். அப்புறம் திரும்ப வரும். இருமல், சளி, காய்ச்சல்னு மாறி மாறி ஏதாவது ஒண்ணு வந்துக்கிட்டே இருக்கும்.அன்னிலேந்து இன்னி வரைக்கும் அப்படித்தான்!"

"ரொம்ப கஷ்டமா இருந்திருக்குமே!"

"ஆமாம். என்னைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பலாமான்னே கொஞ்சம் யோசிச்சாங்க. அப்புறம் தயக்கத்தோட அனுப்பினாங்க. பள்ளிக்கூடத்தில மத்த மாணவர்கள்கிட்டே இருந்து என்னைக் கொஞ்சம் தள்ளித்தான் உக்கார வைப்பாங்க. உடம்ப சரியில்லாம போறதால பல நாள் பள்ளிக்கூடம் போக முடியாது. ஆனா நான் கஷ்டப்பட்டு நல்லாப் படிச்சேன்.

"ஹை ஸ்கூல் போனதும் அங்கே இருந்த தலைமை ஆசிரியர் எங்கிட்ட ரொம்ப அக்கறை எடுத்துக்கிட்டு என்னை ஊக்குவிச்சாரு. எஸ் எஸ் எல் சி படிக்கறப்ப குறைஞ்சபட்ச அட்டெண்டன்ஸ் இல்லாட்டா பரீட்சை எழுத முடியாது. ஆனா அவரு எனக்கு நிறைய நாள் அட்டெண்டன்ஸ் போட்டு என்னைப் பரீட்சை எழுத வச்சாரு.

"அப்புறம் கல்லூரிப் படிப்பு. நிறைய மார்க் வாங்கினதால ஸ்காலர்ஷிப் கிடைச்சது. கல்லூரியில சில பேரு என்னே சிக் சீதாராமன்னு சொல்லுவாங்க. தாங்க படிச்ச ஆங்கிலத்தைப் பயன்படுத்தணுங்கற ஆர்வம்! நான் கல்லூரியில படிக்கறப்ப எங்கப்பா இறந்துட்டாரு. ஆனா எப்படியோ தொடர்ந்து படிச்சு பி காம் பட்டம் வாங்கிட்டேன்.

"வேலை கிடைச்சது. ஆனா அடிக்கடி லீவ் போட்டதால தொடர்ந்து வேலையில நீடிக்க முடியல. மூணு வேலை மாறினப்பறம் நாலாவதா ஒரு நிறுவனத்தில அக்கவுண்டண்ட்டா சேர்ந்தேன். அந்த முதலாளி என் நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு எனக்கு நிறைய ஆதரவு கொடுத்தாரு. சம்பளத்தோட நிறைய லீவு கொடுத்தாரு.

"சொன்னா நம்ப மாட்டீங்க. அந்தக் காலத்தில ஃபோன்ங்கறது சில பெரிய பணக்காரங்க வீட்டிலதான் இருக்கும். ஆனா என் முதலாளி என் வீட்டில ஃபோன் வச்சுக் கொடுத்து நான் வீட்டில இருந்துக்கிட்டே ஆஃபீஸ்ல இருக்கறவங்களோட ஃபோன்ல பேசி வேலை செய்ய ஏற்பாடு செஞ்சாரு. ஒர்க் ஃப்ரம் ஹோம்ங்கற கான்ஸப்ட் வரதுக்கு முன்னாலேயே ஒர்க் ஃப்ரம் ஹோம் பண்ணினவன் நான் ஒருத்தனாத்தான் இருப்பேன்!"

சீதாராமன் சிரித்தார். எங்கே அவருக்கு இருமல் வந்து விடுமோ என்று பய;ந்து கொண்டே அவரைப் பார்த்தார் குருமூர்த்தி.

"உங்க குடும்பத்தில எத்தனை பேரு?" என்றார் குருமூர்த்தி தயக்கத்துடன்.

"புரியுது! எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சான்னு கேக்க வரீங்க! நான் கல்யாணம் வேண்டாம்னுதான் இருந்தேன். நான் இருந்த நிலைமையைச் சொல்லி யார்கிட்டேயும் பெண் கேக்க என் அம்மாவும் தயங்கினாங்க. ஆனா எங்களுக்குத் தெரிஞ்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்னைக் கல்யாணம் செஞ்சுக்க முன் வந்தா. உங்களை மாதிரி ஒத்தருக்குத்தான் கண்டிப்பா ஒரு துணை வேணும்னு அவ எங்கிட்ட சொன்னபோது எனக்கு அழுகை வந்துடுச்சு!"

சீதாராமனின் குரல் கம்மியது. அவர் அழுது, அது மீண்டும் இருமலைக் கிளப்பி விட்டு விடுமோ என்ற பயத்தில், குருமூர்த்தி, "எவ்வளவு பரந்த மனசு அவங்களுக்கு! அழாதீங்க. இது நினைச்சு நினைச்சு சந்தோஷப்பட வேண்டிய விஷயம் இல்லையா?"

"ஆமாம். ஆனா அவ இப்ப இல்லையே! ஒரு பையனைப் பெத்துக் கொடுத்துட்டு என்னை விட்டுப் போயிட்டாளே! அதை நினைச்சாதான் அழுகை வருது. என் மனைவிக்கு முன்னாலேயே என் அம்மாவும் போயிட்டாங்க. நானே உடம்பு சரியால்லாத ஆளா தனியா இருந்துக்கிட்டு என் பையனை வளர்த்து ஆளாக்க நான் பட்ட பாடு!"

"உங்க பையன் என்ன பண்றாரு?"

"டாட்டா குரூப்பில நல்ல வேலையில இருக்கான். லட்சக் கணக்கா சம்பாதிக்கறான். சின்ன வயசிலேந்து எனக்கு அரசாங்க மருத்துவமனைதான். என் பையன் வேலைக்குப் போனப்பறம்தான் தனியார் மருத்துவமனை!" என்று சிரித்தார் சீதாராமன்.

"கேக்கவே எனக்கு ரொம்ப திகைப்பா இருக்கு. சின்ன அசௌகரியங்களுக்கே ரொம்ப அப்செட் அகிற ஆளு நான். நீங்க இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக்கிட்டு சிரிச்சுக்கிட்டிருக்கீங்க!" என்றார் குருமூர்த்தி.

"வாழ்க்கையில எனக்குக் கஷ்டம் வரப்பல்லாம் வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச அதிர்ஷ்டங்களை நினைச்சு சந்தோஷப்படுவேன். என் பெற்றோர்களோட அன்பு, என் உடல்நிலையையும் மீறி என்னால நல்லாப் படிக்க முடிஞ்சது, எனக்கு உதவி செஞ்ச தலைமை ஆசிரியர், என் முதலாளி,  என்னைத் தேடி வந்த அதிர்ஷ்டம் மாதிரி வந்த என் மனைவி, என் மேல ரொம்ப அன்பும் அக்கறையுமா இருக்கற என் மகன்... வாழ்க்கையில இவ்வளவு அதிர்ஷ்டங்கள் இருக்கறப்ப, ஏன் கஷ்டங்களை நினைச்சு வருத்தப்படணும்?" என்றார் "சிக்" சீதாராமன் புன்சிரிப்புடன்.

"எந்த கஷ்டமும் உங்களை எதுவும் செய்யாது  சார்! நீங்க ரொம்ப ஆரோக்கியமா நீண்டநாள் சந்தோஷமா இருப்பீங்க. உங்களை சந்திச்சது வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச அதிர்ஷ்டம்!" என்றார் குருமூர்த்தி நெகிழ்ச்சியுடன்.

அப்போது அறைக்குள் வந்த குருமூர்த்தியின் மகன், "அப்பா! தனி அறை ஒண்ணு காலியாகி இருக்காம். அங்கே போயிடலாம்!" என்றான்.

"வேணாண்டா! நான் இங்கேயே இருக்கேன்!" என்றார் குருமூர்த்தி சீதாராமனைப் பார்த்துச் சிரித்தபடி.

அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை  (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)

குறள் 625:
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

பொருள்:
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Thursday, September 22, 2022

814. கலவரம் மூண்டபோது....

சோமு அவன் பணி செய்த நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்திலிருந்து உதவி மானேஜராகப் பதவி உயர்வு பெற்று மதுரை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டபோது அவன் மீண்டும் குணாவைச் சந்திக்க நேர்ந்தது.

கிளை நிர்வாகி அவனை மூத்த அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

"இவர் குணா. ஸ்டோர்ஸ் இன்சார்ஜ்" என்றார் கிளை நிர்வாகி.

சோமு குணாவை அடையாளம் கண்டு கொண்டாலும் அறிமுகம் ஆனவன் போல் காட்டிக் கொள்ளாமல், "ஹலோ!" என்றான்.

"என்ன சோமு, என்னைத் தெரியலியா? நாம ஒரே ஊர்தானே?" என்றான் குணா.

"தெரியுது!" என்றான் சோமு சுருக்கமாக.

அறிமுகங்கள் முடிந்ததும் சோமு கிளை நிர்வாகியுடன் அவர் அறைக்குத் திரும்பினான்.

"குணா உங்க ஊரா?" என்றார் கிளை நிர்வாகி.

"ஆமாம். ரெண்டு பேரும் பக்கத்துப் பக்கத்து வீடுதான்!"

"அப்படின்னா நெருக்கமா இருந்திருப்பீங்களே? ஆனா சொல்லமுடியாது. பக்கத்து வீட்டுக்காரங்களோடபல சமயம் விரோதம்தான் இருக்கும்!" என்றார் கிளை நிர்வாகி தன் நகைச்சுவையைத் தானே ரசித்துச் சிரித்து.

"அப்படி இல்ல. அப்ப நாங்க நண்பர்களாத்தான் இருந்தோம்!" என்றான் சோமு மெலிதான சிரிப்புடன்.

"குணா உங்க கிட்ட நெருக்கமானவராக் காமிச்சுக்கிட்டாரு. ஆனா நீங்க கொஞ்சம் விலகி இருக்கற மாதிரி தெரிஞ்சது. அதான் கேட்டேன்!"

"நீங்க சொல்றது சரிதான். இப்ப நாங்க நெருக்கமா இல்ல. பத்து வருஷமா எங்களுக்குள்ள தொடர்பு இல்ல. இப்பதான் சந்திக்கிறோம்" என்றான் சோமு.

"அது சரி. ஒரு காலத்தில நெருக்கமா இருக்கறவங்க வேற ஒரு காலத்தில நெருக்கம் இல்லாம போறது சகஜம்தானே!" என்றார் கிளை நிர்வாகி.

சோமுவும் குணாவும் அடுத்தடுத்த வீடுகளில் இருந்தபோது மிகவும் நெருக்கமாகத்தான் இருந்தனர். இருவருக்குமே திருமணமாகவில்லை. பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 

சோமு உள்ளூரிலேயே ஒரு சிறு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். குணா வேலை தேடிக் கொண்டிருந்தான். வேலை நேரம் போக மற்ற நேரங்களில் எல்லாம் சோமு குணாவுடன்தான் இருப்பான்.

 இருவரும் தங்கள் வாழ்க்கைக் கனவுகள் தங்ளுக்கு வரப் போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது போல் பல விஷயங்களைப் பற்றி மனம் விட்டுப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள் சோமு அலுவலகத்தில் இருந்தபோது அவர்கள் பகுதியில் ஒரு ஜாதிக் கலவரம் வெடித்திருப்பதாகச் செய்தி வந்தது. 

வீட்டில் தனியாக இருக்கும் பெற்றோர்கள் பற்றி சோமு கவலைப்பட்டாலும், பக்கத்து வீட்டில் குணா இருப்பதால் அவன் அவர்களைப் பார்த்துக் கொள்வான் என்ற ஆறுதலுடன் இருந்தான்.

அலுவலகத்தில் அனுமதி கேட்டுப் பெற்று சோமு வீட்டுக்கு விரைந்தபோது அவன் வீடு இருந்த தெருவில் பல வீடுகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

சோமுவின் வீட்டுக் கதவு உடைத்துத் திறக்கப்பட்டிருந்தது. சோமு  பதைபதைப்புடன் வீட்டுக்குள் நுழைந்தான். வீட்டுக்குள் ஒரு மூலையில் அவன் பெற்றோர் நடுக்கத்துடன் அமர்ந்திருந்தனர். வீட்டில் பல பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.

