Wednesday, December 7, 2022

847. தொழிலதிபரின் அறிவுரை

"சொந்தத் தொழில் செய்யறதுன்னு முடிவு செஞ்சுட்ட. எனக்குத் தெரிஞ்ச ஒரு தொழிலதிபர் இருக்காரு. அவர்கிட்ட உன்னை அழைச்சுக்கிட்டுப் போறேன். அவர் பல தொழில்கள் செஞ்சு கஷ்டப்பட்டுப் பல விஷயங்களைப் புரிஞ்சுக்கிட்டு வெற்றி அடைஞ்சவரு. அவர் ரொம்ப பிசியானவரு. ஆனா, எனக்கு நேரம் கொடுப்பாரு. அவர்கிட்ட ஆலோசனை கேட்டுக்கறது உனக்குப் பயனுள்ளதா இருக்கும்!" என்றான் தனஞ்சயன்.

"நான் செய்யப் போற பிசினஸ் பத்தி ஒத்தர் பயிற்சி வகுப்பு நடத்தி இருக்காரு. அவர் சொல்லிக் கொடுத்த விஷயங்களை வச்சுக்கிட்டுத்தானே நான் தொழில் ஆரம்பக்கப் போறேன்! இதுல இன்னொருத்தர் யோசனை எதுக்கு?" என்றான் ராம்குமார்.

"டேய் முட்டாள்! யாரோ ஒருத்தன் சொந்தத் தொழில் தொடங்கப் பயிற்சி கொடுக்கறதாச் சொல்லி, ஏகப்பட்ட கட்டணம் வாங்கிக்கிட்டு, அம்பது பேரை உக்கார வச்சு, வகுப்பு எடுக்கற மாதிரி சொல்லிக் கொடுத்திருக்கான். அதை வச்சுக்கிட்டு நீ தொழில் ஆரம்பிக்கத் துணிஞ்சுட்ட! அனுபவம் உள்ள ஒத்தர்கிட்ட உன்னை அழைச்சுக்கிட்டுப் போறேன்னு சொல்றேன். அவரோட ஆலோசனைகள் உனக்குப் பயனுள்ளதா இருக்கும். அதைக் கேட்டுக்கறதில உனக்கு என்ன கஷ்டம்?" என்றான் தனஞ்சயன், கோபத்துடன்.

"சரி. நீ சொல்றதுக்காக வரேன்!" என்றான் ராம்குமார், தான்  நண்பனுக்கு ஏதோ உதவி செய்வது போல்.

அடுத்த நாளே, தொழிலதிபர் ஆனந்தனை இருவரும் சென்று பார்த்தனர். 

"தம்பி! தொழில் ஆரம்பிக்கற எண்ணம் வந்துட்டா, அது ஒரு போதை மாதிரிதான். ஆர்வம் அதிகமா இருக்கும். அந்த அதீத ஆர்வமே அறிவைச் செயல்படாம செஞ்சுடும். நாம செய்யறதெல்லாம் சரியா இருக்கும்னு குருட்டுத்தனமா நம்ப வைக்கும். நான் பல தொழில்கள் செஞ்சு பார்த்து, எல்லாத்திலேயும் தோல்வி அடைஞ்சு, அப்புறம் ஒரு இடத்தில வேலைக்குப் போய், மூணு வருஷம் வேலை பார்த்து, அந்தத் தொழிலைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு, அப்புறம் அதை ஆரம்பிச்சேன். அதுதான் எனக்கு வெற்றியைக் கொடுத்தது. அதனால, எங்கிட்ட யார் ஆலோசனை கேட்டாலும், தெரியாத தொழில்ல இறங்காதீங்கன்னுதான் சொல்லுவேன். செய்ய நினைக்கிற தொழிலைப் பத்தி நல்லாத் தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கப்புறம் அதில இறங்கினாதான் வெற்றி கிடைக்கும்" என்றார் ஆனந்தன்.

"ஏண்டா, நீ தொழில் ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னப்பவே, உன்னை ஆனந்தன் சார்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போனேன். தெரியாத தொழில்ல இறங்காதேன்னு அவர் சொன்னது அவரோட அனுபவத்தின் அடிப்படையில. ஆனா, நீ அவர் சொன்னதைக் காதில போட்டுக்காம, உனக்குத் தெரியாத ஒரு தொழில்ல இறங்கின. இப்ப எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கற!" என்றான் தனஞ்சயன்.

