"பிரபாகர்! நம்ம கம்பெனியில இருக்கிற டிபார்ட்மென்ட் மானேஜர்களிலேயே, நீங்க ரொம்ப வித்தியாசமனவர்!" என்றார் பொது மேலாளர் சந்தரன்.
பிரபாகர் மௌனமாக இருந்தார்.
"நம் கம்பெனியில சில வேலைகள், ஒன்றுக்கு மேற்பட்ட டிபார்ட்மென்ட் தொடர்பா இருக்கு. அது மாதிரி வேலைகள்ள ஏதாவது பிரச்னை வரும்போது, மத்த மானேஜர்கள்ளாம் வேற டிபார்ட்மென்ட்டைக் கைகாட்டிட்டு ஒதுங்கிக்கறாங்க.
"தனியார் நிறுவனத்தில இதெல்லாம் முடியாது. ஆனா இது ஒரு பொதுத்துறை நிறுவனங்கறாதால, அவங்களால பொறுப்பைத் தட்டிக் கழிச்சுட்டு ஒதுங்கிக்க முடியுது. ஆனா நீங்க மட்டும், எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும், அதை உற்சாகமா ஏத்துக்கறீங்க.
"சில சமயம், உங்க டிபார்ட்மென்ட்டுக்குத் தொடர்பில்லாத சில பிரச்னைகளைக் கூட உங்ககிட்ட கொடுத்திருக்கேன். 'இது என் டிபார்ட்மென்ட்டுக்கு சம்பந்தமில்லாதது'ன்னு நீங்க சொல்லிடுவீங்களோன்னு நினைச்சுக்கிட்டேதான், அந்த வேலைகளை உங்ககிட்ட கொடுத்தேன். ஆனா நீங்க எதுவுமே சொல்லாம, அதையெல்லாம் எடுத்து செஞ்சிருக்கீங்க.."
"எந்த வேலையா இருந்தா என்ன சார், கம்பெனிக்குத் தொடர்பான வேலைதானே?" என்றார் பிரபாகர், சற்று சங்கடத்துடன்
"உங்களோட இந்த மனப்பான்மையைக் குறிப்பிட்டுப் பாராட்டணுங்கறதுக்காகத்தான் இதைச் சொல்றேன். இன்னொரு விஷயம் நான் கவனிச்சது, எந்த வேலையையுமே, 'இது ரொம்ப கஷ்டம், இதைச் செய்ய முடியாது'ன்னு, நீங்க ஒரு தடவை கூடச் சொன்னதில்ல! நான் கூட, சில வேலைகள் வரும்போது, இதை நம்மால செய்ய முடியுமான்னு யோசிப்பேன்."
"அதுக்கு நான் கடவுளுக்குத்தான் சார் நன்றி சொல்லணும்!" என்றார் பிரபாகர், சிரித்தபடி.
"கடவுள் எங்கே வந்தார் இதில?"
"சின்ன வயசில நான் ரொம்ப பலவீனமா இருந்தேன். உள்ளூர்ல இருந்த ஆரம்பப் பாடசாலை என் வீட்டிலேந்து ரொம்பப் பக்கம்தான். அங்கே போயிட்டு வரதுக்குள்ளேயே, ரொம்ப சோர்ந்து போயிடுவேன். பள்ளிக் கூடத்திலேந்து வந்ததும், ஒரு மணி நேரம் படுத்து ஓய்வு எடுத்தாத்தான், சோர்வு போகும்.
"ஆறாவது வகுப்பு படிக்க, எங்க ஊர்லேந்து ரெண்டு மைல் தூரத்தில இருந்த உயர்நிலைப் பள்ளிக்குத்தான் போகணும். அப்ப, பஸ் வசதி எல்லாம் கிடையாது. சைக்கிள் கத்துக்கிட்டு ஓட்டக் கொஞ்சம் காலம் ஆகும். அதோட, என்னால பாதுகாப்பா சைக்கிள் ஓட்ட முடியும்னு எங்கப்பாவுக்கு நம்பிக்கை இல்ல. எல்லாத்துக்கும் மேல, சைக்கிள் வாங்கற அளவுக்கு எங்கப்பாவுக்கு வசதியும் இல்ல!
"அதனால, அஞ்சாவதோட என் படிப்பை நிறுத்திடலாம்னு என் வீட்டில முடிவு பண்ணிட்டாங்க. ஆனா, படிக்கணுங்கற ஆர்வம் எனக்கு அதிகமா இருந்தது. அதனால, பிடிவாதம் பிடிச்சு, ரெண்டு மைல் தொலைவில இருந்த அந்த உயர்நிலைப் பள்ளியில சேர்ந்துட்டேன்.
" 'ரெண்டு நாள் போய்ப் பாத்தப்பறம், முடியலேன்னு சொல்லி, நீயே படிப்பை நிறுத்திடப் போறே' ன்னு எங்கப்பா சொன்னாரு. ஆனா, எப்படியாவது கஷ்டப்பட்டு நடந்து போய்ப் படிக்கணுங்கற உறுதி என் மனசில இருந்தது.
"ஆரம்பத்தில கொஞ்ச நாளைக்குக் கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா, என் மன உறுதியால, என் சோர்வைத் தாங்கிக்கிட்டேன். அதுக்கப்பறம், கொஞ்சம் கொஞ்சமா சோர்வு போயிடுச்சு. நாளடைவில, என் உடல் பலவீனம் கூட சரியாப் போய், நான் நார்மலா ஆயிட்டேன்!
"அந்த அனுபவத்திலேந்து நான் கத்துக்கிட்ட பாடம், எந்த வேலையையுமே முடியாதுன்னு நினைக்காம முயற்சி செஞ்சா, அந்த வேலையை செய்யக் கூடிய சக்தி, நமக்குத் தன்னால வந்துடுங்கறதுதான்."
"உடல் பலவீனத்தின் அடிப்படையில உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையே ஒரு பலமா மாத்திக்கிட்டீங்க. கிரேட்! உங்களோட ஃபிலாசஃபியை நானும் பின்பற்ற முயற்சி செய்யறேன்!" என்ற சந்திரன், "ஆமாம், கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்னு சொன்னீங்களே, அது ஏன்?" என்றார், தொடர்ந்து.
"கடவுள்தானே எனக்கு ஒரு பலவீனமான உடல் அமைப்பைக் கொடுத்து, அதை எதிர்கொள்ள வேண்டிய சவாலையும் கொடுத்தார்?" என்றார் பிரபாகர்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)
குறள் 611:
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
பொருள்:
இது செய்வதற்கு அரியது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்கான ஆற்றலை, முயற்சி உண்டாக்கும்.
No comments:
Post a Comment