சோமுவைப் பார்த்ததும் அவன் பெற்றோர் பெரிதாக அழ ஆரம்பத்தினர்.

"அழாதீங்க. உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே!" என்றான் சோமு தன் பெற்றோர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு

"வயசானவங்கங்கறதால எங்களை ஒண்ணும் செய்யல. ஆனா வீட்டில இருக்கற எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டாங்க. பக்கத்தில இருக்கற வீடுகளிலேந்தெல்லாம் நிறைய அலறல் சத்தம் கேட்டது. பல பேரை அடிச்சுக் காயப்படுத்தி இருப்பாங்க போல இருக்கு!" என்றார் அவன் அப்பா.

சோமு பதைபதைப்புடன் குணாவின் வீட்டுக்குச் சென்று பார்த்தான். அவன் வீட்டுக் கதவு பூட்டப்பட்டிருந்தது.

மாலைக்குள் அந்தப் பகுதியில் அமைதி திரும்பி இருந்தது.

இரவில் குணா மட்டும் வீடு திரும்பினான்.

"எங்கேடா போயிட்ட? கலவரத்தில உங்களுக்கெல்லாம் ஒண்ணும் ஆகலியே! உங்க அப்பா அம்மா எங்கே?" என்றான் சோமு.

"இல்ல. கலவரம் நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சதும் வீட்டைப் பூட்டிட்டு எங்கப்பா அம்மாவோட பக்கத்து ஊர்ல இருக்கற என் அத்தை வீட்டுக்குப் போயிட்டேன். அவங்க அங்கேதான் இருக்காங்க. ரெண்டு மூணுநாள் கழிச்சு அவங்களை அழைச்சுக்கிட்டு வரலாம்னு இருக்கேன்" என்றான் குணா.

"ஏண்டா, எங்கப்பா அம்மா வீட்டில தனியா இருந்தாங்களே, அவங்களையும் அழைச்சுக்கிட்டுப் போயிருக்கலாம் இல்ல? இல்லே கலவரம் நடக்கப் போகுதுன்னு அவங்க கிட்ட சொல்லி இருந்தா அவங்க வேற எங்கேயாவது போய்ப் பாதுகாப்பா இருந்திருப்பாங்க இல்ல?" என்றான் சோமு கோபத்துடன்.

"இந்த மாதிரி சமயத்தில எல்லாம் நம்மைப் பாதுகாத்துக்கறதைப் பத்தித்தான் யோசிக்கத் தோணும்!" என்றான் குணா.

அதற்குப் பிறகு சோமு குணாவுடன் பழகுவதை விட்டு விட்டான். அதற்குப் பிறகு சில மாதங்களில் அவனுக்கு டெல்லியில் வேலை கிடைத்து விட்டதால் பெற்றோரை அழைத்துக் கொண்டு அந்த ஊரை விட்டே போய் விட்டான்.

"நீங்க சொல்றது சரிதான் சார். சில நட்புகள் விட்டுப் போனதைப் பத்தி நாம வருத்தப்படறதே இல்லை!" என்றான் சோமு கிளை நிர்வாகியிடம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு

குறள் 814:
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.

பொருள்: 
போர்க்களத்தே நம்மைக் கீழே தள்ளி விட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும் தனிமையாக இருப்பதே சிறந்தது.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Wednesday, September 21, 2022

813. அவிநாஷின் நண்பர்கள்!

சமீபத்தில் அறிமுகமாகி இருந்த தன் வகுப்பு நண்பன் சபாவைத் தன் விடுதி அறைக்கு அழைத்து வந்தான் சந்தோஷ்

"உன் ரூம்மேட் யாரு?" என்றான் சபா.

"அவிநாஷ்!"

"ஓ! அவிநாஷா? ரொம்ப புத்திசாலியான மாணவன்னு கேள்விப்பட்டிருக்கேன். என் செக்‌ஷன் இல்ல, ஆனா அவனைத்தான் எல்லாருக்குமே தெரியுமே! ஆமாம், எங்கே அவன்? வெளியில போயிருக்கானா?"

"அவன் எப்பவுமே அறையில இருக்கறதில்ல. எப்பவுமே எங்கேயாவது வெளியில சுத்திக்கிட்டிருப்பான், என் ரூம்மேட்னுதான் பேரு. ஆனா இன்னும் நான் அவனோட சரியாப் பேசினது கூட இல்ல. ஆள் அறையில இருந்தாத்தானே?"

"இப்பதானே எல்லாருமே காலேஜில சேர்ந்து ஹாஸ்டலுக்கு வந்திருக்கோம்! பழகிப் புரிஞ்சுக்க கொஞ்ச நாள் ஆகும். நானும் நீயும் சந்திச்சுப் பேசவே ஒரு மாசம் ஆகலியா?"

சற்று நேரம் சந்தோஷிடம் பேசி விட்டு சபா விடைபெற்றான்.

சில வாரங்களுக்குப் பிறகு சந்தோஷின் அறைக்கு வந்த தனுஷ் என்ற மாணவன், "அவிநாஷ் இல்லையா?" என்றான்.

"இல்லையே! எங்கேயோ சினிமாவுக்குப் போகப் போறதா சொன்னான். உன்னோடதான் போயிருப்பான்னு நினைச்சேன்!" என்றான் சந்தோஷ்.

"அவன் சினிமாவுக்குப் போகப் போறதா எங்கிட்ட சொல்லவே இல்லையே!" என்றபடியே ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான் தனுஷ்.

அவிநாஷ் அறைக்கு வந்ததும், "நீ தனுஷோட சினிமாவுக்குப் போகலியா" என்றான் சந்தோஷ்.

"இல்ல. ஏன் கேக்கற?"

"அவன் உன்னைத் தேடிக்கிட்டு வந்தான். நீ சினிமாவுக்குப் போறதே அவனுக்குத் தெரியாதாமே!"

"அவன்கிட்ட சொல்லிட்டுத்தான் நான் சினிமாவுக்குப் போகணுமா என்ன?" என்றான் அவிநாஷ் அலட்சியமாக.

அவிநாஷுக்கு தனுஷிடம் ஏதோ பிணக்கு ஏற்பட்டிருக்கிறது போலும் என்று நினைத்துக் கொண்டான் சந்தோஷ்

"உன் ரூம்மேட் சபா படிப்பில மட்டும்தான் புத்திசாலின்னு நினைச்சேன். எல்லாத்திலியுமே புத்திசாலியா இருப்பான் போல இருக்கே!" என்றான் சபா.

"ஏன் அப்படிச் சொல்ற?"

"யார் அவனுக்கு ஓட்டல், சினிமான்னு கணக்கு பாக்காம செலவு பண்ணுவாங்களோ அவங்ககிட்ட போய் ஒட்டிக்கறான். முதல்ல தனுஷோட சுத்திக் கிட்டிருந்தான். இப்ப தனுஷ் அவனுக்காகச் செலவழிக்கறதில்லேன்னதும் அவன் தனுஷைக் கண்டுக்கறதே இல்லை. இப்ப ரமேஷோட சுத்திக்கிட்டிருக்கான். ரமேஷ் பணக்கார வீட்டுப் பையன். நண்பர்களுக்காக செலவழிக்கறது கௌரவம்னு நினைச்சு தாராளமா செலவு பண்ணுவான். அதான்!"

"நீ சொன்னப்பறம்தான் எனக்கு ஞாபகம் வருது. ஹாஸ்டலுக்கு வந்த புதிசில அவனோட ஒரு சினிமாவுக்குப் போனேன். நான்தான் டிக்கட் வாங்கினேன். ஆனா அப்புறம் அவனோட டிக்கட் பணத்தை அவங்கிட்ட கேட்டு வாங்கிட்டேன். அது அவனுக்குப் பிடிக்கலேன்னு அப்பவே தெரிஞ்சது. அதனாலதான் ரூம்மேட்டா இருந்தாக் கூட எங்கிட்ட அவன் நெருங்கிப் பழகறதில்ல!" என்றான் சந்தோஷ்.

"ஆனா இவ்வளவு புத்திசாலியா இருந்தாலும் சந்தோஷுக்கு ஒண்ணு புரியல. அவன் நோக்கத்தை எல்லாரும் சுலபமாப் புரிஞ்சுப்பாங்க. இப்பவே நிறைந பேரு அவனைப் பத்திக் கேலியாப் பேசறாங்க!"

"ஒருத்தர் கிட்ட நமக்கு என்ன கிடைக்கும்னு எதிர்பார்த்து நட்பு வச்சுகறது ஒரு வியாபாரம்தான். அவிநாஷ் என் ரூம்மேட்டா இருந்தாலும் எங்கிட்ட நெருக்கமா இல்லையேன்னு எனக்குக் கொஞ்சம் வருத்தம் இருந்தது. ஆனா இப்ப, இப்படிப் பட்டவன் என் நண்பனா இல்லங்கறது எனக்கு சந்தோஷமாவே இருக்கு!" என்றான் சந்தோஷ் 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு

குறள் 813:
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.

பொருள்: 
இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Tuesday, September 20, 2022

812. புதிய வீட்டில் கிடைத்த நட்பு

அழைப்பு மணி அடித்ததும் கதவைத் திறந்து பார்த்தாள் லட்சுமி.

"வணக்கம். என் பேரு தயாளன். நான் மூணாவது மாடியில இருக்கேன். நீங்க இங்கே புதுசாக் குடி வந்திருக்கீங்க இல்ல?" என்றார் வெளியே நின்றவர்.

"ஆமாம். ரெண்டு நாள் முன்னாலதான் வந்தோம்."

"செகரட்டரி சொன்னாரு. சார் இல்லையா?"

"அவரு இன்னும் ஆஃபீஸ்லேந்து வரலையே. என்ன விஷயம்?" என்றாள் லட்சுமி.

"விஷயம் எதுவும் இல்ல. புதுசா வந்திருக்கறதால உங்களைப் பார்த்து அறிமுகப்படுத்திக்கிட்டு ஏதாவது உதவி வேணுமான்னு கேக்கத்தான் வந்தேன். சார் வந்தப்பறம் வந்து பாக்கறேன்" என்று சொல்லி விடைபெற்றார் தயாளன்.

பிறகு நாதன் வீட்டில் இருந்தபோது வந்து அவரைப் பார்த்துப் பேசி விட்டுப் போனார் தயாளன். அப்போது தன் மனைவியையும் அழைத்து வந்து லட்சுமிக்கு அறிமுகம் செய்து வைத்தார். 

சற்று நேரம் பேசி விட்டு இருவரும் கிளம்பினார்கள். கிளம்பும்போது, தயாளன், "செகரட்டரி கிட்ட உங்களை அறிமுகப்படுத்தி வைக்கறேன். ஏதாவது பிரச்னைன்னா அவர் கிட்டே சொன்னா தீர்த்து வைப்பார்" என்றார்.

"பரவாயில்ல. இப்ப வேண்டாம். ஏதாவது பிரச்னைன்னா, அவர்கிட்ட சொல்றேன்" என்றார் நாதன்.

சில நாட்கள் கழித்து, "புதுசா  இந்த அபார்ட்மென்ட்டுக்கு வந்தப்பறம் இங்கே நமக்குத் தெரிஞ்சவங்க யாரும் இல்லையேன்னு நினைச்சேன். நல்லவேளையா தயாளன் குடும்பத்தோட நட்பு நமக்குக் கிடைச்சது!" என்றாள் லட்சுமி..

"ஆமாம். பொதுவா அபார்ட்மென்ட்கள்ள யாரும் பக்கத்து அபார்ட்மென்ட்ல இருக்கறவங்க யாருன்னு தெரிஞ்சுக்கக் கூட முயற்சி செய்ய மாட்டாங்க. ஆனா தயாளன் தானே வந்து நம்மகிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டாரு. அப்புறம் அவர் மனைவியையும் அழைச்சுக்கிட்டு வந்து உங்கிட்ட அறிமுகப்படுத்தினாரு. எங்கிட்ட ரொம்ப நல்லாப் பழகறாரு. ரொம்ப ஃப்ரண்ட்லியான மனுஷன்!" என்றார் நாதன்.

