Tuesday, February 7, 2023

670. தேடல் தொடர்கிறது!

பொது மேலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போகும் நிலையில், தன் இடத்துக்கு இன்னொருவரை நியமிப்பதில் நிறுவனத் தலைவருக்கு உதவும் விதத்தில், பொது மேலாளர் பதவிக்கு வந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, பொருத்தமான நபர்களின் விண்ணப்பங்களைத் தெரிவு செய்து கொண்டிருந்தார் மாசிலாமணி.

"இவரைப் பாருங்க. நிறையப் படிச்சிருக்காரு. நிறைய அனுபவம் இருக்கு. இவர் பொருத்தமானவரா இருப்பாருன்னு நினைக்கிறேன்!" என்றார் மாசிலாமணி.

விண்ணப்பத்தை விரைவாகப் பார்த்த நிறுவனத் தலைவர் மாரிமுத்து, "சரி, வரச் சொல்லுங்க. இன்டர்வியூ பண்றப்ப நீங்களும் இருக்கணும்!" என்றார்.

மாசிலாமணியால் தெரிவு செய்யப்பட்ட பரத்வாஜ் என்ற நபர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு, அவரை மாரிமுத்துவும், மாசிலாமணியும் இன்டர்வியூ செய்தனர்.

இன்டர்வியூ முடிந்து பரத்வாஜ் சென்றதும், "என்ன நினைக்கறீங்க?" என்றார் மாரிமுத்து.

"நீங்க நினைக்கறதைத்தான் நானும் நினைக்கிறேன்!" என்றார் மாசிலாமணி, சிரித்தபடி.

"நான் என்ன நினைக்கறேங்கறதைச் சரியாப் புரிஞ்சு வச்சிருக்கறதாலதானே, இத்தனை வருஷம் என் எண்ணங்களுக்கு ஏற்ற விதத்தில இந்த நிறுவனத்தைச் சிறப்பா நிர்வகிச்சிருக்கீங்க! நீங்க ஓய்வு பெறப் போறது எனக்கு ஒரு பெரிய இழப்புதான்" என்ற மாரிமுத்து, "சரி, சொல்லுங்க!" என்றார், தொடர்ந்து.

"பத்து வருஷம் ரெண்டு பெரிய நிறுவனங்களில வேலை செஞ்சிருக்காரு. அதுல நல்ல அனுபவம் கிடைச்சிருக்கு. நல்லாவும் செயல்பட்டிருக்காருன்னுதான் தோணுது. அதுவரைக்கும் சரிதான். அதுக்கப்பறம், வேலையை விட்டுட்டு, பத்து வருஷம் சொந்தத் தொழில் செஞ்சிருக்காரு. அங்கேதான் பிரச்னை!"

"வேலையை விட்டுட்டு சொந்தத் தொழில் ஆரம்பிச்சது தப்புங்கறீங்களா?" என்றார் மாரிமுத்து, சிரித்தபடி.

"நான் சொல்லப் போறது உங்களுக்குத் தெரியும். உங்க மனசிலேயும் அதுதான் இருக்கு!" என்றார் மாசிலாமணி, சிரித்தபடி.

"சொல்லுங்க. நீங்க சொல்ற விதம்தான் நல்லா இருக்கும்!"

"பத்து வருஷத்தில, அஞ்சு தொழில் செஞ்சிருக்காரு! ஒரு தொழிலை ஆரம்பிச்சு, அது சரியா வரலேன்னு இன்னொண்ணு, இது மாதிரி அஞ்சு தடவை முயற்சி செஞ்சுட்டு, அஞ்சாவது முயற்சியையும் கைவிட்டுட்டு, இப்ப வேலைக்கு முயற்சி செய்யறாரு."

"ஒரு தொழில் சரியா வரலைன்னா, அதை விட்டுட்டு இன்னொண்ணை முயற்சி செய்யறதில என்ன தப்பு?"

"தப்பு இல்லை. ஒவ்வொரு தடவையும் அவருக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். ஆனா, இது அவர் தன்னோட செயல்பாட்டில உறுதியா இல்லாம இருந்திருக்காருங்கற எண்ணத்தை ஏற்படுத்துதே! இந்த நிறுவனத்தை வழி நடத்தற உயர்ந்த பதவியை அவருக்குக் கொடுக்கலாம்கற நம்பிக்கையை அவர் செயல்பாடு ஏற்படுத்தலையே!"

"நீங்க சொல்ற மாதிரிதான் நானும் நினைக்கறேன். பேசாம உங்க ஓய்வு பெறுகிற முடிவைக் கைவிட்டுட்டு, நீங்க வேலையில தொடருங்களேன்!" என்றார் மாரிமுத்து.

"அது எப்படி சார்? ஒத்தர் தன் செயல்பாட்டில உறுதியா இருக்கணும்னு இப்பதானே பேசிக்கிட்டோம்? அதனால, புது ஜி.எம்மைத் தேர்ந்தெடுக்கற நம் முயற்சியில தொடர்ந்து ஈடுபடுவோம்!" என்றார் மாசிலாமணி, சிரித்தபடி.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்

குறள் 670:
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.

பொருள்:
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.

Read 'The Search Continues' the English version of this story by the same author.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...