Saturday, October 8, 2022

630. அனுபவம் இனிமை?

"எனக்கு மாதவன் மட்டும்தான் போட்டி. மத்தவங்களைப் பத்தி எனக்குக் கவலையில்லை!" என்றான் விவேக்.

"ஏண்டா, நாம இருபது பேர் ஒரே நேரத்தில இந்த கம்பெனியில மனேஜ்மென்ட் டிரெய்னியா சேர்ந்திருக்கோம். மாதவனை  மட்டும் ஏன் போட்டின்னு நினைக்கற?" என்றான் அவன் நண்பன் மூர்த்தி.

"போட்டியாளன் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில ரைவல்னு சொல்லுவாங்க. ரைவல்னா எதிரின்னும் ஒரு பொருள் இருக்கு. விவேக் மாதவனைத் தன்னோட ரைவலா நினைக்கறான் - போட்டியாளனாகவும், எதிரியாகவும்!" என்றான் மது என்ற இன்னொரு நண்பன்.

"ஆனா, உனக்கு ஏன் அவன் மேல இவ்வளவு வெறுப்புன்னு எனக்குப் புரியல!" என்றான் மோகன்.

நண்பர்கள் பேசுவதை விவேக் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

வசதியான குடும்பத்தில் பிறந்து, சிறந்த கல்வி நிறுவனங்களில் படித்து, கோச்சிங் போன்ற கூடுதல் உதவிகளையும் பெற்றுச் சிறந்த மாணவனாக உருவாகிப் படிப்பை முடித்தவன் விவேக். 

அந்த நிறுவனத்தில் மனேஜ்மென்ட் டிரெயினியாகச் சேர நூற்றுக் கணக்கானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது பேரில் விவேக்கும் ஒருவன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது பேரில் தானே சிறந்தவன் என்ற எண்ணம் விவேக்குக்கு உண்டு. அவனுடைய பொருளாதார வசதி, கல்வி வசதியால் வளர்ந்திருந்த அறிவுத் திறன் ஆகியவற்றால், அந்த இருபது பேரில் பலர் அவனால் ஈர்க்கப்பட்டு, அவனைத் தங்களுக்குள் சிறந்தவனாக ஏற்றுக் கொண்டது போல் நடந்து கொண்டனர்.

ஆயினும், அந்த இருபது பேரில் ஒருவனாகத் தேர்வு செய்யப்பட்ட மாதவனிடம் துவக்கத்திலிருந்தே விவேக்குக்கு ஒரு விரோத மனப்பான்மை உருவாயிற்று. 

மாதவன் ஏழ்மையான, சமூகத்தில் கீழ்நிலையிலிருந்த ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன். அரசுப் பள்ளியில் படித்த அவன், தன் கடுமையான உழைப்பால் சிறப்பாகப் படித்து, கல்லூரிப் படிப்பையும் சிறப்பாக முடித்து, அந்தப் புகழ் பெற்ற நிறுவனத்தில் ஒரு மானேஜ்மென்ட் டிரெயினியாகவும் தேர்வு பெற்று விட்டான்.

பயிற்சியின்போது, இருபது பேரும்  நிறுவனத்தின் விடுதியில் தங்கி இருந்ததால் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமாகினர்.

சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதால், மாதவனைச் சற்று இளக்காரமாகவே பார்த்தான் விவேக்.

விடுதியில் இருந்த காலத்தில், ஒருநாள் இரவு உணவுக்குப் பிறகு, தங்கள் பள்ளிப் பருவம் பற்றியும், சிறுவயது வாழ்க்கை பற்றியும் அனைவரும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

அனைவர் கூறியதையும், புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான் மாதவன்.

மாதவனின் முறை வந்தது.

"இப்போது, மாதவன் அவர்கள் தங்கள் சிறுவயது வாழ்க்கை பற்றிப் பகிர்ந்து கொள்வார்கள்!" என்றான் விவேக், கேலியாக.

மாதவன் புன்னகை மாறாமல், தன் அனுபவங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தான்.

கெட்ட நெடி வீசும் ஒரு கழிவுநீர்க் கால்வாயின் அருகே, சுகாதாரமற்ற சூழலில், ஒரு குடிசையில் தன் பெற்றோர் மற்றும் நான்கு சகோதர சகோதரிகளுடன் தான் வாழ்ந்த வாழ்க்கை, பல நாட்கள் சரியான உணவில்லாமல் இருந்தது, மதிய உணவுக்காகவே பள்ளியில் சேர்ந்தது, தாய்க்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போய் அரசு மருத்துவமனையில் சேர்க்க நேர்ந்தது, தன் சமூகப் பின்னணி மற்றும் வறுமை காரணமாகப் பள்ளியிலும், கல்லூரியிலும், மற்ற இடங்களிலும் தான் சந்தித்த அவமானங்கள் என்று பல விஷயங்களையும் பற்றி, ஏதோ கதை செல்வது போல் சொல்லி முடித்தான் மாதவன்.

"எப்படிடா உன்னோட துன்பமான அனுபவங்களை இப்படி சிரிச்சுக்கிட்டே சொல்ற?" என்றான் மது.

"தெரியல. எங்க அப்பா, அம்மா, சகோதர சகோதரிகளோட சந்தோஷமா இருக்கறதாத்தான் எப்பவுமே நினைச்சுக்கிட்டிருந்தேன். சரியான சாப்பாடு இல்லாம பசியோட இருக்கும்போது வருத்தமாத்தான் இருக்கும். ஆனா, அப்புறம் சாப்பாடு கிடைச்சு சாப்பிடறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். எங்க அப்பா அம்மா தங்களோட வறுமையைப் பத்திக் கவலைப்படல. சிரிச்சுப் பேசிக்கிட்டு சந்தோஷமாத்தான் இருந்தாங்க. அவங்க சந்தோஷமா இருந்ததால, நானும் கஷ்டங்களைப் பத்தி நினைக்காம, சந்தோஷமா இருந்தேன்னு நினைக்கிறேன்!" என்றான் மாதவன்.

விவேக் தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து மாதவனை அணைத்துக் கொண்டு. "நீதாண்டா கிரேட்!" என்றான், உண்மையான உணர்வுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை  (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)

குறள் 630:
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

பொருள்:
ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால், அவனுடைய பகைவரும் விரும்பத் தக்க சிறப்பு அவனுக்கு ஏற்படும்.

Read 'A Miserable Life' the English version of this story by the same author.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...