"ஆமாம். அவர் மனைவியும் எங்கிட்ட நல்லாத்தான் பழகறாங்க" என்றள் லட்சுமி..

ரண்டு மூன்று வாரங்கள் கழித்து, ஒருநாள் "என்னங்க இப்பல்லாம் தயாளன் மனைவி இங்கே வரதில்ல. முன்னெல்லாம் அடிக்கடி வருவாங்க. நான் அவங்க வீட்டுக்குப் போயிருந்தேன். அப்பவும் அவங்க எங்கிட்ட சரியாப் பேசல. வேற ஏதோ வேலையில மும்முரமா இருக்காங்கன்னு நினைக்கிறேன்!" என்றாள் 

"இருக்கலாம்!" என்றார் நாதன்.

இரண்டு நாட்கள் கழித்து "தயாளன் மனைவி பத்தி நீ சொன்னப்ப, அவங்களுக்கு வேற வேலையோ, பிரச்னையோ இருக்கும்னு நினச்சேன். ஆனா இப்பதான் கவனிக்கிறேன். தயாளனும் எங்கிட்ட சரியாப் பேசறதில்ல. என்னைப் பாத்தாலும் பாக்காத மாதிரி போறாரு!"  என்றார் நாதன் தன் மனைவியிடம்.

"ஏன், உங்க மேல ஏதாவது கோபமா?"

"ஆமாம். கோபம்தான். இப்பதான் எனக்கே புரியுது!" என்றார் நாதன் சிரித்தபடி.

"எதுக்குக் கோபம்? நீங்க என்ன செஞ்சீங்க?"

"செய்யலேன்னுதான் கோபம்."

"என்ன செய்யல?"

"தயாளன் எங்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டு என்னோட பழகினதே நான் புளூமூன் டிவியில உயர்ந்த பதவியில இருக்கேங்கறதாலதான்னு இப்பதான் எனக்குப் புரியுது. எங்க டிவியில நடக்கற பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில கலந்துக்க அவரோட பெண்ணுக்கு ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுக்க முடியுமான்னு நாலஞ்சு நாள் முன்னால எங்கிட்ட கேட்டாரு. அதுக்குன்னு ஒரு தேர்வுமுறை இருக்கு, அதன்படிதான் யாரையும் தேர்ந்தெடுப்பங்கன்னு சொன்னேன். நான் சொன்னதைப் புரிஞ்சுக்கிட்டு அதோட விட்டுடுவார்னு நினைச்சேன். ஆனா அதுக்கப்பறம் அவர் மனைவி உங்கிட்டேந்து ஒதுங்கிப் போனதையும், தயாளனும் எங்கிட்டேந்து விகிப் போறதையும் பாத்தப்பறம்தான் எனக்கு உண்மை புரிஞ்சுது" என்றார் நாதன்.

"இப்படிப்பட்ட ஆட்களோட சிநேகிதமே நமக்கு வேண்டாம். அவங்க விலகிப் போனதே ரொம்ப நல்லது!" என்றாள் லட்சுமி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு

குறள் 812:
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.

பொருள்: 
தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்?
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Monday, September 19, 2022

811. ரயில் பயணத்தில் ஏற்பட்ட நட்பு!

ஒரு ரயில் பயணத்தின்போது கணேசனுக்கு அறிமுகமானவன்தான் இந்திரன். 

கணேசனிடம் உடனே ஏற்பட்டு விட்ட பிடிப்பினால் அவனுடைய மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டான் சந்திரன்.

ரயில் பயணத்தில் சந்தித்து இரண்டு வாரங்களுக்குப்பிறகு கணேசனுக்கு ஃபோன் செய்தான் சந்திரன்.

"நான் சந்திரன் பேசறேன்!"

"சந்திரனா? எந்த சந்திரன்?" என்றான் கனேசன்.

"ஒரு சந்திரன்தானே உண்டு வானத்தில!" என்று சொல்லிச் சிரித்த சந்திரன், "என்ன கணேசன், அதுக்குள்ள மறந்துட்டீங்களா? ரயில்ல சந்திச்சோமே!" என்றான்.

"ஓ, நீங்களா? சட்டுனு தெரியல!"

சற்று நேரம் இருவரும் பொதுவாகப் பேசிக் கொண்டனர்.

இன்னும் சில முறை ஃபோனில் பேசிய பிறகு இருவருக்கும் இடையே ஒரு நெருக்கம் ஏற்பட்டது. 

ஓரிரு முறை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு ஒருமையில் பேசிக் கொள்ளும் அளவுக்கு இருவரும் நெருக்கமானார்கள்.

சந்திரன் தன் மனைவியுடன் கணேசன் வீட்டுக்கு ஒருமுறை வந்தான்.கிளம்பும்போது கணேசனையும் அவன் மனைவியையும் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தான்.

சந்திரன் கிளம்பிச் சென்றதும், "ஒரு நாளைக்கு அவங்க வீட்டுக்குப் போயிட்டு வரலாம்!" என்றான் கணேசன்

"எதுக்கு?" என்றாள் அவன் மனைவி வந்தனா.

"கூப்பிட்டிருக்கான் இல்ல? அவங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. நாமும் போயிட்டு வரதுதானே மரியாதை?"

"எனக்கு அவங்க வீட்டுக்குப் போறதில ஆர்வம் இல்ல. நீங்க வேணும்னா போயிட்டு வாங்க!" என்றாள் வந்தனா.

"உனக்கு எதனாலேயோ சந்திரனைப் பிடிக்கலேன்னு நினைக்கிறேன்!"

"பிடிக்கிறது, பிடிக்கலேன்னு இல்ல. ஏதோ ரயில்ல பார்த்தோம், பேசினோம்.  அதுக்கப்பறம் அவரு உங்ககிட்ட நட்பு பாராட்டறாரு. உங்களுக்கே இதில அதிக ஆர்வம் இல்லேன்னு நினைக்கிறேன். அவரு  உங்க்கிட்ட நெருக்கமா இருக்கறதால நீங்களும் நெருக்கமா இருக்க முயற்சி செய்யற மாதிரிதான் எனக்குத் தோணுது!" என்றாள் வந்தனா.

ணேசன் பதில் பேசவில்லை. 

"சந்திரன் என் மேல கோவமா இருப்பான்னு நினைக்கிறேன்!" என்றான் கணேசன் வந்தனாவிடம்.

"ஏன், நாம அவர் வீட்டுக்குப் போகலேங்கறதாலயா?"

"அதில்ல. அவன் ஏதோ பிசினஸ் பண்ணப் போறானாம். அவன் வாடகை வீட்டில இருக்கறதால நம்ம வீட்டு அட்ரஸை பிசினஸ் அட்ரஸாப் பயன்படுத்திகலாமான்னு கேட்டான். 'அட்ரஸ் மட்டும்தான் இதுவா இருக்கும், ஆனா, நான் என் வீட்டில இருந்தபடியேதான் பிஸினஸ் பண்ணப் போறேன். உனக்கு எந்த பாதிப்பும் வராது' ன்னு சொன்னான். நான் அதுக்கு ஒத்துக்கல. நண்பனுக்காக இந்தச் சின்ன உதவி கூடச் செய்யலேன்னா நீ எல்லாம் என்ன நண்பன்?'னு கோபமாக் கேட்டுட்டுப் போயிட்டான்."

"நல்ல வேளை! நண்பன் கேக்கறான்னு ஒத்துக்காம இருந்தீங்களே!" என்றாள் வந்தனா.

"அவன் என் மேல கோபமா இருக்கறதுதான் எனக்கு வருத்தமா இருக்கு."

"அவர் உண்மையான நண்பரா இருந்தார்னா தான் கேட்ட உதவியைச் செய்யலேங்கறதுக்காக உங்க மேல கோபப்பட மாட்டாரு. இதுக்காக்க் கோவிச்சக்கிட்டு உங்க நட்பை முறிச்சுக்கிட்டாருன்னா அது உங்களுக்கு நல்லதுதான். எனக்கென்னவோ அவர் ஏதோ நன்மையை எதிர்பார்த்துத்தான் உங்களோட நட்பா இருந்திருக்காருன்னு தோணுது. உண்மையான நண்பரா இருந்தா மறுபடி அவரு இந்தக் கோபத்தை மறந்துட்டு உங்ககிட்ட நட்பாவே இருப்பாரு. பார்க்கலாம், அவர் என்ன செய்யறாருன்னு!" என்றாள் வந்தனா.

அதற்குப் பிறகு சந்திரன் கணேசனைத் தொடர்பு கொள்ளவில்லை.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு

குறள் 811:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.

பொருள்: 
அன்பு மிகுதியால் உருகுபவர்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Sunday, September 18, 2022

810. போட்டியாளர்

"இந்த ஆர்டர் நமக்குக் கிடைச்சது பெரிய விஷயம் சார்! சாந்தி இண்டஸ்டிரீஸோட போட்டி போட்டு நாம ஜெயிச்சது சாதாரண விஷயம் இல்ல!" என்றார் ரமேஷ் இண்டஸ்டிரீஸின் பொது மேலாளர் ராமன்.

"ஆமாம். சாந்தி இண்டஸ்டிரீஸ் பெரிய நிறுவனம். தொழில்ல நாம அவங்களுக்குப் போட்டியா இருக்கறதில ஏற்கெனவே சாந்தகுமாருக்கு என் மேல கோபம். எங்கேயாவது என்னைச் சந்திச்சா ஒரு விரோதியைப் பாக்கற மாதிரிதான் பார்ப்பாரு. நான் வணக்கம் சொன்னாக் கூட பார்க்காத மாதிரி முகத்தைத் திருப்பிப்பாரு. இப்ப அவர் இன்னும் கோபமா இருப்பாரு!" என்றார் ரமேஷ் இண்டஸ்டிரீஸின் உரிமையாளரான ரமேஷ்.

"ஆனாஒரு பிரச்னை இருக்கே சார்!"

"ஆமாம். இவ்வளவு பெரிய ஆர்டரை நம்மால நிறைவேற்ற முடியாது. ஒரு பகுதியை வேற நிறுவனங்களைத் தயாரிக்கச் சொல்லணும். ஆர்டர்ல குறிப்பிட்டிருக்கிற ஸ்பெசிகேஷன்படி நல்ல தரத்தோட தயாரிக்கக் கூடிய ஒரு நிறுவனத்தைத் தேடணும். நான் சில பேர்கிட்ட பேசிப் பாக்கறேன். நீங்களும் முயற்சி பண்ணுங்க"

மூன்று நாட்களுக்குப் பிறகு ராமனைத் தன் அறைக்கு அழைத்த ரமேஷ், "நம் ஆர்டரில ஒரு பகுதியைத் தயாரிக்க ஒரு கம்பெனியோட பேசி முடிவு பண்ணிட்டேன். பிரச்னை தீர்ந்தது!" என்றார்.

"எந்த கம்பெனி சார்?" என்றார் ராமன் ஆவலுடனும் வியப்புடனும்.

"சாந்தி இண்டஸ்டிரீஸ்தான்!" என்றார் ரமேஷ் சிரித்துக் கொண்டே.

"இது சரியா வருமா சார்? அவங்க நம்மை விரோதிகளா நினைக்கிறாங்களே! நமக்குக் கெட்ட பேரு வாங்கிக் கொடுக்கணுங்கறதுக்காக வேணும்னே ஏதாவது தப்பா பண்ணிட்டாங்கன்னா?"

"அப்படியெல்லாம் நடக்காது. சாந்தகுமார்கிட்ட பேசிட்டேன். இந்த ஒத்துழைப்பு இந்த ஆர்டருக்கு மட்டும்தான். மத்தபடி நாம அவங்களோட போட்டி போட்டுக்கிட்டுத்தான் இருப்போம்!"

"அவங்களை எப்படி சார் நம்பறது?"

