Friday, March 31, 2023

747. "பாதுகாப்பு வல்லுனர்"

"அரசே! பாதுகாப்பு வல்லுனர் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் இந்த மனிதரின் ஆலோசனையை நாம் கேட்க வேண்டுமா என்ன?" என்றார் அமைச்சர்.

"இதற்கு முன் இரண்டு நாடுகளுக்குப் பாதுகாப்பு அமைப்பு பற்றி ஆலோசனை கூறி இருப்பதாகவும், அவர் யோசனையைக் கேட்டு அவர்கள் தங்கள் கோட்டைகளை வலுப்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறுகிறார். அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுக் கொள்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். அவரை வரச் சொல்லுங்கள். உங்களையும், என்னையும் தவிர, கோட்டைத் தலைவரும், படைத் தலைவரும் கூட இருக்கட்டும்!" என்றான் அரசன்.

"அரசே! ஒரு கோட்டை இரண்டு விதங்களில் பாதுகாப்பு அளிக்க வேண்டும். எதிரி நாட்டுப் படைகளால் தாக்கப்படமுடியாத அளவுக்கு வலுவாக இருக்க வேண்டும். அதனால் தாக்க வரும் படைகள் கோட்டையை முற்றுகை இடுவார்கள். அந்த முற்றுகையை நீண்ட காலம் தாக்குப் பிடிக்கும் அளவுக்குக் கோட்டைக்குள் வசதிகள் இருக்க வேண்டும்.

"இரண்டாவதாக, ஒருவேளை எதிரி நாட்டுப் படைகள் நம் கோட்டைக்குள் நுழைந்து விட்டால், அர்களுடைய தாக்குதலை எதிர்கொள்ளும் வலுவும் நமக்கு இருக்க வேண்டும்!"

"அற்புதமான யோசனைகள் வல்லுனரே! ஆனால் எல்லா நாட்டின் கோட்டைகளுமே இந்த இரண்டு நோக்கங்களையும் கருத்தில் கொண்டுதானே அமைக்கப்பட்டிருக்கும்?" என்றான் அரசன்.

"உண்மைதான் அரசே! ஆயினும் கோட்டைகளைக் கட்டமைக்கும்போது சில பலவீனங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். கோட்டையைச் சுற்றி பார்க்க என்னை அனுமதித்தால் நான் அந்த பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றைப் போக்குவதற்கான வழிகளைக் கூறுவேன்" என்றார் வல்லுனர்.

"அப்படியே செய்து விடலாம். கோட்டைத் தலைவரே! வல்லுனருக்குக் கோட்டையைச் சுற்றிக் காட்டுங்கள். அப்போதுதான் அவர் கோட்டையில் உள்ள அமைப்புகளை  நன்கு பார்த்து அவற்றை நம் எதிரி நாட்டு மன்னரிடம் எடுத்துச் சொல்ல முடியும்!" என்றான் அரசன் சிரித்தபடி.

"அரசே!" என்றார் வல்லுனர் திடுக்கிட்டு.

"வல்லுனரே! கோட்டையை முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ தாக்குவதைத் தவிர மூன்றாவதாக ஒரு வழி இருக்கிறது. அதுதான் வஞ்சனை மூலம் கோட்டையின் ரகசியங்களைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது. அதற்காகத்தான் எங்கள் எதிரி ஒற்றரான உங்களை ஒரு வல்லுனர் போல் அனுப்பி இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் மன்னர் உங்களிடம் சற்று விளையாடிப் பார்க்க நினைத்தார். அவ்வளவுதான்!" என்றார் அமைச்சர் சிரித்தபடி.

"துரதிர்ஷ்டவசமாக உங்களால் கோட்டையைப் பார்க்க முடியாது. நீங்கள் பார்க்கப் போவது எங்கள் பாதாளச் சிறையைத்தான். உங்கள் நாட்டுச் சிறை அளவுக்கு அது வசதியாக இருக்குமா என்று தெரியாது" என்ற அரசன் கோட்டைத் தலைவனைப் பார்த்துக் கண்ணசைக்க, கோட்டைத் தலைவன் "வல்லுனரை" சிறைக்கு அழைத்துச் செல்லக் காவலர்களை அழைத்தான்.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்

குறள் 747:
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.

பொருள்: 
முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

 


 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...