Sunday, November 20, 2022

836. முதலமைச்சரின் ஆய்வு

"முக்கியமான இலாகாவை அருணகிரிக்குக் கொடுத்திருக்காரே முதலமைச்சர்! அவரு அவ்வளவு திறமையானவரா என்ன?" என்றார் அமைச்சர் நீலமேகம்.

"இளைஞர், படிச்சவர்ங்கறதுக்காக முதல்வர் அவருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்காருன்னு நினைக்கிறேன். அவரு திறமை எப்படி இருக்குங்கறதைப் போகப் போகத்தான் பாக்கணும்!" என்றார் இன்னொரு அமைச்சரான முருகானந்தம்.

ட்சி அமைத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒவ்வொரு அமைச்சகத்தின் செயல்பாட்டையும் முதல்வர் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

அன்று தொழில் அமைச்சகத்தின் செயல்பாடு பற்றிய ஆய்வு.

தலைமைச் செயலர் மற்றும் தன் தனிச் செயலர் இருவரையும் அருகில் வைத்துக் கொண்ட முதல்வர், அவர்கள் இருவரும் கொடுத்திருந்த புள்ளி விவரங்களையும், குறிப்புகளையும் பார்த்துத் தொழில் அமைச்சரிடம் கேள்விகள் கேட்க, தொழில்துறை அமைச்சர் அருணகிரி, தன் அருகில் அமர்ந்திருந்த தொழில்துறைச் செயலரின் உதவியுடன் முதல்வரின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

ஆய்வு முடிந்ததும், அதிகாரிகளை அனுப்பி விட்டு, அருணகிரியை மட்டும் இருக்கச் சொன்னார் முதல்வர்.

இருவரும் தனிமையில் இருந்தபோது, "அருணகிரி! தொழில்துறை தங்களுக்குக் கிடைக்கணும்னு சில மூத்த அமைச்சர்கள் விரும்பினாங்க. தங்களோட விருப்பத்தை எங்கிட்ட தெரிவிக்கவும் செஞ்சாங்க. ஆனா நீங்க இளைஞர், படிச்சவர்ங்கறதால உங்ககிட்ட இந்தத் துறையை ஒப்படைச்சேன்!" என்று ஆரம்பித்தார் முதல்வர்.

"என்னால முடிஞ்ச அளவுக்கு சிறப்பாத்தான் செயல்பட்டுக்கிட்டிருக்கேன்!" என்றார் அருணகிரி.

முதல்வர் அருணகிரியைச் சற்று வியப்புடன் பார்த்தார்.

"இத்தனை நேரம் நடந்த ஆய்வில நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்க சொன்ன பதில்களிலிருந்தே உங்க அமைச்சகத்தோட செயல்பாடு எவ்வளவு மோசமா இருக்குன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கணும்! அது கூட உங்களுக்குப் புரியாம சிறப்பா செயல்படறேன்னு நீங்க சொல்றதைக் கேட்கறப்ப எனக்கு ஆச்சரியமா இருக்கு. உங்களுக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்தது என்னோட முட்டாள்தனம்னு இப்பதான் எனக்குப் புரியுது."

"சார்..."

"நான் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கம் சொல்றப்ப தொழில்துறைச் செயலர் அவமானத்தில நெளிஞ்சதை என்னால பார்க்க முடிஞ்சது. அவர் என்ன செய்வாரு பாவம்? அவர் சொன்ன யோசனைகளை நீங்க கேட்காம உங்க மனப்போக்குப்படி செயல்பட்டிருக்கீங்க. இதைப் பத்தி அவர் தலைமைச் செயலர்கிட்ட புலம்பி இருக்காரு. தலைமைச் செயலர் இதை எங்கிட்ட சொன்னரு. சில தொழிலதிபர்கள் எங்கிட்ட வந்து அடிப்படைப் புரிதல் கூட இல்லாம நீங்க செயல்படறதா புகார் சொன்னாங்க. இது மாதிரி புகார்கள் இருந்தும், உங்களுக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாம்னு பொறுமையா இருந்தேன். ஆனா உங்க செயல்பாடு சரியில்லங்கறதையே நீங்க புரிஞ்சுக்காம சிறப்பா செயல்படறதா சொல்றீங்க! இந்த ஆறு மாசத்தில தொழில் வளர்ச்சிக்கு பதிலா தொழில் வீழ்ச்சிதான் ஏற்பட்டிருக்கு."

"எங்கே தப்பு பண்ணி இருக்கேன்னு பார்த்து இனிமே சரியா செயல்படறேன் சார்" என்றார் அருணகிரி, பதைபதைப்புடன்.

"அதுக்கு நேரம் இல்ல அருணகிரி. உங்க மோசமான செயல்பாட்டால உங்க பேரைக் கெடுத்துக்கிட்டதோட இந்த அரசாங்கத்துக்கும் கெட்ட பேரை வாங்கிக் கொடுத்திருக்காங்க. அதை விட முக்கியமா இந்த மாநிலத்தோட தொழில் வளர்ச்சிக்கே ஊறு விளைவிச்சிருக்கீங்க. உங்க ராஜினாமாக் கடிதத்தை இன்னிக்கே எனக்கு அனுப்பிடுங்க. நீங்க போகலாம்!" என்றார் முதல்வர்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை

குறள் 836:
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

பொருள்: 
செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...