முதல்வர் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், தலைநகருக்கு அருகில் உள்ள ஒரு ஊரில், ஒரு துணைநகரம் அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
"நமக்கு முன்னால எவ்வளவோ பிரச்னைகள் இருக்கு. துணைநகரம் பற்றி இப்ப எதுக்கு சிந்திக்கணும்?" என்றார் மூத்த அமைச்சர் கார்வண்ணன்.
"நல்ல கேள்வி. ஒரு செயல்ல இறங்கறதுக்கு முன்னால, அந்தச் செயல் அவசியம்தானான்னு தீர்மானிக்க வேண்டியது முக்கியம். அதனாலதான், துணைநகரம் அமைக்கறது பற்றி ஆராய ஒரு வல்லுனர் குழுவை அமைச்சோம். வல்லுனர் குழு, துணைநகரம் அவசியமா, அது ஏன் அவசியம், அதை அமைக்கறதால என்ன நன்மைகள் கிடைக்கும், அமைக்கலேன்னா என்ன பிரச்னைகள் வரும் என்கிற கேள்விகள்ள ஆரம்பிச்சு, எந்த இடத்தில அமைக்கறது, எப்படி அமைக்கறது, அதற்கான படிகள் என்ன, ஒவ்வொரு படியிலும் என்ன சவால்கள் இருக்கும் இது மாதிரி பல கேள்விகளை ஆராய்ஞ்சு, ஒரு விரிவான அறிக்கை கொடுத்திருக்கு. அந்த அறிக்கையோட முக்கிய அம்சங்களைத் திட்ட அமைச்சர் சுருக்கமா ஒரு அறிக்கையாத் தயாரிச்சு, உங்க எல்லாருக்கும் கொடுத்திருக்காரு. நீங்க எல்லாரும் அதைப் படிச்சுப் பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்!" என்ற முதல்வர், தன் பேச்சை நிறுத்தி விட்டு, அனைவர் முகத்தையும் பார்த்தார்.
கார்வண்ணன் அப்போதுதான் அந்த அறிக்கை தன் கோப்பில் இருக்கிறதா என்று தேடத் துவங்கினார்.
"சரி. சில பேரு படிச்சிருக்க மாட்டீங்க. இப்ப, திட்ட அமைச்சர் அதைச் சுருக்கமா உங்களுக்கு எடுத்துச் சொல்லுவார்" என்றார் முதல்வர்
துணைநகரம் பற்றிய அறிக்கையின் சாராம்சத்தைத் திட்ட அமைச்சர் விளக்கிக் கூறிய பிறகு, அது பற்றி நீண்ட நேரம் விவாதம் நடந்தது. பிறகு, துணைநகரம் அமைப்பது என்பதை அமைச்சரவை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.
"சரி. இந்த அமைச்சரவைக் கூட்டத்தை நிறைவு செய்யலாம்னு நினைக்கிறேன்!" என்றார் முதல்வர்.
"சார்! ஒரு நிமிஷம்!" என்றார் திட்ட அமைச்சர்.
"சொல்லுங்க!" என்றார் முதல்வர்.
"ஒரு முடிவை எடுத்தப்பறம், அந்த முடிவைச் செயல்படுத்தறதுக்கான செயல்பாட்டை உடனே துவங்கணும்னு நினைக்கிறேன்!" என்றார் திட்ட அமைச்சர், தயக்கத்துடன்.
கார்வண்ணன் பெரிதாகச் சிரித்து விட்டு, "தம்பி! நீங்க படிச்சவர், இளைஞர்ங்றதுக்காக முதல்வர் உங்களுக்கு இந்த முக்கியமான துறையைக் கொடுத்திருக்காரு. அரசாங்கம் எப்படிச் செயல்படும்னு உங்களுக்குத் தெரியல. ஒரு முடிவை அறிவிச்சவுடனேயே, அதைச் செயல்படுத்தற வேலைகளை ஆரம்பிச்சுட முடியாது. நாம இந்தக் கொள்கை முடிவை அறிச்சவுடனேயே, பல முனைகளிலேந்து எதிர்ப்பெல்லாம் கிளம்பும். அதையெல்லாம் சரி பண்ணிட்டு, அப்புறம்தான் வேலைகளை ஆரம்பிக்க முடியும்!" என்றார்.
"இல்லை, அண்ணே! தம்பி சொல்றதுதான் சரி. நாம எவ்வளவோ விஷயங்களை அறிவிச்சுட்டு, அவற்றை உடனே செயல்படுத்தாததால,, நாளடைவில பல பிரச்னைகள் ஏற்பட்டு, அதுக்கப்பறம் அறிவிச்ச சில விஷயங்களைக் கைவிட வேண்டி நேர்ந்திருக்கு. ஒரு விஷயத்தை நல்லா ஆராய்ஞ்சு, அதைச் செய்யறதுன்னு முடிவு செஞ்சப்பறம், உடனே செயல்பாட்டைத் தொடங்கறதுதான் சரி. நாம தேர்ந்தெடுத்திருக்கற ஊரைத் துணை நகரம்னு அறிவிச்சு உடனே அரசாணை பிறப்பிக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டதுன்னு தீர்மானத்தில சேர்த்து, நாளைக்கே அரசாணை வெளியிட்டுடுங்க. அந்த ஆணை வெளி வந்துடுச்சுன்னா, அப்பறம் மற்ற பணிகளைத் திட்ட அமைச்சகம் உடனே துவங்கிடும்!" என்றார் முதல்வர், திட்ட அமைச்சரைப் பார்த்துப் புன்னகை செய்தபடியே.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 68
வினை செயல்வகை
குறள் 671:
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
பொருள்:
ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால், அது தீமையாகும்.
No comments:
Post a Comment