Saturday, April 13, 2024

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன்.

"யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம் கட்டலேன்னா நகைகள் ஏலத்துக்குப் போயிடுமே!" என்றாள் அவன் மனைவி மல்லிகா கவலையுடன்.

"நம்ம சொந்தக்காரங்க யாரும் நமக்கு உதவற நிலையில இல்ல. என் நண்பர்களும் அப்படித்தான்!"

சற்று நேரம் மௌனமாக இருந்த மல்லிகா, "உங்க மூர்த்தி சித்தப்பாகிட்ட கேட்டுப் பாக்கலாமா?" என்றாள் தயக்கத்துடன்.

"அவரு என்னோட சொந்த சித்தப்பா கூட இல்ல. ஒண்ணு விட்ட சித்தப்பாதான். அவர்கிட்ட எப்படிப் போக் கேக்கறது?"

"ஒண்ணுவிட்ட சித்தப்பாவா இருந்தா என்ன? உங்க அப்பாகிட்ட நெருக்கமா இருந்தவர்தானே?"

"அப்பா போயி மூணு வருஷம் ஆச்சு. அதுக்கப்பறம் மூர்த்தி சித்தபாவோட நமக்குத் தொடர்பே இல்லையே! போன வருஷம் ஒரு கல்யாணத்தில பாத்தப்ப எப்படி இருக்கேன்னு விசாரிச்சாரு. அதோட சரி!"

"இருந்தா என்ன? இப்ப நமக்கு உதவறதுக்கு வேற யாரும் இல்லேங்கறப்ப அவர்கிட்ட உதவி கேக்கறதில தப்பு இல்லையே!"

சற்று நேரம் யோசித்த பரந்தாமன், "சரி. நீ சொல்றதுக்காக அவரைப் போய்ப் பார்த்துட்டு வரேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.

வீட்டுக்குத் திரும்பிய பரந்தாமனின் முகத்தைப் பார்த்தே அவன் முயற்சி பயனளிக்கவில்லை என்று புரிந்து கொண்ட மல்லிகா அவனிடம் எதுவும் கேட்காமல் மௌனமாக இருந்தாள்.

உள்ளே வந்து அமர்ந்து கொண்ட பரந்தாமன், "அவர்கிட்ட உதவி கேக்கக் கூடாதுன்னு நான் முதல்லேயே நினைச்சேன். நீ சொன்னதைக் கேட்டு அவரைப் போய்ப் பார்த்துட்டு வந்தேன். கையை விரிச்சுட்டாரு!" என்றான் ஏமாற்றத்துடன்.

"காரணம் ஏதாவது சொன்னாரா?"

"காரணம் என்ன காரணம்? இல்லேன்னு சொல்றவங்க 'உனக்கு உதவ எனக்கு இஷ்டமில்லை'ன்னா சொல்லுவாங்க? அவர்கிட்ட பணம் இல்லையாம். "

மல்லிகா ஏதும் கூறாமல் மௌனமாக இருந்தாள்.

" 'நகையை மீட்டு உங்ககிட்ட கொடுத்துடறேன். பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டு நகையை வாங்கிக்கறேன்'னு கூட சொன்னேன். 'என்னப்பா இப்படி சொல்ற? எங்கிட்ட பணம் இருந்தா நான் கொடுத்திருக்க மாட்டேனா?'ன்னு வருத்தப்பட்டுப் பேசற மாதிரி பேசினாரு."

"ஒருவேளை, உண்மையாகவே அவர்கிட்ட பணம் இல்லையோ, என்னவோ!" என்றாள் மல்லிகா.

"என்ன பேசற நீ? ஒரு லட்சம் ருபாயெல்லாம் அவருக்கு ஒரு தொகையே இல்லை. அவருக்குக் கொடுக்க இஷ்டம் இல்லை. அவ்வளவுதான்!"

"அப்படி இல்லேங்க. நம்மையே எடுத்துக்கங்க. நாம எவ்வளவோ வசதியா இருந்தவங்கதான். உங்களுக்கு திடீர்னு தொழில்ல நெருக்கடி ஏற்பட்டு நமக்குப் பணத் தட்டுப்பாடு வந்துடுச்சு. நம்ம சொந்தக்காரங்க யாராவது இப்ப உங்ககிட்ட வந்து பத்தாயிரம் ரூபா கடன் கேட்டா உங்களால கொடுக்க முடியாது இல்ல? அது மாதிரி அவருக்கும் இப்ப ஏதாவது கஷ்டமான நிலைமை இருக்கலாம்.  அதனால அவரால உண்மையாகவே உதவ முடியாம இருக்கலாம் இல்ல?" என்றாள் மல்லிகா.