"இந்தப் பயிற்சியை நடத்தினவர் இந்தத் தொழில்ல யாருமே தோல்வி அடைய முடியாதுன்னு சொன்னாரு. அதை நம்பித்தான் இதில இறங்கினேன்" என்றான் ராம்குமார், சோர்வுடன்.

"காசு வாங்கிக்கிட்டுப் பயிற்சி கொடுக்கறவன் சொன்னதை அப்படியே நம்பின. ஆனா அனுபவப்பட்ட ஒத்தர், தன்னோட பிசியான நேரத்திலேயும், உனக்காக அரை மணி நேரம் ஒதுக்கித் தன்னோட அனுபவத்தின் அடிப்படையில சொன்ன உண்மையான ஆலோசனையைப் பத்தி யோசிச்சுக் கூடப் பாக்காம தூக்கிப் போட்டுட்ட. உன்னை விடப் பெரிய முட்டாள் இருக்க முடியுமா?" என்றான் தனஞ்சயன், கோபத்துடனும், வருத்தத்துடனும்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)

குறள் 847:
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

பொருள்: 
பெறுதற்கு அரிய அறிவுரையைப் பெற்றாலும், அதை உள் வாங்கிக் கொள்ளாமல் வெளியே விடுபவன், அறியாமையால் தனக்குத் தானே துன்பத்தை விளைவித்துக் கொள்வான்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Sunday, December 4, 2022

657. கடன் வசூல் அதிகாரி

குமரனை யாராவது "எங்கே வேலை செய்யற?" என்று கேட்டால், அவன் சொல்லும் வெளிநாட்டு வங்கியின் பெயரைக் கேட்டுப் பலரும் அவனை மதிப்புடன் பார்ப்பார்கள்.

"என்ன வேலை?" என்று பெரும்பாலும் யாரும் கேட்பதில்லை. அப்படி யாராவது கேட்டால், 'கடன் வசூல் அதிகாரி' என்று சொல்வான். அதற்கு மேல் யாரும் விரிவாக அவன் வேலை பற்றிக் கேட்க மாட்டார்கள்.

குமரனுக்குப் பெற்றோர்கள் இல்லாததால், அவன் சித்தப்பா அவனுக்குப் பெண் பார்த்தார்.

பெண் பார்க்கச் சென்றபோது, பெண்ணிடம் தனியாகப் பேச விரும்பினான் குமரன். பெண்ணின் பெற்றோர்கள் சம்மதித்ததும், இருவரும் ஒரு அறைக்குள் அமர்ந்து பேசினர்.

"நான் என்ன வேலை செய்யறேன்னு உனக்குத் தெரியுமா?" என்றான் குமரன்.

"கடன் வசூல் அதிகாரின்னு சொன்னாங்களே!" என்றாள், கிரிஜா என்ற அந்தப் பெண்.

"ஆமாம். ஆனா, கடன் வசூல் அதிகாரி இல்லை, கடன் வசூல் அடியாள்!"

"என்ன சொல்றீங்க?"

"எங்க வங்கில கடன் வாங்கிட்டுத் தவணை கட்டாதவங்க, கிரடிட் கார்ட்ல பொருள் வாங்கிட்டுப் பணம் கொடுக்காதவங்க இவங்க வீட்டுக்கெல்லாம் போய் மிரட்டணும், அக்கம்பக்கத்தில இருக்கறவங்களுக்குக் கேட்கற மாதிரி அவமரியாதையாப் பேசணும், சில சமயம், வீட்டுக்குள்ள போய்க் கதவை சாத்திட்டு, கடன் வாங்கினவரை ரெண்டு தட்டு தட்டணும், கொலை மிரட்டல் விடுக்கணும். கார், பைக், டிவி மாதிரி பொருட்களைத் தூக்கிக்கிட்டு வரணும். இந்த மாதிரி வேலைதான் நான் செய்யறது!" என்றான் குமரன், வெறுப்புடன்.

"எங்க பக்கத்து வீட்டில கூட இந்த மாதிரி வந்து மிரட்டினாங்க. எங்களுக்கே பயமா இருந்தது!" என்றாள் கிரிஜா.

