Monday, February 28, 2022

550. ராஜகுருவின் கோபம்!

"அரசே! கொலைக் குற்றம் என்பது தண்டனைக்குரிய குற்றம் என்னும்போது அரசரே அந்தக் குற்றத்தைச் செய்யலாமா?" என்றார் ராஜகுரு பரிமள அரங்கர்.

"தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் குருவே?" என்றார் அரசர் சிம்மேந்திரர்.

"கொலைக் குற்றம் புரிந்த ஒருவனுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறாயே, அதைச் சொல்கிறேன்!"

"குருவே! தாங்கள் அறியாததல்ல. சமுதாயத்துக்கே கேடாக இருக்கும் ஒரு கொடிய கொலைகாரனுக்கு மரண தண்டனை விதிப்பது தவறா?  மரண தண்டனை அளிப்பது என்பது காலம் காலமாக நடந்து வருவதுதானே?"

"மனிதன் நாகரிகத்தில் முன்னேறும்போது காலம் காலமாகச் செய்யப்பட்டு வந்த கொடிய செயல்களைக் கைவிடுவதுதானே பரிணாம வளர்ச்சியின் அடையாளம்?" 

"குருவே! குற்றத்துக்கு ஏற்ற தண்டனை என்பதுதானே தண்டனை முறையின் அடிப்படை?"

"குற்றத்துக்கு ஏற்ற தண்டனை! கொலை செய்தவனுக்குக் கொலை தண்டனை! அப்படியானால், ஒருவன் திருட்டுக் குற்றம் செய்தால் அரண்மனை ஊழியர்கள் அந்தத் திருடன் வீட்டில் போய்த் திருடி விட்டு வர வேண்டும் என்று தண்டனை விதிப்பாயா?" 

அரசருக்கு சுருக்கென்று கோபம் வந்தது. ஆயினும் குருவைக் கடிந்து பேசக் கூடாது என்பதால், கோபத்தை அடக்கிக் கொண்டு, "அப்படி இல்லை குருவே! எல்லக் கொலைகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை. உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் கொலைகளுக்கு சிறை தண்டனைதானே வழங்குகிறோம்? கொடுமையான கொலைகளைச் செய்தவர்களுக்குத்தானே மரண தண்டனை வழங்குகிறோம்?" என்றார் அரசர் பொறுமையுடன்.

"மரண தண்டனை விதிக்கும் அரசனுக்கு குருவாக இருக்க நான் விரும்பவில்லை. நான் இனி இந்த அரண்மனைக்குள் வர மாட்டேன். என்றாவது ஒருநாள் நீ மரண தண்டனையையே அறவே ஒழித்து விடுவதாக முடிவு செய்தால், எனக்குச் சொல்லி அனுப்பு. அப்போது வந்து உன்னை வாழ்த்தி விட்டுப் போகிறேன்!" என்றபடியே அவையை விட்டு வெளியேறினார் பரிமள அரங்கர்.

சில வாரங்களுக்குப் பிறகு பரிமள அரங்கரின் வீட்டுக்குச் சென்றார் அரசர்.

அரசரை வரவேற்று உபசரித்த பரிமள அரங்கர் சற்று நேரம் பொதுவாக உரையாடியபின், "மன்னா! என்னை அவைக்கு வரச் சொல்லி அழைப்பதற்காக நீ வந்திருந்தால், என்னை மன்னித்து விடு. என் முடிவை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை!" என்றார் உறுதியுடன்.

"இல்லை குருவே! தங்கள் மனதை மாற்ற நான் முயலப் போவதில்லை. மரியாதை நிமித்தமே தங்களைச் சந்திக்க வந்தேன். விடைபெறுகிறேன்!" என்று சொல்லி விடை பெற்றார் அரசர் சிம்மேந்திரர்.

