Saturday, February 11, 2023

861. இப்போது மட்டும் ஏன் இப்படி?

"சூப்பர்வைசரை எதிர்த்துப் பேசறது ஒழுங்கு மீறல். அதனால சங்கரை ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணிடுங்க!" என்றார் பொது மேலாளர் சிவகுரு.

பர்சனல் மானேஜர் தனஞ்சயன் சற்றுத் தயக்கத்துடன், "சார்! இது கொஞ்சம் கடுமையான தண்டனையா இருக்கு. இந்தத் தப்புக்காக சஸ்பெண்ட் பண்ணணுமா? வார்னிங் கொடுத்து விட்டுடலாமே!" என்றார்.

"இல்லை மிஸ்டர் தனஞ்சயன். சங்கர் ஒரு யூனியன் லீடர். அவருக்குக் கொஞ்சம் கடுமையான தண்டனை கொடுத்தாத்தான் மத்த தொழிலாளிகளுக்கு பயம் இருக்கும். சஸ்பென்ஷங்கறது அவ்வளவு பெரிய தண்டனை இல்லை. ஆனா ஒரு யூனியன் லீடரை நாம சஸ்பெண்ட் பண்ணினா அது அவருக்குப் பெரிய அவமானம். அதனால மற்ற தொழிலாளர்களுக்கு பயம் வரும். அவங்க இன்னும் கொஞ்சம் கட்டுப்பாடோட இருப்பாங்க. சங்கரைப் பொருத்தவரை அவருக்கு இது ஒரு பலவீனமா இருக்கும். அதனால எதிர்காலத்தில அவர் நம்மோட மோதறதுக்கு பயப்படுவாரு!" என்று விளக்கினார் சிவகுரு.

"சார்! நீங்க தப்பா நினைக்கலேனா ஒண்ணு கேக்கலாமா?"

"கேளுங்க!"

"இதுக்கு முன்னால யூனியன் தலைவரா இருந்த தனபால் பல சமயங்கள்ள இதை விட மோசமா நடந்துக்கிட்டிருக்காரு. சூப்பர்வைசர்களெல்லாம் அவரைப் பார்த்து பயப்படுவாங்க. அவர் பிரச்னை பண்ணினப்பல்லாம் அவரைக் கூப்பிட்டுப் பேசி சமாதானமாப் போயிருக்கமே தவிர, ஒரு தடவை கூட அவர் மேல நடவடிக்கை எடுக்கலையே! இப்ப மட்டும் ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கணும்னு சொல்றீங்க?" என்றார் தனஞ்சயன்.

"தனபால் முரட்டுத்தனமா செயல்படறவரு. தைரியசாலி. அவர் ஒரு வலுவான தலைவரா இருந்தாரு. அவர் என்ன சொன்னாலும் தொழிலாளர்கள் கேட்பாங்க. அவர் மேல கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தா, அவர் தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யச் சொல்லி இருப்பாரு .அவங்களும் அவர் சொன்னதைக் கேட்டு வேலைநிறுத்தத்தில ஈடுபட்டிருப்பாங்க. நமக்குப் பெரிய பிரச்னை வந்திருக்கும். புரொடக்‌ஷன் நின்னு போய் கம்பெனிக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும். அதைத் தவிர்க்கத்தான் அவரோட ஒத்துப் போக வேண்டி இருந்தது. இப்ப அவர் ரிடயர் ஆயிட்டாரு. அவர் இடத்துக்கு சங்கர் வந்திருக்காரு. ஆனா சங்கர் அவ்வளவு வலுவானவர் இல்ல. வேலைநிறுத்தம் மாதிரி செயல்கள்ள இறங்க மாட்டாரு. அவர் ஸ்டிரைக் பண்ணச் சொன்னாலும் எல்லாத் தொழிலாளர்களும் அவர் சொல்றதைக் கேட்டு ஸ்டிரைக் பண்ண மாட்டாங்க. எதிரி பலசாலியா இருக்கறப்ப நாம அவனோட மோதறதைத் தவிர்க்கத்தான் செய்யணும். எதிரி பலவீனமானவனா இருந்தா இறங்கி அடிக்கலாம் இல்ல?"

தன் விளக்கத்தைத் தானே ரசிப்பது போல் சிரித்தார் சிவகுரு

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 87
பகைமாட்சி

குறள் 861:
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.

பொருள்: 
பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்க்க வேண்டும்; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செயல்பட வேண்டும்.

அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...