வியப்புடன் மல்லிகாவைப் பார்த்த பரந்தாமன், "நீ சொல்றது உண்மையா இருக்கலாம். நீ இப்படி சொன்னப்பறம்தான் நான் கவனிச்ச ஒரு விஷயம் புரியுது. அவரு எப்பவும் ரொம்ப உற்சாகமா இருப்பாரு. நான் போனப்ப அவர்கிட்ட அந்த உற்சாகம் இல்லை. அதைப்பத்தி அப்ப நான் யோசிக்கல. பாவம் அவருக்கும் ஏதோ பணக் கஷ்டம் போல இருக்கு!" என்றான் பரந்தாமன்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1060:
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.

பொருள்: 
இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே!
குறள் 1061 (விரைவில்)
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Sunday, April 7, 2024

1059. உதவி கிடைத்தது!

"நம்ம பையனை காலேஜில சேக்கணுமே, என்ன செய்யப் போறீங்க?" என்றாள் நிர்மலா.

"அதான் நல்ல மார்க் வாங்கி இருக்கானே, நல்ல காலேஜ் எதிலேயாவது அவனுக்கு சீட் கிடைச்சுடும்" என்றான் பார்த்திபன்.

"நான் சீட் கிடைக்கறதைப் பத்திக் கேக்கல. அட்மிஷன் கிடைச்சா ஃபீஸ் கட்டணுமே, அதுக்கு என்ன செய்யப் போறீங்க?"

"அதைப் பத்தித்தான் விசாரிச்சுக்கிட்டிருக்கேன்!"

"விசாரிக்கிறீங்களா? என்ன விசாரிக்கறீங்க? "

"கொஞ்ச நாள் வெயிட் பண்ணு.சொல்றேன்!" என்று பேச்சை முடித்தான் பார்த்திபன்.

"குமாரோட காலேஜ் ஃபீசைப் பத்திக் கவலைப்பட்டியே, ஏற்பாடு பண்ணிட்டேன்" என்றான் பார்த்திபன்.

"என்ன ஏற்பாடு? பாங்க்ல எஜுகேஷன் லோன் தரேன்னுட்டாங்களா என்ன?" என்றாள் நிர்மலா.

"நமக்கு அது மாதிரி லோன் எல்லாம் கிடைக்காது. நம்மை மாதிரி வசதி இல்லாதவங்களுக்கு உதவறதுக்குன்னே சில நல்ல மனுஷங்க டிரஸ்ட் வச்சு அதன் மூலமா உதவி செய்யறாங்க. அது மாதிரி டிரஸ்ட்களைப் பத்தித்தான் விசாரிச்சுக்கிட்டிருந்தேன். அப்படி ஒரு டிரஸ்டில அப்ளிகேஷன் போட்டேன். அவங்க உதவி செய்யறதா சொல்லிட்டாங்க. குமார் காலேஜ்ல படிக்கற நாலு வருஷமும் காலேஜ் ஃபீஸ், புத்தகச் செலவு எல்லாத்துக்கும் அவங்க பணம் கொடுத்துடுவாங்க!"

"ஆச்சரியமா இருக்கே! இப்படி எல்லாம் உதவி செய்யறவங்க உலகத்தில இருக்காங்களா என்ன?" என்றாள் நிர்மலா வியப்புடன்.

"இருக்காங்களே!"

"நல்ல வேளை! இப்படி சில பேர் இருக்கறதாலதான் நம்மளை மாதிரி இருக்கறவங்களால சமாளிக்க முடியுது!"

சற்று யோசித்த பார்த்திபன், "நீ சொல்றது சரிதான். ஆனா இதை இப்படியும் பாக்கலாம். நம்மளை மாதிரி உதவி கேக்கறவங்க இருக்கறதாலதான் இது மாதிரி பெரிய மனுஷங்களால நமக்கு உதவி செஞ்சு நல்ல பேர் வாங்க முடியுது! அவங்க நமக்குப் பணம் கொடுத்து உதவறாங்க. நாம அவங்களுக்குப் பெருமை வாங்கிக் கொடுக்கிறோம்! நாம இல்லேன்னா அவங்களுக்கு இந்தப் பெருமை எப்படிக் கிடைக்கும்?" என்றான் சிரித்துக் கொண்டே.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1059:
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.

