தர்மசேனர் பல நாடுகளுக்கும் சென்று வரும் பயணி. தான் சமீபத்தில் சென்று வந்த குமார தேசத்தின் தலைநகரில் இருந்த கோட்டையைப் பற்றித்தான் இன்னொரு நாட்டில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சில பயணிகளிடம் அவர் இவ்வாறு கூறிக் கொண்டிருந்தார்.
சற்றுத் தள்ளி நின்று தர்மசேனர் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதன், அவர் அருகில் வந்து அவருடைய கையை இறுக்கமாகப் பிடித்து, அவர் காதுக்குள், "ஐயா! நான் அரசாங்க ஒற்றன். குமார தேசத்தின் கோட்டையைப் பற்றிய பெருமையை மன்னரே உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறார். என்னுடன் வருகிறீர்களா?" என்று கூறி அவரை அழைத்துச் சென்றான்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு தர்மசேனர் அரண்மனை சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தபோது அவர் உடலில் காயங்கள் இருந்தன.
"படைத்தலைவரே! குமார தேசத்துக்குச் சென்று வந்த பயணியிடமிருந்து அந்த நாட்டின் தலைநகரில் உள்ள கோட்டையைப் பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு விட்டோம். அவர் எதையும் மறந்து விடாமல் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்பதற்காக அவரைக் கொஞ்சம் அதிகமாகவே கவனிக்க வேண்டி இருந்து விட்டது!அவரிடமிருந்து கிடைத்த விவரங்களை வைத்து நாம் அந்தக் கோட்டையைத் தாக்க முடியும் அல்லவா?" என்றான் அரசன்.
"நிச்சயமாக அரசே! கோட்டை அமைப்பைப் பார்க்கும்போது குமார தேசத்து மன்னர்கள் எப்படிப்பட்ட கோழைகளாக இருந்திருக்கிறர்கள் என்று தெரிகிறது. யாராவது போர் தொடுத்தால் பல மாதங்கள் கோட்டைக்குள்ளேயே ஒளிந்திருந்து வெளியே நிற்கும் படைகள் சலிப்படைந்து திரும்பிப் போக வேண்டும் என்ற நோக்கில் கட்டப்பட்டிருக்கிறது அந்தக் கோட்டை. நாம் பல மாதங்கள் காத்திருக்கும் அளவுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டு கோட்டைக்கு வெளியே காத்திருந்தால் சரணடைவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை!" என்றான் படைத்தலைவன்.
"அப்படியனால் விரைவிலேயே குமார தேசத்துக் கோட்டையை முற்றுகை இடுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்குங்கள்!" என்றான் அரசன்.
"என்ன படைத்தலைவரே! கோட்டையை முற்றுகையிட்டு, பல மாதங்கள் ஆனாலும் பொறுமையாகக் காத்திருந்து கோட்டைக்குள் ஒளிந்திருப்பவர்களைச் சரணடையச் செய்வேன் என்று சொல்லி விட்டுப் போனீர்கள். இப்போது முற்றுகையைக் கைவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடி வந்திருக்கிறீர்களே!" என்றான் அரசன் கோபத்துடனும், எகத்தாளத்துடனும்.
"மன்னிக்க வேண்டும் அரசே! ஒரு பயணி சொன்ன விவரங்களை வைத்து நாம் அந்தக் கோட்டையை முற்றுகையிட்டது தவறாகப் போய் விட்டது. அந்தக் கோட்டை உள்ளே இருப்பவர்களின் பாதுகாப்புக்காக மட்டும் கட்டப்படவில்லை. வெளியே முற்றுகை இடுபவர்களைப் பல்முனைகளிலிருந்தும் தாக்க உதவும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. கோட்டையின் மேற்புறத்திலிருந்து தூரத்திலிருந்து தெரியாத துளைகள் மூலம் நம் படைகள் மீது அம்பு மழை பொழிந்தது. நாம் சுதாகரித்துக் கொள்வதற்குள் கோட்டைக்குள்ளிருந்த ரகசிய சுரங்கப் பாதை வழியே வெளியே வந்த, தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களைக் கொண்ட ஒரு சிறிய படை பூமியிலிருந்து முளைப்பது போல் திடீரென்று நம் படைகளுக்கு நடுவே வந்து நம் படைகளைத் தாக்கத் துவங்கி விட்டது. தாக்குதலை நம் படைகளால் சமாளிக்க முடியவில்லை!" என்று தலையைக் குனிந்து கொண்டே கூறினான் படைத்தலைவன்.
பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்
குறள் 745:
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.
No comments:
Post a Comment