Thursday, July 21, 2022

802. நண்பன் செய்த ஏற்பாடு

ஶ்ரீகுமார் பேசி முடித்ததும், அந்த அரங்கில் பெரும் கரவொலி எழுந்தது. பலரும் மேடைக்கு வந்து அவனைக் கைகுலுக்கிப் பாராட்டிச் சில வார்த்தைகள் கூறி விட்டுச் சென்றது, கைதட்டல் வெறும் சம்பிரதாயமானதல்ல, உண்மையான பாராட்டின் வெளிப்பாடு என்பதை வெளிக்காட்டியது.

"எங்க உறுப்பினர் ராமச்சந்திரன் உங்க பேரை சஜஸ்ட் பண்ணினப்ப, பிரபலம் இல்லாத ஒரு நபரைப் பேசச் சொல்றோமே என்று எனக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஒரு பிரபலமான நிபுணரைக் கூப்பிட்டிருந்தா, அவர் கூட இவ்வளவு சுவாரசியமா புது விஷயங்களையெல்லாம் சொல்லி, ஆடியன்ஸை இந்த அளவுக்குக் கவர்ந்திருப்பாரான்னு தெரியல. உங்களுக்கு நன்றி சொல்றதோட, எங்க உறுப்பினர் ராமச்சந்திரனுக்கும் நாங்க நன்றி சொல்லணும்!" என்றார் நிகழ்ச்சியை நடத்திய அமைப்பின் தலைவர். 

அருகில் நின்ற ஶ்ரீகுமாரின் நண்பன் ராமச்சந்திரன், பெருமையுடன் தன் நண்பனைப் பார்த்துச் சிரித்தான்.

அரங்கத்தை விட்டு வெளியே வரும்போது, ஶ்ரீகுமாருடன் நடந்து வந்த ராமச்சந்திரன், "ரொம்பப் பிரமாதமாப் பேசிட்டடா! நீ நல்லாப் பேசுவேன்னு நினைச்சுத்தான் உன் பேரை சஜஸ்ட் பண்ணினேன். நான் எதிர்பார்த்தது வீண் போகல!" என்றான்.

"அது சரி. மனோதத்துவம் பத்திப் பேசறதுக்கு, என் பேரை ஏன் சஜஸ்ட் பண்ணினே? எனக்கும் மனோதத்துவத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்றான் ஶ்ரீகுமார்.

"இதை நீ ஏன் இப்ப கேக்கற? 'எங்க சங்கத்தில இந்தத் தலைப்பில பேச உன் பேரைக் கொடுத்திருக்கேன், அவங்களும் ஒத்துக்கிட்டாங்க'ன்னு நான் உங்கிட்ட ஃபோன்ல சொன்னப்ப, நீ ஏன் இந்தக் கேள்வியைக் கேக்கல?"

"நீ என்னோட நண்பன். ஏதோ ஒரு நம்பிக்கையில, நீ இந்த ஏற்பாட்டைப் பண்ணிட்ட. உன்னோட கமிட்மென்ட்டை நான் காப்பாத்த வேண்டாமா? அதான் கேள்வி கேக்காம சரின்னுட்டேன். நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே!"

"என்னடா, மறந்துட்டியா? நீ பி.ஏ. சைகாலஜி படிச்சிருக்க! மனோதத்துவம் பத்திப் பேச உனக்கு வேற என்ன தகுதி வேணும்?"

'அட முட்டாளே! நீ கூடத்தான் பி.ஏ.லிடரேசர் படிச்சிருக்க. ஆங்கில இலக்கியத்தைப் பத்திப் பேசச் சொன்னா, நீ பேசுவியா?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ஶ்ரீகுமார், "உண்மையாவே மறந்துதான் போச்சு! பிளஸ் டூ-ல குறைஞ்ச மார்க் வாங்கினதால, சயன்ஸ், காமர்ஸ் எதுவும் கிடைக்காம, பி.ஏ. சைகாலஜி படிச்சேன். ஆனா, இப்ப நான் செய்யற தொழில் கட்டிடம் கட்டறது. கட்டிடக் கலையைப் பத்திப் பேசச் சொன்னாலாவது, அனுபவ அடிப்படையில ஏதாவது பேசி இருப்பேன், எப்பவோ படிச்ச சைகாலஜி பத்தி இப்ப என்னால பேச முடியும்னு நினைச்சு, நீ என் பேரைக் கொடுத்ததுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு!" என்றான் ஶ்ரீகுமார்.

"உன்னோட ஒரு ஸ்பெஷாலிடி எனக்குத் தெரியுமே! உனக்குக் கொஞ்சம் கூடத் தெரியாத ஒரு தலைப்பைக் கொடுத்தாக் கூட, அதைப் பத்திப் படிச்சுத் தயார் பண்ணி, ஒரு நிபுணர் பேசற அளவுக்கு உன்னால பேச முடியுமே! உன்னோட இந்தத் திறமையை நம்பித்தான், உங்கிட்ட கூடக் கேட்காம, உரிமை எடுத்துக்கிட்டு உன் பெயரைக் கொடுத்தேன். நான் செஞ்சது தப்பா? ஆனா, நீதான் நான் எதிர்பார்த்துக்கு மேலேயே பிரமாதமாப் பேசி, எல்லாரையும் பிரமிக்க வச்சுட்டியே!" என்றான் ராமச்சந்திரன்.

"தப்பு இல்லை. நீ எங்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டது எப்படித் தப்பாகும்?" என்ற ஶ்ரீகுமார், 'ஆனா, நீ சொன்னதுக்காக இதை ஒத்துக்கிட்டு, பகல் முழுக்க வேலை செஞ்சுட்டு, பத்து நாள் ராத்திரி ரொம்ப நேரம் கண் விழிச்சுப் பல புத்தகங்களைப் படிச்சு, என் பேச்சைத் தயார் பண்ண நான் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும்!' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 802:
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.

பொருள்: 
நட்பிற்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...