Tuesday, November 29, 2022

843. ஏழுமலையின் திட்டங்கள்

"உனக்கு என்னடா குறைச்சல்? உங்கப்பா உனக்கு நிறைய சொத்து வச்சுட்டுப் போயிருக்காரு. நிலத்தில வர வருமானத்தை வச்சுக்கிட்டு ஆயுசுக்கும் உக்காந்தே சாப்பிடலாமே!"

ஏழுமலையைப் பார்த்து அவன் நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி சொன்னது இது.

ஏழுமலையின் அம்மா செண்பகம் மட்டும், "குந்தித் தின்னா குன்றும் கரையும்பாங்க. அதனால ஏதாவது வேலைக்குப் போ. சம்பளம் குறைவா இருந்தாலும் பரவாயில்ல. நிலத்தில வர வருமானம் குறைஞ்சா அதை வச்சு ஈடு கட்டிக்கலாம்" என்றாள்.

ஏழுமலை அதைக் கேட்கவில்லை.

ழுமலைக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்ததும், செலவுகள் அதிகமாகின. நிலத்திலிருந்து வந்த வருமானத்தை வைத்து நீண்ட காலம் சமாளிக்க முடியாது என்பதை ஏழுமலை உணர்ந்து கொண்டான். 

"அம்மா! நிலத்தில வருமானத்தை வச்சு ரொம்ப காலத்துக்கு சமாளிக்க முடியாது. அதனால நிலத்தையெல்லாம் வித்துட்டு டவுன்ல நிலம் வாங்கி வீட்டு மனைகள் போட்டு விக்கப் போறேன்!" என்றான் ஏழுமலை.

"வேண்டாண்டா. உன் அப்பா சேர்த்து வச்ச சொத்து. அதை ஒண்ணும் செய்யாதே. நீயா சம்பாதிச்சுப் பணம் சேர்த்து அதை வச்சு ஏதாவது செஞ்சுக்க!" என்றாள் செண்பகம்.

"அது இப்போதைக்கு நடக்குமா? இன்னிக்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் நல்லா இருக்கு. இப்பவே ஆரம்பிச்சாதான் உண்டு!"

மகன் பிடிவாதமாக இருப்பதை உணர்ந்த செண்பகம், "நமக்கு சாப்பாட்டுக்கு நெல்லு வர அளவுக்காவது நிலத்தை வச்சுக்கிட்டு மீதியை வேணும்னா வித்துக்க" என்றாள்.

அவன் மனைவி முத்துலட்சுமியும் அதை ஆமோதித்தாள்.

"பிசினஸ்லதான் வருமானம் வருமே!" என்று சொல்லி அவர்கள் யோசனையை ஏற்க மறுத்து விட்டான் ஏழுமலை.

ஏழுமலை விளைநிலங்களை விற்று அருகிலிருந்த நகரத்தில் நிலம் வாங்கி அவற்றில் வீட்டு மனைகள் போட்டு விற்பனை செய்யும் தொழிலைத் துவக்கினான்.

"நீ வீட்டு மனைகள் போட்டு ரெண்டு வருஷம் ஆச்சு. நீ போட்ட அம்பது மனைகள்ள அஞ்சு மனைதான் வித்திருக்கு. நிலத்திலிருந்த வருமானம் போச்சு. மனையை விக்க விளம்பரம், மனையைப் பாக்க வரவங்களைக் கார்ல அழைச்சுக்கிட்டுப் போறதுன்னு செலவு பண்ணிக்கிட்டிருக்க. இப்ப நமக்கு சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலைமை வந்துடுச்சு. இங்கே இருந்தா குழந்தைகள் கூடப் பட்டினி கிடக்க வேண்டியதுதான்னு நினைச்சு உன் மனைவி குழந்தைகளை அழைச்சுக்கிட்டு அவ அப்பா வீட்டுக்குப் போயிட்டா. நீயும் நானுமே அரைப்பட்டினி கிடக்கோம். உன்னைப் பாக்க முடியாம உன் குழந்தைகள் ஏங்கறாங்க. குழந்தைகளைப் பாக்க முடியாம நீ ஏங்கற. உனக்கு இந்தக் கஷ்டம் எல்லாம் தேவைதானா?" என்றாள் செண்பகம்.

"என்ன செய்யறது? நான் நினைச்ச மாதிரி வீட்டு மனைகள் விக்கல! எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு" என்றான் ஏழுமலை வருத்தத்துடன்

"வீட்டில உக்காந்து சாப்பிடற அளவுக்கு உங்கப்பா உனக்கு சொத்து வச்சுட்டுப் போனாரு. நீ எல்லாத்தையும் வித்துட்டுத் தெரியாத தொழில்ல இறங்கின. சாப்பாட்டுக்கு அரிசி வர அளவுக்குக் கொஞ்சம் நிலத்தையாவது வச்சுக்கலாம்னு நானும் சொன்னேன், உன் மனைவியும் சொன்னா. நீ கேக்கல. இப்ப இவ்வளவு கஷ்டப்படற. உங்கப்பாவுக்கு எதிரிகள் இருந்தாங்க. அவரு அவங்களை சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனா உனக்கு எதிரிகள்னு யாரும் இல்லை. எதுக்கு? நீ ஒத்தன் இருக்கியே, போதாதா?" என்று கோபத்திலும், துக்கத்திலும் வெடித்தாள் செண்பகம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)

குறள் 843:
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

பொருள்: 
அறிவில்லாதவர் தமக்குத் தாமே விளைவித்துக் கொள்ளும் துன்பம் அவருடைய பகைவராலும் செய்ய முடியாத அளவினதாகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...