Friday, March 17, 2023

741. எதிர்பாராத படையெடுப்பு

"அரசே! நம் அண்டை நாட்டு மன்னர் வீரகேசரி கோட்டையிலிருந்து பல குடும்பங்களை வெளியேற்றி அவர்களைக் கோட்டைக்கு வெளியே குடியமர்த்திக் கொண்டிருக்கிறாராம்" என்றார் அமைச்சர்.

"இதற்கான காரணம் உங்களுக்குப் புரிகிறதா அமைச்சரே?" என்றான் மன்னன் கீர்த்திவளவன்.

"நாம் அவர்கள் மீது படையெடுக்கப் போகிறோம் என்று அஞ்சுகிறார் என்று நினைக்கிறேன். அதனால்தான் கோட்டைக்குள் குறைவான எண்ணிக்கையில் நபர்கள் இருந்தால் கோட்டைக்குள் அதிக காலம் இருந்து கொண்டு நம் முற்றுகையைச் சமாளிக்க முடியும் என்று நினைத்துத் திட்டமிடுகிறார் என்று எண்ணுகிறேன்" என்றார் அமைச்சர்.

"சரியாகச் சொன்னீர்கள் அமைச்சரே! பெயர்தான் வீரகேசரி. ஆனால் உண்மையில் பெரிய கோழை. நமக்கு அவர்கள் மீது  படையெடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. ஆனால் அப்படி நினைத்துக் கொண்டு அவர்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கட்டும். அவர்கள் பயத்தை நாம் ரசித்துக் கொண்டிருக்கலாம்!" என்றான் கீர்த்திவளவன் உரக்கச் சிரித்தபடி.

"என்ன அமைச்சரே இது? திடீரென்று வீரகேசரி நம் மீது படையெடுத்து வந்திருக்கிறான்! நாம் இதை எதிர்பார்க்கவில்லையே! நம் ஒற்றர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?" என்றான் கீர்த்திவளவன் அதிர்ச்சியுடனும், கோபத்துடனும்..

"நாம் நினைத்தது போல் வீரகேசரி நம் படையெடுப்பை எதிர்பார்த்து பயந்து கோட்டையிலிருந்து பலரை வெளியேற்றவில்லை, நம் மீது படையெடுப்பதற்கான ஏற்பாடுகளை ரகசியமாகச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் சாதாரண மக்களைக் கோட்டைக்குள்ளிருந்து வெளியேற்றி விட்டு, ஆயுதங்கள் தயாரித்தல், படைகளுக்குப் பயிற்சியளித்தல் போன்றவற்றை மட்டும் கோட்டைக்குள் செய்து கொண்டிருந்திருக்கிக்கிறார். போருக்கான எல்லா ஏற்பாடுகளும் கோட்டைக்குள் நடந்ததாலும், சாதாரண மக்கள் ஒரு சிலரே கோட்டைக்குள் இருந்ததாலும் கோட்டைக்குள் நடப்பவற்றை நம் ஒற்றர்களால் கண்டறிய முடியவில்லை!" என்று கூறிய அமைச்சர், 'கோட்டைஎன்பது எதிரியின் படையெடுப்பின்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இடம் மட்டுமல்ல, எதிரியின் மீது போர் தொடுப்பதற்கான ஏற்பாடுகளை சத்தமில்லாமல் செய்யும் இடம் கூட என்பதை வீரகேசரி புரிந்து வைத்திருக்கிறார்!" என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்..

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்

குறள் 741:
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

பொருள்: 
பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...