மதனகோபால் தனஞ்சயனை அடிக்கடித் தன் அறைக்கு அழைத்துப் பேசுவார். அப்போது, மற்ற அதிகாரிகள் யாரும் உடன் இருக்க மாட்டார்கள்.
அதனால், சில விஷயங்களில் தனஞ்சயன் தன்னிச்சையாக முடிவெடுக்கும்போது, அவனுடைய மேலதிகாரிகள் அவனைக் கேள்வி கேட்க மாட்டார்கள்.
மதனகோபால் தனஞ்சயனைத் தன் அறைக்கு அழைத்தார்.
"தனஞ்சயன்! இனிமே, சபரி கெம்கிட்டேருந்து நாம மருந்துகளை வாங்க வேண்டாம்" என்றார் மதனகோபால்.
"ஏன் சார்?" என்றார் தனஞ்சயன்.
"நமக்கு இருக்கற மத்த பிசினஸ் போதும். அதோட, இப்ப நாம கொஞ்சம் கவனமா இருக்க வேண்டிய நேரம்!"
"புரியுது, சார்!" என்றார் தனஞ்சயன்.
தனஞ்சயன் தன் இருக்கைக்குத் திரும்பியதும், "எம்.டி. என்ன சார் சொன்னார்?" என்றாள் அவனுடைய உதவியாளர் வாணி.
"இனிமே சபரி கெம்கிட்டேந்து மருந்துகள் வாங்க வேண்டாம்னுட்டார்" என்ற தனஞ்சயன், "என்னோட மேலதிகாரிகளுக்குக் கூடத் தெரியாத விஷயத்தை உங்கிட்ட சொல்றேன் பார்!" என்றான், சிரித்துக் கொண்டே.
தன்னுடன் தனஞ்சயனுக்கு இருக்கும் நெருக்கத்தை அவன் மறைமுகமாக வெளிப்படுத்தியதைக் கேட்டு சற்றே நெளிந்த வாணி, "ஏன் சார் அப்படி? அவங்ககிட்ட நாம ரொம்ப நாளா வாங்கிக்கிட்டிருக்கமே!" என்றாள்.
"நாம அவங்ககிட்ட வாங்கற மருந்துகள் எப்படிப்பட்டவைன்னு உனக்குத் தெரியுமே! மருந்துகள்ங்கற பேரில அவங்க போதை மருந்துகளை சப்ளை பண்றாங்க. நாம அவற்றை வாங்கி, சில டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மூலமா வித்துக் கொள்ளை லாபம் சம்பாதிச்சுக்கிட்டிருக்கோம். "
"அதான் சார் கேக்கறேன். இப்படிப்பட்ட ஒரு லாபகரமான பிசினஸை ஏன் திடீர்னு நிறுத்தச் சொல்றாரு?"
"பக்கத்தில வா, சொல்றேன்!"
அருகில் வந்த வாணியிடமிருந்து வந்த பர்ஃப்யூயூமின் மணம் தனஞ்சயனை மயக்கியது.
"போதை மருந்து ஒழிப்புக்குப் பொறுப்பாப் புதுசா வந்திருக்கிற டி.ஐ.ஜி, போதை மருந்து விக்கிறவங்களைப் பிடிக்கறதில ரொம்பத் தீவிரமா ஈடுபட்டிருக்காராம். அதனாலதான், எம்.டி கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்னு பாக்கறாரு. இல்லேன்னா, இப்படி ஒரு லாபகரமான பிசினசை விட்டுடுவாரா?" என்றான் தனஞ்சயன், சிரித்துக் கொண்டே.
"சார், இப்பதான் அந்த டி.ஐ.ஜியை மாத்திட்டாங்களே! போலீஸ் நடவடிக்கையெல்லாம் ரொம்பக் குறைஞ்சுடுச்சு. நாம மறுபடி சபரி கெம்கிட்டேந்து மருந்துகளை வாங்கலாமா?" என்றான் தனஞ்சயன்.
"வேண்டாம், தனஞ்சயன்!" என்றார் மதனகோபால்.
"ஏன் சார்? இப்ப ரிஸ்க் எதுவும் இல்லையே! நம்மகிட்ட மாமூல் வாங்கிக்கிட்டிருந்த அதிகாரிங்க 'நீங்க மறுபடி ஆரம்பிங்க, சார். பிரச்னை எதுவும் வராது' ன்னு சொல்றாங்க!"
"இந்தியாவிலேயே பெரிய மருந்துத் தயாரிப்பு நிறுவனத்துக்கிட்டேயிருந்து நமக்குப் புதுசா கிடைச்சிருக்கற டீலர்ஷிப்னால, நம்ம லாபம் ரெண்டு மடங்காப் பெருகும். அதனால, இனிமே இந்த சபரி கெம் பிசினஸ் வேண்டாம். நிறுத்தினது நிறுத்தினதாகவே இருக்கட்டும்!" என்றார் மதனகோபால், உறுதியாக.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 108
கயமை (தீய குணம்)
குறள் 1075:
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
No comments:
Post a Comment