 வீட்டுக்கு வெளியில் வரும்போது, வீட்டின் முன்பக்கத்திலிருந்த தோட்டத்தைப் பார்த்தபடியே வந்த அரசர், சட்டென்று நின்று, "குருவே! இதென்ன, உங்கள் தோட்டக்காரர் செடிகளை வெட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்?" என்றார்.

"அவர் வெட்டிப் போடுவது செடிகளை அல்ல மன்னா, களைகளை!" என்றார் குரு.

"களைகளை அவர் ஏன் வெட்டுகிறார்?  நமக்கு வேண்டிய செடிகளை மட்டும் பராமரித்துக் கொண்டு களைகளை அப்படியே விட்டு விடலாமே!"

"களைகளை வெட்டாமல் அப்படியே விட்டு வைத்தால் அவை செடிகளையே அழித்து விடாதா?" என்று பரிமள அரங்கர், தான் ஏதோ தவறாகச் சொல்லி விட்டது போல் சட்டென்று பேச்சை நிறுத்தினார்.

சிம்மேந்திரர் ஒரு மெல்லிய புன்சிரிப்புடன் பரிமள அரங்கரின் வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 550:
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

பொருள்:
கொடியவர் சிலரைக் கொலை தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

Sunday, February 27, 2022

549. இரண்டு விடுதிகள்

கிரேக்க நாட்டிலிருந்து வந்திருந்த அந்த யாத்திரிகர் சமர நாடு முழுவதிலும் பல இடங்களுக்கும் பயணம் செய்தபோது அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் தங்கள் மன்னரைப் பற்றிச் சொன்ன ஒரே செய்தி, "இப்படி ஒரு அரசரைப் பார்க்கவே முடியாது!" என்பதுதான். 

சமர நாட்டு அரசர் மகரபூபதி தன் நாட்டு மக்களை ஒரு தாய் தன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது போல் பார்த்துக் கொள்கிறார் என்பதுதான் அந்த யாத்திரிகருக்குக் கிடைத்த செய்திகளின் சுருக்கம்.

தலைநகருக்குச் சென்றபோது அரசரைப் பார்க்க விரும்பினார் யாத்திரிகர். ஆனால் அரசர் அரண்மனையில் இல்லை. நாட்டின் எல்லையில் தொல்லை கொடுத்து வரும் கொள்ளையர்களை அடக்க ஒரு சிறிய படையுடன் அந்தப் பகுதிக்குச் சென்றிருக்கிறார் என்று கூறினார்கள்!

"கொள்ளையர்களைப் பிடிக்க மன்னரே நேரில் செல்ல வேண்டுமா?" என்றார் யாத்திரிகர் வியப்புடன்.

"தன் குடிமக்களின் பாதுகாப்பு மன்னருக்கு மிகவும் முக்கியம். கடந்த சில மாதங்களாகவே கொள்ளையர்கள் எல்லைப்புறத்தில் தொல்லை கொடுத்து வருகிறார்கள். நம் வீரர்கள் அவர்களை எல்லை தாண்டி விரட்டி அடித்தாலும் மீண்டும் எப்படியோ நம் நாட்டுக்குள் ஊடுருவி விடுகிறார்கள். நம் அண்டை நாட்டு அரசர்தான் கொள்ளையர்களைத் தூண்டி விடுகிறார். அதனால் அவருக்கு ஒரு பாடம் புகட்டத்தான் மன்னரே நேரில் படையுடன் சென்றிருக்கிறார். மன்னரே படையுடன் வருகிறார் என்று தெரிந்ததும் கொள்ளையர்கள் ஓடி விட்டார்கள். அண்டை நாட்டு அரசர் மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுட்டால் நம் அரசர் படையுடன் அவர்கள் நாட்டுக்குள்ளேயே நுழைந்து தாக்கத் தயங்க மாட்டார் என்பதை அவர் உணர்ந்திருப்பார். இனி இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட மாட்டார் என்று நினைக்கிறோம். ஆயினும் எல்லைப்புறத்தில் வாழும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக மன்னர் சிறிது காலம் எல்லைப்புறத்திலேயே தங்கி விட்டுப் பிறகுதான் தலைநகருக்குத் திரும்புவார்" என்றார் ஒரு அரண்மனை அதிகாரி.

