Sunday, November 27, 2022

842. விநாயகத்தின் மனமாற்றம்!

"விநாயகத்தோட அப்பா தன் வீட்டில நிறைய புத்தகங்கள் வச்சிருந்தாரு. வெளியில எங்கேயும் கிடைக்காத சில புத்தகங்கள் எல்லாம் அவன் வீட்டில இருக்கு, விநாயகம் அதையெல்லாம் புரட்டிக் கூடப் பாத்திருக்க மாட்டான். நான் சில புத்தகங்களைப் படிச்சுப் பார்த்துட்டுத் தரேன்னு கேட்டேன். கொடுக்க மாட்டேன்னுட்டான்" என்றார் தமிழ்ப் பேராசிரியர் பரமசிவம் வருத்தத்துடன்.

" 'முட்டாப் பசங்களையெல்லாம் தாண்டவக்கோனே,
    காசு முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே!'
என்று 'பராசக்தி' படத்தில ஒரு பாட்டு இருக்கு. இந்த வரிகள் நம் விநாயகத்துக்கு அப்படியே பொருந்தும்" என்றான் வாசு.

"என்னப்பா இது? அவன் ஏதோ தொழில் செஞ்சு நல்லா சம்பாதிக்கிறான். அவனைப் போய் முட்டாள்ங்கறியே!" என்றார் பரமசிவம்.

"அவன் அப்பா ஆரம்பிச்ச தொழில் அது. அது பாட்டுக்குத் தானே ஓடிக்கிட்டிருக்கு. இவன் ஆஃபீசுக்கே போறதில்ல. எல்லாத்தையும் ஒரு மானேஜர் பாத்துக்கறாரு. அவன் ஆஃபீஸ் போகாம இருக்கறது நல்லதுக்குத்தான். இவன் போய் நிர்வாகம் செய்யறேன்னு ஆரம்பிச்சா எல்லாத்தையும் குட்டிச்சுவராக்கிடுவான். அப்புறம் தொழிலையே இழுத்து மூட வேண்டி இருக்கும்!"

"சரி. அதெல்லாம் நமக்கு எதுக்கு?"

"வீட்டில சும்மா கிடக்கற புத்தகங்களை உங்களை மாதிரி ஒரு ஆராய்ச்சியாளருக்கு இலவசமாவே கொடுத்திருக்கலாம். ஆனா படிச்சுப் பாக்கக் கூடக் கொடுக்க மாட்டேன்னா அவன் என்ன ஆளு?" என்றான் வாசு.

சில நாட்கள் கழித்து வாசுவுக்கு ஃபோன் செய்த பரமசிவம், "வாசு! ஒரு ஆச்சரியமான விஷயம். விநாயகம் எனக்கு ஃபோன் செஞ்சான். அவன் வீட்டில இருக்கற எல்லாப் புத்தகத்தையும் சும்மாவே எடுத்துக்கிட்டுப் போகச் சொல்லிட்டான். நூறு புத்தகங்களுக்கு மேல இருக்குமாம். என்னால நம்பவே முடியல!" என்றார் மகிழ்ச்சியுடன்.

"என்னாலயும்தான். உடனே கார் எடுத்துக்கிட்டுப் போய் அள்ளிப் போட்டுக்கிட்டு வந்துடுங்க. அப்புறம் அவனுக்கு மனசு மாறிடப் போகுது!" என்றான் வாசு.

"என்னப்பா நீ! எவ்வளவு நல்ல மனசோட புத்தகங்களை எனக்குக் கொடுக்கறேன்னு சொல்லி இருக்கான். அவன் பரந்த மனசைப் பாராட்டாம,..?"

''ஒருவேளை பழைய பேப்பர்காரர் இதையெல்லாம் விலை கொடுத்து எடுத்துக்க முடியாதுன்னு சொல்லி இருப்பாரு' என்று மனதில் நினைத்துக் கொண்ட வாசு, "பரந்த மனசெல்லாம் இல்ல சார்! ஏதோ உங்களோட அதிர்ஷ்டம் அவனுக்கு திடீர்னு இப்படித் தோணி இருக்கு!" என்றான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)

குறள் 842:
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.

பொருள்: 
அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...