"ஆரம்பத்தில எனக்கு ஒண்ணும் தெரியல. ஆனா இப்பல்லாம், மத்தவங்களை மிரட்டி, அவங்களுக்கு பயத்தை வரவழைச்சு, எல்லாத்தையும் வித்தாவது பணத்தைக் கட்ட வைக்கறது எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு. நான் சம்பளத்துக்குத்தான் வேலை செய்யறேன்னாலும், பழி, பாவம் எல்லாம் எனக்குத்தானே! அவங்க என்னை எப்படி வெறுப்பாங்க, எப்படியெல்லாம் சாபம் கொடுப்பாங்க! சில பேர் 'படுபாவி, நீ நல்லா இருப்பியா?'ன்'னு நேரடியாவே எனக்கு சாபம் விடுவாங்க. மனசுக்குள்ள என்னை சபிக்கிறவங்க எத்தனையோ பேர் இருப்பாங்க. என் மிரட்டலுக்கு பயந்து, பணம் கட்டவும் வழியில்லாம, ஒத்தர் தற்கொலையே பண்ணிக்கிட்டாரு!"

"இதையெல்லாம் ஏன் எங்கிட்ட சொல்றீங்க?"

"நான் இந்த வேலையில தொடர விரும்பல. ஆனா, நான் அதிகம் படிக்கல. அதனால, எனக்கு வேற நல்ல வேலை கிடைக்காது. குறைஞ்ச சம்பளத்திலதான் வேலை கிடைக்கும். அந்த நிலையில, நீ என்னைக் கல்யாணம் செஞ்சுக்க சம்மதிப்பியா?" 

"நிச்சயமா. அதிக வருமானத்துக்காக என்ன பழி வந்தாலும் பரவாயில்லேன்னு  ஒரு தப்பான வேலையில இருக்கறதை விட, வறுமை வந்தாலும் பரவாயில்லைன்னு நியாயமான வேலை பாக்கறதே நல்லது" என்றாள் கிரிஜா.

"அப்படின்னா, நான் வேற வேலையில சேர்ந்துட்டு, அப்புறம் உன் வீட்டில வந்து பெண் கேக்கறேன்!" என்றான் குமரன், மன நிறைவுடன்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை

குறள் 657:
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

பொருள்:
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல், நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.

Read 'Loan Recovery Officer' the English version of this story by the same author.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

846. முழுக்கை சட்டை!

பேராசிரியர் சம்பந்தம் அன்றைய தன் பாடத்தை முடிக்கும்போது, வகுப்பு முடிவதற்கு ஐந்து நிமிடங்கள் இருந்தன.

வழக்கமாக எல்லா ஆசிரியர்களிடமும் சந்தேகம் கேட்கும் முதல் வரிசை குணசீலன் எழுந்து ஒரு சந்தேகம் கேட்டான்.

சம்பந்தத்துக்கு ஜிவ்வென்று கோபம் வந்து விட்டது.

"ஒரு மணி நேரமா இதை விளக்கி இருக்கேன். இப்ப வந்து, ஆரம்பத்தில சொன்ன விஷயத்தில சந்தேகம் கேக்கற! மறுபடி முதல்லேந்து ஆரம்பிச்சு ஒரு மணி நேரம் விளக்கணுமா? அதுக்கு அடுத்த வகுப்பு எடுக்க வேண்டிய பேராசிரியர் அனுமதி கொடுப்பாரான்னு முதல்ல கேட்டுக்க!"

"இல்லை சார்! அப்பவே கேக்க நினைச்சேன். உங்க லெக்சரின்போது குறுக்கே கேள்வி கேட்கக் கூடாது, முடிஞ்சப்பறம்தான் கேக்கணும்னு நீங்க சொல்லி இருக்கீங்க. அதனாலதான் இப்ப கேட்டேன்" என்றான் குணசீலன், சற்று பயந்த குரலில்.

"அதுக்காக? அடிப்படையான விஷயத்தைப் பத்தி, எல்லாம் முடிஞ்சப்பறமா கேக்கறது? புத்தகத்தைப் படி. புரியும்!" என்று சம்பந்தம் சொல்லிக் கொண்டிருந்தபோதே, வகுப்பு நேரம் முடிந்ததற்கான மணி அடித்தது.

சம்பந்தம் எழுந்து வெளியே போய் விட்டார்.

"புரொஃபசர் சம்பந்தம்! நீங்க நிறையப் படிச்சிருக்கீங்க. ரிஸர்ச் பேப்பர்ஸ் பப்ளிஷ் பண்ணி இருக்கீங்க. நிறைய அனுபவம் உள்ளவர். ஆனா, உங்க மாணவர்கள் ஒரு விஷயம் சொல்றாங்க!" என்றார் கல்லூரி முதல்வர்.

"என்ன சொல்றாங்க?"

"நீங்க நடத்தின பாடத்தில மாணவர்கள் சந்தேகம் கேட்டா, அதை நீங்க விளக்க மாட்டேங்கறீங்களாமே!"

