"என்னவோ தெரியல சார்! என் டீம் உறுப்பினர்கள் நான் சொல்றபடி நடந்துக்க மாட்டேங்கறாங்க. கேட்டா, நீங்க அப்படித்தானே சார் சொன்னீங்கன்னு தப்பை என் மேல போடறாங்க. சில சமயம், அவங்க என்கிட்ட ஒருவித விரோத பாவத்தோட நடந்துக்கற மாதிரி இருக்கு. என் டீம் உறுப்பினர்கள்கிட்ட ஏதோ தப்பு இருக்கு. ஆனா அது என்னன்னு எனக்குப் புரியல" என்றான் சிவராஜ்.
இரண்டு நாட்கள் கழித்து, சிவராஜை அழைத்த அறிவழகன், "சிவராஜ்! நேத்து நீ உன் டீம் உறுப்பினர்கள்கிட்ட பேசினப்ப, நான் பக்கத்து அறையிலே இருந்து கேட்டேன்!" என்றார்.
"என்ன சார் இது?" என்றான் சிவராஜ், சற்று சங்கடத்துடன்.
"இதில ரகசியம் எதுவும் இல்ல. நீ பேசறப்ப, நான் உன் பக்கத்தில உக்காந்து கூட கவனிச்சிருக்கலாம். ஆனா, அதனால நீ நர்வஸ் ஆகலாம்கறதாலதான் உன்கிட்ட சொல்லாம, அடுத்த அறையிலிருந்து கவனிச்சேன். அது கூட உனக்கு உதவத்தான்!"
"சார்! என் டீம் உறுப்பினர்களை மாத்ததினாத்தான் சரியா வரும். அவங்க ஆட்டிட்யூடே சரியா இல்லை!" என்றான் சிவராஜ்.
"உன் டீம் உறுப்பினர்கள்கிட்ட சில குறைகள் இருக்கலாம். ஆனா, அவங்க எப்படி இருந்தாலும், அவங்களை வச்சுக்கிட்டுத்தான் நாம நம்ம வேலைகளைச் செய்யணும்."
"அது எப்படி சார்?" என்றான் சிவராஜ்.
"எப்படின்னு சொல்றேன். அதுக்கு முன்னால, நீயும் நானும் சேர்ந்து, மனோகர் தன் டீம் உறுப்பினர்கள்கிட்ட எப்படிப் பேசறான்னு பாக்கலாம், அதாவது கேக்கலாம்!" என்றார் அறிவழகன்.
"பக்கத்து ரூம்ல இருந்தா சார்?" என்றான் சிவராஜ், சிரித்துக் கொண்டே.
"தேறிட்ட!" என்றார் அறிவழகன், சிவராஜின் முதுகில் தட்டி.
"நீ என்ன கவனிச்ச?" என்றார் அறிவழகன்.
"ஒரு விஷயத்தை நான் ஒத்துக்கணும் சார்! மனோகர் ரொம்பத் தெளிவா, கோர்வையாப் பேசறான். நான் அந்த அளவுக்கு இல்ல. சொல்லப் போனா, சில பாயின்ட்களை சொல்ல வேண்டிய இடத்தில சொல்ல மறந்துட்டு, அப்புறம் சொல்லுவேன். நானே இதை மாத்திக்கணும்னு நினைச்சிருக்கேன்!" என்றான் சிவராஜ்.
"நீ உன் குறையை வெளிப்படையா ஒத்துக்கிட்டது நல்ல விஷயம். இந்தப் பிரச்னை எல்லாருக்கும் ஏற்படறதுதான். பேசறதுக்கு முன்னால என்ன பேசணும்னு யோசிச்சு, பாயின்ட்களை வரிசையாக் குறிச்சு வச்சுக்கிட்டா, இந்தப் பிரச்னை வராது. ஆரம்பத்தில குறிப்புகளைப் பாத்துப் பேசினாலும், நாளடைவில, குறிப்புகளைப் பாக்காமயே, கோர்வையாப் பேச வந்துடும். இதற்கு முயற்சியும் பொறுமையும் வணும்." என்றார் அறிவழகன்.
"சரி சார்! அது ஒண்ணுதான் எனக்குத் தெரிஞ்சது. மத்தபடி நான் பேசறதுக்கும், மனோகர் பேசறதுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்ல. இன் ஃபேக்ட், என்னோட லாங்க்வேஜ் அவனோடதை விட இன்னும் சிறப்பா இருக்கும்!"
"ஆமாம். அதை நான் கவனிச்சேன். லாங்கவேஜ் வலுவா இருக்கறது ஒரு அட்வான்டேஜ்தான். ஆனா, இன்னொரு விஷயத்தை நீ கவனிக்கல."
"என்ன சார் அது?"
"மனோகர் பேச்சில ஒரு இனிமை இருக்கு. அவன் பயன்படுத்தற வார்த்தைகள், குரலோட தொனி எல்லாமே ஒரு நண்பன்கிட்ட பேசற மாதிரி இருக்கு. உன்னோட பேச்சு கட்டளையிடற தொனியில இருக்கு. அது கட்டளைதான். ஆனா, கேக்கறவங்களுக்கு அப்படித் தெரியக் கூடாது. இன்னும் கொஞ்சம் இனிமையா, மென்மையாப் பேச நீ பழகிக்கணும். இந்த ரெண்டு விஷயங்களிலேயும் நீ கவனம் செலுத்தினா, உன் டீம் உறுப்பினர்களை இந்த ஏழாவது மாடியிலேந்து குதிக்கச் சொன்னா கூட, அவங்க கேள்வி கேக்காம குதிச்சுடுவாங்க!" என்றார் அறிவழகன்.
சிவராஜின் முகத்தில் விரிந்த புன்னகையிலிருந்து, தான் சொன்னதை அவன் சரியாக எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அறிவழகன் புரிந்து கொண்டார்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 65
சொல்வன்மை
குறள் 648:
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
பொருள்:
சொல்ல வேண்டியவற்றைக் கோர்வையாகவும், இனிமையாகவும் சொல்லும் ஆற்றலை ஒருவர் பெற்றிருந்தால், அவர் சொல்பவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்
No comments:
Post a Comment