Sunday, February 12, 2023

862. படை உதவி

"அரசே! காளிங்க நாட்டு மன்னர் ஓலை அனுப்பி இருக்கிறார். நந்தி நாடு அவர்கள் மேல் படையெடுத்து வரத் தயாராகிக் கொண்டிருக்கிறதாம். நம் படையை உடனே அனுப்பி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்."

"காளிங்க நாட்டு மன்னர் என் உற்ற நண்பர். அவர் உதவி கேட்டால் செய்யாமல் இருக்க முடியுமா? நம் படைகளில் ஒரு பகுதியை உடனே அனுப்புங்கள்!"

"அரசே! மன்னிக்க வேண்டும். தற்போதைய சூழலில் காளிங்க நாட்டுக்கு உதவியாக நம் படைகளை அனுப்புவது உசிதம் அல்ல என்பது என் பணிவான கருத்து!"

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் அமைச்சரே? நந்தி நாட்டின் படை வலிமை வாய்ந்தது என்று அஞ்சுகிறீர்களா? நம் இரு நாட்டுப் படைகளும் சேர்ந்து போரிட்டால் நந்தி நாட்டுப் படைகளை முறியடிக்க முடியாதா?"

"நந்தி நாட்டின் படை வலிமை வாய்ந்தது என்பதால் மட்டும் நான் அப்படிச் சொல்லவில்லை. காளிங்க நாடு மிகவும் வலுவற்ற நிலையில் இருக்கிறது. அவர்களால் போரில் வெல்ல முடியாது. அவர்களுக்கு உதவியாகப் போனால் நம் படைகளுக்கும் சேதம்தான் ஏற்படும்."

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? காளிங்க நாட்டின் படை வலிமை வாய்ந்ததுதானே! போரில் அவர்களால் வெல்ல முடியாது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?"

"காளிங்க நாட்டின் படை வலிமையை நான் குறைத்து மதிப்பிடவில்லை அரசே. அந்த நாட்டின் நிலையை வைத்துச் சொல்கிறேன்!"

"நீங்கள் சொல்வது புரியவில்லை அமைச்சரே!"

"அரசே! தங்கள் நண்பரைப் பற்றி நான் தவறாகக் கூறுவதாக நினைக்கக் கூடாது. உண்மை நிலையைக் கூறுகிறேன். தாங்கள் நம் நாட்டு மக்கள் மீது எவ்வளவு அன்பு செலுத்துகிறீர்கள்! மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தி அவற்றைத் தீர்க்கும் வகை பற்றிச் சிந்திக்கிறீர்கள். ஆனால் காளிங்க நாட்டு மன்னர் மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாமல் இருக்கிறார். மக்கள் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தான் இன்னும் அதிக உல்லாசமாக வாழ்வதற்கான செயல்களை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார். அதனால் மக்கள் அரசரின் மீது கோபமும் வெறுப்பும் கொண்டிருக்கிறார்கள். நம் ஒற்றர்கள் அளிக்கும் தகவல் இது!"

"நானும் இது பற்றிக் கேள்வியுற்றேன். ஆனால் இதனால் மட்டும் அவர்கள் போரில் தோற்று விடுவார்கள் என்ன்று சொல்ல முடியுமா?"

"வேறு காரணங்களும் இருக்கின்றன அரசே. காளிங்க நாட்டு மன்னர் தங்ளைப் போல் ஆற்றல் மிகுந்தவர் அல்ல என்பது மற்றொரு காரணம்."

"என்னைப்  புகழ வேண்டாம் அமைச்சரே!"

"நான் கூறியது தவறுதான் அரசே! அவர் தங்களுடன் ஒப்பிடத் தக்கவரே அல்ல! அவர் ஆற்றலில் மிகவும் குறைந்தவர் என்பதுதான் எனக்குக் கிடைத்த தகவல்!"

"இன்னொரு காரணமும் இருக்கிறது அமைச்சரே! தன்னடக்கத்தால் நீங்கள் அதைச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்!"

"அரசே! தாங்கள் சொல்ல வருவது..."

"அரசனுக்குச் சரியான ஆலோசனை கூறி அவனை முறையாக வழி நடத்தக் கூடிய உங்களைப் போன்ற அறிவார்ந்த துணை காளிங்க நாட்டு மன்னருக்கு இல்லை. சரிதானே?"

"அவரிடம் இருந்த நல்ல அமைச்சர்கள் அவரை விட்டு விலகி விட்டார்கள். தவறாக வழிநடத்துபவர்களையே அவர் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மைதான்!"

"தற்போதைய நிலையில் நம்மால் படைகளை அனுப்பி உதவ முடியாது என்று மென்மையாகத் தெரிவித்துக் காளிங்க நாட்டு மன்னருக்கு ஓலை அனுப்பி விடுங்கள். நந்தி நாட்டின் படையெடுப்பிலிருந்து காளிங்க நாட்டைக் காபாற்றும்படி இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன், படை உதவி செய்ய முடியவில்லை. இந்த அடிப்படை உதவியையாவது செய்கிறேன்!""

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 87
பகை மாட்சி

குறள் 862:
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.

பொருள்: 
மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின் மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை அந்த அரசால் எப்படி அழிக்க முடியும்?
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...