மன்னரைப் பார்க்க முடியாததால் தலைநகரைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார் யாத்திரிகர். அப்படி அவர் சென்ற ஒரு இடம்தான் முதுமக்கள் விடுதி.

கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத முதியவர்கள் அதில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கு வசதியாகத் தங்கவும், அவர்களுக்கு நல்ல உணவு வழங்கவும், மருத்துவ வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

"இது போல் நாடு முழுவதும் பல விடுதிகள் இருக்கின்றன" என்றார் யாத்திரிகருக்கு வழிகாட்டியாக அனுப்பி வைக்கப்பட்ட அரண்மனை ஊழியர்.

"ஆமாம், இந்த விடுதி இரண்டு கட்டிடங்களைக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டிடத்துக்குள்தான் நீங்கள் என்னை அழைத்துச் சென்றீர்கள். இன்னொரு கட்டிடம் என்ன?" என்றார் யாத்திரிகர்.

அரண்மனை ஊழியர் சற்றுத் தயங்கி விட்டு, "அதுவும் ஒரு விடுதிதான். குற்றங்களுக்காக தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பத்தினர் அங்கே தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்" என்றார்.

"ஏன் அவர்களுக்குத் தனி விடுதி? அது வசதிக்குறைவாக இருக்குமா, அல்லது சிறை போல் இருக்குமா?" என்றார் யாத்திரிகர் சற்றே ஏளனத்துடன்.

"அப்படி நினைக்காதீர்கள். ஒரு குடும்பத் தலைவர் குற்றம் செய்து விட்டுச் சிறைக்குச் செல்வதால், அவரை நம்பி இருந்த, எந்தக் குற்றமும் செய்யாத அவர் குடும்பத்தினர் துன்பப்படக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தின் காரணமாகத்தான் அவர்களை விடுதிகளில் தங்க வைத்துக் காப்பாற்றுகிறார் எங்கள் அரசர். அவர்கள் தங்கி இருக்கும் விடுதியும் மற்ற முதியவர்கள் தங்கி இருக்கும் விடுதியைப் போல் எல்லா வசதிகளும் கொண்டதுதான்" என்றார் அந்த ஊழியர் சற்றுக் கோபத்துடன்.

"அப்படியானால் அவர்களுக்கு ஏன் தனி விடுதி? மற்ற முதியோர் தங்கும் விடுதியிலேயே அவர்களையும் தங்க வைத்திருக்கலாமே!" 

"இரண்டு காரணங்கள். குற்றம் செய்த நபரின் குடும்பத்தினர் என்பதால் தங்களைப் பற்றி மற்றவர்கள் குறைவாக நினைப்பார்களோ என்ற அவமான உணர்ச்சி அவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பது ஒன்று. இரண்டாவது காரணம் சிறைக்குச் சென்றவர்களின் குடும்பத்தில் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் இருப்பார்களே! அதனால் அவர்கள் குடும்பம் குடும்பமாகத் தனியே தங்க வைக்கப்படுவதுதானே சரியாக இருக்கும்? அத்துடன் சிறைக்குச் சென்றாவர்களின் குழந்தைகளுக்கான கல்வி வசதிகளும் அங்கே இருக்கின்றன!"

"குற்றம் செய்தவரின் குடும்பத்தினரிடம் கூட அக்கறை காட்டிச் செயல்படும் உங்கள் மன்னரின் கருணை என்னை வியக்க வைக்கிறது. இவ்வளவு கருணை உள்ள உங்கள் அரசர் குற்றம் செய்தவர்களைச் சிறையில் அடைக்காமல் அவர்களை மன்னித்து விட்டு விடலாமே!" என்றார் யாத்திரிகர்.

