"கல்லூரியில சேர்ந்தப்பறம் வாழ்க்கையே மாறிட்ட மாதிரி இருக்கு, இல்ல?" என்றான் மாதவன்.
"ஆமாம். பள்ளிக்கூட சூழ்நிலை வேற, கல்லூரிச் சூழ்நிலை வேற. இத்தனை நாளா, பெற்றவர்களோட அரவணைப்பில கவலையோ, பொறுப்போ இல்லாம இருந்தோம். இப்ப நாம பெரியவங்களா, நம்ம வாழ்க்கையை நாமே தீர்மானிச்சு, செயல்பட்டு வாழற நிலைக்குப் பக்கத்தில வந்துக்கிட்டிருக்கோம்!" என்றான் கௌதம்.
"டேய்! பேருக்கேத்த மாதிரி புத்தர் மாதிரி பேச ஆரம்பிச்சுடாதே! நான் சொன்னது நமக்குப் புது நண்பர்கள் கிடைச்சு, நாம ரொம்ப உற்சாகமா ஒரு புது வாழ்க்கை வாழறதைப் பத்தி!"
"அது சரிதான். நம்ம வகுப்பில உனக்கு எத்தனை நண்பர்கள் இருக்காங்க?"
"பத்து பேர் இருப்பாங்க" என்றான் மாதவன்.
"நம்ம வகுப்பில மொத்தம் அறுபது பேர் இருக்கோம். பத்து பேர் நண்பர்கள்னா, மீதி அம்பது பேர்?"
"எதிரிகளான்னு கேக்கறியா?"
"இல்ல. பத்துப்பேர் நண்பர்கள்னா, மீதி அம்பது பேரோட உன்னோட ரிலேஷன்ஷிப் எப்படின்னு கேக்கறேன்."
"அஞ்சாறு பேரைத் தவிர மத்தவங்களோட இணக்கமாத்தான் இருக்கேன். ஆனா, நெருக்கமா இருக்கறது பத்து பேரோடதான். ஏன் கேக்கற?"
"அஞ்சாறு பேரைத் தவிரன்னு சொன்னியே, ஏன் அப்படி?" என்றான் கௌதம்
"ஏன்னா, அவங்களை எனக்குப் பிடிக்கல. அவங்களைப் பாத்தாலே எனக்குப் பிடிக்கல. ஒப்புக்கு ஹலோன்னு சொன்னாக் கூட, மனசுக்குள்ள அவங்க மேல ஒரு வெறுப்பு இருக்கு. வகுப்பு விஷயமா ஏதோ கேக்கணும், அப்ப பக்கத்தில வேற யாருமே இல்ல, அவங்கள்ள ஒத்தர்கிட்டதான் கேக்கணும்னா கூட, இவங்ககிட்டயா கேக்கணும்னு நினைச்சு, கேக்காமயே கூட இருந்துடுவேன்!" என்றான் மாதவன்.
"ஏன் அப்படி? அவங்க உனக்கு ஏதாவது கெடுதல் செஞ்சாங்களா?"
"சேச்சே! அப்படியெல்லாம் எதுவும் இல்ல. என்னவோ தெரியல. அவங்களைப் பாத்தா, எனக்குப் பிடிக்கல. அவங்களை அவாயிட் பண்ணணும்னு தோணுது. அது இருக்கட்டும், என்னைக் குடைஞ்சு குடைஞ்சு கேகறியே, உனக்கு இது மாதிரி தோணலியா?" என்றான் மாதவன், நண்பனை மடக்குவது போல்.
"நிச்சயமா தோணுது. கிட்டத்தட்ட உன்னை மாதிரிதான். சில பேரோட பழக எனக்குப் பிடிக்கல. அவங்க உனக்குப் பிடிக்காத நபர்கள் பட்டியல்ல இல்லாதவங்களாகவும் இருக்கலாம். ஏன் இப்படின்னு யோசிச்சதாலதான், எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கா, இல்லை எல்லாருக்குமே இப்படித்தானான்னு தெரிஞ்சுக்கதான் உன்னைக் கேட்டேன்!" என்றான் மாதவன்.
"இவ்வளவுதானா? எந்த மனுஷனை எடுத்துக்கிட்டாலும், அவனுக்கு சில பேரைப் பிடிக்காமதான் இருக்கும். அதுக்குக் காரணமே இருக்காது. ஆனா, அவங்களோட இணக்கமா இருக்க முடியாது. பல பேர் சேர்ந்து வேலை செய்யற அலுவலகங்கள்ள, ஊழியர்களுக்குள்ள பிரச்னை வரதுக்கு இந்த மனப்பான்மை கூட ஒரு காரணமா இருக்கும்னு நினைக்கறேன்!" என்றான் மாதவன்.
"என்னை புத்தர் மாதிரி பேசறேன்னு சொல்லிட்டு, நீதான் தத்துவஞானி மாதிரி பேசற!" என்ற கௌதமன், "ஆனா, என்னால எல்லாரோடயும் இணக்கமாப் பழக முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு நினைச்சுப் பாக்கறேன். அதுக்கு முயற்சி செய்யப் போறேன்!" என்றான் தொடர்ந்து.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல் (வெறுப்பு, விரோத மனப்பான்மை)
குறள் 851:
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.
இகல் என்பது மற்ற உயிர்களுடன் பொருந்தி வாழ்தல் என்ற பண்பு இல்லாமை ஆகும்.
No comments:
Post a Comment