அவன் புகாரைக் கேட்டுக் கொண்டிருந்த சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சிரித்துக் கொண்டே, "அவன் சொன்னது சரிதான். நீங்க அந்த கோட்-ஐ ஸ்கேன் பண்ணினதும், உங்க பாங்க் விவங்கள் அவனுக்குத் தெரிய வந்திருக்கும் - உங்க பாஸ்வேர்ட் உட்பட. அதான், உங்க அக்கவுன்ட்ல இருந்த மொத்தப் பணத்தையும் எடுத்துட்டான். எவ்வளவு போச்சு? என்றார்.
"இருபத்தெட்டு லட்ச ரூபாய்!"
"அவ்வளவு பணத்தை ஏன் அக்கவுன்ட்ல வச்சிருந்தீங்க?"
"எப்பவுமே, பிசினஸுக்காக ரெண்டு மூணு லட்ச ரூபா அக்கவுன்ட்ல இருக்கும். அதைத் தவிர, இருபது லட்ச ரூபாய் ஃபிக்சட் டெபாசிட் மெச்சூர் ஆகிப் பணம் அக்கவுன்ட்டுக்கு வந்தது. ரெண்டு மூணு நாள்ள அதை எங்கேயாவது முதலீடு செய்யலாம்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, கண்மூடித் திறக்கறதுக்குள்ள அடிச்சுக்கிட்டுப் போயிட்டானே! எப்படி சார் இது சாத்தியம்? நான் ஓ.டி.பி. கொடுக்காம என் அக்கவுன்ட்லேந்து எப்படிப் பணம் போகும்? பாங்க்ல கேட்டா, ஓ.டி.பி. கொடுத்தப்பறம்தான் கணக்கிலேந்து பணம் போயிருக்குன்னு சொல்றாங்க!" என்றான் மகாதேவன்.
"இது க்யூ ஆர் கோட் மோசடின்னு புதுசா வந்திருக்கு. இது எப்படி நடக்குதுன்னு நாங்க ஆய்வு செஞ்சுக்கிட்டிருக்கோம். அந்த க்யூ ஆர் கோட் மூலமா, உங்க வங்கி பேரு, கணக்கு எண், பாஸ்வேர்ட், இருப்பு எல்லாம் அவனுக்குத் தெரிஞ்சிருக்கும். அவன் உங்க கணக்கிலேந்து பணத்தைத் தன்னோட கணக்குக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிடுவான். உங்களுக்கு ஓ.டி.பி. வந்திருக்கும். உங்க மொபைலைப் பாத்தா தெரியும். அதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க. ஆனா, அது உங்க மொபைல்லேந்து அவனோட மொபைலுக்குத் தானாகவே ஃபார்வர்ட் ஆகிப் போயிருக்கும். அதை வச்சு, அவன் டிரான்ஸ்ஃபரை கன்ஃபர்ம் பண்ணிப் பணத்தைத் தன் கணக்குக்கு மாத்தி இருப்பான்" என்று விளக்கினார் இன்ஸ்பெக்டர்.
"பணம் எந்த அக்கவுன்ட்டுக்குப் போயிருக்குங்கறதை வச்சு, அவனைக் கண்டுபிடிக்க முடியாதா சார்?"
"பொதுவா இந்த மாதிரி மோசடி பண்றவங்க, பொய்யான விவரங்களைக் கொடுத்துத்தான் பாங்க்ல கணக்குளைத் துவக்குவாங்க. ஒரு நாள்ள எவ்வளவு முடியுமோ, அவ்வளவு ஏமாத்தி சம்பாதிச்சுட்டு, பணத்தை .வேற கணக்குக்கு பாத்திடுவாங்க. நாங்க அவனை டிரேஸ் பண்ணி கண்டுபிடிக்கறதுக்குள்ள, அவன் வேற எங்கேயாவது போய், வேற யாரையாவது ஏமாத்திக்கிட்டிருப்பான். என்னிக்காவது ஒருநாள் பிடிபடுவான். புத்திசலியா இருந்தா, ஓரளவு சம்பாதிச்சதும், இந்த மோசடியை நிறுத்திட்டு, எல்லாத் தடயங்களையும் அழிச்சுட்டு, மறைஞ்சு போயிடுவான். ஒருவேளை அவனைப் பிடிச்சாலும், உங்க பணம் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கறது கஷ்டம்தான். இது மாதிரி மோசடிகளையெல்லாம் குறிப்பிட்டு, யாரும் ஏமாறாதீங்கன்னு நாங்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கோம். ஆனா, அதையெல்லாம் கவனிக்காம, உங்களை மாதிரி நிறைய பேர் ஏமாந்துக்கிட்டுத்தான் இருக்கீங்க. ஆமாம், நீங்க என்ன பிசினஸ் செய்யறீங்க?" என்றார் இன்ஸ்பெக்டர்.
"கமிஷன் ஏஜன்ட்" என்றான் மகாதேவன், சற்றுத் தயக்கத்துடன்.
"அதை ஏன் தயங்கிக்கிட்டே சொல்றீங்க? .இவங்களை மாதிரி மத்தவங்களை ஏமாத்திப் பிழைக்காம, நேர்மையா ஒரு பிசினஸ் செஞ்சு பணம் சம்பாதிக்கறதைப் பத்தி நீங்க பெருமை இல்ல படணும்!"
'நான் அப்படிச் சம்பாதிக்கலையே! பல சின்ன ஊர்கள்ள போய்க் கொஞ்ச நாள் தங்கி, அங்கே இருக்கிற சின்ன வியாபாரிகள்கிட்ட அவங்க வியாபாரத்துக்கு சில தனிநபர்கள்கிட்டேயிருந்து குறைஞ்ச வட்டியில கடன் வாங்கித் தரதாச் சொல்லி, அவங்ககிட்ட அஞ்சாயிரம், பத்தாயிரம்னு முன்பணமா வாங்கிக்கிட்டு, கொஞ்ச நாள்ள அந்த ஊரை விட்டு ஓடி வந்து வேற ஊருக்குப் போய், அங்கேயும் இது மாதிரி செஞ்சு சம்பாதிச்ச பணம்தானே இது! அஞ்சாயிரம், பத்தாயிரம் என்பதால யாரும் போலீசுக்குப் போக மாட்டாங்கங்கற தைரியத்தில, பல பேரைத் தொடர்ந்து ஏமாத்தி, அப்புறம் அதையெல்லாம் கமிஷன் வியாபாரத்தில கிடைச்ச பணம் மாதிரி கணக்குக் காட்டி... இப்படி அநியாயமா சம்பாதிச்சதாலதான், மொத்தப் பணமும் ஒரே நாளில இது மாதிரி போயிடுச்சோ!' என்று தனக்குள் புலம்பினான் மகாதேவன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை
குறள் 660:
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
பொருள்:
வஞ்சனையான வழியால் பொருளைச் சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு. அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.
No comments:
Post a Comment