"ராமன்! நம்ம லைன்ல இருக்கிற சில கம்பெனிகளோட பேசிப் பார்த்தேன். அவங்களால நமக்கு வேண்டிய தரத்தில செஞ்சு கொடுக்க முடியுமன்னு எனக்கு நம்பிக்கை இல்ல. அப்புறம்தான் சாந்தி இண்டஸ்டிரீஸையே கேக்கலாம்னு தோணிச்சு  அவங்க நம்மை விரோதிகளாப் பார்த்தாலும் சாந்தகுமாரை நான் நம்பறதுக்கு ஒரு காரணம் இருக்கு!"

"என்ன சார் காரணம்?"

"இப்ப நீங்க இங்கே பத்து வருஷமா மானேஜரா இருக்கீங்க. நாம ரெண்டு பேரும் நண்பர்கள் மாதிரிதான் பழகறோம். நீங்க திடீர்னு ரிஸைன் பண்ணிட்டு நம்ம போட்டி கம்பெனி எதிலேயாவது போய் வேலைக்கு சேர்ந்தா..."

"என்ன சார் இது? நான் அப்படிச் செய்வேனா? நாம நண்பர்கள் மாதிரிதான் பழகறோம்னு நீங்களே சொன்னீங்களே!" என்றார் ராமன் சற்றுப் பதட்டத்துடன்.

"நீங்க அப்படிப் பண்ண மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா சாந்தகுமார் கிட்ட மானேஜரா இருந்தவர் அப்படி செஞ்சாரு!"

"அப்படியா? சரி. அதுக்கும் நீங்க சாந்தகுமாரை நம்பறதுக்கும் என்ன சம்பந்தம்?"

"இருங்க. கதையை நான் இன்னும் சொல்லி முடிக்கல. சாந்தகுமார்கிட்ட மானேஜரா இருந்த கணபதி அவரோட சிறு வயது நண்பர். சாந்தகுமார் கிட்ட வேலை செஞ்சுக்கிட்டிருந்தப்ப கூட அவர் சாந்தகுமாரை வாடா போடான்னுதான் கூப்பிடுவாரு. அவ்வளவு நெருக்கமா உரிமையாப் பழகிக்கிட்டிருந்தவர் அங்கேருந்து ரிஸைன் பண்ணிட்டு அதிக சம்பளம் கொடுக்கறாங்கங்கறதுக்காக ஒரு போட்டி கம்பெனிக்கு வேலைக்குப் போனாரு. அங்கே போனப்பறம் சாந்தகுமாரோட சில வாடிக்கையாளர்களைத் தன் புது கம்பெனிக்கு இழுக்கவும் முயற்சி செஞ்சாரு!"

"அடப்பாவி! நண்பனுக்கு இப்படி யாராவது துரோகம் செய்வாங்களா?" என்றார் ராமன்.

"ஆனா பிசினஸ் சரியில்லாததால அந்த கம்பெனியை கொஞ்ச நாள்ளேயே மூடிட்டாங்க. வேலை போனவுடனே கணபதி சாந்தகுமார்கிட்ட வந்து மன்னிப்புக் கேட்டாரு. சாந்தகுமார் அவர் செஞ்சதையெல்லாம் மறந்து அவரை மறுபடி வேலைக்கு சேத்துக்கிட்டாரு. தனக்கு துரோகம் செஞ்ச நண்பனையை விரோதியா நினைக்காம மறுபடி ஏத்துக்கிட்டவரு சாந்தகுமார். அதனாலதான் தொழில்முறையில நமக்குப் போட்டியாளர்னாலும் அவர் ஒரு நல்ல மனிதர்ங்கறதால அவரை நம்பி அவரோட உதவியைக் கேட்கலாம்னு நான் நினைச்சேன்!" என்றார் ரமேஷ்.

"உங்களோட முடிவு சரியானதுதான் சார்!" என்றார் ராமன்.

 பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 810:
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

பொருள்: 
பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது தம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

624. இங்கே டிவி ரிப்பேர் செய்யப்படும்!

ஒரு பிரபல வீட்டுப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் சர்வீஸ் பிரிவில் தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுது பார்க்கும் டெக்னீஷியனாக இருந்த நந்தகோபாலுக்கு திடீரென்று வேலை போய் விட்டது.

தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுது பார்ப்பது லாபகரமாக இல்லை என்பதால் அந்தச் சேவையை அந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.  அதனால் அவனுக்கு அங்கே பணி இல்லை என்று கூறி விட்டனர்.

அவனோடு பணி புரிந்த அன்பு, சதீஷ் என்ற இன்னும் இரண்டு டெக்னீஷியன்களுக்கும் வேலை போய்விட்டது.

நந்தகோபாலுக்கு அது ஒரு பெரிய அடிதான். அது போன்ற வேலை ஒரு பெரிய நிறுவனத்தில் கிடைப்பது  கடினம். சிறிய நிறுவங்களில் வேலை கிடைக்கலாம். அங்கே சம்பளம் குறைவாக இருக்கும் என்பதுடன் வேலை நிரந்தரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

சதீஷ், அன்பு இருவருடனும் பேசினான் நந்தகோபால்.

"நாம மூணு  பேரும் சேர்ந்து ஒரு எலக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் சென்டர் ஆரம்பிச்சா என்ன?" என்றான் நந்தகோபால்.

"என்ன விளையாடறியா? அதுக்கு முதலீடு வேண்டாமா?" என்றான் சதீஷ் .

"என் வீட்டு முன் அறையைப் பயன்படுத்திக்கலாம். ஜன்னல்ல ஒரு போர்டு வச்சுட்டா தெருவில போறவங்களால பார்க்க முடியும். வாடகை வீடுதான். ஆனா வீட்டுக்காரர்கிட்ட பேசி சம்மதம் வாங்கிடறேன்" என்றான் நந்தகோபால்.

"மத்த முதலீடெல்லாம்?" என்றான் அன்பு .

"நம்ம கடையில இருக்கற சில முக்கியமான உபகரணங்களை நாம குறைஞ்ச விலைக்குக் கேட்டு வாங்கலாம். நிறைய ஸ்பேர்ஸ் வாங்கி வச்சிருக்காங்க. அதையெல்லாம் வெளியில விக்க முடியாது. நாம அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக்கறோம்னு சொன்னா மானேஜர் ஒத்துப்பாரு. அதோட நம்ம கடையில டி வி மத்த பொருட்கள் வாங்கினவங்களோட அட்ரஸ் ஃபோன் நம்பர் எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டா அவங்களை நாம தொடர்பு கொண்டு ஏதாவது பிரச்னைன்னா நம்மைக் கூப்பிடச் சொல்லலாம்."

"நான் வரலப்பா. நான் வேற ஏதாவது வேலை தேடிக்கறேன்" என்று ஒதுங்கிக் கொண்டான் சதீஷ்.

அன்பு மட்டும் சற்று யோசித்து விட்டு, "நந்து! என்னால முதலீடு எதுவும் செய்ய முடியாது. ஆனா உன்னோட சேர்ந்து ஒர்க் பண்றேன். வருமானத்தைப் பொருத்து எனக்கு எவ்வளவு கொடுக்க முடியுமோ கொடு. ஆனா நல்ல வேலை ஏதாவது கிடைச்சா போயிடுவேன். நமக்கு சரியா வருமானம் வராட்டாலும் போயிடுவேன்!" என்றான்.

ந்தகோபால் தன் சர்வீஸ் மையத்தைத் துவங்கி இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. 

முதல் மாதம் அதிகம் பிசினஸ் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாம் மாதம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. 

இன்னும் ஓரிரு மாதங்களில் தொடர்ச்சியாக நல்ல வருமானம் வர ஆரம்பித்து விடும் என்று நந்தகோபாலுக்கு நம்பிக்கை வந்தபோதுதான் அந்த இடி விழுந்தது.

கொரானா காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு!

"அவ்வளவுதான்! இனிமே நம்மால எழுந்திருக்கவே முடியாது!" என்றான் அன்பு விரக்தியுடன்.

"பார்க்கலாம்!" என்றான் நந்தகோபால்.

"என்னத்தைப் பாக்கறது? என்ன நம்பிக்கையில இருக்க நீ?" என்றான் அன்பு சற்று எரிச்சலுடன்.

"அன்பு! இப்ப லாக்டவுன். எல்லாரும் விட்டிலதான் இருப்பாங்க. டிவி அதிகம் பாப்பாங்க. அதனால அதிகமா டிவிகளுக்கு சர்வீஸ் தேவைப்படும். ரிப்பேர் பண்ணாமப் போட்டு வச்சிருந்த டிவியைக் கூட எடுத்து ரிப்பேர் பண்ணி வச்சுப்பாங்க. லாக்டவுன்ல பெரிய கடையெல்லாம் மூடி இருப்பாங்க. அதனால நம்மை மாதிரி சின்ன ஆட்களுக்கு வாய்ப்பு நிறையக் கிடைக்கும்!" என்றான் நந்தகோபால். 

அன்பு அவனைச் சற்று வியப்புடன் பார்த்தான்.

நந்தகோபால் சொன்னபடியே வாய்ப்புகள் வந்தன.

ஒரு சிறு பெட்டியில் உபகரணங்ளை எடுத்துக் கொண்டு போய்  விடுகளுக்கே சென்று டிவிகளைப் பழுது பார்த்தார்கள்.

சில வாரங்களுக்குப் பிறகு உதிரி பாகங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இவர்கள் வேலை பார்த்த கடையின் நிர்வாகிக்கு ஃபோன் செய்து கேட்டபோது, ஊரடங்கு காலத்தில் கடையைத் திறந்து உதிரி பாகங்களை எடுத்துக் கொடுக்க முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.

"மொத்தத்தையும் யார்கிட்டேயாவது வித்திருப்பேன். நீங்க கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக்கிறதாச் சொன்னீங்க. உங்க மேல பரிதாபப்பட்டு  ஒத்துக்கிட்டேன். இப்ப லாக்டவுன்னால உங்களுக்கும் விக்க முடியல, மொத்தமாகவும் விக்க முடியல. எல்லாம் உள்ளே மாட்டிக்கிட்டிருக்கு. நஷ்டமாயிடுச்சுன்னு முதலாளி என்னைத்தான் திட்டப் போறாரு!" என்றார் அவர்.

என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு நாட்கள் தவித்தார்கள். டிவி பழுது பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தவர்கள் ஃபோன் செய்து ஏன் தாமதமாகிறது என்று கேட்டனர்.

"சார்! லாக் டவுன்னால ஸ்பேர்ஸ் கிடைக்கல. ரெண்டு நாள்  டயம் கொடுங்க!" என்றான் நந்தகோபால்.

"ஏதோ சமாளிச்சிக்கிட்டிருக்கோம்னு பாத்தா, புதுசா புதுசா பிரச்னை வந்துக்கிட்டிருக்கே!" என்று அலுத்துக் கொண்டான் அன்பு.

தங்கள் பழைய கடை நிர்வாகிக்கு மீண்டும் ஃபோன் செய்தான் நந்தகோபால்.

 "சார்! எங்க மேல நம்பிக்கை வச்சு கடை சாவியைக் கொடுங்க. எங்களுக்கு வேணுங்கற ஸ்பேர்ஸை எடுத்துக்கிட்டு அரை மணி நேரத்தில சாவியை உங்ககிட்ட திருப்பிக் கொடுத்துடறேன். நாங்க சொன்னபடி எல்லா ஸ்பேர்ஸையும் அஞ்சாறு மாசத்தில வாங்கிக்கிட்டு பணத்தைக் கொடுத்துடறோம். உங்களுக்கு நஷ்டம் எதுவும் வராது" என்றான் அன்பு.

சற்றுத் தயங்கிய நிர்வாகி, பிறகு "சரி!" என்றார்.

ரடங்கு ஏற்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் ஆகி விட்டன.

"பரவாயில்ல. லாக் டவுன்ல ஆறு மாசத்தை சமாளிச்சுட்டோம். இனிமே எல்லாம் சரியாயிடும்னு நினைக்கிறேன்!" என்றான் அன்பு.

ரு வீட்டிலிருந்து ஒரு டிவியைப் பழுது பார்க்க தங்கள் சர்வீஸ் மையத்துக்கு அன்பு எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது அவனை ஒரு போலீஸ்காரர் வழிமறித்தார்.

"எங்கேந்து டிவியைத் திருடிக்கிட்டுப் போற?" என்றார் அவர்.

