Friday, November 18, 2022

835. முன் செய்த வினை?

"என்னடா, சாரதா என்ன சொல்றா?" என்றாள் பார்வதி.

"என்ன சொல்லுவா? எப்பவும் பேசற மாதிரி திமிராத்தான் பேசறா? மறுபடி இங்க வர மாட்டாளாம்!" என்றான் மணிகண்டன்.

"ஏண்டா, பொதுவா மாமியார்-மருமகளுக்குத்தான் ஒத்து வராது. இங்கே என்னடான்னு எங்களுக்குள்ள ஒரு பிரச்னையும் இல்ல. ஆனா உன்னால உன் மனைவியோட அனுசரிச்சுப் போக முடியல!"

"எல்லாம் என் தலையெழுத்து! அவளுக்கு சம்பாதிக்கிறோங்கற திமிரு. அதனால என்னை நம்பி இருக்க வேண்டாங்கற மிதப்பில இப்படி நடந்துக்கிறா."

"நான் சொல்றதைக் கேளு. சாரதா நல்ல பொண்ணு. என்னை நல்லாத்தான் பாத்துக்கிட்டா. வேலைக்குப் போனாலும் குழந்தைக்கு வேண்டியதை செஞ்சுக்கிட்டிருந்தா. ஏன் உன்னைக் கூட நல்லாதான் கவனிச்சுக்கிட்டிருந்தா. நீ தேவையில்லாம அவளோட சண்டை போட்டு அவ கோவிச்சுக்கிட்டு அவ அம்மா வீட்டுக்குப் போற அளவுக்குக் கொண்டு விட்டுட்ட."

"எல்லாத்துக்கும் நான்தான் காரணமா? அவளாலதான் என்னை அனுசரிச்சுப் போக முடியல!"

";நிறுத்துடா. நீ ஆஃபீஸ்ல உன் மேலதிகாரியோட சண்டை போட்டதால உன் வேலை போச்சு. அது எவ்வளவு நல்ல கம்பெனி! இப்ப அந்த வேலை போனப்பறம் ஒரு சின்ன கம்பெனியில குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யற. நான் கூட உன் மேலதிகாரிதான் இதுக்குக் காரணம்னு நீ சொன்னதை நம்பினேன். ஆனா நீ சாரதாவோட சண்டை போட்டு அவ வீட்டை விட்டுப் போனதைப் பாத்தப்பறம் உங்கிட்டதான் தப்பு இருக்குன்னு தோணுது!"

"எங்கிட்ட என்ன தப்பு இருக்கு?"

"உங்கிட்ட என்ன தப்பு இருக்குன்னு தெரியாம இருக்கறதுதான் உன் பிரச்னைகளுக்குக் காரணம். உனக்கு மத்தவங்களை அனுசரிச்சுப் போகத் தெரியல. மத்தவங்ககிட்ட குற்றம் கண்டுபிடிக்கிறது, அவங்களைத் தூக்கி எறிஞ்சு பேசறது இதைத்தான் நீ எல்லார்கிட்டேயும் செஞ்சிக்கிட்டிருக்க. இதனால எல்லாம் என்ன விளைவுகள் ஏற்படும்னு யோசிக்காம திரும்பத் திரும்ப அதே மாதிரி நடந்துக்கிற. அதனால உனக்கு ஏற்படுகிற பிரச்னைகள்ளேந்து பாடம் கத்துக்காம  திரும்பத் திரும்ப அதே தப்பைப் பண்ணிக்கிட்டிருக்க. அதனால உனக்கு மறுபடியும் பிரச்னைகள் வந்துக்கிட்டிருக்கு!" என்றாள் பார்வதி.

"என்ன செய்யறது? எத்தனை ஜன்மங்கள்ள செஞ்ச பாவமோ தெரியல. என் வாழ்க்கை நரகமா அமைஞ்சுடுச்சு!" என்று தலையில் அடித்துக் கொண்டான் மணிகண்டன்.

"முன் ஜன்மங்கள்ள செஞ்ச பாவம் எல்லாம் எதுவும் இல்ல. இந்த ஜன்மத்தில நீ முட்டாள்தனமா நடந்துக்கிட்டதுதான் இதற்கெல்லாம் காரணம்! நினைச்சுப் பாரு. உனக்குக் கிடைச்ச நல்ல வேலை போகும்படி நடந்துக்கிட்டது, மனைவியையும், குழந்தையையும் பிரிஞ்சு வாழ்ந்துக்கிட்டு வயசான என்னைத் தனியா பாத்துக்க முடியாம கஷ்டப்படறது இதெல்லாம் நீயா வரவழைச்சுக்கிட்டதுதானே?" என்றாள் பார்வதி.

தாய் கூறுவதை ஏற்றுக் கொள்ள மறுப்பது போல் மணிகண்டன் தலையைப் பக்கவாட்டில் ஆட்டினான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை

குறள் 835:
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.

பொருள்: 
அறிவற்றவனாக இருப்பவன் ஏழு பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்தைத் தன் ஒரு பிறவியிலேயே ஏற்படுத்திக் கொள்வான்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...