Wednesday, November 30, 2022

844. எல்லாம் தெரிந்தவன்!

"அக்கவுன்ட்ஸ்க்கு எதுக்கு டியூஷன்? நானே சொல்லித் தருவேனே!" என்றான் கிருஷ்ணமணி.

"உங்களுக்கு அக்கவுன்ட்ஸ் தெரியுமா என்ன? நீங்க பி எஸ் சிதானே படிச்சீங்க?" என்றாள் அவன் மனைவி பூர்ணா.

"காலேஜில படிச்சாத்தான் தெரியணுமா? என் ஆஃபீஸ்ல அக்கவுன்ட்ஸ் ஸ்டேட்மென்ட்ஸ் எல்லாம் பாத்திருக்கேனே! எனக்குத் தெரியும்!"

"வேண்டாம்ப்பா! நான் டியூஷனே போய்க்கறேன்" என்றான் அவர்கள் மகன் அட்சய்.

"உன் அக்கவுன்ட்ஸ் புத்தகத்தைக் கொண்டு வா பாக்கறேன்" என்றான் கிருஷ்ணமணி விடாமல்.

"பி காம் படிச்சவங்களுக்கே சொல்லித் தரது கஷ்டமாத்தான் இருக்கும். உங்களால எப்படி முடியும்? அவன் டியூஷனுக்கே போகட்டும்!" என்றாள் பூர்ணா உறுதியாக.

"என்னால முடியும்னா கேக்க மாட்டியே!"

"அன்னிக்கு அப்படித்தான் என் மொபைல் ஸ்லோவா இருக்குன்னு சொன்னேன். நான் சரி பண்றேன்னு சொல்லி ஏதோ செஞ்சீங்க. டேட்டா எல்லாம் போயிடுச்சு. சமையலுக்கு ஐடியா கொடுக்கறேன்னீங்க. நீங்க சொன்னபடி செஞ்சதை நீங்க உட்பட யாருமே சாப்பிடல. மிக்ஸியை சரி பண்றேன்னு சொல்லி பிளேடையெல்லாம் வளைச்சுட்டீங்க. உங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்களை மட்டும் செய்யுங்க. எல்லாம் தெரியும்னு நினைச்சுக்காதீங்க!" என்றாள் பூர்ணா சற்றுக் கோபத்துடன்

"எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். அதைச் சொன்னா நீ ஒத்துக்க மாட்டே!"

"ஒத்துக்கறேன். உங்களுக்கு எல்லாமே தெரியும்னு ஒத்துக்கறேன். ஆனா எதையும் செய்யறேன்னு வந்துடாதீங்க!"

"சார்! " என்று வாசலில் யாரோ அழைத்தார்கள்.

அவர்கள் குடியிருப்பின் பராமரிப்பைப் பார்த்துக் கொள்ளும் ராமலிங்கம்.

"பம்ப்ல தண்ணி குறைச்சலா வருது. ஏதோ வால்வை அட்ஜஸ்ட் பண்ணினா சரியாயிடும்னீங்களே, வந்து பாக்கறீங்களா?" என்றார் ராமலிங்கம்.

கிருஷ்ணமணி ஒருமுறை மனைவியைப் பார்த்து விட்டு, "நான் சரி  செஞ்சுடுவேன். ஆனா நம்மகிட்ட டூல்ஸ் எல்லாம் சரியா இல்ல. எதுக்கும் பிளம்பரையே வந்து பாக்கச் சொல்லிடுங்க!" என்றான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)

குறள் 844:
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

பொருள்: 
ஒருவன் தன்னைத் தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்துக்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...