Tuesday, November 22, 2022

837. தம்பியிடம் உதவி கேட்டு...

"என்ன, உங்க தம்பியைப் பாத்தீங்களா?" என்றாள் பங்கஜம்.

"ஆபீஸ்ல ஒரே கூட்டம். வேலை செய்யறவங்க யாரு, பார்வையாளர்கள் யாருன்னு தெரியல. யாராரோ வரதும் போகறதுமா இருக்காங்க. அவன் ஆஃபீஸ்ல இல்ல.  கொஞ்ச நேரம் பாத்துட்டு வந்துட்டேன்" என்றார் சத்யம்.

"நீங்க அவர் அண்ணன்னு சொல்லி எப்ப வருவாருன்னு ஆஃபீஸ்ல கேக்க வேண்டியதுதானே?"

"அவனோட செகரட்டரி கிட்ட கேட்டேன்.  அந்தப் பொண்ணு தெரியாதுன்னு சொல்லிட்டா. எங்கே  போயிருக்கான்னும் தெரியாதாம். இதில வேடிக்கை என்னன்னா, நான் கேட்டுட்டு வெளியில வந்தப்ப, 'சாரைப் பாக்க வரவங்க நிறைய பேரு சொந்தக்ககாரங்கன்னுதான் சொல்லிக்கறாங்க'ன்னு அவ யார்கிட்டயோ சொல்லிக்கிட்டிருக்கா!"

"நீங்க அவரோட சொந்த அண்ணன். அவரைப் பார்க்க நீங்க ஏன் ஆஃபீசுக்குப் போகணும்? அவர் வீட்டுக்கே போகலாமே!"

"போகலாம். அங்கே அவன் மனைவி இருப்பாளேன்னுதான் தயக்கமா இருக்கு!"

"சரளா நல்ல பொண்ணுங்க. நாங்க சந்திக்கறப்பல்லாம் எங்கிட்ட நல்லாதான் பேசுவா. என்ன, உங்க தம்பியோட பிசினஸ்  வேகமா வளர்ந்து அவர் உயர்ந்த நிலைக்குப் போனப்பறம் நாம அவர்கிட்ட அதிக நெருக்கம் வச்சுக்கல. அவர் வீட்டுக்கு நீங்க போன சரளா உங்ககிட்ட மரியாதையாத்தான் நடந்துப்பா" என்றாள் பங்கஜம்.

"அது சரிதான். ஆனா அவன் மனைவி பக்கத்தில இருக்கறப்ப அவங்கிட்ட உதவி கேக்கறதுக்கு எனக்கு சங்கடமா இருக்கு!" என்றார் சத்யம்.

"நம்ம பையனோட படிப்புக்காகப் பண உதவி கேக்கப் போறோம். அதுவும் கடனாத்தான் கேக்கப் போறோம். அவ எதுவும் நினைச்சுக்க மாட்டா!" என்றாள் பங்கஜம்.

த்யம் தன் தம்பி முருகன் வீட்டுக்குச் சென்றபோது அதுவும் ஒரு அலுவலகம் போல்தான் இருந்தது. முன்னறையில் மேஜை நாற்காலி போடப்பட்டு ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். மேஜையில் இருந்த பெயர்ப்பலகையில் 'குமார் - அந்தரங்கச் செயலர்' என்று எழுதப்பட்டிருந்தது..

ஏற்கெனவே நான்கைந்து பேர் காத்திருந்ததைப் பார்த்த சத்யம் சற்றுத் தயங்கி விட்டுக் குமாரிடம் சென்றார்.

"சார்! வரிசையில வாங்க. உங்களுக்கு முன்னால நாலைஞ்சு பேர் இருக்காங்க!" என்றான குமார்.

"நான் முருகனோட அண்ணன். அவனைப் பாக்கணும். நான் உள்ளே போகலாம் இல்ல?" என்றார் சத்யம் சற்றுக் கோபத்துடன்.

"சாரி சார்! உக்காருங்க. சார்கிட்ட கேட்டுக்கிட்டு வரேன்!" என்று எழுந்த குமார், "உங்க பேர் என்ன சொன்னீங்க?" என்றான்.

"முருகனோட அண்ணன்னு சொன்னேனே!"

"தப்பா நினைச்சுக்காதீங்க சார்! சாரைப் பார்க்க வரவங்க நிறைய பேரு தங்களை சாரோட சொந்தக்காரர்னுதான் சொல்றாங்க. அந்த மாதிரி சொல்றவங்களை சார்கிட்ட அனுப்பினா அவங்க ஏதாவது தூரத்து சொந்தமா இருப்பாங்க. அப்புறம் சார் என்னைத் திட்டுவாரு. அதனாலதான் பேர் கேட்டேன்" என்றான் குமார் மன்னிப்புக் கேட்கும் குரலில்  

"என் பேரு சத்யம். முருகனோட கூடப் பொறந்த அண்ணன்! என்றார் சத்யம் எரிச்சலுடன்.

சில விநாடிகளில், முருகனே வந்து, "வா அண்ணே!" என்று சத்யத்தின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். சத்யம் பெருமையுடன் குமாரைப் பார்த்து விட்டு முருகனுடன் உள்ளே சென்றார்.

