Friday, August 14, 2020

418. வியக்க வைக்கும் திறமை!

"நம்ப கணபதி இருக்கானே அவனுக்குக் காது ரொம்ப கூர்மை. தூரத்திலேந்து யாராவது பேசினா கூட அதைத் துல்லியமாக் கேட்டுடுவான்!" என்றான் கிருஷ்ணன்

"அப்ப அவனுக்குப் பக்கத்து வீடுகள்ள இருக்கறவங்க ரொம்ப கவனமாத்தான் பேசணும்!" என்றான் சுரேஷ்.

"பக்கத்து வீட்டில இருக்கறவங்களை விடு, இவன் வீட்டில இருக்கறவங்களே அவன் இருக்கறப்ப கவனமாத்தான் பேசுவாங்களாம்! ஒரு நாளக்கு நான் அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். நானும் அவனும் ஹால்ல உக்காந்து பேசிக்கிட்டிருந்தோம். அப்ப உள்ள அறைக்குள்ள இருந்த அவன் தம்பிக்கு ஃபோன் வந்திருக்கும் போலருக்கு. ஃபோனை எடுத்துக்கிட்டு வெளியில போயிட்டான். அறைக்குள்ளேந்து பேசினா கூட கணபதிக்குக் காதில விழுந்துடும்னு பயம் போலருக்கு!"

"இது கொஞ்சம் ஓவரா இல்ல? சும்மா கதை விடாதே!"

"கதை இல்லடா, உண்மைதான். அது மட்டும் இல்ல. ஒரு விஷயத்தைக் கேட்டா அப்படியே அவன் மனசில பதிஞ்சுடுமாம்."

"அப்படி இருந்தா அது ஒரு பெரிய கிஃப்ட்தான்!" என்றான் சுரேஷ்

கிருஷ்ணன் கூறியது உண்மைதான் என்று சுரேஷ் உணர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

அவர்கள் கல்லூரி ஆண்டு விழாவில் ஒரு போட்டி நடந்தது. ஒரு திரைப்படப் பாடலின் துவக்க இசை ஒலிபரப்பப்படும். அது எந்தப் பாடல் என்று கண்டுபிடித்து அந்தப் பாடலின் முதல் வரியைக் கூற வேண்டும் என்பது போட்டி.

எல்லோரும் வியக்கும் வகையில் அநேகமாக எல்லாப் பாடல்களுக்குமே ஆரம்ப இசை ஒலிக்கத் துவங்கிய ஒரு சில விநாடிகளுக்குள்ளேயே பாடல் வரியைச் சொல்லி முதல் பரிசை வென்று விட்டான் கணபதி.

"எப்படிடா? இத்தனைக்கும் நீ சினிமாப் பாட்டெல்லாம் அதிகம் கேக்கறதில்லையே!" என்றான் சுரேஷ்.

"ஒண்ணு ரெண்டு தடவை கேட்டிருப்பேன்ல? அதை வச்சுதான் சொன்னேன்!" என்றான் கணபதி, அது ஏதோ எளிதான விஷயம் போல்.

கல்லூரியில் ஒரு சயன்ஸ் க்விஸ் வைத்திருந்தார்கள். அதில் சுரேஷ் கணபதியைத் தன் பார்ட்னராக வைத்துக் கொண்டான். ஆனால் அவர்கள் இருவரும் அடங்கிய குழுவால் பெரும்பாலான கேள்விகளுக்கு விடை சொல்ல முடியவில்லை. அவர்கள் குழுவுக்கு மிகக் குறைந்த மதிப்பெண்களே கிடைத்தன.

"கணபதிக்கு நிறைய கேள்விகளுக்கு விடை தெரிஞ்சிருக்கும்னு நினைச்சு அவனை என் பார்ட்னரா வச்சுக்கிட்டேன். ஆனா எனக்குத் தெரிஞ்சது கூட அவனுக்குத் தெரியல!" என்றான் சுரேஷ் கிருஷ்ணனிடம்.

"அவனை நீ பார்ட்னராத் தேர்ந்தெடுத்தது தப்பான சாய்ஸ்!" என்றான் கிருஷ்ணன்.

"நீதானே சொன்னே, அவன் எதையாவது கேட்டா அவன் மனசில ஆழமாப் பதிஞ்சுடும், மறக்காதுன்னு?"

"ஆமாம். ஆனா, கேட்டாதானே? அவன்தான் கிளாசுக்கே வரதில்லையே! அப்புறம் எங்கே லெக்சரைக் கேக்கறது, ஞாபகம் வச்சுக்கறது? பரீட்சைக்கு முன்னால புத்தகத்தைப் படிச்சுப் பரீட்சை எழுதி பாஸ் மார்க் வாங்கப் பாக்கற ஆளு அவன்!" என்றான் கிருஷ்ணன்.

"இப்படி ஒரு திறமை இருந்து என்ன பிரயோசனம்? அதைப் பயன்படுத்திக்காம இருக்கானே!" என்றான் சுரேஷ். 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 42
கேள்வி 
குறள் 418:
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

பொருள்:
கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள் கேட்கும் சக்தி கொண்டிருந்தாலும் அவை கேளாத செவிகள் என்றே கருதப்பட வேண்டும்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...