"திருடிட்டுப் போகலை சார்! ரிப்பேர் பண்ண  எடுத்துக்கிட்டுப் போறேன்1" என்றான் அன்பு.

"அது இன்னும் மோசம்! லாக்டவுன்ல கடையைத் திறந்து வச்சுக்கிட்டு ரிப்பேர் பண்றியா? ஸ்டேஷனுக்கு வா!" என்று கூறி அவ னைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார் அவர்.

அன்பு ஃபோன் செய்த பிறகு காவல் நிலையத்துக்கு வந்தான் நந்தகோபால்.

போலீஸ்காரரிடம் நந்தகோபால் தங்கள் நிலையை விளக்கிச் சொன்னான்.

"சார்! பொதுவா வீட்டுக்குப் போய்த்தான் நாங்க ரிப்பேர் பண்ணுவோம். இந்த ஒரு தடவைதான் சர்வீஸ் சென்ட்டருக்கு எடுத்துக்கிட்டு வர வேண்டியதாயிடுச்சு. சர்வீஸ் சென்ட்டர்ங்கறது என்னோட வீடுதான். கதவை மூடிக்கிட்டு உள்ளேதான் வேலை செய்வோம்."

"ஏம்ப்பா ஒத்தன் ரோடில மாட்டிக்கிட்டான். இப்ப நீயா வந்து வண்டில ஏறி இருக்கே! ரெண்டு பேருமே ஆறு மாசம் உள்ள போகப் போறீங்க. இன்ஸ்பெக்டர் வரட்டும்!" என்றார் போலீஸ்காரர்.

இன்ஸ்பெக்டர் வந்து விசாரித்தார்.

நந்தகோபால் சொன்னதைக் கேட்டு விட்டு, "லாக் டவுன் விதிகளைப் பின்பற்றித்தான் ஆகணும். இது மாதிரி டிவியை ஸ்கூட்டர்ல வச்சுக்கிட்டு ரோட்டில அலையாதீங்க!" என்று சொல்லி அவர்களை விட்டு விட்டார் இன்ஸ்பெக்டர்.

காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, "என்ன அன்பு? ஏதாவது பிரச்னை வந்தா நீ ரொம்ப சோர்வடைஞ்சுடுவ. இன்னிக்கு ரொம்ப அமைதியா இருக்கியே!" என்றான் நந்தகோபால்.

"அதான் பாத்துக்கிட்டிருக்கேனே! எவ்வளவோ பிரச்னை வந்தது. ஆனா நீ கலங்கல. பிரச்னைதான் உன்னைக் கண்டு பயந்து ஓடிக்கிட்டிருக்கு. அதனால நானும் இனிமே பயப்படப் போறதில்ல!" என்றான் அன்பு.

அதற்குள் உள்ளிருந்து வேகமாக வந்த ஒரு போலீஸ்காரர், "இன்ஸ்பெக்டர் உங்களைக் கூப்பிடறாரு!" என்றார் நந்தகோபாலைப் பார்த்து.

"சொல்லி வாய் மூடல. அதுக்குள்ள இன்னொரு பிரச்னையா?" என்ற அன்பு, "நீ மட்டும் போய் என்னன்னு கேட்டுக்கிட்டு வா!" என்றான்.

சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்த நந்தகோபால், "இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே டிவி ரிப்பேரா இருக்காம். இந்த லாக்டவுன் சமயத்தில ரிப்பேர் பண்ண ஆளே கிடைக்கலையாம். அதனால அதை ரிப்பேர் பண்ணச் சொல்றாரு. அதோட வேற போலீஸ் அதிகாரிகளுக்கும் டிவி ரப்பேர் பண்ணணும்னா நம்மை சிபாரிசு செய்யறேன்னு சொல்லி இருக்காரு" என்று சொல்லி நிறுத்தி விட்டு, அன்புவின் முகத்தில் இருந்த கேள்விக்குறியைப் பார்த்து விட்டு, "நம்ம ரிப்பேர் சார்ஜ் எவ்வளவோ அதைக் கொடுத்துடறேன்னு சொன்னாரு!" என்றான் சிரித்தபடி. 

அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை  (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)

குறள் 624:
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

பொருள்:
தடைகள் உள்ள இடங்களிலும் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போல் மனம் தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Friday, September 16, 2022

809. காட்பாடி சந்திப்பு!

ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் வந்து நின்றபோது, ராமு எஸ் 3 கோச் நின்ற இடத்துக்கு விரைந்தான். 

அந்த கோச்சிலிருந்து இறங்குவோரும் ஏறுவோரும் அதிகமாக இருந்தனர். ஜன்னல்களுக்கு வெளியேயும் பலர் நின்று உள்ளே பார்த்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்துக்குள் புகுந்த ராமு ஜன்னல் வழியே உள்ளே பார்த்தான். ரயில் நிற்கும் சில நிமிடங்களுக்குள் தன் சிறு வயது நண்பன் கோபியைப் பார்த்து இரண்டு வார்த்தைகள் பேசி விட வேண்டும்.

கோபியும் அவனும் சந்தித்து எவ்வளவோ வருடங்கள் ஆகி விட்டன. கோபிக்கு அஸ்ஸாமில் வேலை கிடைத்துப் போன பிறகு அவன் சொந்த ஊருக்கு வரவேயில்லை. இருவரும் கடிதங்கள் எழுதிக் கொண்டதோடு சரி. அது கூட நாளடைவில் குறைந்து பிறகு நின்றே போய் விட்டது.

தன் கடிதங்களுக்கு கோபியிடமிருந்து பதில் வராததும் ராமுவும் அவனுக்குக் கடிதம் எழுதுவதை நிறுத்திக் கொண்டான். தங்கள் சிறு வயது நட்பு முடிந்து விட்டதோ என்ற உணர்வு அவனுக்கு ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது.

ஒரு சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு, ராமுவுக்கு கோபியிடமிருந்து திடீரென்று ஒரு கடிதம் வந்தது.

தான் ஒரு திருமணத்துக்காக சேலத்துக்கு வருவதாகவும், தன்னால் சென்னைக்கு வர முடியாது என்றும், காட்பாடி ரயில் நிலையத்தில் தன்னை வந்து சந்திக்க முடியுமா என்றும் கோபி எழுதி இருந்தான்.

வருவதாக கோபிக்கு பதில் எழுதிய பிறகுதான், கோபியின் சமீபத்திய புகைப்படத்தைக் கேட்டிருக்கலாமோ என்று ராமுவுக்குத் தோன்றியது. அவர்கள் சந்தித்துப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் இருவருமே தோற்றத்தில் பெருமளவு மாறி இருக்கலாம்!

ரயில் நிற்கும் சில நிமிடங்களுக்குள் கோபியின் முகத்தை அடையாளம் தெரியாமல் போய் விட்டால்...

தன் முதுகில் யாரோ  தட்டுவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தான் ராமு. 

கோபி!

உடல் முழுவதும் உற்சாகம் பாய்ந்தது ராமுவுக்கு.

"டேய் கோபி! எப்படிடா இருக்கே? எவ்வளவு வருஷம் ஆச்சு உன்னைப் பாத்து! ஒரே கூட்டமா இருக்கே, ரயில் கிளம்பறத்துக்குள்ள உன்னைப் பாக்க முடியுமான்னு பயந்துக்கிட்டே இருந்தேன். நல்லவேளை, நீயே இறங்கி வந்துட்ட. என்னை சுலபமா அடையாளம் கண்டு பிடிச்சுட்டியா?"

"எத்தனை வருஷம் ஆனா என்ன, என்னோட பெஸ்ட் ஃபிரண்டை என்னால அடையாளம் கண்டு பிடிக்க முடியாம போயிடுமா என்ன? அதோட, நீ ஒண்ணும் மாறல. அப்ப இருந்த மாதிரிதான் இருக்கே!" என்றான் கோபி.

"ஆனா நீ ரொம்ப மாறிட்ட. குண்டா வேற ஆயிட்ட. அஸ்ஸாம் யானை ரொம்ப பிரபலம். ஆனா இப்பதான் நேரில பாக்கறேன்!"

"டேய்!" என்று பெரிதாகச் சிரித்த கோபி, "இந்தக் கிண்டல் மட்டும் உங்கிட்ட அப்படியேதாண்டா இருக்கு!" என்றான்.

"உன்னோட அந்த வெடிச் சிரிப்பு மட்டும் மாறவே இல்லை. யானை சிரிச்சா இப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்! உன் சிரிப்பு சத்தத்தைக் கேட்டுட்டு எத்தனை பேரு திரும்பி நம்மைப் பாக்கறாங்க பாரு!" என்றான் ராமு.

"ரயில் இன்னும் அஞ்சு நிமிஷம்தான் நிற்கும். உன்னோட சேந்து ஒரு காப்பி சாப்பிடக் கூட நேரமில்லை. ஆமாம், நீ எத்தனை மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பின?"

"நேத்து சாயந்திரமே கிளம்பி ராத்திரி இங்கே வந்து சேர்ந்தேன். ராத்திரி படுக்கை ஸ்டேஷன் பெஞ்ச்லதான்! இல்லாட்டா இந்த விடியக்கால நேரத்தில என்னால இங்கே எப்படி இருக்க முடியும்?"

"எவ்வளவு கஷ்டம்டா உனக்கு! அதுவும் நீ தாம்பரத்திலேந்து ஏழெட்டு கிலோ மீட்டர் தள்ளி வேற இருக்கே. அப்ப நீ ரொம்ப முன்னாலேயே கிளம்பி இருப்பேன்னு நினைக்கிறேன். எப்ப சாப்பிட்ட?" என்றான் கோபி கரிசனத்துடன்.

"ராத்திரி ஸ்டேஷன்ல ஏன்ன கிடைச்சுதோ அதை சாப்பிட்டேன்! அதுக்கென்ன இப்ப? இன்னும் ஏழெட்டு மணி நேரத்தில வீட்டுக்குப் போய் சேர்ந்துட மாட்டேனா? அப்ப சாப்பிட்டுக்கறேன்!" என்ற ராமு, "பாத்தியா மறந்துட்டேன். மீனாட்சி உனக்குக் கொஞ்சம் சப்பாத்தி செஞ்சு கொடுத்திருக்கா. இந்தா!" என்று தன் பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து கோபியுடம் கொடுத்தான்.

"இவ்வளவு கஷ்டப்பட்டு என்னைப் பாக்க வந்திருக்க. உன் மனைவி பண்ணின அருமையான சப்பாத்தியைப் பைக்குள்ள வச்சுக்கிட்டு ராத்திரி ஸ்டேஷன்ல கிடைச்சதை சாப்பிட்டு வயத்தை நிரப்பிக்கிட்டிருக்க!" என்றான் கோபி. 

நீண்ட நாள் கழித்து நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியிலும், தன்னைப் பார்க்க நண்பன் எடுத்துக் கொண்ட சிரமத்தை நினைத்ததிலும் கோபிக்கு அழுகை வந்து விடும் போல் இருந்தது.

"பின்னே? நீ அஸ்ஸாம்லேந்து கிளம்பறத்துக்கு முன்னேயே சென்னைக்குப் பக்கத்தில இருக்கற தாம்பரத்துக்குப் பக்கத்தில இருக்கற முடிச்சூருக்குப் பக்கத்தில இருக்கற என் வீட்டிலேந்து கிளம்பி, இவ்வளவு பக்கத்தில இருக்கற இந்த காட்பாடிக்கு வந்திருக்கேனே, சும்மாவா? சப்பாத்தி கூட நேத்திக்கு செஞ்சதுதான். இப்ப எப்படி இருக்குமோ தெரியல, கஷ்டப்பட்டு கடிச்சுத் தின்னுடு!"

"நீ இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கறது எனக்கு நிஜமாவே ரொம்ப கஷ்டமா இருக்கு!" என்றான் கோபி உணர்ச்சியுடன்.

"அது இருக்கட்டும்.  நீ ஊரை விட்டுப் போய் பத்து வருஷத்துக்கு மேல இருக்கும் இல்ல?"

"பன்னண்டு வருஷம் ஆயிடுச்சு. 1968- ல போனேன்."

