"பத்தகத்தை வாங்கிப் பார்த்த கணேசன், 'புறநானூறு - சில புதிய சிந்தனைகள்' என்ற தலைப்பைப் பார்த்து விட்டு, "இது மட்டும் எத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கீங்க?" என்றார்.
"முப்பத்தேழு நூல்கள்!" என்றார் முத்துக்கண்ணன், பெருமையுடன்.
"வாழ்த்துக்கள்!" என்றபடியே, புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்த கணேசன், தொண்டையைச் செருமிக் கொண்டே, "பி ஏ முதல் ஆண்டுக்கு வகுப்பு எடுக்கறீங்க இல்ல, அது இனிமே வேண்டாம்!" என்றார்.
"ஏன் சார்?" என்றார் முத்துக்கண்ணன், ஏமாற்றத்துடன்.
"புதுசா வேலைக்கு எடுத்திருக்கமே, அருணாசலம், அவருக்கு இன்னும் கொஞ்சம் பயிற்சி கொடுக்கலாம்னு நினைக்கிறேன். அதனால, நீங்க எடுக்கற பி ஏ வகுப்பை அவருக்குக் கொடுத்திருக்கேன்."
"ஏற்கெனவே அவருக்கு நிறைய வகுப்புகள் இருக்கே!"
"பரவாயில்லை. அவர் அதிக வகுப்புகள் எடுக்கத் தயாராத்தான் இருக்காரு. நான் என்ன நினைச்சேன்னா, நீங்க சீனியர்ங்கறதால, நீங்க எம் ஏ, பி ஏ ரெண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு வகுப்புகள் மட்டும் எடுங்க. பி ஏ தமிழ் முதல் ஆண்டு, மற்ற பி ஏ, பி எஸ் சி, பி காம் வகுப்புகள் எல்லாம் அருணாசலமே பாத்துக்கட்டும்!" என்றார் கணேசன்.
முத்துக்கண்ணன் ஏதோ சொல்ல வாயெடுத்து, பிறகு ஏதும் சொல்லாமல், "சரி சார்! உங்க விருப்பம். எனக்குக் கிடைக்கிற கூடுதல் நேரத்தைப் படிக்கறதுக்குப் பயன்படுத்திக்கறேன்" என்று கூறி விடைபெற்றார்.
'படியுங்க, படியுங்க! எத்தனை புத்தகம் படிச்சு என்ன? மாணவர்களுக்குப் புரியற மாதிரி உங்களால விளக்க முடியாது! பி ஏ மாணவர்கள் வந்து புகார் செய்யறாங்க. எம் ஏ மாணவர்கள்னா, லட்சியம் பண்ண மாட்டாங்க. நீங்க நடத்தறது புரியலேன்னா, வகுப்பை கட் பண்ணிட்டு, தாங்களே படிச்சுப்பாங்க. நீங்க ஓய்வு பெறுகிற வரையில, உங்களை வச்சுத்தானே சமாளிக்கணும்!" என்று நினைத்துக் கொண்டார் கணேசன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 65
சொல்வன்மை
குறள் 650:
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.
பொருள்:
கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
Read 'More Free Time for the Professor' the English version of this story by the same author.

No comments:
Post a Comment