Sunday, October 9, 2022

820. யூனியன் மீட்டிங்

"நாளைக்கு யூனியன் மீட்டிங் இருக்கே, வரே இல்ல?" என்றான் சுபாஷ்.

"இல்லை. நாளைக்கு  வீட்டுக்கு  விருந்தாளிங்க வராங்க. அதனால என்னால வர முடியாது. நீ போகப் போறியா?" என்றான் கிரி.

"ஆமாம்."

"என்ன நடந்ததுன்னு திங்கட்கிழமை சொல்லு."

திங்கட்கிழமை அலுவலகத்துக்குச் சென்றதும் யூனியன் மீட்டிங்கில் நடந்தது பற்றி சுபாஷிடம்  கேட்டான் கிரி.

"முக்கியமா ஒண்ணும் இல்ல. வெவ்வேறு விஷயங்கள்ள தனக்கு உதவறதுக்காக ஒரு குழுவை அமைக்கறது பத்தித் தலைவர் பேசினாரு. அவ்வளவுதான்!" என்றான் சுபாஷ்.

"ஓ! குழு அமைச்சாச்சா? குழுவில யார் யாரு இருக்காங்க?"

"யார் யார்ங்கறதை அவர் இன்னும் முடிவு செய்யல. சில பெயர்களைக் குறிப்பிட்டாரு.  அவங்களைப் பத்தி சில பேர் சில ஆட்சேபணைகளை எழுப்பினாங்க. யார் யார்ங்கறதை முடிவு செஞ்சு ரெண்டு மூணு நாள்ள சர்க்குலர் அனுப்பறேன்னு சொல்லிட்டாரு!" என்றான் சுபாஷ்.

ன்று மாலை கிரி அலுவலகத்தை விட்டுக் கிளம்புவதற்கு முன் யூனியன் தலைவர்  கிருஷ்ணன் அவனை இன்டர்காமில் அழைத்தார்.

"என்ன கிரி, வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?" என்றார் கிருஷ்ணன்

"ஆமாம் கிருஷ்ணன். சாரி. நேத்திக்கு மீட்டிங்குக்கு வர முடியல!" என்றான் கிரி.

"உங்களுக்கு வீட்டுக்குப் போக அவசரம் இல்லேன்னா என்னோட காப்பி சாப்பிட வரீங்களா?"

"சந்தோஷமா!" என்றான் கிரி.

இருவரும் அருகிலிருந்த, அவர்கள் எப்போதும் போகும் ஓட்டலுக்குச் சென்றனர்.

"உங்களுக்கு உதவ ஒரு குழு அமைக்கப் போறீங்களாமே?" என்றான் கிரி.

"ஆமாம். அது விஷயமாத்தான் உங்க கிட்ட பேசணும்னு நினைச்சேன். குழுவில உறுப்பினரா இருக்க உங்களுக்கு விருப்பமா?" என்றார் கிருஷ்ணன்.

"நிச்சயமா! நீங்க எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் அதைச் செய்யத் தயாரா இருக்கேன்னு உங்களுக்குத்தெரியுமே! ஆனா நீங்க நேத்திக்கு சில பெயர்களைச் சொன்னப்ப சில பேர் ஆட்சேபிச்சாங்களாமே! எனக்கு ஏதாவது ஆட்சேபம் வருமான்னு பாத்துக்கங்க!" என்றான் கிரி சிரித்துக் கொண்டே.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கிருஷ்ணன், "நேத்திக்கு மீட்டிங்க்ல உங்க பேரையும் நான் சொன்னேன். அதுக்கு ஒத்தர்கிட்டேயிருந்துதான் ஆட்சேபம் வந்தது!" என்றார்.

"'யார்கிட்டேருந்து?"

"உங்க நண்பர் சுபாஷ்கிட்டே இருந்துதான்!"

"என்ன சொல்றீங்க? அவன் என்னோட நெருங்கின நண்பனாச்சே!"

"நேத்திக்கு அவர் மீட்டிங்கில உங்களைப் பத்திப் பேசின விஷயங்களைக் கேட்ட யாரும் அவரை உங்க நண்பர்னு சொல்ல மாட்டாங்க! பொறுப்பு இல்லாதவன், தனக்கு எது நல்லதுன்னு மட்டும் பாக்கறவன் இப்படியெல்லாம் உங்களைப் பத்தி அவர் அவதூறா சொன்ன பல விஷயங்களைக் கேக்க எனக்கே அதிர்ச்சியா இருந்தது. நீங்க நெருங்கின நண்பரா நினைக்கிற  ஒத்தரைப் பத்தி நீங்க சரியாப் புரிஞ்சுக்கணுங்கறதுக்காகத்தான் உங்களைத் தனியாப் பார்த்து அவர் உங்களைப் பத்திப் பேசினதை உங்ககிட்ட சொல்ல விரும்பினேன்!" என்றார் கிருஷ்ணன்.

நட்பியல்
அதிகாரம் 82
தீ நட்பு

குறள் 820:
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.

பொருள்: 
தனியே இருக்கும்போது நட்புடன் பழகி, பலர் கூடிய மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் தொடர்பைச் சிறிதளவும் சேர விட வேண்டா.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...