Friday, March 31, 2023

690. தோளில் விழுந்த வெட்டு!

"பொன்னி நாட்டுக்குத் தூது போகும் உனக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகளைத் தெரிவிக்க வேண்டியது என் கடமை!" என்றார் அமைச்சர்.

"ஆபத்துகள் பற்றி எனக்கு அச்சம் இல்லை அமைச்சரே!" என்றான் தூது செல்லத் தேர்ந்தெடுக்கட்ட காத்தவராயன்.

"காத்தவராயா! உனக்கு அச்சம் இல்லை என்பதை நான் அறிவேன். அதனால்தான் உன்னைத் தூதனாக அனுப்ப அரசரிடம் பரிந்துரை செய்தேன். ஆயினும் வரக் கூடிய  ஆபத்துகளை முன்பே அறிந்திருப்பதுதானே புத்திசாலித்தனம்!"

அமைச்சர் கூறியவற்றை கவனமாகக் கேட்டுக் கொண்டான் காத்தவராயன்.

"பாராட்டுக்கள் காத்தவராயா! உன் தூதை வெற்றிகரமாக முடித்திருக்கிறாய். நாம் அனுப்பிய சமாதான யோசனையைப் பொன்னி நாட்டு மன்னர் ஏற்றுக் கொண்டு உன் மூலமே பதில் ஓலை அனுப்பி இருக்கிறாரே! போரைத் தவிர்த்து விட்டோம். இது நம் நாட்டு மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் செய்தி!" என்றார் அரசர்.

"அரசே! தூதர் தங்களை ஒரு கையால் வணங்கினாரே, அது தவறு இல்லையா?" என்றார் அமைச்சர்.

"காத்தவராயர் தன் தூதை வெற்றிகரமாக முடித்துப் பொன்னி நாட்டு மன்னரிடமிருந்து ஒரு நல்ல செய்தியுடன் வந்திருக்கிறார். அவர் ஒரு கையால் வணங்கியதை நான் கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் பொருட்படுத்தி இருக்க மாட்டேன். காத்தவராயர் மரியாதை தெரிந்தவர்.  அவர் ஒரு கையால் வணங்குகிறார் என்றால் இன்னொரு கையில் சுளுக்கு ஏற்பட்டிருக்கலாம்!" என்றார் மன்னர் சிரித்தபடி.

"சுளுக்கு இல்லை அரசே! அவருடைய வலது தோளில் வாளால் வெட்டப்பட்ட காயம் உள்ளது!" என்றார் அமைச்சர்.

"என்ன, வாள் வெட்டா? அது எப்படி நேர்ந்தது?" என்றர் அரசர் அதிர்ச்சியுடன்.

"அரசே! பொன்னி நாட்டு அரசருக்கு எதிராகச் செயல்படும் அவருடைய உள்நாட்டு எதிரிகள் சிலர் நம் இரு நாடுகளிடையே போரை விரும்புகிறார்கள். அப்படி ஒரு போர் நடந்தால், பொன்னி நாட்டு மன்னர் போரில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது அரண்மனையில் உள்ள சில சதிகாரர்கள் உதவியுடன் அவரைச் சிறைப்பிடித்து விட்டு தங்களில் ஒருவர் அரசுக் கட்டிலில் அமரலாம் என்று அவர்கள் திட்டமிட்டிருப்பதை ஒற்றர்கள்  மூலம் நான் அறிந்தேன். அதனால் நம் சமாதான முயற்சியைச் சீர்குலைக்க அவர்கள் முயல்வார்கள் என்றும், அதன் ஒரு பகுதியாக, அவர்கள் நம் தூதரின் உயிருக்கே ஆபத்து விளைவிக்க முயல்வார்கள் என்றும் நான் எதிர்பார்த்தேன். அதனால் இங்கிருந்து கிளம்பும்போதே காத்தவராயரை எச்சரிக்கை செய்துதான் அனுப்பினேன்" என்றார் அமைச்சர்.

"ஆனால் உங்கள் எச்சரிக்கை பயனளிக்காமல் போய் விட்டதே! தூதர் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றால் அவரை அனுப்பியதையே தவிர்த்திருக்கலாமே!" என்றார் அரசர்.

"நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு, போரைத் தவிர்ப்பதற்கான முயற்சியில், தூதரை அனுப்ப வேண்டியது அவசியமாக இருந்தது. அவருடைய உயிருக்கு நேரக் கூடிய ஆபத்து பற்றியும், அதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் காத்தவராயரிடம் அவர் கிளம்புவதற்கு முன்பே விரிவாக விளக்கினேன். தன் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று தெரிந்துதான் அவர் தூது செல்ல ஒப்புக் கொண்டார். ஆபத்தை உணர்ந்து அவர் எச்சிரிக்கையுடன் இருந்ததால்தான் அவர் மீது நடந்த தாக்குதலிலிருந்து அவர் உயிர் தப்பினார். அத்துடன் காத்தவராயர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி அறிந்த பொன்னி நாட்டு அரசர் சதிகாரர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து விட்டார். அதனால் அவர் பதவிக்கு ஏற்படவிருந்த ஆபத்தும் நீங்கி விட்டது. காத்தவராயர் தாக்கப்பட்டது ஒரு விதத்தில் பொன்னி நாட்டுக்கு நன்மை பயத்திருக்கிறது! தனக்குக் காயம் ஏற்பட்டது பற்றித் தங்களிடம் கூற வேண்டாம், அது தங்களுக்கு மனவருத்தம் ஏற்படுத்தும் என்று காத்தவராயர் என்னிடம் கேட்டுக் கொண்டார். ஆயினும் அவர தன் உயிருக்கு ஏற்படக் கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாமல் தூது சென்று வந்தது தங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால்தான் அவர் தங்களை ஒரு கையால் வணங்கினார் என்று அவர் மீது குற்றம் கூறுவது போல் ஆரம்பித்து உங்களிடம் அவர் தாக்கப்பட்டதைக் கூறினேன்!" என்றார் அமைச்சர்.

"தன் உயிருக்கு ஏற்படக் கூடிய ஆபத்தைப் பற்றி அஞ்சாமல் தூது சென்று தன் பணியைச் சிறப்பாக முடித்து இரு நாடுகளுக்குமே பெரும் நன்மையை விளைவித்திருக்கும் காத்தவராயருக்கு எத்தகைய பரிசை வழங்கினாலும் தகும்!" என்றார் அரசர் காத்தவராயனைப் பெருமையுடன் பார்த்தபடி.

அரசியல் இயல்
அதிகாரம் 69
தூது

குறள் 690:
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

பொருள்:
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித் தருபவரே நல்ல தூதர்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...