பொருள்: 
இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1058. மகேஷின் விளக்கம்!

"இந்த மாசம் கிரடிட் கார்ட் பில் தொகை அதிகமா வந்திருக்கு போல இருக்கே!" என்றாள் கிரிஜா.

"பாக்கலாம். டியூ டேட்டுக்கு இன்னும் 10 நாள் இருக்குல்ல, கட்டிடலாம்!" என்றான் மகேஷ்.

"எங்கேந்து கட்டுவீங்க? சம்பளப் பணம் முழுக்க செலவழிஞ்சு போயிடுச்சு. மாசம் முடியற வரைக்கும் மீதிச் செலவுக்கே பணம் இல்ல. இதில கிரடிட் கார்ட் பில் கட்டப் பணம் எங்கேந்து வரும்?"

மகேஷ் மௌனமாக இருந்தான்.

"இந்தா. ஐயாயிரம் ரூபா. வீட்டுச் செலவுக்கு வச்சுக்க!" என்றான் மகேஷ்.

பணத்தை வாங்கிக் கொண்ட கிரிஜா, "கிரடிட் கார்ட் பில் கட்டணுமே!" என்றாள்.

"கட்டியாச்சு!"

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கிரிஜா, "யார்கிட்ட கடன் வாங்கினீங்க?" என்றாள்.

"யார்கிட்டேந்து வாங்கினா என்ன? கடன் கிடைச்சது. கிரடிட் கார்ட் பில் கட்டியாச்சு. வீட்டுச் செலவுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்துட்டேன். அவ்வளவுதான்!" 

"கேக்கறேனேன்னு தப்பா நினைக்காதீங்க. இப்படி அடிக்கடி யார்கிட்டேயாவது கடன் வாங்கிக்கிட்டே இருக்கீங்களே, உங்களுக்கு இது அவமானமாத் தெரியலையா?" என்றாள் கிரிஜா, சற்றுத் தயக்கத்துடன்.

"அவமானமோ, இல்லையோ, உலகத்தில சில பேர் மத்தவங்ககிட்ட உதவி கேக்கத்தான் வேண்டி இருக்கு. உதவி செய்யறவங்களுக்கும் அதனால திருப்தியும், சந்தோஷமும் கிடைக்குது. உதவி கேக்கறவங்க இல்லைன்னா, உதவி செய்யறவங்களுக்கு வாழ்க்கையில சுவாரசியம் இருக்காது. உதவி கேக்கறவங்களுக்கும்தான்! வாழ்க்கையில சுவாரசியம் இல்லேன்னா மனுஷங்க பொம்மைகள் மாதிரிதான் வாழ வேண்டி இருக்கும்!" என்றான் மகேஷ்.

"நல்லா இருக்கு, மத்தவங்ககிட்ட உதவி கேட்டுக்கிட்டே இருக்கறதை  நீங்க நியாயப்படுத்தறது!" என்றாள் கிரிஜா

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1058:
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.

பொருள்: 
இரப்பவர் இல்லையானால், இப்பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1057. இருவரின் அனுபவங்கள்

"நம்ம ரெண்டு பேரோட நிலைமையுமே இப்படி மோசமா ஆயிடுச்சே!" என்றார் கதிரேசன்.

"ஆமாம். ஒண்ணா சேர்ந்து தொழில் ஆரம்பிச்சோம். இப்ப ஒரே நேரத்தில பிரச்னையை சந்திச்சுக்கிட்டிருக்கும். இந்த ஒற்றுமையை நினைச்சா ஆச்சரியமாத்தான் இருக்கு. ஆமாம். உன்னோட திட்டம் என்ன?" என்றார் மணிவண்ணன்.

"இது மாதிரி நிலைமைகள்ள வங்கிகள்தான் உதவணும். ஆனா அவங்க ஏற்கெனவே கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு கெடுபிடிதான் பண்றாங்க. எனக்குத் தெரிஞ்ச ஒரு பெரிய மனுஷன் இருக்காரு. அவர்கிட்ட ஐம்பது லட்சம் ரூபாய் கேக்கப் போறேன். அவர் கொடுத்து உதவினா நிலைமையை சமாளிச்சு அஞ்சாறு மாசத்துக்குள்ள இயல்புநிலைக்கு வந்துடலாம்னு நினைக்கிறேன்."