"முட்டாள்தனமான சந்தேகங்களையெல்லாம் விளக்க முடியாது, சார்"

"மன்னிக்கணும், புரொஃபசர். ஆசிரியர் தொழில்ல இருக்கிற நமக்கு மாணவர்கள் புரிஞ்சுக்கற விதத்தில சொல்லிக் கொடுக்க வேண்டிய கடமை உண்டு. மாணவர்கள் சந்தேகம் கேட்டா, அதை விளக்க வேண்டிய பொறுப்பும் உண்டு."

"எல்லா மணவர்களுக்கும் எல்லா விஷயங்களும் புரியும்னு சொல்ல முடியாது. மாணவர்களோட எந்தக் கேள்விக்கு பதில் சொல்றதுங்கறதை ஆசிரியர்தான் முடிவு செய்யணும்னு நினைக்கறேன்" என்றார்  சம்பந்தம்

'உங்களோட குறையை ஒத்துக்கவே மாட்டீங்க. அப்புறம் எங்கே அதை சரி செய்யப் போறீங்க?' என்று நினைத்த முதல்வர், பேச்சை மாற்ற விரும்பி, "ஆமாம். ரொம்ப நாளா உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்னு நினைச்சுப்பேன். நீங்க எப்பவும் முழுக்கை சட்டைதான் போடுவீங்களா? உங்களை வெளியில எங்கேயாவது பாக்கறப்ப கூட, நீங்க முழுக்கை சட்டைதான் போட்டுக்கிட்டிருக்கீங்க!" என்றார்.

சம்பந்தம் இலேசாகச் சிரித்தார். தலைப்பு மாறியது அவருக்கு நிம்மதி அளித்திருக்க வேண்டும்!

"அது ஒண்ணுமில்ல, சார்! சின்ன வயசில பட்டாசு வெடிக்கறப்ப, என் கையில ஒரு வாணம் பட்டுத் தீக்காயம் ஏற்பட்டது. அந்த வடு கொஞ்சம் பெரிசா, பழுப்பு நிறத்தில தனியாத் தெரியும். அது வெளியில தெரியாம இருக்கத்தான் முழுக்கை சட்டை போடற பழக்கத்தை வச்சுக்கிட்டிருக்கேன்!"

தன் உடலில் இருக்கும் சிறு குறையைப் பெரிதாக நினைத்து, முழுக்கை சட்டை போடுவதன் மூலம் அதை மறைக்கத் தெரிந்த சம்பந்தத்துக்கு, தான் கற்பிப்பதில் உள்ள குறையை ஏற்றுக் கொண்டு, அதைச் சரி செய்யத் தெரியவில்லையே!' என்று நினைத்துக் கொண்டார் முதல்வர்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)

குறள் 846:
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.

பொருள்: 
தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம் உடலை மட்டும் மறைப்பது அறிவின்மை.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

656. கோகுலின் யோசனை

அந்த பஸ் ஸ்டாண்டில், வெளியூர் செல்லும் பஸ்களைத் தேடி நிற்கும் பயணிகளைத் தேடிப் பிடித்து, குறிப்பிட்ட பஸ்ஸில் ஏற வைப்பதுதான் ராமதாஸின் வேலை. 

அவன் மூலம் பஸ்ஸில் ஏறும் ஒவ்வொரு பயணிக்கும், ஒரு சிறிய தொகை அவனுக்குக்  கமிஷனாகக் கிடைக்கும்.

 'இது ஒரு பிழைப்பா?' என்று அவன் அடிக்கடி அலுத்துக் கொள்வது உண்டு.

அதனால்தான், அவன் தாய் காந்திமதி எவ்வளவோ வற்புறுத்தியும், ராமதாஸ் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கவில்லை.

"நிரந்தரமான வருமானம் இல்லாம, எப்படிம்மா கல்யாணம் செஞ்சுக்கறது? பெண்டாட்டி பிள்ளைகளை வச்சுக் காப்பாத்த வேண்டாமா?" என்பான் ராமதாஸ்.

"தேவை ஏற்படறப்ப, அதுக்கேத்தாப்பல வருமானமும் வரும்டா. உன் பெண்டாட்டி கூட ஏதாவது வேலைக்குப் போய் சம்பாதிக்கலாம். அவளுக்கு நிரந்தர வருமானம் இருந்தா, அது உனக்கு நல்லதுதானே?" என்பாள் காந்திமதி.

ஆயினும், ராமதாஸ் அவள் வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவனுக்கும் சிலர் பெண் கொடுக்க முன்வந்ததுதான் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. 