சத்யம் உள்ளே சென்று அமர்ந்ததும், "த:ப்பா நினைச்சுக்காதே அண்ணே! நம்ம தூரத்து சொந்தக்காரங்க சில பேரு வந்து பணம் கேட்டுத் தொந்தரவு பண்றாங்க. அதனாலதான் யாருன்னு தெரியாம எல்லாரையும் உள்ளே அனுப்பாதேன்னு குமார்கிட்ட சொல்லி இருக்கேன்" என்றான் முருகன்.

தானே பண உதவி கேட்கத்தானே வந்திருக்கிறோம் என்று நினைத்து சங்கடமாக உணர்ந்தார் சத்யம்.

"நான் நிறைய உதவி செய்யறவன்தான். வெளியில உக்காந்துக்கிட்டு இருக்கறவங்கள்ளாம் கூட ஏதாவது உதவி கேட்டுத்தான் வந்திருப்பாங்க. குமாரே அவங்ககிட்ட பேசி அவங்களுக்கு உதவி செய்யறதா வேண்டாமா, எவ்வளவு கொடுக்கலாம் எல்லாம் முடிவு செஞ்சு எங்கிட்ட சொல்லுவான். நான் செக் போடச் சொல்லிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடுவேன். அவங்க முகத்தைக் கூட நான் பாக்கறதில்ல!" என்றான் முருகன் தொடர்ந்து.

''யார் என்னன்னு பாக்காம  உன் செகரட்டரி சொல்றதை வச்சுக்கிட்டு அவங்களுக்கு உதவி செஞ்சா அது சரியா இருக்குமா? உன் செகரட்டரியே தகுதி இல்லாதவங்களுக்கோ, தனக்கு வேண்டியவல்களுக்கோ உதவி செஞ்சு உன் பணத்தை வீண்டிக்கலாம் இல்ல?' என்று நினைத்துக் கொண்ட சத்யம், உதவி கேட்டு வந்த தான் கருத்துக் கூறுவது பொருத்தமாக இருக்காது என்று நினைத்து, "உன் ஆஃபீசுக்குப் போயிருந்தேன். அங்கேயும் நிறைய பேர் இருந்தாங்க. உதவி கேக்கறவங்க ஆஃபீசுக்கும் வருவாங்களா?" என்றார்.

"வருவாங்க. அங்கேயும் இதே மாதிரி ஏற்பாடுதான். என்னோட பி ஏதான் பாத்து முடிவு செய்வா" என்ற முருகன்,"நீ ஏன் அங்கே போனே? வீட்டுக்கே வந்திருக்க வேண்டியதுதானே? ஆஃபீசுக்கு வரதுன்னா ஃபோன் பண்ணிட்டு நான் இருக்கற நேரத்தில வந்திருக்கலாமே!" என்றான் தொடர்ந்து.

"வெளியில போய் ஃபோன் பண்ணிட்டு வரதுக்கு நேரேயே போய்ப் பாக்கலாமேன்னு நினைச்சேன்!" என்ற சத்யம் விஷயத்தைச் சொல்ல இன்னும் தயங்கியவராக, "சரளா வீட்டில இல்லையா?" என்றார்.

"அவ லேடீஸ் கிளப் மீட்டிங்குக்குப் போயிருக்கா. மாசத்துக்கு ஒரு தடவை மீட்டிங், லஞ்ச்சோட. அநேகமா எல்லாக் கூட்டத்துக்குமே லஞ்ச் செலவை அவதான் ஏத்துப்பா!" என்றான் முருகன் பெருமையுடன்.

'எப்படியெல்லாம் பணத்தை வீண்டிக்கிறான்!' என்று நினைத்த சத்யம், அதனால் தனக்கு உதவத் தயங்க மாட்டான் என்று நினைத்து சட்டென்று விஷயத்துக்கு வந்தார்.

தன் மகன் அருணுக்குப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்திருப்பதாகவும், கல்லூரிக் கட்டணம் செலுத்த இரண்டு லட்ச ரூபாய் வேண்டுமென்றும், வங்கியில் கல்விக் கடனுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும், ஓரிரு மாதங்களில் அது கிடைத்தவுடன் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் முருகனிடம் தயக்கத்ததுடனும், சங்கடத்துடனும் சொல்லி முடித்தார் சத்யம்.

முருகன் இன்டர்காமில் குமாரை அழைத்து, "குமார் ஐயாயிரம் ரூபாய்க்கு ஒரு செக் போட்டு எடுத்துக்கிட்டு வா!... ஆமாம். பேரர் செக்தான்" என்று கூறி ரிசீவரை வைத்து விட்டு, சத்யத்திடம் திரும்பி, "தப்பா நினைச்சுக்காதே அண்ணே! நான் யாருக்கும் கடன் கொடுக்கறதில்ல. ஐயாயிரம் ரூபாய்க்கு பேரர் செக் கொடுக்கறேன். இந்தப் பணத்தை நீ திருப்பிக் கொடுக்க வேண்டாம். அருணோட படிப்புக்கு நான் செய்யற சின்ன உதவியா இருக்கட்டும்!" என்றான் சிரித்தபடியே.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை

குறள் 837:
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

பொருள்: 
அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடையும்போது அந்நியர் பலர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் (அவனிடமிருந்து உதவி எதுவும் கிடைக்காமல்) துன்பத்தில் வாடுவர்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...