"நீ சொல்றது சரிதான். இந்த மாதிரி சமயத்தில உதவி கிடைச்சா நம்மால மீண்டு வர முடியும். ஆனா உதவி கிடைக்கிறது கஷ்டம்தான். நான் உதவி கேக்கறதுக்குக் கூட ஒத்தர் இருக்காரு. ஆனா அவர்கிட்ட உதவி கேட்க எனக்குத் தயக்கமா இருக்கு" என்றார் மணிவண்ணன்.

"நம்ம நிலைமை மோசமா இருக்கறப்ப தயக்கத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டுக் கேக்க வேண்டியதுதான். இது நமக்கு வாழ்வா சாவாங்கற பிரச்னையாச்சே!" என்றார் கதிரேசன்.

ரு வாரம் கழித்து கதிரேசன் மணிவண்ணனுக்கு ஃபோன் செய்தார். "என்ன கதிரேசா, ஏதேனும் செய்தி உண்டா?" என்றார்.

"நான் சொன்னேனே, எனகுத் தெரிஞ்ச ஒத்தர் இருக்காருன்னு, அவர் எனக்கு உதவி செய்யறதா சொல்லிட்டாரு. இன்னும் ரெண்டு நாள்ள பணம் கிடைச்சுடும்!" என்றார் மணிவண்ணன் உற்சாகமாக.

"அவர்கிட்ட உதவி கேக்கறதுக்குத் தயக்கமா இருக்குன், இப்ப இவ்வளவு உற்சாகமாப் பேசற!"

"தயக்கமாத்தான் இருந்தது. அவர் என்னோட தூரத்து உறவினர். அவர்கிட்ட கடன் கேட்டா என்னை இளப்பமா நினைப்பாரோன்னு தயங்கினேன். ஆனா அவர் ரொம்பப் பெருந்தன்மையா நடந்துக்கிட்டாரு. வியாபாரத்தில இது மாதிரி நிலைமைகள் வரது இயல்புதான்னு சொல்லி உடனே கடன் கொடுக்க ஒதுக்கிட்டாரு. நீ இப்படி இருக்கணும், அப்படி இருக்கணுங்கற உபதேசம் எதுவும் செய்யல. என்னை நம்பி நான் கேட்ட உதவியைச் செய்யறதாதான் காட்டிக்கிட்டாரு. போகும்போது தயக்கத்தோட போனவன், வரும்போது சந்தோஷமா வந்தேன். ஆமாம். உன் விஷயம் என்ன? உனக்குத் தெரிஞ்சவர் ஒத்தர் இருக்கார்னு சொன்னியே! அவர்கிட்ட கேட்டியா?"

"கேட்டேன், கொடுத்துட்டாரு!"

"கொடுத்துட்டாரா? ரொம்ப நல்லது. ஆனா இதை ஏன் இவ்வளவு உற்சாகம் இல்லாம சொல்ற?"

"என்ன செய்யறது? உனக்குக் கடன் கொடுத்தவர் நடந்துக்கிட்ட மாதிரி எனக்குக் கொடுத்தவர் நடந்துக்கலையே! முதல்ல என்னோட அலட்சியத்தாலதான் இந்த நிலைமை வந்துச்சுங்கற மாதிரி பேசினாரு. அப்புறம் பணம் கொடுக்கறேன்னு சொல்லிட்டு சின்னக் குழந்தைக்கு செய்யற மாதிரி ஏகப்பட்ட உபதேசம்! வெளியில வரப்ப, கடன் கிடைச்சதேங்கற சந்தோஷத்தை விட  அவர் பேசின பேச்சினால ஏற்பட்ட எரிச்சலும் அவமானமும்தான் அதிகமா இருந்தது" என்றார் கதிரேசன்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1057:
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.

பொருள்: 
இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Sunday, March 24, 2024

1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம்.

தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்மாதான். பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்" என்றார். 

பரமசிவம் பாலனுடன் ஒரே கிராமத்தில் வசித்தவர். பாலன் ஒரு விவசாயி. பரமசிவம் ஒரு நெல் வியாபாரி. 

கிராமத்தில் இருந்து கொண்டு நெல் வியாபாரம் செய்தது அவ்வளவு லாபகரமாக இல்லை என்பதால் பரமசிவம் அருகிலிருந்த நகரத்துக்குக் குடி பெயர்ந்து விட்டார். நகரத்துக்கு வந்த பிறகு தன் வியாபாரத்தை விரிவாக்கி ஓரளவு வருமானம் பெற்று வந்தார்.