"அப்புறம் நீ ஏண்டா ஊர்ப்பக்கமே வரல? கல்யாணத்தையும் கல்கத்தால பண்ணிக்கிட்டு எங்களையெல்லாம் கல்யாணத்துக்குக் கூட வர முடியாம பண்ணிட்ட!"

"இங்கே எனக்கு யாருடா இருக்காங்க? என் மனைவியோட சொந்தக்காரங்களும் கல்கத்தா, டில்லின்னு வடக்கேதான் இருக்காங்க" என்று கோபி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரயில் ஊதியது.

திடீரென்று உணர்ச்சி வசப்பட்டவனாக ராமுவின் கைகளைப் பிடித்துக் கொண்ட கோபி, "டேய் ராமு! ஊரில எனக்கு யாரும் இல்லேன்னு நினைச்சு நான் ஊர்ப்பக்கம் வராதது பெரிய தப்பு. நீ இருக்கியே! உனக்காக நான் ஊருக்கு வந்திருக்கணும். என்னைப் பாக்க நீ இவ்வளவு கஷ்டப்பட்டு வந்ததைப் பாத்தப்பறம்தான் எனக்கே இது உறைக்குது!" என்று கூறி விட்டு நகரத் தொடங்கி விட்ட ரயிலில் விரைந்து ஏறிக் கொண்டான்.

கோபியின் கண்களில் நீர் தளும்பி இருந்ததை ராமுவால் பார்க்க முடிந்தது.

"கண்டிப்பா வரணும். ஆனா நீ மட்டும் வந்தா, நோ என்ட்ரி! கல்கத்தா மேடத்தையும் உன் குழந்தைகளையும் அழைச்சுக்கிட்டு வந்தாதான் உன்னை என் வீட்டுக்குள்ள விடுவேன்!"

ரயில் வேகமெடுத்து விட்ட நிலையில் தான் கூறியது நண்பனுக்கு முழுதாகக் கேட்டிருக்குமா என்று யோசித்தபடியே கையசைத்தான் ராமு.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 809:
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.

பொருள்: 
உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Thursday, September 15, 2022

808. புகார் கொடுத்தது யார்?

 

"நீதான் ரகுவை உன் நண்பன்னு சொல்லிக்கிட்டிருக்கே! அவன் செய்யற காரியத்தையெல்லாம் கேட்டா நீ என்ன செய்வியோ தெரியாது!" என்றான் கிருஷ்ணனுடன் அலுவலகத்தில் பணி புரியும் சண்முகம்.

"அப்படி என்ன செய்யறான் அவன்?" என்றான் கிருஷ்ணன்.

"என்ன செய்யறானா? ஒத்தரைப் பத்தி இன்னொருத்தர் கிட்ட தப்பாப் பேசறதுதான் அவன் தொழில். அவன் செய்யறது இந்த ஆஃபீஸ்ல எல்லாருக்குமே தெரியுமே. உன்னைப் பத்திக் கூட தப்பாப் பேசறான்னா பாத்துக்கயேன்!" என்றார் சண்முகம்.

"அப்படியெல்லாம் இருக்காது சார். நானும் ரகுவும் எத்தனையோ வருஷமா நட்பா இருக்கோம். அவன் அப்படியெல்லாம் செய்யற ஆள் இல்ல. உங்க்கிட்ட யாரோ தப்பா சொல்லி இருக்காங்க" என்றான் கிருஷ்ணன்.

"உன் நண்பன் மேல நீ ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கப்பா! உன்னோட நட்பைப் பாராட்டறேன். ஆனா நான் சொல்றது உண்மைன்னு உனக்கு ஒரு நாள்தெரிய வரும்!" என்றார் சண்முகம்.

அந்த நாள் விரைவில் வந்தது.

நிறுவனத்தில் பொது மேலாளர் ஒருநாள் கிருஷ்ணனை அழைத்தார்.

"கிருஷ்ணன்! உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். ஆனா உங்க பேர்ல ஒரு புகார் வந்தபோது அதை விசாரிக்காம இருக்க முடியாது. அதனால அதை விசாரிச்சேன். அதில உண்மை இல்லேன்னு தெரிஞ்சுது. இதை உங்ககிட்ட சொல்லணும்னுதான் சொல்றேன்!" என்றார்.

"என்ன புகார் சார்?" என்றான் கிருஷ்ணன் அதிர்ச்சியுடன்.

"நீங்கதான் எல்லோரோட டிராவல் பில்களையும் ப்ராசஸ் பண்றீங்க, என்னோடது உட்பட! ஆனா சில பேருக்கு நீங்க சலுகை காட்டி அவங்க பில் அதிகமா இருந்தாலும் அதை பாஸ் பண்றதாகவும்,  சில பேரோட பில்லில நிறைய விஷயங்களை கட் பண்றதாகவும் புகார் வந்தது. நான் சொன்னபடி இதில உண்மை இல்லைன்னும், நீங்க விதிப்படிதான் செய்யறீங்கன்னு நான் விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன், டோன்ட் ஒர்ரி. இது உங்களுக்குத் தெரியணும்னுதான் உங்ககிட்ட சொன்னேன். ஒரு விதத்தில இது உங்களுக்கு நல்லதுதான். நீங்க எவ்வளவு நேர்மையா, எந்த அளவுக்கு விதிகளைப் பின்பற்றி செயல்படறீங்கன்னு இப்ப தெரிஞ்சுடுச்சு இல்ல?" என்றார் பொது மேலாளர்.

கிருஷ்ணனுக்கு அதிர்ச்சி இன்னும் அடங்கவில்லை. 

"நன்றி சார்! இது ரொம்ப அக்கிரமம். என்னைப் பத்தி இப்படி ஒரு புகார் கொடுத்திருப்பாங்கன்னு நம்பறதுக்கே எனக்கு கஷ்டமா இருக்கு. விதிப்படி நான் பில்லிலேந்து சில விஷயங்களைக் கழிச்சதால என் மேல கோபப்பட்டுத்தான் இப்படி யாரோ செஞ்சிருக்காங்க" என்றான் கிருஷ்ணன் படபடப்புடன்.

"என்னோட பில்லில கூட எலிஜிபிலிடி இல்லாத தொகைகளை நீங்க கட் பண்ணி இருக்கீங்க!" என்றார் பொதுமேலாளர் சிரித்தபடி.

"சார்!"

"ஐ ஆம் நாட் கம்ப்ளைனிங்!" என்ற பொது மேலாளர் சற்றுத் தயங்கி விட்டு, "கிருஷ்ணன்! உங்க மேல வந்தது ஒரு அனானிமஸ் கம்ப்ளைன்ட்தான். ஆனா புகார் கொடுத்தவர் அதை டைப் கூட பண்ணாம கையால எழுதி அனுப்பி இருக்காரு. அந்தக் கையெழுத்தை வச்சு அந்த புகார் கொடுத்தவர் யாருன்னு விஜிலன்ஸ் டிபார்ட்மென்ட்ல கண்டு பிடிச்சுட்டாங்க. புகார் கொடுத்தவர் உங்களுக்கு ரொம்ப நெருக்கமானவராமே! பொதுவா புகார் கொடுத்தவங்க பேரை வெளியில சொல்லக் கூடாது. நீங்க நண்பரா நினைக்கிறவர் எப்படிப்பட்டவர்னு உங்களுக்குத் தெரியணும்னுதான் நான் இதைச் சொன்னேன்!"

"இவ்வளவு வருஷமா என் நெருக்கமான நண்பனா இருக்க. ஏண்டா இப்படிப் பண்ணின?" என்றான் கிருஷ்ணன்.

"இல்லை. நீ தப்பா..." என்று ஆரம்பித்தான் ரகு.

"போதும்டா! ஏற்கெனவே சில பேர் நீ என்னைப் பத்தி தப்பா பேசறதா சொன்னப்ப நான் நம்பல. ஆனா நீ உன் கைப்பட எழுதி என் மேல புகார் கொடுத்தது தெரிஞ்சப்பறம் நான் எப்படி நம்பாம இருக்க முடியும். நீ ஏன் இப்படிச் செய்யறேன்னு எனக்குப் புரியல. உன்னை விட நான் மேலே போயிட்டேங்கற பொறாமையா? ஆனா நான் உங்கிட்ட பழைய மாதிரிதானே  நடந்துக்கறேன்?"

ரகு மௌனமாக இருந்தான்.

"ஆனா ஒரு விஷயம் எனக்கு சந்தோஷமா இருக்கு. நீ எனக்கு எதிரா செயல்பட்டப்பறம் கூட எனக்கு உன் மேல கோபம் வரல. நம் நண்பன் இப்படி செஞ்சுட்டானேன்னு வருத்தம் மட்டும்தான் இருக்கு. நீ எப்படி இருந்தாலும் உங்கிட்ட எனக்கு இருக்கிற நட்பு அப்படியேதான் இருக்குன்னு புரியறப்ப எனக்கு என்னை நினைச்சே பெருமையா இருக்கு. யூ ஹேவ் மேட் மை டே! நன்றி!" என்றான் கிருஷ்ணன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 808:
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.

பொருள்: 
பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறு செய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.
குறள் 809 (விரைவில்)
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

623. துன்பம் நேர்கையில்....

"அப்பா எப்படி இருக்காரு?" என்றான் சம்பத்.

"நல்லா நடமாடிக்கிட்டிருந்தவருக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்து அஞ்சாறு நாள் ஆஸ்பத்திரியில இருந்துட்டு வீட்டுக்கு வந்திருக்காரு. ரெண்டு மூணு மாசம் பெட் ரெஸ்ட்ல இருக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காரு"  என்றான் பாஸ்கர்.

"இந்த சந்தர்ப்பத்திலேயா இப்படி நடக்கணும்?" 

பாஸ்கர் சிரித்தபடியே, "நான் சஸ்பென்ஷன்ல இருந்ததாலதான் அப்பாவை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போக முடிஞ்சது. இல்லேன்னா கம்பெனியில லீவு, பர்மிஷன் எல்லாம் கேட்டு வாங்கறது கஷ்டமாத்தானே இருந்திருக்கும்!" என்றான்.

"உன்னால எப்படி எப்படி சிரிக்க முடியுதுன்னு தெரியல! மானேஜர் தான் பண்ணின தப்பை மறைக்க உன்னை பலி வாங்கிட்டாருன்னு கம்பெனியில எல்லாருக்குமே தெரியும். எல்லாருமே உன் மேல இரக்கமாவும் மானேஜர் மேல கோபமாவும்தான் இருக்காங்க" என்றான் சம்பத் தொடர்ந்து.

"பாக்கலாம். என்கொயரியில உண்மை தெரியும், என் மேல தப்பு இல்லேன்னு தெரிஞ்சு என்னை வேலையில சேத்துப்பாங்கன்னு நினைக்கிறேன். ஆனா அதுக்கு ரெண்டு மூணு மாசம் ஆகலாம்."

"அதுவரையிலேயும் எப்படி சமாளிப்ப? அப்பாவோட மருத்துவச் செலவு வேற இருக்கு!"

"ஆமாம். என்ன செய்யறது? அப்பா ஒரு பார்ட் டைம் வேலைக்குப் போய் கொஞ்சம் சம்பாதிச்சுக்கிட்டிருந்தாரு. அந்த வருமானம் போனதோட, எனக்கு சஸ்பென்ஷன்ல பாதி சம்பளம்தான் கொடுப்பாங்க. கடுமையானபண நெருக்கடிதான்!" என்றான் பாஸ்கர் இயல்பாக.

"என்னவோ யாரோட கஷ்டத்தையோ சொல்ற மாதிரி சொல்ற! எனக்கு இந்த மாதிரி கஷ்டமெல்லாம் வந்தா ஆடிப் போயிருப்பேன். நீயானா ரொம்ப அமைதியா இருக்க. சாரி. என்னால உனக்கு அதிகமா உதவி பண்ண முடியாது. ஏதாவது சின்னத் தொகைதான் கடனாக் கொடுக்க முடியும்" என்றான் சம்பத் சங்கடத்துடன்.

