மணமகளுக்கு தூரத்து உறவு என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் சேதுமாதவன்.
"சொந்தக்காரங்கங்கறதால இந்தக் கல்யாணத்துக்கு வந்தேன். இங்கே வந்து பாத்தா, எனக்குத் தெரிஞ்சவங்க யாருமே இல்ல. உங்களைப் பாத்ததும் பேசணும் போலத் தோணிச்சு!" என்று சேதுமாதவன் கூறியதை, ரகு இயல்பாக எடுத்துக் கொண்டான்.
நெருங்கிய உறவினர் திருமணம் என்பதால், ரகு இரண்டு நாட்கள் நடந்த திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டான்.
சேதுமாதவன் வெளியூரிலிருந்து வந்தவன் என்பதால், அவனும் இரண்டு நாட்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டான்.
அந்த இரண்டு நாட்களிலும், பல நாட்கள் பழகியவன் போல், தன்னிடம் அவன் மிகவும் நெருக்கமாகப் பழகியது ரகுவுக்கு வியப்பாக இருந்தது. இயல்பாகவே எல்லோரிடமும் அன்பாகப் பழகுபவன் போலிருக்கிறது என்று ரகு நினைத்துக் கொண்டான்.
இரண்டாம் நாள் மாலை திருமண வரவேற்பு முடிந்து கிளம்பும்போது, "வரேன், சார்! உங்களை சந்திச்சதில ரொம்ப சந்தோஷம்" என்றான் ரகு, சேதுமாதவனிடம்.
சேதுமாதவன் அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டது போல் தலையாட்டினான்.
"எனக்கும்தான்!" என்று கூட அவன் சொல்லாதது ரகுவுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது.
"உங்க ஃபோன் நம்பர் சொல்லுங்க!" என்ற ரகு, சேதுமாதவனின் நம்பரைக் கேட்டுப் பெற்று, அதை அழைத்து, அவன் ஃபோன் அடிப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, "என் நம்பரை சேவ் பண்ணிக்கங்க. நேரம் கிடைக்கும்போது பேசலாம்!" என்று சொல்லி விடைபெற்றான்.
சேதுமாதவன் மௌனமாகத் தலையாட்டினான்.
ஊருக்குச் சென்றதும், சேதுமாதவனைச் சந்தித்தது பற்றித் தன் மனைவி லதாவிடம் கூறினான் ரகு.
"ஆனா, என்னவோ தெரியல. முதல்ல எல்லாம் ரொம்ப நெருக்கமாப் பேசினவரு, நான் கிளம்பறப்ப ரொம்ப அலட்சியமா நடந்துக்கிட்டாரு. உங்களைச் சந்திச்சதில ரொம்ப சந்தோஷம்னு சொன்னேன். ஒப்புக்குக் கூடத் தனக்கும் சந்தோஷம்தான்னு சொல்லல. நான்தான் அவர் ஃபோன் நம்பரைக் கேட்டு வாங்கினேன். அவர் என் நம்பரை சேவ் பண்ணினாரான்னு கூடத் தெரியல!" என்றான் ரகு.
"விடுங்க. அவர் உங்க நெருங்கின நண்பரா என்ன?" என்றாள் லதா.
"எதுக்கு அவ்வளவு நெருக்கமாப் பழகணும்? அப்புறம் அலட்சியமா நடந்துக்கணும்?"
"விட்டுத் தள்ளுங்க!" என்றாள் லதா.
ஓரிரு நிமிடங்கள் ஏதோ யோசனையில் இருந்த ரகு, திடீரென்று ஏதோ தோன்றயவனாக, "இப்ப நினைச்சுப் பாக்கறப்ப, அதுக்கு ஒரு காரணம் இருக்கும்னு தோணுது!" என்றான்.
"என்ன காரணம்?"
"மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கெல்லாம் மண்டபத்துக்குப் பக்கத்தில ஒரு விடுதியில ஏ சி ரூம் போட்டிருந்தாங்க. நானும் மாப்பிள்ளை வீட்டுக்காரன்தானே? அதனால, எனக்கும் ஒரு ஏ சி அறை கொடுத்திருந்தாங்க.
"முதல் நாள் மதியம், சாப்பாட்டுக்கப்பறம் நான் என் அறைக்குக் கிளம்பறப்ப, சேதுமாதவன் எங்கிட்ட வந்து, 'எனக்கு எப்பவுமே மத்தியானம் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கணும். இந்த மண்டபத்திலேயேதான் எங்கேயாவது படுத்துக்கணும். ஆனா, இங்கே ஒரே புழுக்கமா இருக்கு!'ன்னு சொன்னாரு. 'நான் தனியாதான் இருக்கேன். என் ரூமில இடம் இருக்கு. நீங்க அங்கே வந்து படுத்துக்கங்க'ன்னு சொன்னேன்.
"அன்னிக்கு மத்தியானம், அன்னி ராத்திரி, அடுத்த நாள் மத்தியானம் எல்லாம் அவர் என் அறையிலதான் படுத்துத் தூங்கினாரு. இப்பத்தான் எனக்கு ஞாபகம் வருது. ரெண்டாவது நாள் மத்தியானம் என் அறையில தூங்கிட்டுப் போனதுக்கப்பறமே, அவர் எங்கிட்ட சரியா பேசல. நான் ஊருக்குக் கிளம்பற சிந்தனையில இருந்ததால, அதை அப்ப கவனிக்கல!"
"ஏ சி ரூம்ல படுத்துக்கணுங்கறதுக்காகத்தான் உங்ககிட்ட நெருங்கிப் பழகி இருக்காரு. சரியான காரியவாதிதான்!" என்றாள் லதா.
"ஒரு பலனை எதிர்பாத்து எங்கிட்ட நட்பா இருந்ததைக் கூட நான் தப்பா நினைக்கல. ஆனா, தனக்கு ஆக வேண்டிய காரியம் முடிஞ்சப்பறம், எங்கிட்ட அலட்சியமா நடந்துக்கிட்டதை நினைச்சாதான் எனக்கு வெறுப்பா இருக்கு. இவங்கள்ளாம் காசுக்காக..."
மனைவியின் முன்பு தான் நினைத்த உதாரணத்தைக் கூற வேண்டாமென்று நினைத்து சொல்ல வந்ததைப் பாதியில் நிறுத்திக் கொண்டான் ரகு.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு
குறள் 822:
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
No comments:
Post a Comment