Friday, March 17, 2023

682. வெளிநாட்டு தூதர்

"ஒரு பெரிய நாட்டுக்கு தூதரா போற வாய்ப்பு யாருக்குக் கிடக்கும்னு தெரியல. மூணு பேரை ஷார்ட்லிஸ்ட் பண்ணி இருக்காங்களாம். ஆனா மூணு பெயர்களையும் பார்த்த உடனேயே யாருக்கு இந்தப் பதவி கிடைக்கும்னு நான் ஊகிச்சுட்டேன்!"

"யாருக்குக் கிடைக்கும்?"

"சந்திரமூர்த்திக்குத்தான்!"

"எதை வச்சு சொல்றீங்க?"

"சந்திரமூர்த்தி பிரதமருக்கு நல்லா தெரிஞ்சவரு. பிரதமர் நிதி அமைச்சரா இருந்தப்ப, சந்திரமூர்த்தி நிதித்துறைச் செயலரா இருந்தாரு. அப்ப ரெண்டு பேரும் ரொம்ப இணக்கமா பணியாற்றினாங்க."

"மற்ற ரெண்டு பேரும் கூட திறமையும் அனுபவமும் உள்ளவங்கதானே?"

"மூணு பேருமே சிறந்த கேண்டிடேட்ஸ்தான். அதனலதானே அவங்களை ஷார்ட்லிஸ்ட் பண்ணி இருக்காங்க! ஆனாலும் சந்திரமூர்த்திக்குத்தான் கிடைக்கும். நீங்க வேணும்னா பாருங்க!"

"நீங்க சொல்றது சரியா இருக்கலாம். ஆனா எனக்கென்னவோ மத்த ரெண்டு பேர்ல ஒத்தருக்குத்தான் கிடைக்கும்னு தோணுது!"

"மத்த ரெண்டு பேர்ல யாரு?"

"ரெண்டு பேரில யாரா வேணும்னா இருக்கலாம். ஆனா சந்திரமூர்த்தியை விட அவங்க ரெண்டு பேர்ல ஒத்தருக்குத்தான் அதிக வாய்ப்புன்னு எனக்குத் தோணுது!"

"எதனால அப்படி நினைக்கிறீங்கன்னு சொல்ல மாட்டீங்களா?"

"சொல்லலாம். மூணு பேருக்கும் பொதுவா ரெண்டு குணங்கள் இருக்கு. மூணு பேருமே அறிவாளிகள், விஷயம் தெரிஞ்சவங்க, மத்தவங்ககிட்ட அக்கறையோட இனிமையாப் பழகுவாங்க. ஆனா இன்னொரு முக்கியமான குணம் சந்திரமூர்த்திகிட்ட இல்ல. மத்த ரெண்டு பேர்கிட்டேயும் இருக்கு. அதனாலதான் அவங்க ரெண்டு பேர்ல ஒத்தருக்குத்தான் வாய்ப்புன்னு நான் நினைக்கறேன்!"

"அது என்ன குணம்?"

"அதை இப்ப நான் சொன்னா சரியா இருக்காது. ஒருவேளை சந்திரமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டா, அந்த குணத்தைப் பத்தி என்னோட புரிதல் தப்புன்னு நினைச்சுப்பேன். வேற ஒத்தர் தேர்ந்தெடுக்கப்பட்டா என்னோட புரிதல் சரின்னு ஆகும். அந்த குணம் என்னங்கறதை அப்ப நான் சொல்றேன்!"

"இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள அறிவிப்பு வரும்னு சொல்றாங்க. அறிவிப்பு வந்தவுடனே நான் உங்களுக்கு ஃபோன் பண்றேன்." 

"ஹலோ! கங்கிராசுலேஷன்ஸ்! உங்க கணிப்பு சரியாயிடுச்சு. சந்திரமூர்த்தி தேர்ந்தெடுக்கப்படல. சந்திரமூர்த்திகிட்ட இல்லைன்னு நீங்க குறிப்பிட்ட அந்த குணம் என்னன்னு இப்ப சொல்றீங்களா?"

"சொல்றேன். ஒரு தூதருக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்கள், ஒண்ணு - மத்தவங்ககிட்ட அன்போடயும், புரிதலோடயும் நடந்துக்கறது, இரண்டாவது - நுணுக்கமான அறிவு, மூணாவது - பேசும்போது ஆராய்ந்து பேசறது. இந்த மூணாவது குணம் சந்திரமூர்த்திகிட்ட அவ்வளவு வலுவா இல்லேன்னு நினைக்கிறேன். அதனாலதான் அவர் தேர்ந்தெடுக்கப்படற வாய்ப்பு குறைவுன்னு நினைச்சேன்."

"சந்திரமூர்த்திகிட்ட இந்த குணம் இல்லேன்னு எப்படி சொல்றீங்க?"

"நீங்களே சொன்னீங்க இல்ல, பிரதமர் நிதி அமைச்சரா இருந்தப்ப சந்திரமூர்த்தி நிதித்துறைச் செயலரா இருந்தாரு, அப்ப ரெண்டு பேரும் ரொம்ப இணக்கமா செயல்பட்டாங்கன்னு?"

"ஆமாம். அது அவருக்கு சாதகமான விஷயம்னுதானே நான் சொன்னேன்?"

"ரெண்டு பேரும் இணக்கமா இருந்தது உண்மைதான். ஆனா சந்திரமூர்த்தி சில சமயங்கள்ள சரியா யோசிக்காம தெரிவித்த சில கருத்துக்களினால அன்றைய நிதி அமைச்சருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டன. மத்தவங்க அதை மறந்திருக்கலாம். ஆனா அப்ப நிதி அமைச்சரா இருந்து இப்ப பிரதமரா இருக்கறவரு அதையெல்லாம் மறந்திருக்க மாட்டார், இல்ல? வெளிநாட்டு தூதரா இருக்கறப்ப கவனக் குறைவா ஒரு வார்த்தை பேசினாலும் பெரிய பிரச்னை ஆயிடுமே! அதனாலதான் சந்திரமூர்த்தி தேர்ந்தெடுக்கப்படறதுக்கான வாய்ப்பு குறைவுன்னு நான் நினைச்சேன்!"

"மறுபடியும் வாழ்த்துக்கள் உங்களோட ஆழமான பார்வைக்காக!"

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 69
தூது

குறள் 682:
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

பொருள்:
அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

குறள் 683 (விரைவில்)
      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...