"நீ இப்படிச் சொன்னதே போதும்டா! இப்போதைக்கு சமாளிச்சுக்கிட்டிருக்கேன். கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாயிடும்னு நினைக்கிறேன்" என்றான் பாஸ்கர்.

"ஆஸ்பத்திரி செலவுக்கெல்லாம் என்ன செஞ்சே? மெடிகல் இன்ஷ்யூரன்ஸ் இருந்ததா?"

"அதெல்லாம் எதுவும் இல்ல. கம்பெனியோட மெடிகல் வெல்ஃபேர் ஸ்கீம்ல கொஞ்சம் பணம் வரலாம். அது கூட இப்ப நான் சஸ்பென்ஷன்ல இருக்கறப்ப அப்ளை பண்ண முடியாது. மறுபடி வேலையில சேர்ந்தாதான் முடியும். என் மனைவிக்கு கல்யாணத்தில போட்ட நகை கொஞ்சம் இருந்தது. நமக்கு உதவத்தான் அடகுக் கடைகள் நிறைய இருக்கே! அதனால சமாளிச்சேன். இதுவரையிலேயும் சமாளிச்சாச்சு. நாளைக்கு என்ன பண்ணப் போறேன்னு தெரியாது. ஆனா ஏதாவது வழி கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு!" என்றான் பாஸ்கர்.

"எனக்கு இந்த மாதிரி கஷ்டம் வந்தா எப்படி சமாளிப்பேன்னு நினைக்கவே பிரமிப்பா இருக்கு  நீ இப்படி எல்லாத்தையும் அமைதியா எதிர்கொள்றதைப் பாக்கறப்ப உன்னைப் பாத்து இந்த குணத்தை நானும் கொஞ்சமாவது வளர்த்துக்கணும்னு நினைக்கிறேன்!" என்றான் சம்பத் நெகிழ்ச்சியுடன்.

அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை  (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)

குறள் 623:
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

பொருள்:
வெள்ளம் போல் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவுடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Sunday, September 11, 2022

622. விபத்துக்குப் பின்...

தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது ரத்தினத்துக்கு விபத்து ஏற்பட்டு விட்டதாகத் தொலைபேசியில் செய்தி வந்ததும் ரத்தினத்தின் மனைவி கல்பனா துடித்துப் போனாள். 

தன்னை அறியாமல் அவள் தன் மார்பில் கைவைத்தபோது இதயம் வேகமாகத் துடிப்பதை உணர்ந்தாள். இதயம் வேகமாகத் துடித்துச் சிதறி விடுமோ என்று ஒரு கணம் தோன்றியது. 

பள்ளிக்குச் சென்றிருந்த தன் மகனையும், மகளையும் பற்றிய நினைவு உடனே வந்தது. கணவனுக்கு விபத்து ஏற்பட்டிருக்கும் நிலையில் தன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டிய கூடுதல் பொறுப்பு தனக்கு இருப்பதை உடனே உணர்ந்தவளாகத் தன் மனதைத் தேற்றிக் கொண்டாள்.

விபத்து என்னவோ நடந்து விட்டது. அடிபட்ட தன் கணவன் நன்கு குணமாக வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள்.

கல்பனா மருத்துவமனைக்குச் சென்றபோது, பதட்டத்தையும், கவலையையும் மீறிஅவளிடம் ஒரு நிதானம் இருப்பதை மருத்துவமனையில் இருந்த ரத்தினத்தின் சக ஊழியர்கள் கவனித்தனர்.

மருத்துவமனையில் ரத்தினம் ஒரு மாதம் சிகிச்சை பெற்றான். விபத்து ரத்தினத்தின் கவனக்குறைவால் ஏற்பட்டதாகக் கூறிய அவனுடைய நிறுவனம் மருத்துவமனைக்கான செலவுகளை மட்டும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முன்வந்தது.

ஒரு மாதம் கழித்து ரத்தினம் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டபோது, ரத்தினத்துக்கு ஒரு கால் ஊனமாகி இருந்தது. 

ரத்தினம் தொடர்ந்து வேலை பார்க்க முடியாது என்ற நிலையில் அவனுடைய  நிறுவனத்திலிருந்து நஷ்ட ஈடு என்று ஒரு சிறிய தொகை கொடுத்தார்கள். நிறுவனம் அவனுக்கு நஷ்டடு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை என்றும் கருணை அடிப்படையில் தாங்கள் அந்தத் தொகையை வழங்குவதாகவும் நிறுவனம் தெரிவித்தது.

ருத்துவமனையிலிருந்து ரத்தினம் வீட்டுக்கு வந்து இரண்டு தினங்களுக்குப் பிறகு நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர் அவர்கள் வீட்டுக்கு வந்தார்.

"கம்பெனியில நஷ்ட ஈடு கொடுக்கணும். ஆனா கொடுக்க மாட்டேங்கறாங்க. உன் மனைவிக்கு வேணும்னா வேலை கொடுக்கறதா சொல்றாங்க. நாம லேபர் கமிஷன்ல முறையிட்டா அவங்க நஷ்ட ஈடு வழங்க வாய்ப்பு இருக்கு" என்றார் தொழிற்சங்கத் தலைவர்.

"அப்படியே செஞ்சுடலாம்" என்றான் ரத்தினம்.

"அண்ணே! ஒருவேளை லேபர் கமிஷனுக்குப் போய் அவங்க நஷ்ட ஈடு கொடுக்கலேன்னா அப்பவும் கம்பெனியில எனக்கு வேலை கொடுப்பாங்களா?" என்றாள் கல்பனா, தொழிற்சங்கத் தலைவரிடம்.

"அது எப்படிக் கொடுப்பாங்க? அவங்க மேல வழக்குப் போட்டப்பறம் அவங்க நம்மை எதிரியாத்தானே பார்ப்பாங்க?" என்றான் ரத்தினம் மனைவியைப் பார்த்து.

"அப்படின்னா, அவங்களோட ஆஃபரை ஏத்துக்கிட்டு நான் வேலைக்குப் போறதுதானே நமக்கு நல்லது?" என்றாள் கல்பனா.

"என்ன பேசற கல்பனா? நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியது கம்பெனியோட பொறுப்பு. அதைத் தட்டிக் கழிச்சுட்டு பிச்சை போடற மாதிரி அவங்க உனக்கு வேலை கொடுக்கறதா சொல்றாங்க. அதை ஏத்துக்கணுங்கறியா?" என்றான் ரத்தினம் கோபமாக.

"ரத்தினம்! உன் மனைவி சொல்றது சரிதான்னு நினைக்கிறேன். விபத்துக்குக் காரணம்  உன்னோட கவனக்குறைவுதான்னு கம்பெனியில சொன்னா அப்படி இல்லேன்னு நாம நிரூபிக்கறது கஷ்டம். கம்பெனி உன்னோட மருத்துவமனைச் செலவை ஏத்துக்கிட்டு நஷ்ட ஈடுன்னு ஒரு தொகையையும் கொடுத்திருக்கு. அதனால லேபர் கமிஷன்ல கம்பெனிக்கு சாதகமாக் கூட முடிவு செய்யலாம். அதனால உன் மனைவி சொல்றபடி கம்பெனி கொடுக்கற வேலையை அவங்க ஏத்துக்கட்டும்!"

"கல்பனா படிச்சிருக்கா. அவளுக்கு எங்கேயாவது நல்ல வேலை கிடைக்கும். கம்பெனி போடற பிச்சையை நாம ஏத்துக்கணுமா?" என்றான் ரத்தினம் பிடிவாதமாக

கல்பனாவிடமிருந்து ஒரு விம்மல் வெளிப்பட்டது.

"உங்களுக்கு விபத்து ஏற்பட்ட அடுத்த நாளிலேந்தே குடும்பத்தைக் காப்பாத்தணுமேங்கற கவலையில நிறைய இடத்தில வேலைக்கு முயற்சி செஞ்சேன். எங்கேயுமே வேலை கிடைக்கல. எல்லாருமே, நான் படிச்சு நிறைய வருஷம் ஆயிடுச்சு, படிப்பு மட்டும் போதாது, அனுபவமும் வேணும்னு சொன்னாங்க. இனிமே வீட்டு வேலை அல்லது சமையலே வேலைக்குத்தான் முயற்சி செய்யணும்னு நினைச்சுக்கிட்டிருக்கப்ப இப்படி ஒரு வாய்ப்பு வந்திருக்கு. இதையும் விட்டுடணுமா? லேபர் கமிஷன்ல உங்களுக்கு நஷட ஈடு கொடுக்கலேன்னா நாம என்ன செய்யறது? அப்படியே நஷ்ட ஈடு கொடுத்தாலும் அதை வச்சு நம்ம மீதி வாழ்க்கையை ஓட்ட முடியுமா?"

விம்மலுக்கிடையே இதைச் சொல்லி முடித்ததும் கல்பனா அழுது கொண்டே உள்ளே சென்றாள்.

"ரத்தினம்! இவ்வளவு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டப்பவும் உன் மனைவி மனசு உடைஞ்சு போகாம உங்க குடும்பத்தோட எதிர்காலத்தை நினைச்சுச் செயல்பட்டிருக்காங்க. இப்படிப்பட்ட ஒரு மனைவி கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்!" என்றார் தொழிற்சங்கத் தலைவர்.

அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை  (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)

குறள் 623:
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

பொருள்:
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

621. ஞாயிற்றுக்கிழமை பேப்பர்!

 

பரமுவின் தந்தை சிவம் இறந்தபோது பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்.

""மன உறுதி உள்ளவர்."

"என்ன பிரச்னை வந்தாலும் தைரியமா எதிர்கொள்வார்."

"ரொம்ப நகைச்சுவை உணர்வு உள்ளவர்."

இது போன்று சிவத்தைப் பற்றிப் பல கருத்துக்கள் கூறப்பட்டன.

சிவம் இறந்து சில நாட்களுக்குப் பிறகு, பரமு தன் தாய் உமாவிடம் கேட்டான்.

"ஏம்மா, அப்பா ரொம்ப மன உறுதி உள்ளவர், எதுக்கும் கலங்க மாட்டார்னெல்லாம் பல பேர் சொல்றாங்களே, அதெல்லாம் உண்மையா, இல்ல இறந்து போனவரைப் பத்திலொப்புக்காகச் சொல்ற உபசார வார்த்தைகளா?"

"ஏன் அப்படிக் கேக்கற? உனக்குத் தெரியாதா உன் அப்பாவைப் பத்தி?" என்றாள் உமா.

"அப்பா பொதுவா சிரிச்சுப் பேசிக்கிட்டுத்தான் இருப்பாரு. ஆனா ஏதாவது பிரச்னை வந்தா ரூமுக்குள்ள போயுக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுப்பாரு. அரைமணி நேரம் கழிச்சுத்தான் வருவாரு. அதனால அப்பாவுக்குக்  கஷ்டங்களைத் தாங்கற மனநிலையோ, பிரச்னைகளை எதிர்கொள்கிற மனநிலையோ கிடையாதுன்னுதான் நான் நினைச்சுக்கிட்டிருக்கேன்!"

"அது சரிதான். ஆனா  அரை மணி நேரம் கழிச்சு ரூம்லேந்து வெளியில வந்தப்பறம் அவரு எப்படி இருப்பாருன்னு கவனிச்சிருக்கியா?"

"அப்ப தெளிவாயிடுவாரு. முகத்தில சிரிப்பு கூட இருக்கும்."

"அது எப்படின்னு யோசிச்சியா?"

"ரூம்ல போய் அழுதுட்டு வருவாருன்னு நினைக்கிறேன். மனம் விட்டு அழுததும் கொஞ்சம் தெளிவு வருமோ என்னவோ!"

"பரமு! நீ  ரெசிடென்ஷியல் ஸ்கூல்ல படிச்சதால உன் அப்பாவைப் பத்தி அதிகமாத் தெரிஞ்சுக்கல. சரி, உன் அப்பா உன்னை எந்த மாதிரிப் புத்தகங்கள் எல்லாம் படிக்கச் சொல்லிச் சொல்லுவாரு?"