ராமதாஸ் தன் நிலைமையை அவர்களிடம் சொன்னபோது, "அதனால என்ன மாப்பிள்ளை? சமாளிச்சுக்கலாம். நாங்கள்ளாம் என்ன பெரிய வேலை பாத்தா குடும்பதைக் காப்பாத்தறோம்?" என்ற பாணியில் சிலர் அவனிடம் பேசியபோது, அவர்கள் குருட்டு நம்பிக்கைக்குக் காரணம், அவர்களுடைய அறியாமையா, அல்லது வறுமையா என்ற கேள்வி அவனுக்குள் எழும்.

ரண்டு நாட்களாக, ராமதாஸுக்கு வருமானம் இல்லை. பல மணி நேரம் கூவியும், பலரிடம் கேட்டுக் கொண்டும், அவன் சொன்ன பஸ்ஸில் யாரும் ஏறவில்லை. சில சமயம் இப்படி ஆவதுண்டு. அப்போதெல்லாம், முந்தைய நாட்களில் சம்பாதித்ததில் மீதம் இருப்பதை வைத்துச் சமாளித்து விடுவான். 

ஆனால், இப்போது அவன் கையிருப்பு காலியாக இருந்தது. முதல் நாள் இரவு சாப்பிட்டதோடு சரி. அன்று காலையே, அவனும் அவன் அம்மாவும் எதுவும் சாப்பிடவில்லை. அவனாவது பஸ் ஸ்டாண்ட் டீக்கடையில் கடனுக்கு டீ குடித்துக் கொள்வான். அவன் அம்மாவுக்கு அதுவும் கிடைக்காது.

இன்று ஏதாவது வருமானம் கிடைத்தால்தான் அன்று, இரவு அவர்கள் இருவருக்கும் சாப்பாடு. இந்த வயதான காலத்தில் அம்மாவால் எவ்வளவு நேரம் பட்டினியாக இருக்க முடியும் என்று நினைத்தபோது, அவன் வயிற்றில் இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்பட்டது.

"என்ன ராமதாஸ், கிராக்கி ஒண்ணும் கிடைக்கலையா?"

கோகுல்!

அந்த பஸ் ஸ்டாண்டில் தொழில் செய்பவன்தான் கோகுல். ஆனால் அவன் செய்யும் தொழில், வெளியில் சொல்லிக் கொள்ளக் கூடியது அல்ல!

ராமதாஸ் மௌனமாக இருந்தான்.

"இந்த பஸ் ஸ்டாண்டில எவ்வளவு பேரு இருக்காங்க பாரு! தனியா இருக்கற ஆம்பிளைகள்ள பத்து பேர் பக்கத்தில போய், அவங்க காதுகிட்ட சொன்னேன்னா, ரெண்டு பேராவது வருவாங்க. உனக்கு கமிஷன் நிச்சயம். அந்த விஷயத்துக்கு அலையறவங்க எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா, யாராவது வந்து கேக்க மாட்டாங்களான்னு ஏங்கிக்கிட்டு!"

கோகுல் சொல்வது சரிதான். கோகுலுக்காக வேலை செய்யும் சிலர், தனியே இருக்கும் ஆண்களிடம் அருகில் சென்று பேசுவதையும், சிலர் அவர்களுடன் செல்வதையும் ராமதாஸ் கவனித்திருக்கிறான்.

பஸ்களுக்குப் பயணிகளை அழைத்துச் செல்வதை விட, இது சுலபமாக இருக்குமே என்று அவனுக்கே சில சமயம் தோன்றி இருக்கிறது.

இப்போது கோகுல் கேட்டவுடன், இன்று ஒருநாள் முயற்சி செய்து, சிறிதளவாவது சம்பாதிக்கலாமே என்ற எண்ணம் மனதில் எழுந்தது.

ஆயினும், உடனே மனதை உறுதிப்படுத்திக் கொண்டு, "வேண்டாம் அண்ணே! அது எனக்குச் சரியாக வராது!" என்றபடியே, "மதுரை, திண்டுக்கல், தேனி" என்று கூவியபடியே, அங்கிருந்து அகன்றான் ராமதாஸ்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை

குறள் 656:
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

பொருள்:
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிக்கக் கூடிய இழிவான செயல்களைச் செய்யக் கூடாது.

Read 'A Desperate Moment' the English version of this story by the same author.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

Friday, December 2, 2022

655. சீட்டுக்கட்டு ராஜா!