பாலன் நகரத்துக்கு வரும்போதெல்லாம் பரமசிவத்தை வந்து பார்த்து விட்டுப் போவார்.

சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு, "ஆமாம். இது விதைக்கிற பருவமாச்சே! உங்க நிலத்தில விதை போட்டுட்டீங்களா?" என்றார் பரமசிவம்.

"இல்லை. போன வருஷம் விளைச்சல் குறைவா இருந்ததால விதை நெல்லைக் கூட சேமிச்சு வைக்க முடியல. இப்ப பணம் கொடுத்துத்தான் விதை நெல் வாங்கணும். எங்கிட்ட இப்ப பணம் இல்லை. நான் உங்களைப் பார்க்க வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்" என்றார் பாலன் தயக்கத்துடன். 

"எவ்வளவு வேணும்?"

"முப்பதாயிரம் இருந்தா நல்லா இருக்கும்."

"இப்ப எங்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே!" என்றார் பரமசிவம் யோசித்தபடியே.

அதற்குள் உள்ளிருந்து பரமசிவத்தின் மனைவி தங்கம் அவரை உள்ளே வருமாறு அழைக்க, பரமசிவம் உள்ளே சென்றார்.

ஓரிரு நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்த பரமசிவத்தின் கை நிறைய ரூபாய் நோட்டுகளும், முகம் நிறைய மகிழ்ச்சியும் இருந்தன.

"இந்தாங்க, முப்பதாயிரம் ரூபாய்!" என்றுபடியே நோட்டுகளை பாலனின் கையில் கொடுத்தார் பரமசிவம்.

'இப்போதுதானே பணம் இல்லையென்று சொன்னார்? அதற்குள் எப்படிப் பணம் வந்தது?' என்ற பாலனின் கேள்வியை அவருடைய முகக்குறிப்பிலிருந்து புரிந்து கொண்ட பரமசிவம், "எங்க பொண்ணு வயசுக்கு வந்தா அவளுக்கு சடங்கு செய்யணுங்கறதுக்காக எனக்கே தெரியாம என் மனைவி கொஞ்சம் பணம் சேர்த்து வச்சிருக்கா. நான் பணம் இல்லேன்னு சொன்னதும் என்னை உள்ளே கூப்பிட்டு இந்தப் பணத்தைக் கொடுத்தா!" என்றார் பெருமையுடன்.

திகைத்து நின்ற பாலன், "யாராவது உதவி கேட்டா, நிறைய பேர் கையில் பணம் இருந்தா கூட இல்லேன்னு சொல்லுவாங்க. உங்க மனைவி உங்களுக்கே தெரியாம தான் சேர்த்து வச்சிருக்கற பணத்தைக் கொடுத்து உதவி செய்யறாங்க. இந்தாங்க இந்தப் பணத்தை அவங்ககிட்ட கொடுத்துடுங்க. அவங்க அதை ஒரு நோக்கத்துக்காக வச்சிருக்காங்க. அதை நான் வாங்கிக்க் கூடாது!" என்று தான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். 

அதற்குள் உள்ளிருந்து வந்த தங்கம், "உங்களுக்கு விதைநெல்லு வாங்கப் பணம் வேணும்னு கேட்டீங்களே! அது முக்கியம் இல்லையா? பணத்தை வாங்கிக்கங்க!" என்றாள்.

"இல்லம்மா! உங்களை மாதிரி நல்ல மனசு உள்ளவங்க இருக்கறப்ப என்னோட பிரச்னை தானே சரியாயிடும்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. எனக்கு வேற விதத்தில பணம் கிடைக்கும். உங்க நல்ல மனசை நான் எப்பவுமே மறக்க மாட்டேன்!" என்று இருவரிடமும் கைகூப்பி விடைபெற்றார் பாலன்.

பொருட்பால் 
குடியியல்தான்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1056:
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

பொருள்: 
இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1055. உதவி செய்ய ஒருவர்!

"உங்களுக்கு வர வருமானத்தில குடும்பம் நடத்தறதே கஷ்டமா இருக்கு. இதில அப்பப்ப கூடுதல் செலவு வேற வந்துடுது. பணத்துக்கு எங் போறது?" என்று அலுத்துக் கொண்டாள் பாக்யலட்சுமி.

மணிமாறன் பதில் சொல்லவில்லை. 