"நகைச்சுவைப் புத்தகங்களைப் படிக்கச் சொல்லுவாரு. ஆனா அவர் சொன்ன பி ஜி வோட்ஹவுஸ், கல்கி, தேவன், அப்புசாமி கதைகள் இதெல்லாம் படிக்கறதில எனக்கு ஆர்வம் இல்ல. நான் கிரைம் திரில்லர்ஸ்தான் படிப்பேன். ஆனா அப்பா என்னை வற்புறுத்தினது இல்ல. ஆமாம், இதை ஏன் இப்ப கேக்கற?"

"உன் அப்பா நகைச்சுவை உணர்வு உள்ளவர்னு இதிலேந்து உனக்குப் புரியலியா?"

"இருக்கலாம். ஆனா அவரால கஷ்டங்களைத் தாங்க முடியலேங்கறது உண்மைதானே!" என்றான் பரமு.

"அவர் அந்த ரூமுக்குள்ள போய் என்ன செய்வார்னு உன்னால புரிஞ்சுக்க முடியலியா?"

"ஏதாவது படிப்பாரா? ஆனா புத்தக அலமாரி முன்னறையிலதானே இருக்கு? அந்த ரும்ல ஒரு சின்ன மேஜையும் நாற்காலியும்தானே இருக்கு!"

வாசலில் ஏதோ குரல் கேட்டது.

"சரி. நீ போய் அந்த ரும்ல அந்த மேஜையோட இழுப்பறையில என்ன இருக்குன்னு பாத்துட்டு வா. பழைய பேப்பர் வாங்கறவர் வந்திருக்காரு. நான் போய் பழைய பேப்பரை எடுத்துக் கொடுத்துட்டு வந்துடறேன்" என்று கூறி விட்டு முன்னறைக்குச் சென்றாள்.

உமா திரும்பி வந்தபோது, பரமு ஒரு நீண்ட நோட்டுப் புத்தகத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் சிரிப்பு வழிந்து கொண்டிருந்தது.

"என்ன?" என்றாள் உமா.

"எல்லாம் ரொம்பப் பிரமாதமான சகைச்சுவை கார்ட்டூன்கள். பாத்தா சிரிப்பு வராம இருக்காது. எத்தனை தடவை பாத்தாலும் புதுசாப் பாக்கற மாதிரி சிரிப்பு வரும்னு நினைக்கிறேன். அப்பா இதைப் பாக்கத்தான் இந்த ரூமுக்கு வருவாரா?" என்றான் பரமு.

"ஆமாம். மனசுக்கு வருத்தமா ஏதாவது நடந்தா உங்கப்பா இங்கே வந்து உக்காந்து இந்த கார்ட்டூன்களப் பாத்து சிரிச்சு அரை மணி நேரத்தில தன் மூடை மாத்திப்பாரு, இதையெல்லாம் பார்த்து சிரிச்சுட்டு வந்தா எந்தக் கஷ்டம் வந்தாலும் பூன்னு ஊதித் தள்ளிடலாங்கற மாதிரி ஒரு தைரியம் வரும்னு அவர் நிறைய தடவை எங்கிட்ட சொல்லி இருக்காரு."

"என்னம்மா இது? சில பேப்பர்ல எல்லாம் கத்திரிக்கோலால கட் பண்ணி இருக்கு. இதையெல்லாம் எடைக்கு எடுத்துக்க முடியாதும்மா!" என்று வாயிற்புறத்திலிருந்து பழையபேப்பர் வாங்குபவரின் குரல் கேட்டது.

"உன் அப்பா செஞ்ச வேலைதான் இது. ஞாயிற்றுக்கிழமை பேப்பர்ல வர எல்லா நகைச்சுவை கார்ட்டூன்களையும் கத்திரிக்கோலால வெட்டி இது மாதிரி நோட்டில ஒட்டி வச்சுடுவாரு!" என்றாள் உமா சிரித்தபடி.

அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை  (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)

குறள் 621:
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்..

பொருள்:
துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அந்தத் துன்பத்தைக் கடந்து மேலே செல்ல உதவுவது அதைப் போன்று வேறு எதுவும் இல்லை.

      அறத்துப்பால்                           (                                  காமத்துப்பால்

Saturday, September 10, 2022

620. விரைவில் விலகிய சனி!

"வேலை போயிடுச்சு, வேற வேலை கிடைக்கல. அதுக்காக சும்மா இருக்க முடியுமா? ஏதாவது முயற்சி செஞ்சுதானே ஆகணும்?" என்றான் வேலு.

""முயற்சி செய்யறேன்னுட்டு புதுசு புதுசா ஏதோ தொழில் செய்யறேன்னு இருக்கற பணத்தையும் செலவழிச்சீங்கன்னா அப்புறம் நாம எல்லாரும் நடுத்தெருவுக்கு வர வேண்டியதுதான்!" என்றாள் அவன் மனைவி செல்வி கோபத்துடன்.

"இங்கே பாருடா! இப்ப உனக்கு ஏழரை நாட்டு சனி  நடக்குது. அதனாலதான் உனக்கு வேலை போச்சு. இப்ப நீ எந்த முயற்சி செஞ்சாலும் அது நஷ்டத்திலதான் முடியும். நேரம் சரியாகிற வரைக்கும் புது முயற்சி எதிலேயும் ஈடுபட வேண்டாம்னு ஜோசியர் சொல்லி இருக்காரு!" என்றாள் வேலுவின் தாய் கிருஷ்ணவேணி.

பெரியவர்கள் என்னபேசுகிறார்கள் என்று புரியாமல் அவர்கள் முகங்களை மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வேலுவின் மூன்று வயதுப் பெண் ராஜஶ்ரீ.

"ஏழரை நாட்டு சனி போகட்டும்னு அஞ்சாறு வருஷம் நான் சும்மா உக்காந்துக்கிட்டிருந்தா, அது முடிஞ்சு நல்ல காலம் வரப்ப நானே இருக்க மாட்டேம்மா!" என்றான் வேலு சிரித்துக் கொண்டே..

பிறகு மனைவியைப் பார்த்து, "செல்வி! உன்னோட கவலை எனக்குப் புரியுது. நான் உன்னோட நகைகளையோ, அம்மாவோட நகைகளையோ அடகு வைக்கவோ, விக்கவோ இல்ல. என்னோட சேமிப்பிலேந்து கொஞ்சம் எடுத்து முதலீடு செய்யறேன். ஆரம்பத்தில முதலீடு இல்லாத சில ஏஜன்சி எல்லாம் எடுத்துப் பாத்தேன். அதுல எல்லாம் அதிகம் வருமானம் வரலை. நல்ல கம்பெனயில ஏஜன்சி எடுத்தாத்தான் பிசினஸ் நல்லா வரும், வருமானமும் நிறைய வரும். அதுக்குக் கொஞ்சம் முதலீடு செஞ்சுத்தான் ஆகணும். அதைத்தான் நான் செய்யறேன்" என்றான் வேலு.

பிறகு, தன் தாயைப் பார்த்து, "அம்மா! நான் ஜோசியத்தைத் தப்புன்னு சொல்லல. ஜோசியர் சொல்றது சரின்னு வச்சுக்கிட்டாக் கூட, நமக்கு நேரம் சரியில்லாதபோது நாம எல்லாவிதத்திலேயும் முயற்சி செஞ்சு இன்னும் கடுமையா உழைக்கணும்னுதானேஅர்த்தம்? ஜோசியருக்கு ஏழரை நாட்டு சனி வந்தா, அப்ப தனக்கு வருமானம் வராதுன்னு நினைச்சு ஏழரை வருஷம் அவர் ஜோசியம் சொல்றதையே நிறுத்திடுவாரா என்ன?" என்றான் வேலு.

பிறகு ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்த பிறகு, "ஒரு ஆறு மாசத்துக்கு நீங்க ரெண்டு பேரும் என்னை எந்தக் கேள்வியும் கேக்காம என் இஷ்டத்துக்குச் செயல்பட விடுங்க. குடும்பத்துக்குத் தேவையானதை நான் செஞ்சுடறேன். ஒருவேளை என் முயற்சி வெற்றி அடையலேன்னா மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு நாம மூணு பேரும் சேர்ந்து முடிவு செய்யலாம்" என்றான் வேலு.

ழெட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் செல்வி வேலுவிடம் கேட்டாள்.

"கொஞ்ச நாளா கவனிச்சுக்கிட்டு வரேன். நீங்க ரொம்ப சோர்வா இருக்கீங்க. லேட்டா வீட்டுக்கு வரீங்க. சரியா சாப்பிடறதில்ல, தூங்கறதில்ல. ஏதாவது யோசிச்சுக்கிட்டே இருக்கீங்க.  ரெண்டு நாள் முன்னாடி ஒரு லட்ச ரூபாய் ஃபிக்ஸட் டெபாசிட்டை கேன்ஸல் பண்ணி எடுத்திருக்கீங்க. எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு. என்ன நடக்குது? சொல்லுங்க. பெரிய அளவில நஷ்டம் வந்துடுச்சா? நீங்க சொன்ன ஆறு மாசம் தாண்டிடுச்சே?" 

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த வேலு, பிறகு "ரெண்டு மூணு நாள் கழிச்சு சொல்லலாம்னு பாத்தேன். நீ கேட்டதால இப்பவே சொல்றேன். முதல்ல ரெண்டு மூணு மாசம் கஷ்டமா இருந்தாலும் அதுக்கப்புறம் பிசினஸ் நல்லாப் போக ஆரம்பிச்சுடுச்சு. முத ல்ல கமிஷன் அடிப்படையிலதான் செயல்பட்டுக்கிட்டு வந்தேன். நான் நல்லா செயல்படறதால, இப்ப கம்பெனியில டெபாசிட் எதுவும் இல்லாம ஒரு மாசம் கடன்ல எனக்கு சரக்கு கொடுக்கறேன்னு சொல்றாங்க. சரக்குகளை வித்தப்பறம் பணம் கொடுத்தா போதும். லாபமும் அதிகம் வரும். ஆனா சரக்குகளை வைக்க கோடவுன் வேணுமே! அதுக்குத்தான் இடம் தேடிக்கிட்டிருந்தேன். வாடகை, அட்வான்ஸ் எல்லாமே அதிகமாக் கேக்கறாங்க. அதனாலதான் அலைஞ்சு திரிஞ்சு குறைஞ்ச வாடகையில ஒரு இடத்தைப் பிடிச்சேன். அட்வான்ஸ் ரெண்டு லட்சம் ரூபாய். இத்தனை நாளா கிடைச்ச லாபத்தில குடும்பச் செலவுக்குக் கொடுத்தது போக ஒரு லட்சம் ரூபா சேர்த்து வச்சிருந்தேன். மீதி ஒரு லட்ச ரூபாயுக்காகத்தான் ஃபிக்சட் டெபாசிட்டை கேன்ஸல் பண்ணி எடுத்தேன். இன்னும் ரெண்டு நாள்ள கோடவுனுக்கு சரக்கு வந்துடும். அதுக்கப்பறம் வியாபாரம் நல்லாப் போகும். வருமானமும் சீரா வரும்!" என்றான் வேலு பெருமிதத்துடன்.

"நம்பவே முடியலியே! நான் ஏதோ மோசமா நடந்திருக்கும்னு நினைச்சு பயந்துக்ககிட்டிருந்தப்ப, இப்படி எதிர்பாராத சந்தோஷமான சேதியைச் சொல்றீங்க!" என்றாள் செல்வி ஆனந்தத்துடன். 

"உங்க அம்மாகிட்ட இதைச் சொல்லணும். ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டிருந்தாங்க" என்றாள் தொடர்ந்து.

"ஆமாம். அவங்க ஜோசியர்கிட்ட போய்க் கேப்பாங்க. அவரு என் ஜாதகத்தைப் பாத்துட்டு சனிக்கு ஏதோ அவசர வேலை வந்ததால ஏழரை வருஷம் இருக்கறதுக்கு பதிலா ரெண்டரை வருஷத்திலேயே கிளம்பிப் போயிட்டாருன்னு சொன்னாலும் சொல்லுவாரு!" என்று சொல்லிச் சிரித்தான் வேலு.

அரசியல் இயல்
அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

குறள் 620:
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

பொருள்:
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவரால், விதியைக் கூட வெற்றி கொள்ள முடியும்.

      அறத்துப்பால்                           (                                  காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...