"என்ன செய்தி?" என்றான் குந்தள நாட்டு அரசன் ரவிவர்மன்.
"மந்தார நாட்டின் கோட்டை வலுவாகக் கட்டப்பட்டிருக்கிறது. அதை வெளியிலிருந்து தகர்ப்பது கடினம்..."
"ஆயினும்...?" என்றான் அரசன், மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன்..
"ஆனால், கோட்டைக்குள் நிலைமை மிகவும் பலவீனமாக இருக்கிறது. பொதுவாக, ஒரு கோட்டைக்குள் பெரும் தானியக் கிடங்குகள் இருக்கும். முற்றுகைக் காலத்தில் பயன்படுத்துவதற்காக, அவற்றில் நிறைய தானியங்களைச் சேமித்து வைத்திருப்பார்கள்."
"நம் நாட்டில் அப்படித்தானே செய்திருக்கிறோம்!"
"ஆனால், குந்தள நாட்டின் கோட்டைக்குள் பெரிய தானியக் கிடங்குகள் எதுவும் இல்லை. அத்துடன், கோட்டைக்குள் படைவீரர்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள். படைக்கலங்களுக்கான கிடங்கும் சிறிதாகவே இருக்கிறது. எனவே, நாம் முற்றுகையிட்டால், உள்ளே தானியச் சேமிப்பு இல்லாத நிலையில், அவர்களால் அதிக நாள் தாக்குப் பிடிக்க முடியாது. அத்துடன், குறைந்த அளவு படைக்கன்களையும், குறைவான எண்ணிக்கையில் படைவீரர்களையும் வைத்துக் கொண்டு, அவர்களால் நம்முடன் போரிடவும் முடியாது!" என்றான் ஒற்றர்படைத் தலைவன், உற்சாகத்துடன்.
"அப்படியானால், மந்தார நாட்டின் மீது உடனே படையெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!" என்றான் அரசன், படைத்தலைவனைப் பார்த்து.
மந்தார நாட்டின் கோட்டைக்கு வெளியே குந்தள நாட்டுப் படைகள் முற்றுகையிட்டிருந்தன.
நான்கு நாட்களுக்கு, கோட்டைக்குள்ளிருந்து எந்த எதிர்த் தாக்குதலும் வரவில்லை. கோட்டை வலுவாக இருந்ததால், வெளியிலிருந்து கோட்டையைத் தகர்க்கும் முயற்சியில் குந்தள நாட்டுப் படைத்தலைவன் ஈடுபடவில்லை.
"எப்படியும், முற்றுகையைச் சமாளிக்க முடியாமல் மந்தார நாடு நம்மிடம் சரணடையத்தான் போகிறது. சில நாட்கள் காத்திருப்போம்!" என்றான் படைத்தலைவன், படையின் முன்னணித் தலைவர்களிடம்.
ஐந்தாம் நாள் அதிகாலை வேளையில், கோட்டைக்குள்ளிருந்து அம்புகளும், ஈட்டிகளும் பறந்து வந்தன. கூடாரங்களில் உறங்கிக் கொண்டிருந்த குந்தள நாட்டுப் படைவீரர்கள் அலறி அடித்துக் கொண்டு எழுந்து, தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.
"நாம் நினைத்தது சரிதான். தானிய இருப்பு நான்கு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான், நம்மை அச்சுறுத்தலாம் என்று எண்ணித் தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் அதிக வீரர்களோ, படைக்கலன்களோ இல்லை. அதனால், இந்தத் தாக்குதலை அவர்களால் நீண்ட காலம் தொடர முடியாது. விரைவிலேயே அவர்கள் சரணடைந்து விடுவார்கள். தைரியமாகப் போராடி, அவர்கள் தாக்குதலை முறியடிப்போம்!" என்றான் படைத்தலைவன்.
ஆனால் இரண்டு நாட்கள் முடிவில், குந்தள நாட்டுப் படைகளுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டிருந்தது. மந்தார நாட்டு வீரர்கள் தொடர்ந்து கோட்டைக்குள்ளிருந்து தங்கள் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தனர்.
மூன்றாம் நாள் மாலை, தங்கள் படையில் கணிசமான வீரர்களை இழந்த நிலையில், குந்தள நாட்டுப்படை முற்றுகையை முடித்துக் கொண்டு, தங்கள் நாட்டுக்குத் திரும்பியது.
"குந்தள நாட்டுப் படையின் முற்றுகையை நாம் வெற்றிகரமாக முறியடித்து விட்டோம். நம் படைத்தலைவருக்கும், வீரர்களுக்கும் பாராட்டுக்கள்!" என்றார் மந்தார நாட்டு அமைச்சர்.
"இதற்கு முக்கியக் காரணம் நம் அமைச்சரின் தீக்கதரிசன சிந்தனைதான்!" என்றான் மந்தார நாட்டின் படைத்தலைவன்.
"ஆமாம். கோட்டைக்குள் இருக்கும் வீரர்களில் பெரும்பாலானோரைச் சாதாரணக் குடிமக்கள் போல் கோட்டைக்குள் தங்க வைத்து, அவர்கள் விடுகளுக்குள்ளேயே தானியங்களைய்ம், ஆயுதங்களையும் சேமித்து வைப்பதற்கான சிறிய கிடங்குகளை ஏற்படுத்தி, கோட்டைக்குள் வந்து பார்க்கும் எவருக்கும் கோட்டைக்குள் தானிய சேமிப்புக் கிடங்குகளோ, ஆயதக் கிடங்குகளோ இல்லை, கோட்டைக்குள் அதிக வீரர்களும் இல்லை என்ற தவறான புரிதலை ஏற்படுத்தி, முற்றுகை இடுபவர்களைச் சில நாட்கள் காத்திருக்க வைத்து, அதன் பிறகு அவர்கள் அதிர்ச்சி அடையும் விதத்தில் அவர்களைத் தாக்குவது என்ற அமைச்சரின் உத்தியின்படி கோட்டை அமைப்பை உருவாக்கியதால்தானே நம்மால் குந்தள நாட்டின் பெரிய படையின் முற்றுகையை முறியடித்து, அவர்களைப் பின்வாங்கச் செய்ய முடிந்தது!" என்றான் அரசன், அமைச்சரைப் பெருமையுடன் பார்த்து.
பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்
குறள் 746:
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
No comments:
Post a Comment