அவன் தங்கை கிருத்திகாவின் மாமனார் இறந்து விட்டார். அவருடைய இறப்புக்குப் பின்னான சடங்குகளுக்கு இவன் சீர் செய்ய வேண்டுமாம்! என்ன ஒரு பழக்கமோ தெரியவில்லை. ஒரு பெண்ணின் பிறந்த வீட்டை மொத்தமாகச் சுரண்டுகிற பழக்கங்கள்!

சாவுக்குப் போனபோதே கிருத்திகா சொல்லி விட்டாள். "அண்ணே! உன் நிலைமை எனக்குத் தெரியும். ஆனாலும், முறைப்படி செய்ய வேண்டியதை செஞ்சுடு. இல்லேன்னா என் மாமியாரும் மத்த சொந்தங்களும் ஆயுள் முழுக்க சொல்லிக் காட்டிக்கிட்டே இருப்பாங்க"

அவர்கள் எதிர்பார்க்கும் சீர்களைச் செய்ய குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாய் ஆகும். பணத்துக்கு எங்கே போவது?

"உங்க நண்பர் சுந்தர்கிட்ட கேட்டுப் பாருங்களேன். அவரு வசதியாத்தானே இருக்காரு!" என்றாள் பாக்யலட்சுமி.

"வசதியாத்தான் இருக்கான். ஆனா கேட்டா இப்ப கையில பணம் இல்லைன்னு சொல்லிடுவான். எப்பப் பார்த்தாலும் பஞ்சப்பாட்டுப் பாடுவான். அவன் புலம்பறதைக் கேட்டா நானே அவனுக்கு நூறு ரூபா கொடுத்துட்டு வரலாம் போல இருக்கும்!"

"நீங்க உரிமையாக் கேட்க் கூடியவர் அவர் ஒத்தர்தான், வேற யார்கிட்ட போய் நீங்க கேக்க முடியும்?"

சற்று நேரம் ஏதோ யோசித்த மணிமாறன் ஒரு முடிவுடன் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினான்.

"எங்கே கிளம்பிட்டீங்க?" என்றாள் பாக்யலட்சுமி.

"ராத்திரிக்குள்ள வந்துடுவேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் மணிமாறன்.

ரவு 9 மணிக்கு வீட்டுக்குத் திரும்பினான் மணிமாறன்.

"எங்கே போயிட்டு வரிங்க? போறப்ப கேட்டப்ப சொல்லவே இல்லையே!" என்றாள் பாக்யலட்சுமி.

"எங்க மாமா வீட்டுக்குத்தான்!" என்றபடியே தன் சட்டைப்பையிலிருந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுதுக் காட்டினான் மணிமாறன். 

"உங்க தங்கை வீட்டுக்கு சீர் செய்ய அவர்கிட்ட கடன் வாங்கிட்டு வந்திருக்கீங்களா? ஏற்கெனவே போன வருஷம் நம்ம பொண்ணு படிப்புக்காக அவர்கிட்டதான் கடன் வாங்கினீங்க."

"அதைத்தான் திருப்பிக் கொடுத்துட்டேனே!"

"அதுக்காகத் திரும்பத் திரும்ப அவர்கிட்ட போய்க் கடன் கேக்கறது உங்களுக்குக் கஷ்டமா இல்ல? உங்க நண்பர்கிட்டயே கேக்க மாட்டேன்னுட்டீங்க. அவர்கிட்ட போய் எப்படி மறுபடி கேட்டீங்க?"

"ஏன்னா அவரு இருந்தா கொடுப்பாரு. இல்லேன்னா இல்லேன்னு சொல்லிடுவாரு. வச்சுக்கிட்டு இல்லேன்னு சொல்ல மாட்டாரு. இப்படிப்பட்ட மனுஷங்க சில பேராவது உலகத்தில இருக்கறதாலதான் நம்மை மாதிரி ஆட்களுக்கு உதவி தேவைப்படும்போது அவங்ககிட்ட போய உதவி கேட்க முடியுது!" என்றான் மணிமாறன் பெருமூச்சுடன்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1055:
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.

பொருள்: 
உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள்அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

Saturday, March 16, 2024

1054. வள்ளலுக்கு ஒரு தண்டனை!

"யார் இந்த வள்ளல் சபாபதி? ஏன் அவருக்கு மக்களிடையே இவ்வளவு புகழ்?" என்றான் அரசன் கஜவர்மன்.

