Sunday, October 16, 2022

634. நிதி அமைச்சர்

மக்கள் நல்வாழ்வுக் கட்சி (ம..ந.க.) ஆட்சிக்கு வந்ததும், நிதி அமைச்சராக நியமிக்கப்படப் போவது யார் என்பதில் ஊடகங்கள், அரசியல விமரிசகர்கள், பொருளாதார நிபுணர்கள், பொதுமக்கள் என்று அனைவருமே ஆர்வம் காட்டினர். ஆளும் கட்சியில் மூத்த தலைவர்கள் சிலரின் பெயர்கள் ஊகித்துச் சொல்லப்பட்டன.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பராங்குசம் என்ற ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியரை நிதி அமைச்சராக நியமித்தார் முதலமைச்சர் மாணிக்கம்..

கட்சியின் மூத்த தலைவர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், முதல்வரிடம் இது பற்றிப் பேச அஞ்சி அவர்கள் மௌனமாக இருந்தனர்.

ம.ந.க. ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன. 

ம.ந.க வின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டினார் கட்சியின் தலைவரும் முதல்வருமான மாணிக்கம். கூட்டத்துக்கு நிதி அமைச்சர் பராங்குசம் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

முதலமைச்சர் பேசினார்:

"நம்ம கட்சியில உறுப்பினரா இல்லாத ஒரு பொருளாதார நிபுணரை நிதி அமைச்சரா நியமிச்சது உங்களுக்கெல்லாம் வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்திருக்கும். 

"இதுக்கு முன்னால ஆட்சியில இருந்தவங்க பொருளாதாரத்தை எந்த அளவுக்கு சீரழிச்சிருக்காங்கன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். அதனால நிலைமையைச் சரி செய்ய ஒரு நிபுணர் தேவை, அதோட எதையும் அரசியல் கண்ணோட்டத்தில பாக்காம, பொருளாதாரக் கண்ணோட்டத்தில பாத்தாதான் நிலைமையைச் சீர் செய்ய முடியும். 

"நம் கட்சியைச் சேர்ந்த யார் நிதி அமைச்சரா இருந்தாலும் அவங்களால அரசியல் கண்ணோட்டம் இல்லாம நிதி சம்பந்தமான முடிவுகளை எடுக்க முடியாது. அதனாலதான் அரசியலில் இல்லாத பொருளாதார நிபுணர் பராங்குசம் அவர்களை நிதி அமைச்சராத் தேர்வு செஞ்சேன். 

"இந்த ஆறு மாசத்தில அவர் பல முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தி இருக்கார். அதில சில விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்காம இருக்கலாம். உங்க சந்தேகங்களை நீங்களே அவர்கிட்ட கேக்கலாம்!" 

"ஐயா! நாம பதவிக்கு வந்தவுடனேயே பல வரிகளை உயர்த்தி இருக்கோம். இதனால மக்களுக்கு நம்ம மேல அதிருப்தி இருக்கு!" என்றார் ஒரு மூத்த தலைவர்.

"அதோட நாம அறிவிச்ச பல திட்டங்களை இன்னும் நிறைவேத்தல. தொலைக்காட்சி விவாதங்கள்ள நம்ம கட்சி செய்தித் தொடர்பாளர்கள் இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாம தவிக்கறாங்க. ஏன் நாங்களே தொகுதிக்குப் போகறப்ப, மக்கள் எங்ககிட்ட கேக்கற கேள்விக்கு எங்களால பதில் சொல்ல முடியல!" என்றார் இன்னொரு மூத்த தலைவர்.

"உங்க கேள்விகளுக்கெல்லாம் இப்ப நிதி அமைச்சர் பதில் சொல்வார்!" என்றார் முதல்வர் சிரித்தபடி.