செல்வரங்கம் தன் மொபைலில் ஒரு காணொளியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அடிக்கடி வரும் அந்த விளம்பரம் மீண்டும் வந்தது.

'ரம்மி ஆடிப் பணம் வெல்லுங்கள்.'

'ஒருமுறை விளையாடிப் பார்த்தால் என்ன?' 

மனதில் அந்த எண்ணம் எழுந்ததுமே, செல்வரங்கத்தின் சிந்தனை பின்னோக்கி ஓடியது. 

செல்வரங்கம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, சீட்டாடக் கற்றுக் கொண்டு விட்டான். அவன் கல்லூரி விடுதியில் சிலர் பணம் வைத்துச் சீட்டாடியதை, அவன் அருகில் இருந்து பார்த்திருக்கிறான். 

அப்போதெல்லாம், பணம் வைத்து விளையாடினால் தன்னால் பணம் வெல்ல முடியும் என்று அவனுக்குத் தோன்றும். ஆனால் அவனிடம் அப்போது பணம் இல்லாததால், அவன் அந்த முயற்சியில் இறங்கவில்லை.

வேலைக்குப் போன பிறகு, விடுமுறை நாட்களில், சில நண்பர்களுடன் பணம் வைத்து விளையாட ஆரம்பித்தான் செல்வரங்கம். பெரும்பாலும், அவன்தான் வெற்றி பெறுவான். ஒவ்வொரு முறை சீட்டாடி விட்டு வீட்டுக்குச் செல்லும்போதும், தான் எடுத்து வந்ததை விட அதிகப் பணத்துடன்தான் செல்வான்.

ஒருநாள், உமாபதி என்ற நண்பன், சீட்டாட்டத்தில் தன் மொத்த சம்பளத்தையும் வைத்துத் தோற்று விட்டான் 

அந்த இழப்பைத் தாங்க முடியாமல், உமாபதி அழ ஆரம்பித்து விட்டான்.

"மொத்த சம்பளமும் போயிடுச்சு! என் குடும்பத்துக்கு எப்படி சாப்பாடு போடுவேன்? வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், கடன்காரங்களுக்குக் கொடுக்க வேண்டியதுன்னு எத்தனையோ செலவு இருக்கே!" என்று அவன் பதைபதைத்ததைப் பார்த்தபோது, செல்வரங்கத்துக்கு மனதைப் பிசைந்தது.

அப்போது அவன் மனதில் உடனடியாக ஒரு எண்ணம் தோன்றியது.

தான் ஜெயித்த மொத்தப் பணத்தையும் உமாபதியிடம் கொடுத்து விட்டு, "இனிமே நீ சீட்டாடக் கூடாது. நானும் ஆட மாட்டேன்!" என்றான் செல்வரங்கம், உத்தரவிடுவது போல்.

உமாபதி நம்ப முடியாமல் அவனைப் பார்க்க, மற்ற நண்பர்கள் "என்னடா இது பைத்தியக்காரத்தனம்!" என்றனர்.

அன்றிலிருந்து. செல்வரங்கம் சீட்டாடுவதையே  நிறுத்தி விட்டான். பணம் வைக்காமல் சும்மா விளையாடலாம் என்று யாராவது அழைத்தால் கூட, மறுத்து விடுவான்.

'சீட்டாடிப் பணம் சம்பாதிப்பது என்பது இன்னொருவரிடமிருந்து பணத்தைப் பறிப்பதுதானே! அதை அவர் ஒப்புதலுடன் செய்வதால் மட்டும் அது நியாயமாகி விடுமா? ஏன் இது பற்றிச் சிந்திக்காமல், இந்தச் செயலில் ஈடுபட்டேன்?' என்று நினைத்து நீண்ட காலம் வருந்தினான் செல்வரங்கம்.

ப்போது ரம்மி விளம்பரத்தைப் பார்த்ததும், விளையாடிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. 'ஆன்லைனில்தானே விளையாடப் போகிறோம்! யாருடனும் நேரடியாக விளையாடப் போவதில்லையே!' என்ற சிந்தனை எழுந்தது.

"சே! என்ன ஒரு சிந்தனை? நான் ஜெயிக்கிற பணம் யாரோ ஒருவரிடமிருந்துதானே வரப் போகிறது? ஆன்லைன் ரம்மியில் பலர் பணம் இழந்தது பற்றியும், சிலர் தற்கொலை செய்து கொண்டது பற்றியும் அடிக்கடி செய்திகள் வருகின்றனவே! ஒருமுறை அந்தத் தவறைச் செய்தேன். மீண்டும் அந்தத் தவறைச் செய்ய மாட்டேன் என்று நான் எடுத்துக் கொண்ட உறுதி என்ன ஆயிற்று?'

