"சமூக ஊடகங்கள்ள அதிக பலம் பெற என்ன செய்யணும்?" என்றார் சண்முகம்.
"அதுக்கெல்லாம் சில நிபுணர்கள் இருக்காங்க. அவங்க நிறைய வாட்ஸ் ஆப் குழுக்கள், யூடியூப் வீடியோக்கள், டிவிட்டர், ஃபேஸ்புக் பதிவுகள்னு உருவாக்கி, அதையெல்லாம் நிறைய பேருக்குப் போய்ச் சேருகிற மாதிரி பரவச் செஞ்சுடுவாங்க. கொஞ்சம் பணம் செலவழியும், அவ்வளவுதான்!"
"பணம் செலவழிக்கறதைப் பத்திக் கவலை இல்லை. இளங்கோவோட இமேஜைக் கெடுத்துத் தேர்தல்ல அவன் கட்சி நமக்கு ஒரு சவாலா இல்லாத மாதிரி பாத்துக்கணும். அவ்வளவுதான்!"
"ரெண்டு மாசத்தில பாருங்க. தன்னோட இமேஜ் டேமேஜ் ஆறதைப் பார்த்து, இளங்கோ எப்படி அலறப் போறாரு பாருங்க!" என்றான் கண்ணன், உற்சாகத்துடன்.
"என்னப்பா, சமூக ஊடகங்களை வச்சு இளங்கோவோட பேரைக் கெடுத்துடலாம்னு சொன்ன! நாம எவ்வளவோ பணம் செலவழிச்சு, அவனுக்கு எதிரா நிறைய விஷயங்களைப் பரப்பினோம். ஆனா, அவன் முன்னை விட இன்னும் வலுவா இல்ல ஆகிக்கிட்டிருக்கான்?" என்றார் சண்முகம்.
"அவரோட பேச்சுத் திறமையால எல்லாத்தையும் சமாளிச்சுடறாருங்க. அவரைப் பத்தித் தப்பா ஏதாவது வந்தா, ரொம்ப சுருக்கமா புத்திசாலித்தனமாவோ, நகைச்சுவையாகவோ அதுக்கு பதில் சொல்லி, அதை ஒண்ணுமில்லாம ஆக்கிடறாரு. இத்தனைக்கும், அவருக்கு சமூக ஊடக பலம் அதிகமா இல்ல. ஆனா, அவர் பேச்சு சுவாரசியமா இருக்கறதால, அவர் சொல்றதை சமூக ஊடகங்கள்ள இருக்கற பல பேர் பரப்பி, அவர் பேச்சு எல்லாருக்கும் போய்ச் சேர வச்சுடறாங்க. சொல்லப் போனா, இளங்கோவைப் பத்தி நாம ஏதாவது தப்பான விஷயத்தைப் பரப்பினா, அந்த விஷயத்தை விட, அவர் அதுக்கு எப்படி பதில் சொல்றாருங்கறதைத் தெரிஞ்சுக்கத்தான் மக்கள் ஆவலா இருக்காங்க. அதனால, களம் இளங்கோவுக்கு சாதகமாத்தான் போய்க்கிட்டிருக்கு!" என்றான் கண்ணன்.
"சரி. இதையெல்லாம் குறைச்சுடு. ஒரேயடியா நிறுத்தினா, நாம தோத்துட்ட மாதிரி இருக்கும். நான் அவனை வேற வழியில சமாளிக்கிறேன்!" என்றார் சண்முகம்.
அடுத்த சில மாதங்களுக்கு, சண்முகத்தின் மறைமுகமான தூண்டுதலின் பேரில், இளங்கோவின் மீது பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு, ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வழக்குகள் போடப்பட்டன. பல்வேறு ஊர்களில் உள்ள காவல் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டன.
ஆனால், இளங்கோ அயரவில்லை. தன் மீது போடப்பட்ட வழக்குகளை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றங்களில் மனுப் போட்டான்.
தன் மீது புகார் அளிக்கப்பட்ட காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று, தன் மீதுள்ள புகார்களை உடனே விசாரித்து, அவற்றின் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினான்.
இதனால், புகார் கொடுத்த பலர் பயந்து, தங்கள் புகார்களையும் மனுக்களையும் திரும்பப் பெற்றனர்.
இளங்கோ எதற்கும் அஞ்ச மாட்டான், தன் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை எதிர்கொள்வதில் சிறிதும் சோர்வடைய மாட்டான் என்பதை உணர்ந்து, இளங்கோவை இது போன்ற போர்முறைகளால் வெல்ல முடியாது, அரசியல் ரீதியாகத்தான் அவனை எதிர்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் சண்முகம் .
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 65
சொல்வன்மை
குறள் 647:
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
பொருள்:
சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.
No comments:
Post a Comment