"அரசே! தாங்களே குறிப்பிட்டது போல் அவர் ஒரு வள்ளல். பலனை எதிர்பாராமல், தன் செல்வம் குறைந்து விடுமே என்று கவலைப்படாமல் வாரிக் கொடுப்பவரை மக்கள் மதிப்பது இயல்புதானே?" என்றார் அமைச்சர்.

"ஏது? நீங்களே அவரைப் புகழ்ந்து தள்ளி விடுவீர்கள் போலிருக்கிறதே!"

"உண்மையைச் சொன்னேன் அரசே!"

"எது உண்மை? நம் நாட்டு மக்களுக்கு நான் எவ்வளவு நன்மை செய்திருக்கிறேன்! மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்பட்டாலும் சரி,  வெள்ளம் வந்து மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்தாலும் சரி, அவர்களுக்கு எவ்வளவு உதவி இருக்கிறேன்! என்னை விட அதிகம் உதவி விட்டாரா அந்த சபாபதி?"

"அரசே! மக்களின் துயரைப் போக்குவது மன்னரின் கடமை. அத்துடன்..."

"அத்துடன்?"

"இல்லை மன்னரே! வேறொன்றும் கூற விரும்பவில்லை."

"பரவாயில்லை, சொல்லுங்கள்."

"ஒரு மன்னர் அரசுக் கருவூலத்திலிருந்து கொருளை எடுத்து மக்களுக்கு அளிக்கும்போது அவர் தன் சொந்தப் பணத்தை் கொடுக்கவில்லை. நாட்டுக்குச் சொந்தமான, சொல்லப் போனால் மக்களுக்குச் சொந்தமான பணத்தைத்தான் கொடுக்கிறார். இதையும், ஒரு தனி மனிதர் தனக்குச் சொந்தமான பொருளைப் பிறருக்கு வாரி வழங்குவதையும் எப்படி ஒப்பிட முடியும்?"

தான் சொன்னதை அரசர் எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறாரோ என்று நினைத்தபடியே தயக்கத்துடன் அரசரை ஏறிட்டுப் பார்த்தார் அமைச்சர்.

"அமைச்சரே! மனதில் உள்ளதை மறைக்காமல் கூறும் உங்கள குணத்தை நான் போற்றுகிறேன். நீங்கள் கூறியது சரிதான். ஆயினும் சபாபதியைக் கொஞ்சம் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன!" என்றான் கஜவர்மன்.

"இறைவன் பக்தர்களைச் சோதிப்பது போலவா?" என்றார் அமைச்சர் சிரித்துக் கொண்டே.

"அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன்!" என்ற அரசன் சற்று யோசித்து விட்டு, "ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சபாபதியைக் கைது செய்து அழைத்து வாருங்கள்" என்றான்.

"அரசே! அவரை ஏன் கைது செய்ய வேண்டும்? ஒரு தவறும் செய்யாத ஒருவரை என்ன காரணத்துக்காகக் கைது செய்ய முடியும்?" என்றார் அமைச்சர் சற்று அதிர்ச்சியுடன்.

"உங்களால் முடியாதுதான். தளபதியிடம் சொல்லி அவரைக் கைது செய்து அழைத்து வரச் சொல்கிறேன். ஆனால் அவரை அரசவையில் நான் விசாரிக்கும்போது நீங்களும் அரவையில் இருக்க வேண்டும்" என்றான் அரசன்.

ரசவையில் கைதியாக நிறுத்தப்பட்டிருந்த சபாபதியைப் பார்த்து, "சபாபதி! உங்களை எல்லோரும் வள்ளல் என்று புகழ வேண்டும் என்பதற்காக நீங்கள் பலருக்கும் பொருள் கொடுது உதவி வருகிறீர்கள். அதனால் உங்களிடம் உதவி பெறுபவர்கள் சோம்பேறிகளாகி விட்டார்கள். வேலையே செய்வதில்லை.  தங்கள் தேவைகளுக்கு உங்கள் முன் வந்து நிற்கிறீர்கள். நீங்களும் அவர்களுக்குப் பிச்சை போடுவது போல் எதையோ விட்டெறிந்து அவர்களைச் சிறுமைப் படுத்கிறீர்கள். அதனால் அவர்கள் தொடர்ந்து சோம்பேறிகளாகவே இருக்கிறார்கள். இதன் மூலம் மக்களிடையே சோம்பேறித்தனத்தை வளர்க்கிறீர்கள், மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி அவர்களை அவமானப்படுத்துகிறீர்கள் என்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் உங்கள் மீது வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு உங்கள் பதில் என்ன?" என்றான் அரசன்.

