Monday, November 7, 2022

831. சொந்த வீடு எதற்கு?

தன்னுடன் கல்லூரியில் படித்த ரமேஷை நீண்ட நாட்களுக்குப் பிறகுச் சந்தித்தான் சுப்பு.

தான் ஒரு பொருளாதார ஆலோசகராக இருப்பதாகச் சொன்னான் ரமேஷ். 

"எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்காங்க - நிறுவனங்கள், தனிமனிதர்கள்னு. அவங்களோட  பிரச்னைகளை ஆராய்ஞ்சு, அவற்றுக்குத் தீர்வு கொடுக்கறதுதான் என் வேலை. ரொம்ப பிசியா இருக்கேன். புதுசா வாடிக்கையாளர்கள் வந்துக்கிட்டே இருக்காங்க. ஆனா எனக்கு நேரமில்லாததால, புதுசா யாரையும் எடுத்துக்க முடியல!" என்றான் ரமேஷ்.

தன்னப் பற்றிக் கூறிய பிறகு, சுப்பு என்ன செய்கிறான், எங்கே வசிக்கிறான் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டான் ரமேஷ்.

சுப்பு தனக்குச் சொந்த வீடு இருப்பதாகச் சொன்னதும், "நான் நினைச்சிருந்தா, என் வருமானத்தில மூணு வீடு வாங்கி இருக்க முடியும். ஆனா, நான் வீடு வாங்கல!" என்றான் ரமேஷ்.

"ஏன்?" என்றான் சுப்பு, வியப்புடன்.

"முட்டாள்கள்தான் வீடு வாங்குவாங்க! ஐ ஆம் சாரி. நான் உன்னைச் சொல்லல. பொதுவாச் சொன்னேன்!"

""ஏன் அப்படிச் சொல்ற?"

"உன் வீட்டோட சந்தை மதிப்பு எவ்வளவு இருக்கும்?"

"முப்பது லட்சம் ரூபா இருக்கும்."

"உன் வீட்டை வாடகைக்கு விட்டா, எவ்வளவு வாடகை வரும்?"

"ஏழாயிரம் ரூபா வரும்னு நினைக்கிறேன்!"

"வருஷத்துக்கு எண்பத்து நாலாயிரம் ரூபாய். தொண்ணூறாயிரம் ரூபாய்னு வச்சுக்கிட்டா கூட, வருஷத்துக்கு மூணு சதவீதம் ரிடர்ன்தான் வருது. பாங்க்லேயே 10 சதவீதம் வட்டி கொடுக்கறாங்களே!"

சுப்பு மௌனமாக இருந்தான்.

"இப்ப புரியுதா, நான் ஏன் வீடு வாங்கலேன்னு? உன்னோட இடத்தில நான் இருந்தா, வீட்டை வித்துட்டு முப்பது லட்ச ரூபாயை பாங்கல போட்டு வைப்பேன். வருஷத்துக்கு 3 லட்சம் ரூபா வட்டி வரும். எட்டாயிரம் ரூபாய்க்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துப்பேன். வாடகை போக, வருஷத்துக்கு ரெண்டு லட்சம் ரூபா மிச்சமாகும்!" என்றான் ரமேஷ்.

சுப்பு குழப்பத்துடன் யோசித்தான்.

"கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, வீட்டை விக்கறது முட்டாள்தனம். மறுபடி வீடு வாங்கணும்னா முடியுமா? விலையெல்லாம் ஏறி இருக்கும் இல்ல?" என்றார் சுப்புவின் நண்பர் ராமமூர்த்தி.

"நான்தான் எப்பவுமே வீடு வாங்கப் போறதில்லையே!" என்றான் சுப்பு.

"இங்க பாரு, சுப்பு. வீட்டு வாடகையெல்லாம் ஏறிக்கிட்டே இருக்கும். ஆனா, பாங்க்லேந்து அதே வட்டித்தொகைதான் வந்துக்கிட்டிருக்கும். ஒரு கட்டத்தில, பாங்க்லேந்து வர வட்டியை விட வீட்டு வாடகை அதிகமா இருந்தா? வீட்டு விலையும் ஏறிக்கிட்டிருக்கும். அதனால, உங்கிட்ட இருக்கிற முப்பது லட்சம் ரூபாயை வச்சு மறுபடி வீடு வாங்கவும் முடியாது."

"இன்னித் தேதியில வருஷத்துக்கு ரெண்டு லட்ச ரூபா மீதமாகுதில்ல? சொந்த வீட்டில இருந்துக்கிட்டிருந்தா, இந்தப் பணம் வருமா?" என்றான் சுப்பு.

மனைவி, ராமமூர்த்தி போன்ற நண்பர்கள் ஆகியோர் தடுத்தும் கேளாமல், வீட்டை விற்று விட்டுப் பணத்தை வங்கி வைப்புக் கணக்கில் போட்டு விட்டு, வாடகை வீட்டுக்குக் குடியேறினான் சுப்பு.

"ஏதோ உங்க நண்பர் பொருளாதார நிபுணர் சொன்னார்னு சொல்லி, நாங்கல்லாம் தடுத்தும் கேக்காம, வீட்டை வித்துட்டு வாடகை வீட்டுக்கு வந்தீங்க. இப்ப பாங்க்ல வட்டியையெல்லாம் ஏகமாக் குறைச்சுட்டாங்க. ஆறு சதவீதம்தான் கொடுக்கறாங்க. வருஷத்துக்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம். மாசம் பதினைஞ்சாயிரம் ரூபாய். இவ்வளவு வருஷத்தில, வீட்டு வாடகையும் கொஞ்சம் கொஞ்சமா ஏறி, இப்ப பதினைஞ்சாயிரம் ரூபாய் ஆயிடுச்சு. இப்ப, வர வட்டி வீட்டு வாடகைக்கு சரியா இருக்கு. அடுத்த வருஷம் வாடகை ஏறும்போது, வாடகை கொடுக்க வட்டித்தொகை போதாதே! இப்ப அறுபது லட்சம் ரூபாய்க்குக் குறைஞ்சு வீடும் கிடைக்காது. உங்க நண்பர் ராமமூர்த்தி எவ்வளவோ எடுத்துச் சொன்னார். நல்லதையெல்லாம் எடுத்துக்காம, உருப்படாம போறதுக்கு உங்க  நண்பர் சொன்ன யோசனையைக் கேட்டீங்க. இப்ப நாம பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டிருக்கோம்!" என்றாள் சுப்புவின் மனைவி, கோபத்துடனும், ஆற்றாமையுடனும். 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை

குறள் 831:
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.

பொருள்: 
கேடு விளைவிப்பது எது, நன்மை தருவது எது, என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை ஆகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...