ஒரு கணம் தனக்கு ஏற்பட்ட சிந்தனைக்காகத் தன்னை நொந்து கொண்ட செல்வரங்கம், மீண்டும் அந்தச் சிந்தனைக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று உறுதி செய்து கொண்டான்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை

குறள் 655:
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

பொருள்:
என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று நினைத்து வருந்தும்படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாக அப்படிச் செய்து விட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.

Read 'The King of Cards' the English version of this story by the same author.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

845. பொருளாதார வல்லுனர்

அந்தச் சங்கத்தின் ஆண்டு விழாவுக்குத் தலைமை ஏற்கப் பொருளாதார வல்லுனர் சூரியமூர்த்தி அழைக்கப்பட்டிருந்தார்.

'வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்' என்ற தலைப்பில் அவர் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

"ஒரு பொருளாதார வல்லுனர் பொருளாதாரத்தைப் பத்திப் பேசினால்தானே பொருத்தமா இருக்கும்? ஏன் இவருக்கு வேற தலைப்பு கொடுத்திருக்காங்கன்னு புரியல!" என்றான் பட்டாபி.

"நீ வேற! பொருளாதாரத்தைப் பத்திப் பேசி போர் அடிக்கப் போறாரோன்னு பயந்தேன். நல்ல வேளை, வேற தலைப்பு கொடுத்து நம்மைக் காப்பாத்திட்டாங்களேன்னு நான் சந்தோஷப்பட்டுக்கிட்டிருக்கேன்!" என்றான் அவன் நண்பன் சுந்தரேசன்.

விழா முடிந்ததும், "எப்படி இருந்தது பேச்சு?" என்றான் பட்டாபி.

"நான் உன் அளவுக்குப் படிச்சவன் இல்ல. ஆனா, எனக்குத் தெரிஞ்ச அளவுக்குக் கூட அவருக்கு வரலாறு தெரியாது போல இருக்கே!".

"ஆமாம். நிறைய தப்பான தகவல்களைச் சொன்னாரு. அசோகர் தமிழ்நாட்டை ஆண்டப்பதான் புத்தமதம் தமிழ்நாட்டுக்கு வந்ததுன்னாரு. சிவாஜி பிரிட்டிஷ்காரங்களை எதிர்த்துப் போராடினார்னு சொன்னாரு. பாரதியார் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்காருன்னு சொன்னாரு!"

"தனக்குத் தெரியாத விஷயங்களைத் தெரிஞ்சதா நினைச்சுக்கிட்டா அப்படித்தான்!"

"இதுல என்ன சோகம்னா, இன்னிக்கு இவர் பேச்சைக் கேட்டவங்க இவருக்குப் பொருளாதாரத்தைப் பத்திக் கூட சரியாத் தெரியுமோ, தெரியாதோன்னு நினைப்பாங்க!" என்றான் பட்டாபி.

"நான் கூட அப்படித்தான் நினைக்கிறேன்!"

"இல்ல. பொருளாதராத்தில அவர் ஒரு மேதைதான் நான் அவரோட கட்டுரைகளையெல்லாம் படிச்சிருக்கேன்."

அது சரி. என்னை மாதிரி இன்னும் எத்தனை பேர் அவருக்குப் பொருளாதாரமும் சரியாத் தெரியதுங்கற முடிவுக்கு வந்திருப்பாங்களோ! அப்படி அவங்க நினைச்சா, அதுக்குக் காரணம் அவர்தானே?" என்றான் சுந்தரேசன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)

குறள் 845:
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

பொருள்: 
ஒருவர் தான் அறியாதவற்றையும் அறிந்தது போல் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும்போது, அவர் நன்கு கற்றறிந்துள்ள விஷயங்கள் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

Thursday, December 1, 2022

731. புதிய மன்னர்!

தந்தையின் மரணத்துக்குப் பிறகு அரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டான் மகேந்திரன்.

"அரசே! உங்கள் தந்தையைப் போல், நீங்களும் நல்லாட்சி தர வேண்டும்!" என்று வாழ்த்தினார் அமைச்சர்.

"உங்களைப் போன்ற  அறிஞர்களின் ஆலோசனையுடன் என்னால் இயன்றதைச் செய்வேன்!" என்ற மகேந்திரன், தொடர்ந்து "அமைச்சரே! இத்தனை நாட்களாக அரண்மனையிலேயே இருந்து விட்டேன். நம் நாட்டைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. எனவே, முதலில் நம் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டு, நம் நாட்டைப் பற்றியும், அதில் வாழும் மக்கள் பற்றியும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றான்.