"அரசே! துன்பத்தில் வாடுபவர்களுக்கு என்னால் இயன்ற அளவில் நான் உதவுகிறேன். வேலை செய்ய முடியாதவர்கள், அல்லது வேலை கிடைக்காதவர்களுக்குத்தான் நான் உதவுகிறேன். யாரையும் சோம்பேறிக இருக்க நான் ஊக்குவிப்பதில்லை. மேலும் மற்றவர்களுக்கு உதவும்போது நான் பணிவாகத்தான் நடந்து கொள்கிறேன். யாரையும் சிறுமைப்படுத்தவில்லை" என்றார் சபாபதி.

"இல்லை சபாபதி. மற்றவர்கள் முன் கையேந்தி உதவி கேட்பது எவ்வளவு அவமானகரமானது என்பது உங்களுக்குப் புரியவில்லை. நீங்களே இதை உணர்ந்து பார்த்தால்தான் உங்களுக்குப் புரியும். அதனால் உங்களுக்கு நான் ஒரு தண்டனை கொடுக்கிறேன். நீங்கள் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களாக உணவில்லாமல் இருக்கிறீர்கள். இந்த அவையில் உள்ள யாராவது ஒருவரிடம் சென்று, 'ஐயா! நான் இரண்டு நாட்களாகச் சாப்பிடவில்லை. பசி என் உயிரை வாட்டுகிறது. ஏதாவது கொடுத்து உதவுங்கள்' என்று பிச்சை கேட்க வேண்டும். அப்படி நீங்கள் கேட்டால் அதற்குப் பிறகு உங்களை விடுதலை செய்து விடுவேன். உங்களிடம் உதவி பெறுபவர்கள் எப்படிக் கூனிக் குறுகி அவமானப்படுகிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்!" என்றான் அரசன்.

சற்று நேரம் மௌனமாக இருந்த சபாபதி, அவையிலிருந்த அனைவரையும் பார்த்து விட்டு அமைச்சரை நோக்கிச் சென்றார்.

"அமைச்சரே! நான் சாப்பிட்டு இரண்டு நாட்களாகி விட்டன. பசியின் கொடுமை தாங்கவில்லை. எனக்கு ஏதாவது கொடுத்து உதவுங்கள்" என்றார் சபாபதி, அமைச்சரைப் பார்த்துக் கைகூப்பியபடியே. 

அமைச்சர் திகைத்துப் போய் என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டிருந்தபோதே, அரசர் சைகை காட்ட, ஒரு சேவகன் தன் கையிலிருந்த பழத்தட்டை அமைச்சரிடம் கொடுக்க, அமைச்சர் அந்தத் தட்டை சபாபதியிடம் கொடுத்தார்.

தட்டை வாங்கிக் கொண்ட சபாபதி அரசனைப் பார்க்க "அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து பழங்களை அருந்திப் பசியாறுங்கள் வள்ளலே!" என்றான் அரசன்.

சபாபதி இருக்கையில் அமர்ந்து ஓரிரு பழங்களை அருந்திப் பசி தீர்த்துக் கொண்டதும், "நன்றி அரசே!" என்றார்.

"இப்போது சொல்லுங்கள் வள்ளலே! நீங்கள் அமைச்சரிடம் யாசிக்கும்போது எப்படி உணர்ந்தீர்கள்? இரண்டாவதாக, யாசிப்பதற்கு அமைச்சரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?" என்றான் அரசன்.

"அரசே! நீங்கள் கேட்ட இரண்டு கேள்விகளுக்குமான பதில்கள் ஒன்றுடன் ன்று தொடர்புடையவை. அமைச்சரிடம் இரந்தபோது நான் பிறருக்குக் கொடுக்கும்போது என் மனதில் தோன்றும் பெருமித உணர்வுதான் தோன்றியது. அதற்குக் காரணம் நான் யாசித்தது தன் மனதில் இருப்பதை மறைத்துப் பேசாத இயல்புடையவர் என்று அறியப்பட்டுள்ள அமைச்சர்பிரானிடம்!" என்றார் சபாபதி அமைச்சரைப் பார்த்து வணங்கியபடியே. 

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1054:
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

பொருள்: 
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...