பராங்குசம் சற்றுத் தயங்கி விட்டு, "எனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுக்கறப்ப, உங்க குடும்பத்துக்கு இப்படி ஒரு நிலைமை இருந்தா அதை எப்படிச் சரி செய்வீங்களோ, அது மாதிரி இந்த மாநிலத்தோட நிலைமையையும் சரி செய்யணும்னு முதல்வர் எங்கிட்ட சொன்னாரு. நிலைமையை ஆராய்ந்து பாத்துட்டு, 'ஐயா! வருவாய்ப் பற்றாக்குறை ரொம்ப அதிகமா இருக்கு. அதனால கடன் அதிகமாகி, அதுக்கான வட்டியால வருவாய்ப் பற்றாக்குறை இன்னும் அதிகமாகிக்கிட்டிருக்கு. இதைச் சரி செய்யணும்னா ஒரு பக்கம் வருமானத்தைப் பெருக்கணும், இன்னொரு பக்கம் சில செலவுகளைக் குறைக்கணும். வருவாய்ப் பற்றாக்குறையை பூஜ்யத்துக்குக் கொண்டு வந்தப்பறம்தான் புதிய திட்டங்களை எடுத்துக்க முடியும்னு சொன்னேன். நான் சொன்னதை முதல்வர் ஏத்துக்கிட்டாரு. அதன்படி சில நடவடிக்கைகளை எடுத்திருக்கேன். அவ்வளவுதான்!" என்றார்.

"நீங்க சுலபமா சொல்லிட்டீங்க. மக்களுக்கு இதெல்லாம் புரியுமா? இதை எப்படி அவங்களுக்குப் புரிய வைக்க முடியும்?" என்றார் ஒரு அமைச்சர்.

பராங்குசம் பதில் சொல்ல யத்தனித்தபோது, முதல்வர் அவரைக் கையமர்த்தி விட்டு, நமக்கு  மக்கள் அஞ்சு வருஷம்  ஆட்சிக்காலத்தைக் கொடுத்திருக்காங்க. முதல் ரெண்டு வருஷம் மக்களுக்கு அதிருப்தி ஏற்படலாம். இடைத்தேர்தல்கள்ள நாம தோல்விகளைச் சந்திக்கலாம். நாம அடுத்த தேர்தல்ல தோத்துடுவோம்னு ஊடகங்கள் பேசலாம். ஆனா இரண்டு வருஷம் நாம் கடுமையாச் செயல்பட்டா, அதன் பலன் கடைசி ரெண்டு மூணு வருஷங்கள்ள தெரிய வரும். அதற்கப்புறம் நாம செய்யறதாச் சொன்ன நலத்திட்டங்களைச செயல்படுத்தலாம், முன்னேற்றங்களைப் பாத்துட்டு மக்கள் நாம செய்யறதைப் புரிஞ்சுக்கிட்டு நமக்கு ஆதரவு கொடுப்பாங்க. நம்ம நிதி அமைச்சர் சொன்ன விஷயங்கள் நம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதுதான். ஆனா அவருக்கு அரசியல் கண்ணோட்டம் இல்லாததால, பொருளாதார நிலையை மட்டுமே பாத்து, என்ன செய்யணும், அதை எப்படிச் செய்யணும்னு சிந்திச்சு, தன்னோட கருத்துக்களை துணிவா எங்கிட்ட சொன்னாரு. நானும் அவற்றை ஏற்றுக்கிட்டு அவரை சுதந்திரமாச் செயல்பட விட்டேன்" என்றார்.

அனைவரும் மௌனமாக இருந்தனர்.

"நிதி நிலைமை மோசமா இருக்குங்கறதை மக்களுக்குப் புரிய வைக்க நாம இன்னொரு காரியம் செய்யணும். நம் சம்பளத்தைப் பாதியாக் குறைச்சுக்கணும். இதனால பெரிய சேமிப்பு ஒண்ணும் கிடைச்சுடாது. ஆனா மக்களுக்கு இது ஒரு நல்ல சிக்னலா இருக்கும்" என்ற முதல்வர், "இந்த யோசனையையும் சொன்னவர் நிதி அமைச்சர்தான்!" என்று பராங்குசத்தைப் பார்த்துச் சிரித்தார்.   

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 64
அமைச்சு

குறள் 634:
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.

பொருள்:
(செய்யத்தக்க செயலை) ஆராய்தல், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தல், துணிவாகக் கருத்தைச் சொல்லுதல் இவற்றில் வல்லவன் அமைச்சன்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...