"தங்கள் விருப்பப்படி, தங்கள் பயணத்துக்கு உடனே ஏற்பாடு செய்கிறேன் அரசே!" என்றார் அமைச்சர்.

ரு மாதம் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து விட்டு, அரண்மனைக்குத் திரும்பினான் மகேந்திரன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அமைச்சரை அழைத்தான்.

"அமைச்சரே! நம் நாட்டைச் சுற்றிப் பார்த்ததில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமையான வயல்கள். விளைச்சல் நன்றாக இருந்து வருவதால், உணவுப் பஞ்சம் இல்லை. மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள், செல்வச் செழிப்புடனும் இருக்கிறார்கள். ஆயினும்..."

"என்ன அரசே!".

"பல இடங்களில் தரிசு நிலங்களைப் பார்த்தேன். அங்கிருந்த மக்களைக் கேட்டதற்கு, கிடைக்கும் விளைச்சல் போதும் என்பதால், அவற்றைப் பயன்படுத்தவில்லை என்றனர். மக்கள் தொகை பெருகும்போது அதிக விளைபொருள் தேவைப்படும் அல்லவா? எனவே, தரிசு நிலங்களைப் பயன்படுத்தத் திட்டம் வகுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நிலம் இல்லாதவர்களுக்கு அவற்றை அளித்து, அந்த நிலங்களைப் பண்படுத்தி விளைய வைக்க அவர்களுக்குப் பொருள் உதவியும் செய்யலாம் அல்லவா?" என்றான் மகேந்திரன்.

"நல்ல யோசனை அரசே! உடனே செயல்படுத்துகிறேன்" என்றார் அமைச்சர்.

"இரண்டாவதாக, பெரும்பாலான மக்கள் கல்வி அறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். கல்விதான் ஒருவரைத் தகுதி உள்ளவராக ஆக்கும். எல்லா ஊர்களிலும் கல்விக் கூடங்களை ஏற்படுத்தி, அனைவரும் கல்வி  கற்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்."

"நிச்சயம் செய்ய வேண்டும், அரசே! நானே இது பற்றித் தங்கள் தந்தையிடம் கூறி இருக்கிறேன். இதற்கு அதிக நிதி தேவைப்படும் என்பதால், கடந்த காலத்தில் இதைச் செயல்படுத்த முடியவில்லை. இதை உடனே செயல்படுத்த ஏற்பாடு செய்கிறேன். செய்து முடிக்கச் சிறிது காலம் பிடிக்கும்!" என்றார் அமைச்சர்.

"தாங்கள் கூறுவது எனக்குப் புரிகிறது. அரசாங்கக் கருவூலத்திலிருந்து இதற்காக எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் மூன்றாவதாகச் சொல்ல விரும்பிய விஷயம் பொருள் ஈட்டுவது பற்றித்தான்!"

"சொல்லுங்கள், அரசே!"

"நம் நாட்டு மக்கள் வசதியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், செல்வம் நிலையானதல்ல. அது தேய்ந்து கொண்டே இருக்கும் தன்மை உடையது. செல்வத்தைப் பெருக்கிக் கொண்டே இருந்தால்தான், அது குறையாமல் இருக்கும். எனவே, நாட்டின் செல்வத்தைப் பெருக்கும் வகையில், மக்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபடத் திட்டம் வகுத்து, மக்களைத் தொழில்கள் செய்ய ஊக்குவிக்க வேண்டும். நாம் தயாரிக்கும் பொருட்களைப் பிற நாடுகளுக்கு வர்த்தகம் செய்து, நாம் நிறையப் பொருள் ஈட்டலாமே!"

"அரசே! ஆலோசனைகள் கூற வேண்டியது அமைச்சரின் கடமை. ஆனால், நீங்கள் என் பொறுப்பையும் நிறைவேற்றி விட்டீர்கள். உங்கள் யோசனைகளை விரைவாகச் செயல்படுத்தி, நம் நாட்டைச் சிறந்து விளங்கச் செய்ய வேண்டும் என்ற உங்கள் நோக்கம் நிறைவேற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் முழு வேகத்தில் துவக்குகிறேன்!" என்றார் அமைச்சர்.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு

குறள் 731:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு..

பொருள்: 
குறையாத விளைபொருளும், தக்க அறிஞரும், கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்


1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...