Tuesday, February 21, 2023

863. பட்டத்து இளவரசர்!

"அமைச்சரே! மூத்த மகனுக்குத்தான் பட்டம் கட்ட வேண்டும் என்பது மரபு. ஆனால் என் மூத்த மகன் பரகாலனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், இளைய மகன் அநிருத்தனுக்குப் பட்டம் கட்டலாமா என்று யோசிக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றார் அரசர். 

"நாடு இருக்கும் நிலையில் நீங்கள் ஒரு சங்கடமான முடிவை எடுக்க வேண்டி இருக்கிறது அரசே! நம் அண்டை நாட்டு மன்னன் மகுடபதி நமக்கு அவ்வப்போது தொந்தரவு  கொடுத்து வருகிறான். எதிரியைச் சமாளிக்க நாம் வலுவாக இருக்க வேண்டும். பரகாலரின் உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் மன்னரானால், எதிரி நம்மை பலவீனமாக நினைப்பான். அநிருத்தருக்கு முடிசூட்ட வேண்டும் என்று நீங்கள் நினைப்பது சரியான முடிவு!" என்றார் அமைச்சர்.

"சரி. அப்படியே செய்து விடுகிறேன். பரகாலன் ஓய்வெடுத்துக் கொண்டு தன் உடல்நிலையை மேம்படுத்திக் கொள்வதுதான் முக்கியம் என்பதை அவனிடம் சொல்லிப் புரிய வைக்கிறேன்!" என்றார் மன்னர்.

"நம் அரண்மனை வைத்தியர் இளவரசரை குணப்படுத்தி விடுவார். பரகாலர் ஓய்வெடுத்துக் கொண்டு வைத்தியர் கொடுக்கும் மருந்துகளை அருந்தி வந்தால் போதும். அநிருத்தர் மன்னர் பொறுப்பேற்று  எதிரிகளை முறியடிப்பார்!" என்றார் அமைச்சர்.

"என்ன அமைச்சரே! என்னை இப்படி ஒருதர்மசங்கடத்தில் மாட்டி விட்டு விட்டீர்களே! பரகாலருக்கு வந்த சாதாரண மயக்கத்தைப் பெரிய நோய் என்றும், அவர் ஓய்வில் இருந்து பல ஆண்டுகள் மருந்து உட்கொண்டால்தான் அவருக்கு நோய் குணமாகும் என்றும் சொல்ல வைத்து விட்டீர்களே!" என்றார் அரண்மனை வைத்தியர்.

"பரகாலருக்கு நோய் இருப்பது உண்மைதானே!" என்றார் அமைச்சர்.

"என்ன நோய்! அதிகமாக மது அருந்தி, கேளிக்கைகளில் ஈடுபட்டதால் மயங்கி விழுந்து விட்டார்  அவர் உடலில் வேறு எந்த நோயையும் நான் காணவில்லையே!"

"அவருக்குப் பல நோய்கள் இருக்கின்றன. நீங்கள் நாடியைப் பிடித்துப் பார்த்தால் அவை புலப்பட மாட்டா! அவரை அருகில் இருந்து பார்த்ததால் அவை என் புலன்களுக்குத் தென்பட்டன!"

"அப்படி என்ன நோய்கள் அவை?"

"நாட்டை ஆளும் மன்னனுக்கு இருக்கக் கூடாத நோய்கள்! பரகாலர் அச்சம் மிகுந்தவர். எந்த ஒரு விஷயத்திலும் துணிவாக முடிவெடுக்க மாட்டார். சிந்திக்கும் திறனும் குறைவு. நீங்களே சொன்னீர்கள். அவர் அதிகம் மது அருந்தி, கேளிக்கைகளில் ஈடுபட்டதாக. ஒரு அரசனுக்கு இருக்கக் கூடாத பண்புகள் இவை. மற்றவர்களுக்கு ஈயும் பழக்கமும் அவரிடம் இல்லை. இவற்றைத்தான் நான் நோய்கள் என்று சொன்னேன். இந்த நோய்கள் உள்ள ஒருவரை எதிரியால் எளிதாக வென்று விட முடியும். அப்படிப்பட்டவர் அரசரானால் இந்த நாட்டுக்கு எத்தகைய பேராபத்து விளையும்! அதனால்தான் அவருக்கு வந்திருப்பது பெரிய நோய் என்று சொல்லும்படி உங்களிடம் கேட்டுக் கொண்டேன். இனி பரகாலர் அரண்மனையில் ஓய்வாக இருந்து கொண்டு நீங்கள் கொடுக்கப் போகும் தாது புஷ்டி லேகியங்களை அருந்தி வருவார்! அநிருத்தர் மன்னராகி எதிரிகளை வீழ்த்தி நம் நாட்டை உயர்த்துவார். நீங்கள் நாட்டுக்கு எத்தகைய நன்மை செய்திருக்கிறீர்கள் என்று புரிகிறதா?"

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 87
பகைமாட்சி

குறள் 863:
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.

பொருள்: 
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால், அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...