"ஏன்?" என்றான் முத்துவேல்.
"அரசாங்கம் நிவாரணம் கொடுக்க வேண்டியது ஏழைகளுக்குத்தான். என்னை மாதிரி வசதியானவங்கள்ளாம் அதை வாங்கிக்கக் கூடாதுங்கறது என்னோட கொள்கை. அரசாங்கத்துக்கிட்டேந்து நிவாரணம் வாங்கிக்காதது மட்டும் இல்ல. நான் வெள்ள நிவாரண நிதிக்கு ரெண்டாயிரம் ரூபா நன்கொடை கொடுத்தேன்!"
"பெரிய விஷயம் சார்!"
"என்னோட இயல்பு அப்படி. நான் இதைப் பெரிசா நினைக்கல. நீங்க இந்த ஏரியாவுக்குப் புதுசா வந்திருக்கீங்க. ஏதாவது உதவி வேணும்னா, எங்கிட்ட தயங்காம கேளுங்க!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் சங்கர்.
"இந்தக் காலத்தில இப்படி ஒரு மனுஷனா? ஆச்சரியமா இருக்கு!" என்றான் முத்துவேல், தன் மனைவி திரௌபதியிடம்.
"ஆச்சரியமாத்தான் இருக்கு. இந்த ஏரியாவுக்கு நாம புதுசா வந்திருக்கறப்ப, இப்படி ஒருத்தரோட நட்பு உங்களுக்குக் கிடைச்சிருக்கிறது நம்ம அதிர்ஷ்டம்தான்!" என்றாள் திரௌபதி.
"என்னங்க, உங்களைத் தேடி ஒரு போலீஸ்காரர் வந்திருக்காரு!" என்றாள் திரௌபதி, பதட்டத்துடன்.
அதே பதட்டத்துடன், முத்துவேல் அறையிலிருந்து விரைவாக வாசலுக்கு வந்தான்.
"சார்! நீங்கதானே முத்துவேல்?" என்றார் போலீஸ்காரர்.
"ஆமாம்."
"நீங்க கவர்ன்மென்ட் ஆஃபீசரா?"
"ஆமாம். அதுக்கென்ன?"
"சங்கர் உங்கள் நண்பரா?"
முத்துவேல் சற்றுத் தயங்கி விட்டு, "எனக்குத் தெரிஞ்சவர்தான்!" என்றான், எச்சரிக்கை உணர்வுடன்.
"விசாரிக்கறதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு அழைச்சுக்கிட்டுப் போனோம். அவர் உங்க பேரைச் சொல்லி, நீங்க அரசாங்கத்தில பெரிய அதிகாரி, அவருக்கு நண்பர்னு சொன்னாரு. உங்களை ஸ்டேஷனுக்கு வரச் சொல்றது மரியாதையா இருக்காது இல்ல? அதான் இன்ஸ்பெக்டர் என்னை அனுப்பி விசாரிச்சுட்டு வரச் சொன்னாரு!" என்றார் போலீஸ்காரர்.
"அவரைக் கைது பண்ணி இருக்கீங்களா? எதுக்கு?"
"இன்னும் கைது பண்ணல. போன வருஷம் வெள்ளம் வந்தப்ப, அரசாங்கத்தில நிவாரணம் கொடுத்தாங்க இல்ல? அதை வாங்கிக் கொடுக்கறதா சொல்லி, அவர் சில பேர்கிட்ட ஐநூறு, ஆயிரம்னு பணம் வாங்கி இருக்காரு."
"நிவாரணம் கொடுத்தது மாநில அரசு. நான் வேலை செய்யறது மத்திய அரசில!" என்று அவசரமாகக் குறுக்கிட்டுச் சொன்னான் முத்துவேல்.
"அய்யய்யோ! நீங்க சம்பந்தப்பட்டிருக்கறதா சொல்லல சார். நீங்க அவரோட நண்பர்னு சொன்னதால, உங்களை விசாரிக்கிறோம். நீங்க ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கையெழுத்துப் போட்டீங்கன்னா, அவரைக் கைது பண்ணாம, கேஸ் மட்டும் புக் பண்ணுவோம். அவ்வளவுதான்."
"கொஞ்சம் உள்ளே வாங்க!" என்றாள் திரௌபதி, முத்துவேலின் அருகில் வந்து, அவனுக்கு மட்டும் கேட்கும்படியாக.
"ஒரு நிமிஷம்!" என்று போலீஸ்காரரிடம் சொல்லி விட்டு, மனைவியுடன் உள் அறைக்குச் சென்றான் முத்துவேல்.
"இங்க பாருங்க. நீங்க கையெழுத்து எதுவும் போடாதீங்க!" என்றாள் திரௌதி, உத்தரவு போடுவது போல்.
"நான் என்ன முட்டாளா? பொதுவாகவே, ஒரு அரசு ஊழியர் இது மாதிரி ஜாமீன் கையெழுத்தெல்லாம் போடக் கூடாது. அதுவும் இவனை மாதிரி ஃபிராடுக்கெல்லாம் கையெழுத்துப் போட்டா, அது என் வேலைக்கே ஆபத்தா முடியும். ஏதோ பெரிய கொள்கையோட நடக்கறவன் மாதிரி, வெள்ள நிவாரணம் வேண்டாம்னு சொன்னதா சொன்னான். இப்ப பாத்தா, வெள்ள நிவாரணம் வாங்கிக் கொடுக்கறதா சொல்லி, நிறைய பேர்கிட்ட கமிஷன் வாங்கி இருக்கான். போலீஸ் ஸ்டேஷன்ல போய் என் பேரைச் சொல்லி இருக்கான். இவனை மாதிரி ஆளையெல்லாம் நம் வீட்டு வாசலுக்குக் கூட வர விடக் கூடாது!" என்றான் முத்துவேல், கோபத்துடன்.
பிறகு, முத்துவேல் வாசலுக்குச் சென்று, போலீஸ்காரரிடம், "சார்! சங்கர் இந்த ஏரியாவில இருக்காரு. அவரைப் பாத்திருக்கேன், மத்தபடி அவரைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. நான் அவருக்காகக் கையெழுத்து போட முடியாது. இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லிடுங்க!" என்றான், உறுதியான குரலில்.
"சரி சார்!" என்ற போலீஸ்காரர், 'இவர் கையெழுத்துப் போட்டிருப்பாரு. அந்த அம்மாதான் போடக் கூடாதுன்னு தடுத்துட்டாங்க. பாவம் அந்த சங்கர்! இன்ஸ்பெக்டர் அவனை உள்ள போட்டுடுவாரு' என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றார்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு
குறள் 819:
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
No comments:
Post a Comment