"அது எப்படி ஐயா? குற்றம் செய்தவர்களை மன்னித்து விட்டு விட்டால், அது மற்றவர்களுக்கும் குற்றம் செய்வதற்கான துணிவை அளிக்கும் அல்லவா? குற்றம் செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் எங்கள் அரசர். குற்றம் செய்பவர்களை தண்டிப்பதில் அவர் காட்டும் இந்த உறுதியையும் அவருடைய இன்னொரு சிறப்பாகவே மக்கள் பார்க்கிறார்கள்!" என்றார் அரண்மனை ஊழியர் பெருமிதத்துடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 549:
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

பொருள்:
குடிகளைப் பிறர் துன்புறுத்தாமல் காத்து, தானும் அவர்களைத் துன்புறுத்தாமல் காத்து, தகுந்த தண்டனைகள் மூலம் அவர்களுடைய குற்றங்களை ஒழித்தல், அரசனுடைய தொழில், பழி அன்று.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

Thursday, February 17, 2022

548. எதிர்க்க யாருமில்லை!

பத்திரிகையாளர்கள் கதிர், சுந்தர் இருவரும் தாங்கள் வழக்கமாகச் சந்தித்து உரையாடும் அந்தச் சிறிய ஓட்டலில் அவர்கள் எப்போதும் அமர்ந்து உரையாடும் அந்த ஓரமான இடத்தில் அமர்ந்து உரையாடி கொண்டிருந்தனர். 

பொது இடத்தில், தனிமையாக, மற்றவர்கள் காதில் விழாமலும், யாரும் ஒட்டுக் கேட்க முடியாமலும் பேசுவதற்கு அதை விடச் சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது. 

அவர்கள் காரசாரமாக அரசியலை விவாதிக்கும்போதும், அவர்கள் சிரித்துக் கொண்டே பேசுவதை சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கும் எவருக்கும் இரண்டு நண்பர்கள் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்பது போல்தான் தோன்றும்!

"தேவராஜ் அதிபராத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாலு வருஷம் ஆச்சு. இந்த நாலு வருஷத்தில நாடு நாசமாப் போனதுதான் மிச்சம். பொருளாதாரச் சீரழிவு, பல லட்சம் பேர் வேலை இழப்பு, ரெண்டு மூணு பெரிய தொழில் அதிபர்களோட ஆதிக்கம், ஆயிரக் கணக்கான சிறிய, நடுத்தரத் தொழில்கள் முடக்கம், அதிகரிக்கும் ஏழ்மை, அதனால் அதிகரிக்கும் தற்கொலைகள், எல்லையில் நம் அண்டை நாடுகள் தைரியமா ஊடுருவல் செய்யறது இதெல்லாம்தான் நாம் கண்ட லாபம்!" என்றான் கதிர்.

"உன்னை மாதிரி சில பேர் இப்படிச் சொல்லிக்கிட்டுத் திரியறீங்களே தவிர, தேவராஜுக்கு மக்கள் ஆதரவு இருக்கே! அடுத்த வருஷம் நடக்கப் போற தேர்தல்ல அவரை எதிர்த்து நிற்க ஆளே இல்லையே!" என்றான் சுந்தர்.

"அது என்னவோ உண்மைதான்! போன தேர்தல்ல அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரகுவீர் இப்ப சோர்ந்து போய் உக்காந்திருக்காரு. அப்பப்ப காட்டமா ஏதாவது பேசறாரு. அப்புறம் காணாம போயிடறாரு. ஆனா தேவராஜுக்கு மக்கள் ஆதரவு இருக்கறதா சொல்றதை நான் ஏத்துக்க மாட்டேன். போன தடவையே மக்களைப் பிளவு படுத்தித்தான் அவரு வெற்றி பெற்றார்ங்கறது எல்லாருக்கும் தெரியும். அவர் ஆட்சி சாதாரண மக்களுக்கு எதிரானதுங்கறதும் எல்லாருக்கும் தெரியும்!"

