சேதுபதி வேறு வேலைக்குத் தீவிரமாக முயற்சி செய்தான். ஆயினும், வேலையை இழந்து மூன்று மாதங்களுக்குப் பிறகும், அவனுக்கு வேறு வேலை கிடைக்கவில்லை.
ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குப் போன இடத்தில், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சபரியைச் சந்தித்தபோது, சேதுபதிக்கு வியப்பு ஏற்பட்டது.
சபரி அவனுடன் கல்லூரியில் படித்தவன். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, இருவருக்கும் தொடர்பு விட்டுப் போய் விட்டது.
"என்னடா சேதுபதி! நீ என் கம்பெனிக்கு இன்டர்வியூவுக்கு வருவேன்னு நான் எதிர்பார்க்கல!" என்றான் சபரி.
"நானும்தான்!" என்ற சேதுபதி, சற்றுத் தயங்கி விட்டு, "உங்களை ஒரு கம்பெனியோட மானேஜிங் டைரக்டராப் பாக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றான்.
"என்னடா வாங்க, போங்கல்லாம்? நீ என் கம்பெனியில வேலை செய்யறதா இருந்தாலும், என்னை வா, போன்னே பேசலாம்!"
"அப்படின்னா, எனக்கு இங்கே வேலை உண்டா?" என்றான் சேதுபதி, சிரித்தபடி.
"உனக்கு இல்லாமயா?" என்ற சபரி, "உனக்கு ஸ்பெஷலா ஒரு ஆஃபர் கொடுக்கலாம்னு பாக்கறேன். சாயந்திரம் வீட்டுக்கு வா" என்று கூறித் தன் வீட்டு முகவரி இருந்த விசிடிங் கார்டைக் கொடுத்தான்..
அன்று மாலை, சபரி வீட்டுக்கு சேதுபதி சென்றதும், முதலில் சேதுபதியிடம் அவன் பார்த்த வேலை பற்றிய விவரங்களைக் கேட்டு அறிந்தபின், தன் பின்னணியைப் பற்றிக் கூறினான் சபரி.
"பிசினஸ் ரொம்ப நல்லாப் போய்க்கிட்டிருக்கு. இப்ப பிசினஸை விரிவாக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, வருமான வரிப் பிரச்னைதான் பெரிசா இருக்கு. ஏற்கெனவே, பிசினஸ்ல ஒரு பகுதியைக் கணக்கில காட்டாமதான் செய்யறேன். இதுக்கு மேலயும் கணக்குல வராம பிசினஸ் பண்றது ரிஸ்க். அதனால, வேற யார் பேரிலயாவது பண்ணணும்னு பாத்துக்கிட்டிருக்கேன். சரியான சமயத்திலதான் நீ வந்திருக்க" என்றான் சபரி.
"நீ என்ன சொல்ற?"
"என்னோடது பிரைவேட் லிமிடட் கம்பெனி. இப்ப உன் பேரில ஒரு புரொப்டர்ஷிப் கம்பெனி ஆரம்பிச்சு, அதில கொஞ்சம் பிசினஸ் பண்ணலாம்னு பாக்கறேன்."
"அது எப்படி? முதல்ல, எங்கிட்ட முதலீடு செய்யப் பணம் இல்ல. அதோட, அது உனக்கு எப்படி உதவும்?" என்றான் சேதுபதி.
"நீ எந்த முதலீடும் செய்ய வேண்டாம். நான்தான் பணம் போடப் போறேன். ஆனா கணக்கில, கொஞ்சத் தொகையை உன்னோட முதலீடு மாதிரியும், மீதியைக் கடன் மாதிரியும் காட்டிக்கலாம். புரொப்ரைடர்ஷிப் கம்பெனிங்கறதால நிறைய ரொக்கப் பரிவர்த்தனை பண்ணி, விற்பனையையும், லாபத்தையும் குறைச்சுக் காட்டலாம். உனக்கு சம்பளம் கிடைக்கும். அதைத் தவிர, லாபத்தில கொஞ்சம் பங்கும் கொடுக்கறேன். பிராக்டிகலா, நீ என் கம்பெனியில வேலை பாத்துக்கிட்டுத்தான் இருப்ப. ஆனா, புரொப்ரைட்டர்னு பேர் இருக்கும். அதிகப் பணமும் கிடைக்கும். என்ன சொல்ற?" என்றான் சபரி.
"இந்த ஏற்பாடு இல்லாம, எனக்கு வேலை கொடுக்க முடியுமா?"
"ஏண்டா, கரும்பையும் கொடுத்து, அதைத் தின்னக் கூலியும் கொடுக்கறேன்னு சொல்றேன். உனக்குக் கசக்குதா? வேலை பாக்கப் போற. அதோட, புரொப்ரைட்டர்ங்கற அந்தஸ்து. புரொப்ரைட்டர்னு விசிட்டிங் கார்டு அடிச்சுக்கிட்டு, எல்லார்கிட்டேயும் பெருமையாக் காட்டலாம். ஆஃபீஸ்ல, உனக்குத் தனி கேபின் வேணும்னாலும் கொடுக்கறேன்."
"சாரி! இது மாதிரி தப்பான விஷயத்தில என்னால ஈடுபட முடியாது. எனக்கு வேலை மட்டும் கொடுத்தா போதும்" என்றான் சேதுபதி.
"சாரி. நான் வேலைக்கு ஆள் தேடல. முதலாளியா இருக்க ஒரு ஆளைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்!" என்றான் சபரி, சற்று அதிருப்தியான குரலில்.
சேதுபதி எழுந்தான். எப்போது வேலை கிடைக்குமோ என்ற கவலை அவனை அழுத்த, மெதுவாக வெளியே நடந்தான்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை
குறள் 654;
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
பொருள்:
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள், துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக் கூட, இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.
No comments:
Post a Comment