Thursday, November 24, 2022

649. பேச்சாளர் கேட்ட நேரம்

"பொதுவா, நம்ம கிளப்ல பேச்சாளர்களுக்கு முக்கால் மணி நேரத்துக்கு மேல கொடுக்கறதில்லையே! அழகர்சாமிக்கு மட்டும் எப்படி ரெண்டு மணி நேரம் கொடுக்க முடியும்?" என்றார் கிளப் செயலாளர் தங்கதுரை.

"சார்! அழகர்சாமி பெரிய தமிழறிஞர். இலக்கிய மன்றங்கள்ள எல்லாம் அவர் மூணு மணி நேரம் பேசுவாரு. எல்லாரும் சுவாரசியமா கேட்டுக்கிட்டிருப்பாங்க. இது கிளப் மீட்டிங் என்பதால, ரெண்டு மணி நேரமா சுருக்கிக்கறேன்னு சொல்றாரு!" என்றார் சீதாராமன். அவர்தான் அழகர்சாமியை கிளப் கூட்டத்தில் பேச அழைத்தவர்.

"சார்! நம் கிளப் உறுப்பினர்கள் அவ்வளவு நேரம் பேச்சைக் கேக்க மாட்டாங்க. அதோட, பேச்சாளர் வரதுக்கு முன்னால, நம் கிளப் விஷயங்களைப் பத்தின விவாதங்கள் இருக்கும். அதுக்கே ஒரு மணி நேரம் வேணும். அதனாலதான், பேச்சாளர்களுக்கு 45 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கறதுன்னு வச்சிருக்கோம். இவருக்கு வேணும்னா ஒரு மணி நேரம் ஒதுக்கலாம். அதுக்கு ஒத்துக்கிட்டார்னா, அவரைக் கூப்பிடலாம்" என்றார் செயலாளர், உறுதியாக.

"என்ன சார், அழகர்சாமி பேச்சைப் பத்தி நம் உறுப்பினர்கள் என்ன சொல்றாங்க?" என்றார் சீதாராமன்.

"நீங்க என்ன நினைக்கிறீங்க? அதைச் சொல்லுங்க!" என்றார் தங்கதுரை..

"ம்..எதிர்பார்த்த அளவுக்கு இல்ல!" என்றார் சீதாராமன், தர்மசங்கடத்துடன்.

"எதிர்பார்த்த அளவுக்கு இல்லையா? மோசமா இருந்ததுன்னு சொல்ல ஏன் தயங்கறீங்க?"

"அப்படிச் சொல்ல முடியாது. அவர் நல்ல பேச்சாளர்தான். ஆனா, பேச்சு கொஞ்சம் நீளமா இருந்ததுன்னு நினைக்கறேன். இன்னும் கொஞ்சம் சுருக்கமாப் பேசி இருந்தா, நல்லா இருந்திருக்கும்!"

"அதான் சார் விஷயம். அவர் ரெண்டு மணி நேரம் கேட்டாரு. நாம ஒரு மணி நேரம் கொடுத்தோம். ஆனா, அவர் பேசின விஷயத்தை இருபது நிமிஷத்திலேயே சொல்லி முடிச்சிருக்கலாம். நீட்டி மடக்கிப் பேசறது, சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்ப வேற வார்த்தைகள்ள சொல்றது, பொருத்தமில்லாத நகைச்சுவை, குட்டிக்கதைகள்னு மசாலா சேர்க்கறது இதெல்லாம் இல்லாம பேசி இருக்கலாமே!" என்றார் தங்கதுரை.

"ஆனா, அவர் நல்ல பேச்சாளர்னு பெயர் வாங்கினவராச்சே சார்!"

"இருக்கலாம். என்னோட பார்வையில, அவருக்கு ஒரு விஷயத்தை சுருக்கமா, நேரடியா சொல்லத் தெரியல. ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் நீட்டி முழக்கறாரு. அதனாலதான், அவருக்கு அதிக நேரம் தேவைப்படுது. நல்ல வேளை, நாம அவருக்கு ஒரு மணி நேரம்தான் கொடுத்தோம். ரெண்டு மணி நேரம் கொடுத்திருந்தா, மனுஷன் நம்மையெல்லாம் போரடிச்சே கொன்னிருப்பாரு!"

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 65
சொல்வன்மை

குறள் 649:
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.

பொருள்:
குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவாகப் பேச இயலாதவர்கள் பல சொற்களைப் பயன்படுத்திப் பேச விரும்புவர்.

Read 'The Speaker Who Asked For More Time' the English version of this story by the same author.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...