"அவரு நல்லது செஞ்சா கூட உன்னை மாதிரி ஆளுங்க தப்பு சொல்றீங்க. இப்ப கூட பாரு! குறைஞ்ச பட்ச ஊதிய சட்டத்தை ரத்து செஞ்சிருக்காரு! குறைஞ்ச பட்ச ஊதியம்னு ஒண்ணு இருக்கறதால தொழிலாளர்களுக்கு யாரும் அதுக்கு மேல ஊதியம் கொடுக்க மாட்டேங்கறாங்க. இப்ப அதை எடுத்துட்டதால, தொழிலாளர்களுக்கு ஊதியம் அதிகமாக் கிடைக்கும். இதைப் புரிஞ்சுக்காம சில தொழிலாளர்கள் தேசவிரோத சக்திகளோடயும், அந்நிய நாட்டு சக்திகளோடயும் சேர்ந்து இந்தச் சட்டத்துக்கு எதிரா போராட்டம் பண்றாங்க!"

கதிர் பெரிதாகச் சிரித்தான்.

"ஏண்டா, முட்டாளா நீ? குறைந்தபட்ச ஊதியச் சட்டம்னு ஒண்ணு இருக்கறதாலதான் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாவது கிடைக்குது. அதையும் எடுத்துட்டா என்ன ஆகும்? ஊதியம் அதிகமாக் கிடைக்கும்னு உன்னை மாதிரி அதிபரோட ஆதரவாளர்கள் எப்படிச் சொல்றீங்க? தொழிலாளர்களோட ஊதியம் அதிகரிக்கணும்னா குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்கணும்! அதை எடுக்கறது எப்படி நன்மை பயக்கும்?

"அதிபர் தொழிலாளர்களை சந்திச்சுப் பேச மாட்டேங்கறாரு. அதிகாரிகளை விட்டு தினமும் போரடற தொழிலாளர்களை தேச விரோதிகள், அந்நிய நாட்டிலேந்து பணம் வாங்கிக்கிட்டுப் போறாடறவங்கன்னெல்லாம் அவதூறாப் பேச வைக்கறாரு. 

"அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்காரு. தன் குடும்பத்தோட உலகம் முழுக்க சுத்திக்கிட்டு வராரு. தனக்குன்னு அரசாங்க செலவில விமானம் வாங்கி இருக்காரு. காரைப் பயன்படுத்தற மாதிரி அவர் குடும்ப உறுப்பினர்கள் அதை தினமும் பயன்படுத்தறாங்க. இப்ப ஒரு சொகுசுக் கப்பல் வேற வாங்கப் போறாராம்! இப்ப இருக்கற அதிபர் மாளிகை சின்னதா இருக்குன்னு ஏகப்பட்ட செலவில புதுசா ஒரு மாளிகை கட்டறாரு. இப்படியே போனா என்ன ஆறது?" 

"எப்படி இருந்தா என்ன? மறுபடி அவருதான் ஜெயிக்கப் போறாரு. உன்னை மாதிரி ஆளுங்க இப்படியே பொருமிக்கிட்டிருக்க வேண்டியதுதான்!" என்றான் சுந்தர் பெருமிதத்துடன்.

"பார்க்கலாம். எனக்கென்னவோ நம்பிக்கை இருக்கு. இது மாதிரி ஆடம்பரமா, மக்களுக்கு எதிரா கொடுங்கோல் ஆட்சி நடத்தின அரசர்களே இருந்த இடம் தெரியாம போயிருக்காங்க. ஜனநாயக அமைப்பில இது நடக்காதா என்ன?" என்றான் கதிர்.

