Saturday, December 17, 2022

850. நீக்கப்பட்ட காணொளிகள்

"மக்கள் இவ்வளவு முட்டாள்களா இருப்பாங்கன்னு என்னால நம்பவே முடியல!" என்றான் சுதீஷ்.

"எதைச் சொல்றீங்க?" என்றாள் அவன் மனைவி கல்பனா.

"கொரோனான்னு ஒரு புரளியை யாரோ கிளப்பி விட்டு உலகம் முழுக்க மக்கள் அதை நம்பிக்கிட்டிருக்காங்களே, அதைச் சொல்றேன்."

"என்ன இப்படிச் சொல்றீங்க? ஒவ்வொரு நாட்டிலேயும் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படறாங்கனு செய்தி வருதே, அதெல்லாம் புரளியா?"

"ஜுரம், இருமல் எல்லாம் எப்பவும் இருக்கறதுதான். இப்ப திடீர்னு அதுக்கு கொரோனான்னு ஒரு பேர் வச்சு பயமுறுத்தி, எல்லாரையும் ஆஸ்பத்திரியில படுக்க வச்சு, ஊரடங்குன்னு சொல்லி எல்லாரையும் வீட்டுக்குள்ள சிறை வச்சு என்னென்னவெல்லாம் செய்யறாங்க பாரு!"

"வெளியில யார்கிட்டயாவது இப்படிப் பேசாதீங்க. உங்களைப் பைத்தியம்னு சொல்லிடுவாங்க!" என்றாள் கல்பனா.

"நீ இப்படிச் சொன்னதும் எனக்கு ஒரு யோசனை வந்திருக்கு. இதைப் பத்தி நான் பேசி வீடியோ எடுத்து யூடியூபில போடப் போறேன்!" என்றான் சுதீஷ்.

"' கொரோனா ஒரு புரளி. அது ஒரு சாதாரண ஜுரம்தான். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏகப்பட்ட பணம் செலவழித்து ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கி மூக்கில் வைத்துக் கொள்ளாதீர்கள். காற்றோட்டமான இடத்தில் போய் நின்று காற்றை சுவாசியுங்கள். அல்லது வீட்டில் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்தாலே காற்று வரும். காற்றில் ஆக்ஸஜன் இல்லையா என்ன?' என்றெல்லாம் சுதீஷ் பேசிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின. அவன் கருத்தை ஒரு சிலர் ஆதரித்தாலும், பெரும்பாலோர் அவன் கருத்துக்களைக் கண்டித்துப் பதிவுகளை வெளியிட்டனர்.

கொரோனா பற்றி மக்களிடம் தவறான கருத்துக்களைப் பரப்பும் சுதீஷைக் கைது 'செய்ய வேண்டும் என்று ஒரு சில அரசியல்வாதிகள் அறிக்கைகள் வெளியிட்டனர்.

"ஏன் உங்க வீடியோவையெல்லாம் எடுத்துட்டீங்க?" என்றாள் கல்பனா.

"நான் சொன்ன விஷயங்களுக்கு வந்த எதிர்வினைகளைப் பாத்தப்ப இந்த உலகமே எனக்கு எதிராத் திரும்பிட்ட மாதிரி இருந்தது. தப்பு பண்ணிட்டோம்னு நினைச்சுதான் எதுக்கு இந்த வம்புன்னு வீடியோக்களை டிலீட் பண்ணிட்டேன்!" என்றான் சுதீஷ். 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)

குறள் 850:
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.

பொருள்: 
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்..
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...