Sunday, February 12, 2023

672. அமைச்சரின் துணிவு!

"அமைச்சரே! இளவரசனுக்காகத் தனி மாளிகை கட்டும் பணி எந்த அளவில் இருக்கிறது?"

"இன்னும் அதற்கான பணி துவங்கவில்லை, அரசே!"

"ஏன்?"

"அதற்குத் தேவையான நிதி தற்போது இல்லை. நிதி நிலை மேம்பட்டதும், அந்தப் பணி துவங்கப்பட்டு விடும்!"

"அமைச்சரே! மாளிகை கட்டுவதற்காக தனாதிகாரி நிதி ஒதுக்கி இருந்தும், நீங்கள் அதை அதற்காகப் பயன்படுத்தவில்லை என்று அவர் கூறுகிறாரே!"

"ஆம், அரசே! அந்த நிதியை வேறொரு நோக்கத்துக்காகப் பயன்படுத்தச் சொல்லி விட்டேன்!"

"எந்த நோக்கத்துக்காக?"

"அரசே! ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தில் வருணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் கரையில் வசிக்கும் மக்களுக்கு உயிர்ச்சேதமும், உடமைச் சேதமும் ஏற்படுகிறது. ஒரு தடுப்பணை கட்டினால், மழை நீரைத் தேக்கி வெள்ளம் வராமல் தடுப்பதுடன், விவசாய உற்பத்தியையும் அதிகரிக்க முடியும்!"

"ஆமாம். இந்தத் திட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே நம் கவனத்தில் இருக்கிறது. ஆனால், அதற்கான போதுமான நிதி ஆதாரம் இல்லை என்பதால், அந்தத் திட்டம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால்..."

"நீங்கள் நினைப்பது சரிதான், அரசே! இப்போது நம் நிதி ஆதாரம் மேம்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது இளவரசருக்கான மாளிகை கட்ட நிதி ஒதுக்கினால், இந்தத் தடுப்பணைக்குத் தேவையான நிதி இருக்காது. அதனால்தான், மாளிகை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியைத் தடுப்பணை கட்டுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டேன் - அது அவசரமானதும், முக்கியமானதும் என்பதால்."

"அமைச்சரே! இளவரசனுக்குத் திருமணம் நடக்கப் போகிறது. அவனுக்குத் தனி மாளிகை இருக்க வேண்டியது அவசியம் அல்லவா?"

"அவசியம்தான், அரசே. ஆனால் அவசரம் இல்லை என்பதைத் தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்! தனி மாளிகை கட்டப்படும் வரையில், அரண்மனையில் தான் தற்போது வசிக்கும் பகுதியிலேயே திருமணத்துக்குப் பிறகும் சிறிது காலம் வசிப்பதை இளவரசர் வசதிக் குறைவாக நினைக்க மாட்டார் என்று கருதுகிறேன்! நான் அவரிடம் இது பற்றிப் பேசியபோது, தடுப்பணை கட்ட வேண்டியதுதான் முக்கியம் என்று இளவரசரே என்னிடம் கூறினார்!"

"அமைச்சரே! உங்களுக்குத் துணிவு அதிகம்தான். மன்னர் குடும்பத்தின் வசதியை விட, மக்கள் நலன் முக்கியம் என்று நினைத்துச் செயல்பட்டிருக்கிறீர்களே! இந்தத் துணிவு எங்கிருந்து வந்தது?"

"மக்கள் நலனே முக்கியம் என்று கருதி அரசாட்சி செய்யும் மன்னரிடம் அமைச்சராக இருக்கும் பேறு கிடைத்ததன் விளைவாக வந்தது அரசே!"

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 672:
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

பொருள்:
காலம் தாழ்த்திச் செய்யத் தக்கவற்றைக் காலம் தாழ்ந்தே செய்ய வேண்டும். காலம் தாழ்த்தாமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலம் தாழ்த்தக் கூடாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

Read 'The Intrepid Minister' the English version of this story by the same author.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...