"நடக்கும், நடக்கும்! முதல்ல தேவராஜை எதிர்க்க ஆளே இல்ல. ரகுவீர் தூங்கிக் கிட்டிருக்காரு. இப்பதான் கொஞ்ச நாளா ஏதோ ஒரு மூலையிலேந்து டார்வின்னு ஒரு சின்னப்பையன் அதிபருக்கு எதிராப் பேசிக்கிட்டிருக்கான். அவன்தான் வந்து தேவராஜைத் தோக்கடிக்கப் போறான்!" என்றான் சுந்தர் கேலியாக.

"அப்படிக் கூட நடக்கலாம்! கோலியாத்னு ஒரு கொடுங்கோலனை டேவிட்னு ஒரு சின்னப்பையன் வீழ்த்தினதா ஒரு கதை இருக்கே! அது இங்கேயும் நடக்கலாம். டார்வின் என்கிற பேரே எனக்கு ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததாத் தெரியுது. பரிணாம வளர்ச்சி, மாறுதல் இதையெல்லாம் குறிக்கிற பெயராச்சே இது!" என்றான் கதிர்.

டுத்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பாராத விதத்தில் தேவராஜ் டார்வினிடம் தோல்வி அடைந்தார்!

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 548:
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

பொருள்:
எளிமையானவானாக இல்லாமலும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் கோலோச்சும் அரசன் தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடுவான்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

Tuesday, February 15, 2022

547. காப்பாற்றியது யார்?

"வாருங்கள் வல்லபராயரே!" என்றார் அரசர் சம்புதேவர்.

அரசர் தன்னை அழைத்த காரணத்தை அரசன் சொல்வதை எதிர்பார்த்து மௌனமாக இருந்தார் வேளைக்காரப் படைத் தலைவர் வல்லபராயர்.

"நான் மாறுவேடத்தில் நகர்வலம் போகும்போது உங்கள் படைவீரர்கள் சிலரும் மாறுவேடமிட்டு மற்றவர்கள் அறியாதவாறு என்னைப் பின்தொடரும் வழக்கத்தை இன்று முதல் நிறுத்த விரும்புகிறேன்" என்றார் சம்புதேவர்.

"மன்னிக்க வேண்டும் அரசே! தங்கள் பாதுகாப்புக்காக சில வீரர்கள் தங்கள் பின்னால் வருவது கட்டாயம்!"

"இன்று முதல் யாரும் வரக் கூடாது என்பது கட்டாயம்!" 

தயக்கத்துடன் கிளம்பிய வல்லபராயரை அழைத்த அரசர், "ஒரு விஷயம் வல்லபரே! எனக்குத் தெரியாமல் வீரர் எவரையும் ரகசியமாக என்னைப் பின்தொடரச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் அதை ஒரு குற்றமாகக் கருதுவேன்!" என்றார் சம்புதேவர்.

ம்புதேவர் பாதுகாப்பு இல்லாமல் நகர்வலம் செல்லத் தொடங்கிச் சில நாட்கள் ஆகி விட்டன. விஷயம் அறிந்து அமைச்சர் அரசரை வற்புறுத்தியபோதும் அவர் கேட்கவில்லை. 

தான் சொன்னதையும் மீறித் தனக்குப் பாதுகாப்பு அளிக்க அமைச்சரோ, வேளைக்காரப் படைத்தலைவரோ முயற்சி செய்யக் கூடாது என்பதற்காக அரசர் தான் அரண்மனையை விட்டு வெளியேறுவது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்.

ன்று சம்புவராயர் நகர்வலம் சென்று கொண்டிருந்தபோது, அவர் பின்னால் ஏதோ சலசலப்பு ஏற்பட்டது. சம்புவராயர் திரும்பிப் பார்த்தபோது கையில் கத்தியுடன் இருந்த ஒருவனை அவர் பின்னாலிருந்த ஒருவர் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.

சம்புதேவரைப் பார்த்ததும் அந்த நபர், "இவன் உன்னைக் கொல்லப் பார்த்தான். நான் பிடிச்சுட்டேன். போய் ரெண்டு மூணு பேரைக் கூட்டி வா. இவனைக் காவலர்கள் கிட்ட ஒப்படைக்கணும். சீக்கிரம்!" என்றார்.

என்ன செய்வதென்று தெரியாமல் சம்புதேவர் குழப்பத்துடன் நின்றபோது, அந்த நபர், "யாராவது வாங்களேன்! இங்கே ஒரு கொலைகாரன் சிக்கி இருக்கான்" என்று கூவ, உடனே அக்கம்பக்கத்திலிருந்து சிலர் ஓடி வந்தனர். அனைவருமாகச் சேர்ந்து கத்தியுடன் இருந்தவனை அருகில் இருந்த ஒரு வீட்டு வாசலில் இருந்த தூணில் கட்டினர். ஒருவர் காவலர்களை அழைத்து வருவதாகச் சொல்லி விட்டுப் போனார்.

"எப்படி நீங்க இவனைப் பிடிச்சீங்க?" என்றார் சம்புதேவர் அந்த நபரைப் பார்த்து.

"இந்த ஆளு ரெண்டு மூணு நாளாவே இங்கே சுத்திக்கிட்டிருக்கான். ஆளைப் பாத்தா வேற நாட்டைச் சேர்ந்தவன் மாதிரி தெரிஞ்சுது. நான் என் வீட்டுத் திண்ணையில படுத்துத் தூங்கிக்கிட்டு இருந்தேன். தெருவில யாரோ நடக்கற சத்தம் கேட்டு முழிச்சுக்கிட்டுப் பார்த்தேன். அது நீதான். சரி, தெருவில யாரோ நடந்து போறங்கன்னு நினைச்சு மறுபடி தூங்கலாம்னு கண்ணை மூடினேன்.

"மறுபடி ஏதோ சத்தம் கேட்டது. பார்த்தா இந்த ஆளு திருட்டுத்தனமா உனக்குப் பின்னால வந்துக்கிட்டிருந்தான்! சந்தேகப்பட்டு நான் தெருவில இறங்கி அவன் பின்னால சத்தம் இல்லாம போனேன். அவன் கையில இருந்த கத்தியோட பளபளப்பு எனக்குத் தெரிஞ்சது. அப்புறம் வேகமா அவன்கிட்ட போனேன். அப்ப அவனும் உன்கிட்ட வந்துட்டான். உன்னைக் குத்தப் போறான்னு நினைச்சு ஓடிப் போய் அவனைப்  புடிச்சுட்டேன். அப்புறம்தான் அவன் நான் ஏற்கெனவே சந்தேகப்பட்ட ஆள்னு தெரிஞ்சுது. அவன் ஏன் உன்னைக் குத்த வந்தான்? உனக்கும் அவனுக்கும் விரோதமா?" என்றார் அந்த நபர்.

"எனக்கு இந்த நாட்டில எதிரிகள் யாரும் இல்ல. ஆனா நீங்க அவனை வெளிநாட்டு ஆசாமியா இருக்கலாம்னு சொல்றீங்களே! வெளிநாட்டில எனக்கு எதிரிகள் இருக்கலாம்!" என்றார் சம்புதேவர் சிரித்தபடி.

"வெளிநாட்டில எதிரிகள் இருக்கற அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளா நீ? அது சரி, உன்னை ஒத்தன் கொல்லப் பாத்திருக்கான். நீ சிரிக்கற! நீ உயிர் பிழைச்சது பெரிய அதிசயம். உன்னைக் காப்பாத்தினது யார் தெரியுமா?"

"நீங்கதான்!"

"நான் இல்லப்பா! இந்த நாட்டை நம்ம அரசர் செங்கோல் வழுவாம ஆண்டுக்கிட்டிருக்காரே, அந்தச் செங்கோல்தான் உன்னைக் காப்பாற்றி இருக்கு!" என்றார், தான் காப்பாற்றியது அரசரை என்று அறியாத அந்த நபர். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 547:
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

பொருள்:
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...